புதுயுகப் பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 3,494 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதப் பெரிய வீட்டின் மரண அமைதியைக் குலைத்துக்கொண்டு சுவர்க்கடிகாரம் ஓலமிட்டது. இரவு மணி பதினொன்று. சமையற்கார ‘ஆயா’வும் வேலைக்காரப் பையனுங்கூடத் தூங்கி விட்டார்கள்.

கடிகாரத்தின் ‘டிக் டிக்’ ஓசை பெரிதாக கொதித்துப் பொங்கிய அந்த வீட்டு ‘எஜமானி’யின் இதயத் துடிப்புப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. தானேதான் அந்த வீட்டு ‘எஜமானி’ என்று நினைத்தபோது அந்த நிலையிலும் கண்மணிக்குச் சிரிப்பு வந்தது.

சிரிப்பா அது? இதயக் குமுறலில் வெடித்த குமிழி.

அந்த நகரத்திலேயே செல்வாக்கான, ‘கௌரவமான’ குடும்பங்களில் அவளுடைய குடும்பமும் ஒன்று. அவளுடைய கணவர் முகாந்திரம் நல்லநாதர் என்றால் – ஆகா, எவ்வளவு பெரியமனிதர்!

நல்லநாதர் செல்வத்திலும் செல்வாக்கிலும் பெரிய மனிதரல்லர்; வயதாலும் பெரிய மனிதர்தான். அவருக்கு வயது நாற்பத்தைந்து. ஆனால் ஏழைத் தமிழாசிரியரின் பெண்ணாகப் பிறந்த கண்மணியால் அவரோடு சேர்ந்து ‘பெரிய மனுஷி’யாக வாழமுடியவில்லை. அந்தப் பேதைக்கு வயது இருபத்தொன்றுதான். இரண்டாந் தாரந்தான். அதனாலென்ன, எவ்வளவு பெரிய மனிதர்! எவ்வளவு கௌரவம், செல்வம்! .. அவளே முழு மனதோடு விரும்பித்தானே – அதாவது காதலித்து? – முகாந்திரத்தாரைக் கல்யாணஞ் செய்து கொண்டாள்!

இப்போது இரவு. இரவு பதினொரு மணிக்குப் பிறகு –

அந்த அருமைக் காதலனின் நல்வரவுக்காகக் காத்துக் கிடக்கிறாள் இந்தக் ‘காதலி.’

ஆனா, இவளுடைய இதயம் ஏன் கொதிக்கிறது? இந்தப் பெரிய வீடு முழுவதும் இவளுடைய பெருமூச்சின் காற்று நிரம்பிப் புழுங்குவதேன்? மூன்றே வருட இல்வாழ்வுக்குள் முப்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டவள் போல இவள் சலித்துக் கொள்ளுவதேன்? ஏன், ஏன்?….

‘நாற்பத்தைந்து வயதுக் கணவனுக்கு இருபத்தொரு வயது மனைவி என்றதும், அவளுடைய பெருமூச்சுக்கு இளம் கதாசிரியர்கள் வேறு காரணம் கற்பிக்கக் கூடும். கெம்பீர நடைபோடு அந்த அரபிக் குதிரையின் லகானை அவள் கணவனால் சரியாகப் பிடிக்க முடியவில்லை என்று சொல்வார்கள்; அவளுடைய உடபசியைத் தீர்க்க அவரால் முடியவில்லை என்று எழுதுவார்கள். உண்மை அப்படி அல்ல. உலகில் எத்தனை எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்த்தபிறகு இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. உண்மையில் அவள் உடல் பசித்து ஏங்கவில்லை. அந்தப் பசி எப்போதோ செத்துவிட்டது! அவள் முன்பு எதிர்பார்த்தது கணவனின் அன்பு; ஆதரவு. இப்போது அதைக்கூடக் கேட்கவில்லை. ஒரு சாதாரண மனிதத்தன்மையை மட்டுமே அவரிடம் வேண்டி நிற்கிறாள். அதுகூடக் கிடைக்காதபடியால்தான் அவளுடைய உள்ளம் குமைகிறது; கொதிக்கிறது; பெருமூச்சுப் பிறக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்னால் –

அப்போது கண்மணியும் இன்பக்கனவுகள் கண்டு கொண்டிருந்தவள்தான். அவள் நல்ல அழகி. அவளைச் சிறு குழந்தையாகவே விட்டுவிட்டு மறைந்துபோன தாயாரின் மறு உருவமென்று தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கிறாள். அவளுடைய அறிவும் பண்பும் இருக்கின்றனவே, அவற்றை அவள் தகப்பனார் – ஏரம்பு வாத்தியாயர்- நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அவளிடம் புகுத்தி வைத்திருந்தார்.

ஏரம்பு வாத்தியாரை ‘ஏழைத் தமிழாசிரியர்’ என்று நான் குறிப்பிட்டதற்காகத் தமிழாசிரியர்கள் மன்னிக்க வேண்டும். இவர் இக்காலத்து ஆசிரியரல்லர்; அவருடைய காலத்தில் ;சம்பள உயர்வுப் போராட்டம்’ என்பது கதைகளில் கூட வந்ததில்லை. ஓய்வு நேரத்தில் ‘பிசினஸ்’ செய்கிற வித்தையையும் அவர் கற்றவரல்லர்; ஐந்து பரப்பு நிலத்தைக் கொத்திப் பார்த்திருக்கிறார். ஏதோ கொஞ்ச நெல் விளைந்ததெ தவிரப் பொன் விளையவில்லை. இந்த நிலையில் தராதரப் பத்திரமற்ற ஏரம்பு வாத்தியாரை ‘ஏழைத் தமிழாசிரியர்’ என்று சொல்லாமல் வேறென்ன செய்வது?

ஏரம்பு வெறும் பணத்தினால் ஏழையே தவிர, அறிவுச் செல்வத்திலே திளைத்தவர். அவருடைய அருமை மகள் கண்மணியும் அந்தச் செல்வக்கடலிலே நீச்சலடித்தாள். பாடசாலை மாணவர் சங்கத்திலே ‘பேச்சு’ என்ற நிகழ்ச்சியிலே பங்கு கொள்ளத் தொடங்கிய அவள், தன்னுடைய பதினேழாவது வயதிலே சமூகத் தொண்டுச் சங்கங்களின் ஆண்டு விழாக்களிலே சொற்பொழிவாற்றுமளவுக்கு முன்வந்துவிட்டாள். கூட்டங்களிலே அவள் வெறுமனே பாடம் ஒப்புவிப்பதில்லை. அவள் உள்ளத்திலே உண்மை ஒளி இருந்ததனாலே அவள் வாக்கினிலும் ஒளி பிறந்தது. பொது மக்கள், அறிஞர்கள், பெரியோர்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் அவளை மேலும் மேலும் உயர்த்தின.

அந்தக் காலத்திலே ஒருநாள் –

பாரதி விழாவிலே கண்மணி சொற்பொழிவாற்றினாள். முகாந்திரம் நல்லநாதர் அந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார். அன்று அவள்மீது அவர் வைத்த கண் –

அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டுகிற வரையும் அவர் ஓயவேயில்லை!

நல்லநாதரின் விருப்பத்தைக் கேள்விப்பட்டதும் முதலில் கண்மணி திடுக்கிட்டாள். எரிச்சலும் வெறுப்பும்கூட வந்தன. பிறகு மெல்ல ஆறுதலாக யோசித்துப் பார்த்த போது, அவளுடைய குடும்பத்தின் வறுமை; தம்பி தங்கைகளின் எதிர்காலம்; ஏன், அவளுடைய எதிர்காலத்தையுமே சிந்தித்துப் பார்த்தபோது, தேடிவந்த சந்தர்ப்பத்தினை நழுவ விடுவது புத்திசாலித்தனமாகத் தோன்றவில்லை. அதோடு, நல்லநாதர் எவ்வளவு நல்லவராக, கண்ணியமானவராகத் தோன்றுகிறார். சமூக விழாக்களிலே பங்கு பற்றுகிறவர் – தலைமை தாங்குகிறவர் நிச்சயம் நல்லவராக, பரந்த மனப்பான்மையுள்ளவராக இருப்பாரென்றே அவள் நம்பினாள்.

பேதை! பிரமுகத்தனம் செய்யும் பெரிய மனிதருக்குள் வெறும் சுயநலம், சுயநலம், சுயநலமாகவே புழுத்துக் கிடப்பதை அவள் அறியவில்லை. அவள் புத்தகங்களைப் படித்திருந்தாள்; பரந்த உலகத்தைப் படிக்கவில்லை. படித்தவர்களையெல்லாம் பண்பாளர்களென்று நம்பினாள்! அவர்களுள்ளே வெறும் பதர்களும் கிடப்பதை அவள் அறிந்ததில்லை.

கண்மணியின் சம்மதம் கிடைத்ததும் வெகு விரைவிலேயே திருமணம் நடந்துவிட்டது. எதிர்ப்பதற்கு ஏரம்பு வாத்தியாரிடம் மனம் இருததே தவிர, சக்தி இல்லையே!

திருமணம் நடந்த பிறகு –

வெகு விரைவிலேயே கண்மணி உலகத்தையும் படித்துவிட்டாள்!

‘சீவகாருண்ய’த்தைப் பற்றிக் கூட்டங்களிலே சொற்பொழிவாற்றுகிற முகாந்திரத்தார் சனிக்கிழமை முழுகுவதற்கு ஆயத்தம் செய்கிறபோது, ‘அம்மே அம்மே!’ என்று மரண ஓலமிடும் ஆட்டுக்கடாவின் கதறலைக் கேட்டாள்.

மதுவிலக்கின் அவசியத்தைப்பற்றிப் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடுகிற ‘பிரமுகர்’, ‘விறாண்டி’ இல்லாமல் உயிர் வாழ முடியாத நிலையிலிருப்பதைக் கண்டாள்.

இவற்றுக்கு மேலாக –

‘பெண்ணுரிமை’ பற்றிப் பொதுக்கூட்டத்திலே குரலெழுப்புகிற பெரிய மனிதர், ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார் – இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’ என்று கர்ச்சிக்கின்ற கனவான், சொந்த வாழ்க்கையிலே நடந்துகொள்ளும் கேவலத்தைப் பார்த்தபோது –

கண்மணி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவள் அழகி; அதோடு இளமை அவளுக்கு மெருகிட்டிருந்தது.

நல்லநாதருக்கு அவளுடைய அழகும் இளமையும் ஏன் தெரியவில்லை? அவைகள் ஏன் அவரைக் கவரவில்லை? அவளைவிட முதியவர்களான, அவளைவிட அழகில் குறைந்தவர்களான பிற பெண்களை அவர் தேடி ஓடுவதேன்?

ஆம், அவள் அவர் ‘மனைவி’!

வீட்டிலே இரும்புப் பெட்டிக்குள் கிடக்கும் அசல் வைரமாலையைவிட தெருவிலே போகிறவள் அணிந்திருக்கும் போலி முத்துமாலையைப் பார்த்து ஆசைப்படுகிற சில பெண்கள் உண்டல்லவா? அதே மாதிரித்தான் சில ஆண்களும். வீட்டிலே அழகான மயில் இருக்க, அதை விட்டு வீட்டுத் தெருவிலே போகிற வான்கோழியைப் பார்து வாயைப் பிளப்பார்கள்! திருவாளர் நல்லநாதரும் இதத் திருக் கூட்டத்தைச் சேர்ந்தவர்ரான்!

“டிங்!”

மணி பதினொன்றரை.

‘இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்? நான் ஒருத்தி இருக்கிறேன் – நானும் இரத்தமும் சதையும் உனத்ச்சியும் சேர்ந்த ஓர் உயிர்ப் பிண்டம் என்ற எண்ணம் சிறிதுகூட இல்லாமல் சுற்றித்திரிகிற இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்?’

எழுந்து போய்ப் படுக்கையில் விழுந்தாள் கண்மணி.

வெறும் உடம்பைத்தான் படுக்க வைக்க முடிந்ததே தவிர, உள்ளத்தைப் படுக்கவைக்க முடியவில்லையே!

உணர்ச்சி குமுறிக் கொப்பளித்தது.

ஒரு விபரீதமான சிந்தனை.

‘இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்? இன்று மட்டுமல்ல, எப்போதுமே – எப்போதுமே ஏன் வாழ வேண்டும்?”

கண்மணி எழுந்தாள். நல்லநாதரின் மேசையண்டை போய் ஒரு கணம் தாமதித்தாள். பிறகு வெறிபிடித்தவள் போலச் சடாரென்று அதன் லாச்சிகளில் ஒன்றைத் திறந்து கையை விட்டு எதையோ எடுத்தாள்.

அது ஒரு கைத்துப்பாக்கி – ‘றிவோல்வர்!”

தன் நெற்றிப் பொட்டிலே அதன் முனையை வைத்து அழுத்தினாள்.

மறு கணம்….

‘கிர்-ர்-ர்…’ என்ற மோட்டார்ச் சத்தம். – நல்லநாதர் வந்துவிட்டார்!

கண்மணி இந்த உலகத்துக்கு வந்துவிட்டாள். என்ன செய்கிறேனென்ற உணர்ச்சியில்லாமலே துப்பாக்கியை இருந்த இடத்தில் வைத்து லாச்சியை மூடினாள். பிறகு வாசலை நோக்கி நடந்தாள்.

வாசலில் –

நல்லநாதர் தனியாக வரவில்லை. எவளோ ஒரு ‘சித்திராங்கி’ அவரை நெருங்கி அணைத்துக் கொண்டு வந்தாள்!

கண்மணிக்கு உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் உறைந்துவிட்டது போன்ற உணர்ச்சி.

நிலைமை இவ்வளவுக்கு வந்துவிட்டதா?

அவளுடைய வீட்டுக்கு, அவளுடைய கணவன், அவளுடைய கண்ணெதிரில், மானைஇனமற்ற வேசையை அணைத்துக் கொண்டு வருவதா?

இதையும் பார்த்துக்கொண்டு ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று இருந்துவிட வேண்டியதுதானா? ‘பொறுமையே பெண்ணின் அணிகலன்’ என்ற பொன்மொழி இந்த இடத்திலும் பொன் மொழிதானா?

சீ!

நல்லநாதரின் வெறியைத் துச்சமென்று சொல்லக் கூடியதாக கண்மணிக்கு வெறி வந்துவிட்டது!

இந்த யுகத்தில் ‘நளாயினி’க்கு இடமில்லை.

கண்மணி மறைந்து, ‘கண்ணகி’ உதித்துவிட்டாள்!

“நில்லுங்கள்!”

அவள் போட்ட சத்தம் அந்த மயக்க நிலையிலும் நல்லநாதரின் நெஞ்சிலே அடித்தது. அந்தத் தேவடியாள் திடுக்கிட்டு அவருக்குப் பின்னால் இடந்தேடினாள்.

நல்லநாதர் கண்ணை நிமிர்த்திப் பார்த்தார்.

“நீயா? உனக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப்படு!”

கண்மணியின் உதடுகளைப் பிய்த்துக்கொண்டு வார்த்தைகள் வெளிவருவது கஷ்டமாக இருந்தது. வெடித்து வெடித்துச் சொன்னாள்:

“நீ… நீங்கள்…… அவளைக்கொண்டு இங்கே நுளைய முடியாது!”

“த்தூ! …. சனியனே! …… ஏன் குரைக்கிறாய்?…. என்ன செய்து விடுவாய்?” – ‘அவ’ளையும் இழுத்துக் கொண்டு நல்லநாதர் முன்னுக்கு வந்தார். கண்மணி இரு கைகளையும் அகல விரித்து மறித்தாள்.

‘பளார்!’ என்று அவள் கன்னத்தில் ஒரு அடி!

ஒரு நிமிஷம் – அதற்குள் எவ்வளவோ உணர்ச்சிக் கொதிப்புகள்.

கண்மணி விடு விடென்று உள்ளே ஓடினாள்.

தோற்று விட்டாளா? பாரதியுகப் பெண், பழங்காலத்துக்குப் போய் விட்டாளா?…..

இல்லை. இதோ திரும்பி வருகிறாள். அவள் கையில் அந்தத்துப்பாக்கி! நல்லநாதரின் மார்புக்கு நேரே அதன் முனை!

நல்லநாதர் கெக்கெட்டம் போட்டுச் சிரித்தார்.

அந்த வெறி மயக்கத்தில்ம் கூட, ‘தமிழ்நாட்டுப் பத்தினிப் பெண் கொண்ட கணவனையே சுட்டுக் கொல்வாளா?’ என்ற – இரத்தத்தில் ஊறிப்போன – நம்பிக்கை அவருக்கு.

“சுடடி! சுடடி! …. உம்…. என்ன தாமதம்? …. சுடடி!…” அவர் மீண்டும் நகைத்துக்கொண்டே, கூட வந்தவளை நெருக்கமாக இழுத்து அணைத்து அவள் கன்னத்தில்…

டுமீல்!

ஆம், கண்மணி சுட்டுவிட்டாள்!

[கண்மணி! உன்னை என்னுடைய ‘கதாநாயகி’ என்று சொல்வதில் எவ்வளவு பெருமைப்படுகிறேன் தெரியுமா?

நீ சுட்டது நல்லநாதரை மட்டுமல்ல; ‘கணவன் என்னதான் கொடுமை செய்தாலும்’ அவன் மதத்தைத் தூக்கித் தலையில் வைத்துப் பூசை செய்ய வேண்டுமென்ற புராணக் கொடுமையையுமல்ல சுட்டுவிட்டாய்!]

– கலைச் செல்வி, கயமை மயக்கம், முதற் பதிப்பு: 1960, வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *