கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 3,450 
 

கடந்த ஆறு மாதங்களாக இங்கே வந்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி தான் என்னை முதன்முதலில் இங்கே அழைத்து வந்தாள். நான் செய்த பாவம் என் மனைவிக்கு தெரியும். அவள் என்னை மன்னித்துவிட்டதாக சொன்னாள். உண்மையில், இந்த விஷயத்தில் மன்னிக்கும் உரிமை அவளிடம் இல்லை. ஒருவேளை என்னை தண்டிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவள் அப்படி சொல்லியிருக்கலாம்.

“நீங்க இதை மறந்துதான் ஆகனும்” டாக்டர் என்னிடம் சொன்னார். என்னால் மறக்கமுடியாது என்பது அவருக்குத் தெரியும். நான் எதுவும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். தோட்டத்தில், மரத்தடியில் அமர்ந்திருந்த ஒருவர் தன் கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தார். ஒரு லத்தின் அமெரிக்க சிறுகதை தொகுப்பு அது. அவரை நான் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடிரென்று அந்த புத்தகத்தை தன் முழு பலத்தை திரட்டி கிழித்து தன் தலையை சுற்றித் தூக்கி எறிந்தார். பின்பு “குப்பை, எல்லாம் குப்பை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடினார்.

நானும் என்னை மறந்து “குப்பை” என்றேன். டாக்டரின் குரல் என்னை மீண்டும் அறையினுள் அழைத்து வந்தது.

“சட்டத்துக்கு தான் குற்றவாளி நிரபராதி எல்லாம். எங்களுக்கு நீங்க ஒரு பேசன்ட்”

பேசன்ட். நோயாளி. என்னை மனநோயாளி என்கிறார் டாக்டர். ஆம். அப்படிதான். வாழ்க்கை சரியான பாதையில் தான் நகர்ந்துக் கொண்டிருந்தது, மூன்று வருடங்களுக்கு முன்பு வரை.

“தூ நைட் ஷிப்ட் மே ஆஜா” திடீரென்று ஒருநாள் என் மேலதிகாரி சொன்னார். பொதுவாக ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டார்கள். எல்லாம் திருமணம் ஆனவர்கள். இத்தனைக்கும் என்னைவிட வயதில் சிறியவர்கள்.

அங்கெல்லாம் அப்படித்தான். மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துக் கொள்வார்கள். ராத்திரியில் மட்டும்தான் பெண்டாளா வேண்டுமென்று யாரோ சொல்லி வைத்துவிட்டு சென்ற எழுதப்படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிற நாட்டில் அவர்கள் ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனென்று சொன்னது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை.

எனக்கு எந்த ஷிப்டாக இருந்தாலும் பிரச்சனையில்லை. இரவில் எந்த வேலையும் இருக்காது. கடமைக்கென்று ஒரு பொறியாளர் இருக்க வேண்டும். எங்காவது ஒன்றிரண்டு எந்திரங்கள் ஓடும். அதில் ஏதாவது பழுதுவந்தால் அதை பார்ப்பதற்கு ஒரு பொறியாளர் வேண்டும். அதாவது வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு பொறியாளர் வேண்டும்.

எனக்குப் பழுதெல்லாம் பார்க்கத் தெரியாது. ஆனால் இருபத்தினாலு மணி நேரமும் யாரோ ஒரு பலிகடா தொழிற்சாலையில் இருக்கவேண்டும். நான் ராத்திரி நேரத்து பலிகடா. “ராத் கா பலிபக்ரா”

கம்ப்ரசர் அறையிலிருந்து வழக்கம்போல நாராசமான அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது. காது ஜவ்வில் குண்டூசி குத்துகிற மாதிரி இருக்கும் அந்த கம்ப்ரசர் ஓடுகிற சப்தம். வரிசையாக நிறைய கம்ப்ரசர் ஓடிக்கொண்டே இருக்கும். வளிமண்டலக் காற்றை உறிஞ்சி அழுத்தத்தை அதிகப்படுத்தி ஒட்டு மொத்த தொழிற்சாலைக்கும் அழுத்தம் நிறைந்த காற்று வினியோகிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

அந்தக் கம்ப்ரசர் அறையின் மூலையில் இருக்கும் ஒரு சிறு கண்ணாடி அறையில் தான் என் வேலை நேரம் முழுக்கக் கரையும். அங்கு கணினி இல்லை. கணினி உபயோகப் படுத்த வேண்டுமென்றால் அங்கிருந்து நடந்து அலுவலக அறைக்கு வர வேண்டும். பெரும்பாலும் நான் அலுவலக அறையில் இருக்கமாட்டேன்.

தொடக்கத்தில் காலை நேர வேலை செய்யும் போது அலுவலகத்தில் நிறைய பேர் இருப்பார்கள். சந்தைக் கடை மாதிரி எந்நேரமும் சப்தம் வந்துக் கொண்டே இருக்கும். அதுவும் அவர்களின் மூன்றாம் தர ஆங்கிலத்தைக் காதுகொடுத்துக் கேட்க இயலாது. தேவையில்லாமல் என்னை ‘மதராசி’ என்று சொல்லிச் சொல்லி ஏளனம் செய்வார்கள். எனக்கு ஒரே ஒரு பிரச்சனை. எனக்குக் கோபம் வந்தால் நான் சரமாரியாக ஆங்கிலம் பேசுவேன். எல்லாமே அதிகம் உபயோகிக்கப்படாத ஆங்கில வார்த்தைகள். சிறுவயதில் பொழுதைக் கழிப்பதற்கு நான் அதிகம் படித்த ‘ஆக்ஸ்பார்ட்’ அகராதியிலிருந்து கற்றுக்கொண்ட வார்த்தைகள். ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் தங்கள் ஜகாவை தென்னகத்தில் வைத்திருந்ததால் தென்னாட்டுக்காரர்களுக்கு ஆங்கிலம் நன்றாக வரும், பிற மாநிலத்தாரைக் காட்டிலும். ஆனால் குஜராத்திகளுக்கு ஆங்கிலம் குதிரைக்கொம்பு. அதனால், படித்தவர்களுக்கே அதிகம் புரியாத என் ஆங்கில அறிவை குறுகிய புத்தி கொண்டவர்களிடம் வெளிக்காட்ட முடியாது. இப்பிரச்சனைகளைத் தவிர்க்கவே நான் அலுவலக அறையில் இருப்பதை விட சைட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பேன்.

அதுமட்டுமின்றி எனக்கு எப்போதும் கூட்டம் பிடிக்காது. முக்தி அடைவதற்கு ஒரே வழி தனிமையென்று நம்புகிறவன் நான். தாயுமானவர் சொல்லிய மாதிரி ‘சும்மா’ இருக்கவும் ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். இக்காரணங்களாலே நான் கம்ப்ரசர் அறையே கதியென்றிருக்கத் தொடங்கினேன் .

அன்று கண்ணாடி அறையினுள் நுழைந்ததும் ‘நமஸ்தே சாஹிப்’, வணக்கம் வைத்தவாறே ஆபரேட்டர் அங்கிருந்து நகர்ந்தான். நான் எப்போது உள்ளே நுழைந்தாலும் அவர் அங்கிருந்து நகர்ந்து விடுவார். அது ஒரு விசித்திரமான மரியாதை. அந்த அளவுக்கு நான் என் மரியாதையைக் காப்பாற்றி வைத்திருந்தேன்..

“சாஹிப். லடிகி நம்பர் சாயியே கியா?” ஒரு நாள் சிரித்துக் கொண்டே வினவினான்.

“ஐசா மத் பூச்சோ! நீ எப்ப ஆபரேட்டர் வேலைய விட்டுட்டு, பொம்பள சப்ளை பண்ண ஆரமிச்ச!” கோபத்தோடு கத்துகிற மாதிரி நடித்தேன் என் ‘கெத்த’ காப்பற்றிக் கொள்வதற்காக.

அன்றிலிருந்தே அவர் எனக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  எந்நேரமும் காலாட்டிக் கொண்டு அந்த அறையிலேயே அமர்ந்து மொபைலில் வீடியோ பார்ப்பதுதான் அவர் வேலை. நான் வந்துவிட்டால் மரியாதையாக அங்கிருந்து எழுந்து வெளியே போய்விடுவார். விசித்திரமான மரியாதை.

“நமஸ்தே நமஸ்தே” என்றவாறே கண்ணாடி அறையில் அமர்ந்தேன். டிராயரைத் திறந்து உள்ளே இருந்த அந்த தடி புத்தகத்தை எடுத்தேன். என் வாழ்க்கையில் நான் பெரும்பாலான நேரம் படிப்பதற்காகதான் செலவளிக்கிறேன், சில நேரங்களில் புத்தகங்களை, சில நேரங்களில் மனிதர்களை. புத்தகத்தின் அட்டையில் சிரித்துக் கொண்டிருந்தார், மாபசான். டெல்லி சென்றிருந்தபோது வாங்கிய புத்தகம் அது.

“A complete Collection of Guy De Maupassant Short Stories” முதல் இரண்டு பக்கங்களைத் திருப்பி அட்டவணைக்கு சென்றேன். ‘இம்பொலைட் செக்ஸ்’-772 ஆம் பக்கம். ஏனோ தெரியவில்லை, மனம் எதையோ நினைத்துக்கொண்டு அந்தக் கதையை நோக்கிச்சென்றது. என் மனம் எதிர்பார்த்ததைப் போல் அந்தக் கதை இல்லை. படிக்கப் பிடிக்கவில்லை. எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்குமென்பது உண்மை தான் போல! புத்தகத்தை அது இருக்க வேண்டிய இடத்திலேயே வைத்துவிட்டு, வேறு ஏதாவது புத்தகம் கிடைக்குமாவென்று என் பையைத் தேடினேன். ஒரு சிட்னி செல்டன் புத்தகம் கிட்டியது. எப்போதோ என் நண்பன் எனக்குக் கொடுத்த பழைய புத்தகம் அது.

நான் பொதுவாக மேற்கத்திய எழுத்தாளர்களை அதிகம் படிப்பதில்லை. விசித்திரமாக இருப்பதில் ஒரு ‘கெத்’ இருக்கு என்றே நினைக்கிறேன். குப்பை மாதிரி எழுதிக்குவிக்கும் ஆங்கில எழுத்தாளர்கள் மீதெனக்கு ஆர்வம் குறைவு. ஆனாலும் ஒருநாள் சிட்னிசெல்டன் படித்தால் ஒன்றும் குடி மூழ்கிடாது. கிழிந்த அந்தப் பழைய புத்தகத்தில், மூன்றாவது பக்கத்திலேயே நாயகியின் ஆடை களையப்பட்டது. எனக்கு என்னென்னமோ எண்ணங்கள் தோன்றின. உடம்பெல்லாம் ஏதோ செய்தது. எனக்கு கவர்ச்சி பிடிக்கும், விரசம்பிடிக்காது.

மேலாடை இல்லாமல் உக்ரைனில் போராட்டம் நடத்திய பெண்ணியவாதி ஒருத்தியைக்கண்டு இந்திய அரசு துடிக்கிறது. அவள் கூறும் காரணங்களைக் காதுகொடுத்துக் கேளாமல் அவளைக்கைது செய்ய எத்தனிக்கிறது. ஆனால் முகத்தைச் சுழிக்கவைக்குற அளவிற்குத் தன் செழிப்புகளைக் காட்டுகிற ஒரு நடிகைக்கு தேசியவிருது கொடுக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் கைதட்டுகிறது. பாவம் இந்தியர்களுக்கு கவர்ச்சிக்கும் விரசத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அந்தப் புத்தகத்திலிருந்தது விரசம். அது எனக்குப் பிடிக்க வில்லை. அந்தப் புத்தகத்தை அங்கேயே போட்டுவிட்டு வெளியேவந்தேன்.

வெளியில் அமர்ந்து ஆபரேட்டர் மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகபாவனைகள் பார்க்கச் சகிக்கவில்லை. அப்படியே காறி உமிழலாமென்று இருந்தது. அந்த ஆளுக்கு ஐம்பது வயதிருக்கும். கல்யாணமாகி 30 வருடங்களுக்கு மேலாகிறது. ஒன்பது வயதில் ஒரு பேத்தி வேறு உண்டு. ஆனால் இன்னும் மொபைலில் ‘போர்னோ’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

‘போர்னோ’ படம் பார்ப்பதைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. ஆனால் வாழ்க்கைக்கு வடிகாலாக இருக்க வேண்டிய விடயங்கள் வாழ்க்கையாகிப் போவதைத்தான் நான் எதிர்க்கிறேன், நிஜ வாழ்க்கையை நிழல் உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவதை ஆதரிப்பதைதான் நான் வெறுக்கிறேன். மனிதனுடைய தேவைகளும் ஆசைகளும் இச்சைகளும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அதைக் கட்டுப்படுத்த மறந்துவிட்டு நிழல் உருவங்களுக்கு அடிமையாகிப் போவது மடத்தனம்.

என்னை நிமிர்ந்து பார்த்து, “சாஹிப், ஆப்கே பாஸ் குச் வீடியோ ஹே” என்று வினவினான், நிழல் உருவங்களால் ஆக்கிரமிக்கப் பட்ட அவன்.

கிழவன் பார்த்த வரை பத்தாதென்று என்னிடம் வேறு வீடியோ கேட்கிறான்.

“கியா சாஹிப்?”

“குச் நஹி, மே ஜாரா ஹூன்”

திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். பொதுவாக பொழுது போகாத பல சமயங்களில் நான் தொழிற்சாலைக்குள்ளேயேதான் சுற்றித் திரிவேன். அன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கம். என் உடம்போ மனசோ, என் கட்டுப்பாட்டில் இல்லை.

அன்று ஹோலி பண்டிகை என்பதால் யாருமே தொழிற் சாலையில் இல்லை. ரெண்டு சொறி நாய்கள் புணர்ந்துகொண்டிருந்தன. அதை ரெண்டு செக்யூரிட்டி கார்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதன்மேலும் பற்றின்றி வீதியில் இறங்கி நடந்தேன்.

மணி ஒன்றரை இருக்கும். நிசப்தம் வழிந்தோடிய தெருக்கள். தவளை கத்துகிற சப்தம் மட்டும் கேட்டது. சாலையின் இரு புறமும் வெறும் மரங்கள். நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இருந்து வலது புறம் போனால் ‘சுவாளி’ என்று ஒரு பீச் இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். அது வரைக்கும் பார்த்ததில்லை. ரொம்ப தூரம் போக வேண்டுமென்று தெரியும். எனக்கு ஒரு வேலையுமில்லை. காலையில் ஏழு மணிக்கு அவுட் பன்ச் அடிக்க வேண்டும். அதற்கு முன்பாக கிளம்பினால் லாஸ் ஆப் பே. எவ்வளவு நேரம் அதிகமாக வேலை செய்தாலும் நிர்வாகம் கண்டுக் கொள்ளாது. ஆனால் ஒரு நிமிடம் சீக்கிரம் கிளம்பினாலும் ஒரு நாள் சம்பளம் போய்விடும், இந்தியாவிலேயே பெரிய நிர்வாகம். கேட்க நாதியில்லை. ஏழு மணி வரை நேரத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக நான் சுவாளி நோக்கி நடந்தேன்.

அப்போது தவளை சப்தத்தோடு சேர்ந்து வேறொரு சப்தமும் கேட்டது, நான் தொடர்ந்து நடக்க, சப்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நிரம்பியிருந்த நிசப்ததைக் கலைத்தது அருகிலிருந்த புதரினுள்ளிலிருந்து வந்த அந்தப் பெண்ணின் பயங்கரமான அலறல். ஒரு நிமிடம் திகைத்து நின்று, அந்த அலறலை ரசித்தேன். அதில் ஏதோ ஒரு சுகம், சொர்க்கம் பொதிந்திருந்தது. பின் சுதாரித்துக் கொண்டு, புதரை நோக்கி ஓடினேன். முன்னே நின்றவன் இரண்டு கைகளையும் விரித்து என்னை அப்படியே தடுக்க வந்தான். எனக்கு சண்டை போடத் தெரியாது, இருந்தாலும் தில்லாகக் கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினேன். உடம்பில் அடிப்பதைவிட ஒருவன் மனதில் அடிக்க வேண்டும். நான் போட்ட சத்தத்திலேயே அவன் பயந்துவிட்டான். அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது.

அதைப் பார்த்ததும் நான் இன்னும் அதிகமாக கத்தினேன்.

“பஹேன் சோத்”

“க்யா கர்ரஹா ஹே து… கோனே அந்தர்… லXX” கெட்டவார்த்தைகள் சரமாரியாக என் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. பொதுவாக நான், மூன்று மொழிகளில் பாரபட்சமின்றி கெட்ட வார்த்தை பேசுவேன். எல்லா மொழிகளிலும் வகை வகையான கெட்ட வார்த்தைகள் உண்டு. ஆனால் உடம்பின் உறுப்புகளைக் குறிக்கும் வார்த்தைகள் எப்படி கெட்ட வார்த்தையானதென்று இன்னும் புரியவில்லை. பல நாட்கள் தூங்காமல் கெட்ட வார்த்தைகள் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். இந்திய மொழிகளில் பெரும்பாலான கெட்டவார்த்தைகள் உடல் சம்பந்தப் பட்டது. பெரும்பாலும் எல்லாக் கெட்டவார்த்தைகளும் அப்படிதான்…

தொடர்ந்து என் வார்த்தைகள் உச்ச மண்டிலத்தை அடைய அவன் அங்கிருந்து ஓடி விட்டான். புதரின் உள்ளிருந்து இருவர் வேகமாக என்னை நோக்கி ஓடி வரவும், நான் பாய்ந்து அருகில் இருந்த கூரியக் கல்லை எடுக்கவும் சரியாக இருந்தது. கல், மனிதனின் முதல் ஆயுதம். உலகிலேயே மிகக் கொடூரமான ஆயுதமும் கூட. கல்லை இறுக்கமாகப் பிடித்திருந்த என் கையைப் பார்த்ததும் இருவரும் ஓடத் தொடங்கினார்.

நான் அவர்களைத் துரத்திக் கொண்டே ஓடினேன். அதில் ஒருவன் கால் தடுக்கி கீழே விழுந்து, முட்டி சிராய்ந்து, மீண்டும் எழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினான். ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது. அவர்கள் அதற்கு முன் எந்தத் தவறும் செய்யாத விடலைகள். அவர்களுக்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும். எங்கேயோ திருட்டு சாராயம் வாங்கிக் குடித்து விட்டு, சூட்டைத் தணிக்க முடியாமல் தனியாகப் போனவளைச் சீண்டியிருக்கிறார்கள்.

நான் துரத்துவதை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் ஒரே இடத்தில் நின்று கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தேன். இடையிடையே சில ஆங்கில கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தேன். அவர்களுக்குப் புரிந்ததா என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை. கெட்ட வார்த்தை பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கதான் செய்கிறது….

சொல்ல முடியாத அந்தச் சுகத்தில் லயித்திருந்த என்னை அந்தப் பெண்ணின் அழுகுரல் தான் மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்தது. புதர் நோக்கி ஓடிய போது, புல்லிலிருந்த அந்தப் பை காலில் சிக்கியது. பை முழுதும் பெண்ணின் துணிகள். ஒருவாறு நிலைமையை யூகித்துக் கொண்டு பையைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தப் புதர்வரை சென்றேன். வெளியில் புதர் போன்று காட்சியளித்த அந்த இடத்தின் உட் புறத்தில் புல்தரை பரந்து விரிந்திருந்தது.

அந்தப் பெண் அழுது முடிக்கும் வரை அங்கேயே அமைதியாக நின்றிருந்தேன், கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள். பின் பொறுமையாகப் பேசத் தொடங்கினேன்.

“கோனே து? கஹான் சே ஆயா?”

“சொல்லுடி. யாருடி நீ…” தொடர்ந்து பல முறை வினவியதும் அவள் சற்றே தடுமாறி பதிலளித்தாள். அவள் பேச்சில் பெரும்பாலும் மராத்தி வார்த்தைகள் கலந்திருந்தன. ஹிந்தி பேசத் திணறும்போதே, ஏதோ கிராமத்திலிருந்து வருகிறாள் எனக் கண்டுகொண்டேன்.

“இதற் க்யு ஆயா?”

அவள் அழுதுகொண்டே சொன்னது, “அம்மா செத்துட்டா… வேலை தேடி இங்க வந்தேன்… அவங்க வேலை வாங்கித் தரேன்னு சூரத்துல இருந்து இங்க கூட்டி வந்தாங்க”

அப்போது மீண்டும் உரைத்தது. அந்த இளைஞர்கள் திட்டம் போட்டு தூக்கி வந்திருக்கிறார்கள். பாவம் எத்தனை நாள் காத்திருந்தார்களோ!

“ராத்திரி நேரத்துல எவன் வேலை கொடுப்பான். உனக்கெங்க அறிவு போச்சு…”

“தங்க இடம் தரேன்னு சொன்னான். தங்கச்சி தங்கச்சின்னு சொன்னான். ஊர் பாச பேசுனான்”

தங்கச்சியாவது, அக்காவாவது… எனக்குள்ளே முனகிக் கொண்டேன்.

“உன்ன யாரும் தேடமாட்டாங்களா?”

மீண்டும் கொஞ்ச நேரம் அழுகை. “எனக்குன்னு யாரும் இல்ல. ஊர்லதான் தப்பா நடந்துக்குறாங்கனு இங்க வந்தேன். இவங்களும்… ரொம்ப நன்றி சார். என்னக் கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை…”

நன்றாகவே உரைத்தது, ‘கொன்னிருந்தாக் கூட கேட்க ஆளில்லை’. அந்தப் பொண்ணுடைய கதறலை நான் பொருட்படுத்தவேயில்லை. அவள் வாயை இறுக்க மூடினேன். சிறிது நேரத்தில் அவளின் கதறல் காற்றில் கரைந்தது. வாய்ப்புகள் கிடைக்காத வரைக்கும் அனைவரும் நல்லவர்கள்தான். நானும் நல்லவன்தான், சில நிமிடங்களுக்கு முன்பு வரை…

அந்தப் பெண் அழுதுக்கொண்டே இருந்தாள். நான் திரும்பிப் பார்க்காமல் மீண்டும் தொழிற்சாலைக்கே வந்துவிட்டேன். அந்தப் பெண்ணுக்கு இருபது வயது இருக்கும். களையான முகம். நீல நிற சல்வாரில் ரொம்ப லட்சணமாகவே இருந்தாள். ஆனால் இதெல்லாம் அவள் ஆடையைக் கிழிக்கும் போது எனக்குத் தோன்றவில்லை.

என்னால் கம்ப்ரசர் அறையில் இருக்க முடியவில்லை. மாபசான் என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது . ’ஏன்டா மெத்தப் படிச்ச மேதாவியே! கடைசியில் நீயும் ஒரு…’

அவர் என்னைப் பார்த்து கேட்பது மாதிரி இருந்தது. என் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.

“சாஹிப் கியா ஹுவா?” ஆபரேட்டர், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான். நான் எதுவும் பேசாமல் அலுவலகத்திற்கு வந்து அமர்ந்தேன். ஏ.சி அறையிலும் வேர்த்துக் கொண்டே இருந்தது,

‘நல்லா நினைவிருக்கு. அந்தப் பொண்ணு என்னத் தடுக்கல. நாலு பேரு தூக்கிப் போய் ஒரு பொண்ண பலாத்காரம் பண்ணலாமேயொழிய, ஒருத்தனால ஒரு பெண்ணோட உரிமையில்லாம கற்பெல்லாம் அழிக்க முடியாது’ இப்படி நான் படித்த மனோதத்துவத்தையெல்லாம் சொல்லி என் மனதை தேற்றிக் கொள்ள முயன்றேன். அனால் மனக் குரங்கு சாந்தி அடையவில்லை. முந்தைய நாள் வரை பெண்ணியவாதியென்று பெருமையாக சொல்லிக்கொண்ட என்னால் இனிமே பெருமைப்பட முடியாது என்று எண்ணினேன். ஒரு பெண்ணுடைய உரிமை இல்லாமல் அவளைத் தொடுவது மட்டும் தப்பில்லை. அவள் உரிமை இல்லாமல் அவள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதும் தப்புதான்.

நான் செய்தது மிகப் பெரிய தப்பு. துரோகம். அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாய்ச் சொல்லிச் சீரழித்துவிட்டேன். நான் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணிற்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். அவள் முன்னே மரியாதைக்குரிய ஒரு மனிதனாய் நிமிர்ந்து நின்றிருக்கலாம். ஆனால், நான் என் இச்சைக்கு அடிமை ஆகிவிட்டேன். இப்போது நினைத்தாலும் என் முகத்தில் நானே காறி உமிழ வேண்டும் என்று தோன்றுகிறது.

எல்லோருள்ளும் ஒரு ஆதிக்கவாதி முதலாளித்துவவாதி ஒளிந்திருக்கிறான். அவளால் என்னை என்ன செய்ய முடியுமென்ற எண்ணம். நான் அறியாமையில் தப்பு செய்யவில்லை. மேதாவித் தனத்தில் தப்பு செய்துவிட்டேன். அதுதான் என்னை அதிகம் உறுத்துகிறது. நான் படித்த படிப்பெல்லாம் பொய். கீதாசாரம் பொய். தில்லைப்பதிகம் பொய். நான் படித்த எல்லாம் வீண்..

வாழ்க்கை அழகு நிறைந்த பூந்தோட்டம் கிடையாது. அது ஒரு குப்பை. மனித மனம் ஒரு சாக்கடை. அங்கு வெறும் இச்சைகளும் கீழ்த்தரமான எண்ணங்களும்தான் புதைந்து கிடக்கிறது. கடைசியில் பிராய்ட் தான் ஜெயிக்கிறான். எல்லாமே வெறும் ஹார்மோன்ஸ்தான். நாமெல்லாம் ஹார்மோன்ஸின் அடிமைகள். அதைக் கட்டுப் படுத்த யாரும் சொல்லித்தரவில்லை. யாராலும் கட்டுப் படுத்தவும் முடியாது. நன்னெறி பேசுகிற உன்னத இலக்கியங்களெல்லாம் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவே சொல்லித் தருகின்றன. சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள யாரும் சொல்லித்தருவதில்லை.

நிர்வாணமாய் ஒரு பெண் உன் முன் வந்தால் கண்ணை மூடிக் கொண்டு சாமியாராகப் போ, என்று சொல்லிதரும் இலக்கியம் எதுவும் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கட்டுபாடோடு இரு என்று சொன்னதில்லை. யாராலும் சொல்லவும் முடியாது.

அப்புறம் என்ன உன்னத இலக்கியம்! உலக இலக்கியம்.

எல்லாம் பொய். நன்னெறிகள் பொய். எல்லாம் செப்படி வித்தை. கீழ்த்தரமான மனித வாழ்க்கையில் எதுவும் உண்மையில்லை…

இல்லாத கடவுளை இருப்பதாக நினைத்து நானும் வேண்டியிருக்கிறேன், பாரதி போல

“சிந்தை தெளிவாக்கு அல்லாளிதை செத்த உடலாக்கு”

ஆனால் எதுவுமே எனக்குப் பயன்படவில்லை. சிந்தித்துப் பார்த்தால் நானும் ஓர் கபட வேசதாரியோவென்று தோன்றுகிறது. என்னைக்காட்டிலும் மொபைலில் ‘போர்னோ’ படம் பார்க்கும் அந்தக் கிழவன் எவ்வளவோ மேல்…

என் குற்ற உணர்ச்சி என்னை அணு அணுவாச் சிதைக்கத் தொடங்கியது.

‘அவ நிச்சயம் நல்ல பொண்ணா இருக்கமாட்டா. இந்த நேரத்துல தனியா வெளிய வரவ நல்லவளா இருக்க முடியாது’ நான் ஏதேதோ சொல்லி என் குற்ற உணர்ச்சியைக் குறைக்கப் பார்த்தேன். என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது…

மணி 4. காரை எடுத்துக்கொண்டு அந்தப் புதரை நோக்கிப் போனேன். அவள் அங்கு இல்லை. அந்தப் பையும் இல்லை. அந்த இடத்தில் அவளோட கிழிஞ்ச சல்வார் மட்டும் இருந்தது. அதெல்லாம் ரத்தம். அதைப் பார்த்ததும் விளங்கிற்று. நான் நினைத்த மாதிரி இல்லை. அவள் உண்மையாவே ஒரு அப்பாவி பெண். என் மனதை சாந்தப் படுத்த முடியவில்லை, கத்தினேன்.

சாடிஸ்ட்… சாடிஸ்ட். என்னை நானே திட்டிக் கொண்டேன். வேகமாக என் காரை எட்டி எட்டி உதைத்தேன், கால் வலி எடுக்கிற வரைக்கும். ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழித்த அந்தக் குற்ற உணர்ச்சியை தாங்கிக் கொள்ள இயலாமல், கொஞ்ச நேரம் அங்கேயே உக்கார்ந்து அழுதேன்.

விடியத் தொடங்கிற்று. சாலையில் தொழிற்சாலை பர்ஸ்ட் ஷிப்ட் வேலைக்காக பலரும் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் என்னை ஒருமாதிரி ஒரேமாதிரி பார்க்கத் தொடங்கியதும், நான் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சூரத் நோக்கிச் சென்றேன். மிக மோசமாகவே காரை ஓட்டிச் சென்றேன் என்று நினைக்கிறேன். சிக்னலில் நிற்கவில்லை. நான் எப்போதும் அப்படி ஒட்டியதில்லை. ஆனால் சூரத்தில் எல்லோருமே மோசமாகவே கார் ஓட்டுவார்கள் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மஜுரா கேட் திருப்பத்தில் ஒரு ஆடி கார் மீது என் கார் உரசிவிட்டது. அவ்வளவு தான். பலரும் என்னை சூழ்ந்துக் கொண்டார்கள். குஜராத்தியில் வசை பாட தொடங்கிவிட்டனர். அதற்குள் ஒரு நல்ல போலீஸ்காரர் அங்கு வந்துவிட்டார். என்னை அந்தக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்து சென்றார். அருகாமையிலேயே ஒரு போலிஸ் பூத் இருந்தது. அங்கு சென்றதும்,

“மே கல்தி கியா பையா” என்றேன்.

நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருப்பேன் என்று எண்ணினாரோ என்னவோ, மேற்கொண்டு எதுவும் பேசாதே என்று செய்கை செய்தார். பின் நான் குடித்திருக்கவில்லை என்பதை கண்டுக்கொண்டதும்,

“நான் கேஸ் பைல் பண்றேன். இன்சுரன்ஸ் போட்டு அவன் காச க்ளைம் பண்ணிப்பான்” என்றார். நான் விடவில்லை. மீண்டும் சொன்னேன், “சார். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்”

அவர் என்ன என்பது போல் பார்த்தார். முன்னிரவு நடந்தததை சொன்னேன். அவர் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தோன்றி மறைந்ததை கவனித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர், அருகே இருந்த இன்னொரு போலிஸ்காரரை அழைத்து அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார். அவர் தன் பங்குக்கு என்னிடம் வந்து என்னைப் பற்றி முழுமையாக விசாரித்தார். நான் எல்லாவற்றையும் சொல்லிமுடித்ததும், சிறிது நேரம் விழுந்து விழுந்து சிரித்தார்.

“உன் ஸ்டீல் ப்ளான்ட் இருக்குற இடம் ஒருகாலத்துல சுடுகாடா இருந்துச்சு. அதான் நீ எதையோ பாத்து பயந்திருக்க” என்றார். அதற்கு மேல் அவர் அங்கு நிற்கவில்லை. சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டார். அவர்கள் ஏன் என்னை சந்தேகப் படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் பார்ப்பதற்கு மிகவும் நாகரிகமாக இருந்ததால், நான் மிகவும் நல்லவன் என்று முத்திரை குத்தி விட்டார்கள் போலும். இதுவே நான் ஒரு கூலி தொழிலாளி போல் இருந்திருந்தால் அவர்கள் அவ்வளவு நேரம் என்னிடம் பேசி இருக்க கூட மாட்டார்கள். மேலும் நான் செய்யாத குற்றத்தையெல்லாம் கூட என் மீது சுமத்தியிருக்கக் கூடும். ஆனால் நான் செய்த குற்றத்தை நானே ஒப்புக் கொண்டாலும் நம்ப மறுக்கிறார்கள்.

அந்த நல்ல போலிஸ்காரரிடம் மீண்டும் சென்று என்னை கைது செய்யும் படி சொன்னேன். அதுவரை சகஜமாக இருந்த அவரது முகம் அப்போது கடுமையாக மாறியதை கவனித்தேன்.

“அரே, ஜாதா மத் போல். எங்களுக்கு நிறைய வேல இருக்கு. நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் அந்த பொண்ணு வந்து கம்ப்ளைன்ட் குடுத்தாதான் உன் மேல கேஸ் போட முடியும். இதேமாதிரி எங்கயும் போய் பேசிகிட்டு இருக்காதா…”

ஆடி கார்காரன் இன்சுரன்ஸ் க்ளைம் செய்வதற்காக என் வண்டி நம்பரை மட்டும் குறித்துக் கொண்டு சென்றுவிட்டான். போலிஸ் காரர்களும் அவர்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். நான் மட்டும் அங்கேயே சிறிது நேரம் நின்றுக் கொண்டிருந்தேன். யாரும் என்னை சட்டை செய்யவில்லை என்று தெரிந்ததும், சூரத் ரயில் நிலையம் சென்று அந்த பெண்ணைத் தேடினேன். ஒரு ப்ரோயஜனமும் இல்லை. ஒருவாரம் கம்பெனிக்கு செல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டேன். எங்கெங்கோ சென்று அவளைத் தேடினேன். சத்தியமாக அவளைக் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தேடினேன். கடைசிவரை அவள் கிடைக்கவே இல்லை.

ஒருவாரம் கழித்து கம்பெனியிலிருந்து போன் வந்தது. ஸ்டீல் உற்பத்தி செய்ய வேண்டி இருந்ததால், என்னை பகல் நேர ஷிப்ட்டில் வர சொன்னார்கள். கம்பெனியில் யாருடனும் என்னால் சகஜமாக பழக முடியவில்லை. மீண்டும் கம்ப்ரசர் அரை. மிகவும் நாராசமான சப்தம். அது போதாதென்று வாக்கி டாக்கி வேறு அலறிக் கொண்டே இருந்தது. அலைப்பேசியில் சிக்னல் பிரச்சனை இருக்கும் என்பதால் ஸ்டீல் உற்பத்தி நடக்கும் நாட்களில் மட்டும் எல்லோர் கையிலும் வாக்கி டாக்கி கொடுத்துவிடுவார்கள். ஸ்டீல் உற்பத்திக்கு தேவையான காற்று, நீர், வாயு அனைத்தும் சரியான நிலையில் சரியான அளவில் செல்கிறதா என்பதை மேற்ப்பார்வை இட அந்தந்த இடத்தில் ஒரு பொறியாளர் இருப்பார். ஒவ்வொருவரும் சம்மந்தம் இல்லாமல் பதட்டமாக வாக்கி டாக்கியில் பேசிக் கொள்வார்கள். நிதானமாக செய்தாலே எல்லா வேலையும் சரியாக முடிந்துவிடும் என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். நான் என் வேலையை சரியாக செய்யக் கூடியவன் என்பதால் வாக்கிடாக்கி சம்பாசனையில் ஈடு படமாட்டேன். அதன் சப்தத்தை குறைத்து வைத்துவிட்டு என் வேலையை பார்ப்பேன். அன்று அதையும் செய்யவில்லை. வாக்கி டாக்கி அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது.

கம்ப்ரசரிலிருந்து வெளி வரும் காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை நீக்குவதற்காக அங்கே ஆறு ட்ரையர்கள் இருந்தன. காற்றில் ஈரப் பதம் இருந்தால் உற்பத்தி தடைப்பட்டுவிடும். அதனால் ஒரே நேரத்தில் மூன்று ட்ரையர்கள் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். திடிரென்று ஏதாவது ட்ரையர் பழுது பட்டு விட்டால், அதை நிறுத்தி விட்டு, வேறொரு ட்ரையரை ஆன் செய்ய வேண்டும். அன்று ட்ரையர் பழுதானதை நான் கவனிக்க வில்லை. காற்றில் ஈரப்பதம் இருப்பதாக பலரும் வாக்கி டாக்கியில் கத்திக் கொண்டிருந்ததும் என் காதில் விழவில்லை. அந்த பெண்ணின் அழுகுரல் மட்டும் காதில் ஒலித்தது. என் உடம்பு நடுங்குவது போல் உணர்ந்தேன். நிமிர்ந்து பார்த்தால் ஒரு சர்தார்ஜி என் தோளைப் பிடித்துக் குழுக்கிக் கொண்டிருந்தார்.

சுதாரித்துக் கொண்டேன். அவர் என்னுடைய பெரிய பாஸ். என் டிபார்ட்மென்டின் தலைவர். பொதுவாக அவர் சைட்டுக்கு வர மாட்டார். அவரே வந்திருக்கிறார் என்றால் பிரச்சனை பெரியது தான்.

“க்யா ஹுவா தும்கோ ஆஜ்கல்?” அவர் என்னை திட்டவில்லை. அன்பாகதான் கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் மற்ற பொறியாளர்கள் ஏர் ட்ரையர் கனெக்ஷனை மாற்றத் தொடங்கியிருந்தனர். எப்படியோ அன்று உற்பத்தி தடைப்படவில்லை. பெரிய பாஸ் என் மீது அதிக அன்பு வைத்திருந்ததால். இரண்டு மாதம் மெடிகல் லீவ் எடுத்துக் கொண்டு செல்லும் படி அறிவுரை சொன்னார். பல நாட்கள் நைட் ஷிப்டில் வேலை செய்ததால் நான் சோர்வுற்றுவிட்டதாக அவர்கள் கருதினர். சென்னை வந்தும் என்னால் நான் செய்த தவறை மறக்க முடியவில்லை. யாருடனும் அதிகம் பேசாமல் அறையினுள்ளேயே கிடப்பேன். திரும்பி குஜராத் செல்வதில் உடன்பாடில்லை. வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்து வீட்டிலிருந்தே ராஜினாமா கடிதம் அனுபினேன்.

ஆனால் நான் நான்கரை வருடங்கள் கம்பெனியை விட்டு விலக முடியாது என்றும், விலக வேண்டுமெனில் பல லட்சங்கள் கம்பெனிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென்றும் மனித வள மேலாளரிடமிருந்து மெயில் வந்தது. அப்போது தான் நினைவுக்கு வந்தது. நான் ஒரு முறை கம்பெனி செலவில் ரொமானியா சென்று வந்தேன். அங்கிருந்து இறக்குமதி ஆகவிருந்த ஒரு எந்திரத்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றிருந்தேன். இரண்டு நாள் வேலை தான். ஆனால் கம்பெனியில் என்னை இரண்டு வாரம் அங்கேயே தங்க சொன்னார்கள். பொறுமையாக ஊர் சுற்றி பார்த்துவிட்டு வர சொன்னார்கள். நானும் வந்தவரை லாபம் என்று சுற்றிவிட்டு வந்தேன். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் கம்பெனி செலவில் வெளிநாட்டில் தங்கினால் குறைந்தது ஐந்து வருடம் கம்பெனியில் வேலை செய்தே ஆக வேண்டும் என்பது கம்பெனி பாலிசி என்று சொல்லி நான் ஊரிலிருந்து வந்ததும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். நானும், எனக்கு வேறு எங்கு வேலைக் கிடைக்க போகிறது என்று எண்ணி கையெழுத்து போட்டு விட்டேன். அந்த பத்திரத்தை வைத்து என்னைக் கட்டிப்போட்டு விட்டனர். அவர்கள் கேட்டத் தொகை என்னிடம் இல்லை. வேறு வழியில்லாமல் சர்தார்ஜி காலில் போய் விழுந்தேன். அவர் முயன்று எனக்கு சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தார்.

சென்னையில் காஞ்சிபுரத்தில் கப்பல் டிசைன் செய்யும் வேலை. நான் வேலை செய்யும் நிறுவனம் ப்யூஸ் கேரியர் முதல் கப்பல் வரை எல்லா தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கிறது. உண்மையில் கப்பலின் டிசைன் எல்லாம் ஜப்பானில் இருந்து வரும். அதை இறுதி செய்வது மட்டுமே என் வேலை. பகல் ஷிப்ட் மட்டும் தான். வேலை பளு குறைவு. நான் என் வேலையை மட்டும் செய்து விட்டு வந்துவிடுவேன். யாருடனும் தேவையில்லா நட்புமில்லை பகையுமில்லை. முன்பைப்போல் புத்தகங்கள் படிப்பதில்லை. நான் நானே இல்லை என்பதை உணர்ந்தேன். இரவுகளில் தூக்கம் வரவில்லை. அப்படி முயன்று கண் அசந்தாலும், யாரோ ஒரு பெண் அலறுவது போல் சப்தம் கேட்கும். விழித்துக் கொள்வேன். தூக்கம் வரவில்லை என்று மருத்துவரிடம் சென்றேன். அவர் இன்சோம்னியா என்று மருந்து கொடுத்தார். ஒரு ப்ரோயஜனமும் இல்லை. இப்படியே இரண்டு வருடம் கழிந்ததும் என் வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தனர். அதற்கு முன் பல தருணங்களில் நான் திருமணத்தை தவிர்த்து வந்தேன். ஆனால் இந்த முறை முடியவில்லை. என் பெற்றோர்கள் ஒரேடியாக குதித்தனர். நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லையெனில், அவர்கள் சோகத்திலேயே மடிந்து விடுவார்கள் என்று கூறினர்.

அது போன்ற ஆக்ரோஷமான வசனங்களை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். உண்மையில் நான் வேலையை எங்கே விட்டுவிடுவேனோ என்று என் பெற்றோர் பயந்தனர். திருமணம் செய்துவைத்து என் பொறுப்புக்களை அதிகப் படுத்திவிட்டால் என்னால் வேலையை விட முடியாது என்று அவர்கள் கருதினர். எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை தான். ஆனால் என் பெற்றோர்களோ வயதானவர்கள். என்னால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அந்த குற்ற உணர்ச்சி என்னை ஒரேடியாக கொன்றுவிடும் என்று நான் பயந்ததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன்.

மிக எளிமையாக ஒரு முருகர் கோவிலில் திருமணம் நடந்தது. மனைவி மனோதத்துவம் படித்தவள். அதனால் என்னிடம் பிரச்சனை இருப்பதை கண்டுகொள்ள அவளுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை. ஒரு நாள் என் மனைவியிடம் எல்லா உண்மையையும் கொட்டிவிட்டேன். அவள் தன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டவில்லை. நான் என் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். நான் ஏன் அப்படி செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு நான் எப்படி சம்மந்தமே இல்லாத இன்னொரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க முடியும்? ஆனால் நான் கேட்டேன். என் மனைவியும் அவள் என்னை மன்னித்துவிட்டதாக சொன்னாள். உண்மையில் மன்னிக்கும் உரிமை அவளிடம் இல்லை. நான் இன்னொரு பெண்ணிற்கு செய்த துரோகத்திற்கு என் மனைவி எப்படி என்னை மன்னிக்க முடியும்? ஒருவேளை என்னை தண்டிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவள் அப்படி சொல்லியிருக்கலாம். அவள் அதோடு நிற்கவில்லை. தனக்கு தெரிந்த ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து சென்றாள். கிட்டதட்ட ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்திக்க சென்றுக் கொண்டிருக்கிறோம். அவர் ஒவ்வொரு முறையும் நான் செய்த பாவத்தை என் வாயாலேயே முதலிலிருந்து சொல்லச் சொல்வார். அப்படி சொல்வதன் மூலம் என் குற்ற உணர்ச்சி குறையுமாம். அப்படிதான் என்னிடம் சொன்னார். உண்மையில் என் குற்ற உணர்ச்சி குறைந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஆத்திச்சூடி சொல்லும் குழந்தை போல் ஒவ்வொரு முறையும் அவரிடம் நான் செய்த செயலை ஒப்புவித்து வருகிறேன். இன்றும் அப்படி ஒப்புவிக்கும் போதுதான் ‘எல்லாம் குப்பை’ என்ற பெரியதொரு தத்துவத்தை அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு சென்ற அந்த மனிதரை கண்டேன். சிறிது நேரம் வெளியே உலாவிவிட்டு வருவதாக என் மனைவியிடமும் மருத்துவரிடமும் சொல்லிவிட்டு அந்த தத்துவ மனிதரை தேடி வார்ட்டுக்கு சென்றேன். ஆனால் அவரை அறையில் வைத்து பூட்டி விட்டதாகவும் என்னை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் அங்கே இருந்த ஊழியர் ஒருவர் சொன்னார். திரும்பி வரும் போது என் மனைவியும் மருத்துவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ஒட்டுக் கேட்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் பேசுவதை கேட்டேன். அதிர்ச்சியாகவே இருந்தது. முதலில் என் மனைவி என்னை மன்னித்து எனக்கு உதவி செய்கிறாள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என் மனைவி என்னை ஒரு மன நோயாளி என்று கருதுகிறாள். அந்த டாக்டரும் அதை ஆமோதிக்கிறார். அவர்கள் நான் மனநிலை பிறழ்வால் உளறுகிறேன் என்றே நினைக்கிறார்கள். குஜராத்தில் அந்த போலிஸ்காரர் நான் ஆவியை கண்டு பயந்து விட்டதாக சொன்னார். இவர்கள். நான் மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு கற்பனைக் கதையை சொல்வதாக எண்ணுகிறார்கள். அப்படி ஒரு பெண் இருக்க வாய்ப்பில்லை என்றும், அவள் நான் உருவாக்கிக் கொண்ட பிம்பம் என்றும், உலக இலக்கியத்தை தீவிரமாக வாசித்து எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட ஒரு ஐடியல் கற்பனை உலகம் நிஜ வாழ்வோடு ஒத்துப்போகததால் என்னை நானே தண்டித்துக் கொள்ள முயல்வதாக அவர்கள் பேசிக் கொண்டார்கள். கார்ல் ஜங் என்றார்கள், அன்கான்சியஸ் மைன்ட் என்றார்கள். நடந்த ஒரு செயலை அவர்கள் என்னுடைய கற்பனை என்கிறார்கள். என்னுடைய மிருகத்தனத்தால் நான் செய்த தவறை அவர்கள் மனநோய் என்கிறார்கள். எனக்கு கோபமாக வந்தது. ஆனாலும் அமைதியாக இருந்தேன். ஏனெனில் என் மனைவி மிகவும் நல்லவள். வேறோருத்தியாக இருந்திருந்தால் இந்நேரம் என்னை விட்டு சென்றிருப்பாள். என்னை சபையில் வைத்து அசிங்கப்படுத்தி இருக்கவும் கூடும். ஆனால் என் மனைவி என்னைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றி வருகிறாள். நான் எதுவும் பேசாமல் காரில் வந்து அமர்ந்தேன். ஆனாலும் இனிமேல் டாக்டர் தரும் மருந்துகளை உண்ணக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஏனெனில் அவர்கள் சொல்வது போல் எனக்கு மனப்பிறழ்வு இல்லை.

அன்று வீட்டிற்கு வர இரவாகிவிட்டது. வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஏதோ ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு பலாத்கார வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப் பட்டுவிட்டதாக செய்தியில் சொன்னார்கள்.

“இவனுங்களலாம் தூக்குல போடணும்”

அம்மா கோபமாக சொன்னாள். ஒருவேளை என்னையும் தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஒருவேளை நானே என்னைப் போட்டுக் கொள்ள வேண்டுமா! நானும் இந்தக் குற்றத்தை செய்தவன் என்று தெரிந்தால் அம்மா என்னையும் தூக்கில் போட சொல்வாளா? நான் ஸ்தம்பித்து நின்றதை என் மனைவி கவனித்துவிட்டாள் போல. என் கையை பிடித்து அறைக்குள் அழைத்து சென்றாள். மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டால் எல்லா மனக் கவலையும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும் என்றாள். என் கையில் சில மாத்திரைகளை திணித்துவிட்டு அவள் குளிக்கச் சென்றாள். நான் மாத்திரைகளை ஜன்னல் வழியாக தெருவில் தூக்கி ஏறிந்துவிட்டு வந்து படுத்துக் கொண்டேன். உறக்கம் வரவில்லை.

குளித்துவிட்டு வந்த என் மனைவியிடம் “அந்த பொண்ண கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணனும்” என்றேன். எதையோ சொல்ல வந்த என் மனைவி நிறுத்திக் கொண்டாள். பின் நிதானமாக, “சரி. அப்படி நடந்தா நானே ஒதுங்கிக்கிறேன். இப்ப தூங்குங்க” என்றாள். சிறிது நேரத்தில் அவள் உறங்கிப் போனாள். ஆனால் என்னால் உறங்க முடியவில்லை.

அந்த அப்பாவி மராத்திப் பெண் உயிரோடு இருக்கிறாளா என்று தெரியவில்லை. உயிரோடிருந்தால் நிச்சயம் அந்த வலியோடுதான் வாழ்ந்துக்கொண்டு இருப்பாள், நான் என் குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருப்பதைபோல என்று நினைத்தேன். லேப்டாப்பை ஆன் செய்தேன். அந்த தொலைகாட்சி சேனலின் இணையதளத்திற்கு சென்றேன். அன்று பலாத்கார வழக்கில் கைது செய்யப் பட்ட ஐவரைப் பற்றிய செய்தியை படித்தேன். பின்னூட்டத்தில், அவர்களை பலரும் மோசமாக திட்டி வைத்திருந்தனர். குறிப்பாக அந்த வசைகளை மட்டும் படித்தேன். அதெல்லாம் எனக்கு வர வேண்டிய வசைகளாகவே கருதினேன். ஒவ்வொரு வசையை படிக்கும் போதும் எனக்கு நானே சாட்டை அடிக் கொடுத்துக் கொள்வது போல் இருந்தது. அதில் ஒரு ஆறுதல் கிடைத்தது. அந்த தளத்தில் இருந்த ஒரு காணொளியை பார்த்தேன். அன்று சாயங்காலம் ஒளிபரப்பான விவாத மேடை நிகழ்ச்சி அது. அதில் பலரும் அந்த குற்றவாளிகளை தூக்கில் இட வேண்டும் என்று பேசினர். ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றிய என்னையும் தூக்கில் தான் போடவேண்டும். அப்படி நினைக்கும் போதுதான் நிகழ்ச்சியில் பங்குப்பெற்ற அந்த பெண்ணை பார்த்தேன். அழகாக இருந்தாள். சுத்தமான ஹிந்தியில் பேசினாள். அவள் மும்பையை சேர்ந்த ஒரு சமுக ஆர்வலர் என்று போட்டிருந்தது. நிதானமாக பேசினாள். அவளை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. சில வருடங்களுக்கு முன் தன்னை ஒருவன் பலாத்காரம் செய்துவிட்டதாக சொன்னாள். இப்போது பெண் நலத்திற்காக போராடி வருவதாக சொன்னாள். என் உடல் வேர்த்தது. அவள் தான் அவளே தான். நடந்ததை தான் மறந்துவிட்டதாகவும், தனக்கு நடந்தது ஒரு விபத்து என்றும், அதை எண்ணி தான் முடங்கி விடவில்லை என்றும் குறிப்பிட்டாள். எனக்கு மூச்சு அடைத்தது.

நீல நிற சல்வார், க்யா கர்ரஹா ஹே து, கோனே அந்தர், சாயிப் லடிக்கி நம்பர் சாயியே க்யா, ஏண்டா மெத்தப் படிச்ச மேதாவி, கார்ல் ஜங்க், எல்லாம் குப்பை, கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணனும், தூக்குல போடணும், மனப்பிறழ்வு, உண்மை, மனநோய், அப்பாவி பெண். ஏதேதோ என் நினைவிற்கு வந்தன. மயக்கம் வருவது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன். என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, டாக்டர் மனநோய்க்காக கொடுத்த மாத்திரைகளை விழுங்கினேன்.

“…மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே…”

– July 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *