கிராமத்து பெண்ணின் கனவு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 16,730 
 

லட்சுமிக்கு திருமணமாகி ஒரு வாரம் ஆகியிருந்தது.

ஆனால், அவள் முகத்தில் கல்யாணமான பெண்ணுக்கு உரிய லட்சணம் தெரியவில்லை, எதையோ பரி கொடுத்தவளைப் போல் காணப்பட்டாள். ஆம் அவள் இழந்தது தன் எதிர்கால வாழ்க்கையை, தன் கனவை. அந்த சோகத்தை தாங்கமுடியாமல் அவள் கட்டிலில் உள்ள தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

ஒரு வாரத்திற்கு முன்:

அந்த வகுப்பு மாணவர்களின் கூச்சலில் மூழ்கியிருக்க, வகுப்பு ஆசிரியை தனக்கே உரிய பாணியில் அந்த வகுப்பிற்கு நுழைய, மாணவர்களின் கூச்சல் ஓய்கிறது. தன் கண்ணாடியை சரிசெய்துகொண்டு கரும்பலகையை பார்க்கிறார், கொட்டை எழுத்தில் 10 A என்று எழுதப்பட்டிருக்க, தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஆசிரியை, ஒவ்வொரு மாணவர்களின் பெயரையும், அவர்களின் லட்சியத்தையும் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். ஒரு சிலர் மாணவர்கள் விவசாயம் செய்யவேண்டும் என்றும், இன்னும் சிலர் பக்கத்தில் உள்ள சக்கரை ஆலைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். பெரும்பாலான மாணவிகளுக்கு எதிர்காலம் என்பது உள்ளதே அன்று தான் தெரிந்துகொள்கிறார்கள். அவர்களின் ஏகோபித்த பதிலாக, பத்தாவது, பண்ணிரண்டாவது முடிந்தவுடன் கல்யாணம் செய்துகொண்டு, கணவன் வீட்டிற்கு தொண்டு செய்வதே தங்களின் தலையாய கடமை என்று நினைத்திருந்தார்கள் போலும். அது அவர்களின் குற்றமல்ல, இந்த சமூகத்தில் பெண்களுக்கு உள்ள நிலைமை என்று ஆசிரியை நினைத்துக்கொண்டார்.

வெகு சில மாணவிகள், சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியையாக விரும்புவதாக கூறினார்கள், அந்த கூட்டத்தில் லட்சுமி மட்டும், நான் டாக்டராக விரும்புவதாக கூறினாள், இதைக்கேட்ட ஆசிரியைக்கு சற்று இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும், அதை நிரூபிக்கும் பொருட்டு அவர் எதற்கு என்று அவர் லட்சுமியிடம் கேட்க,

இந்த ஊரில் உள்ளவர்களுக்கு யாருக்காவது, உடம்பு முடியாமல் போனால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு இங்கிருந்து 25 கிலோ மீட்டர் போக வேண்டும். அப்படி செல்வதற்குள்ளேயே சிலர் இறந்துவிடுவதும் உண்டு, நான் டாக்டரானால், இந்த ஊரிலேயே ஒரு ஆஸ்பத்திரி கட்டி இங்குள்ள மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்வேன் என்று அவள் சொல்வதைக்கேட்டு,
அங்குள்ள மாணவர்கள், கைதட்டலில் அவளை நனைக்க, தன் கனவு நிறைவேறி விட்டதை போல் அவள் உணர்கிறாள்.

அன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து, தன் தோழிகளோடு அரட்டை அடித்துகொண்டே, வீட்டுக்கு செல்லும் வழியில் இருபத்தி இரண்டு வயதிருக்கும் ஒரு இளைஞன், கையில் பூவோடு வந்து லட்சுமியிடம்,

“என் பெயர் அர்ஜுன், என்னை உனக்கு தெரியாது. ஆனால் உன்னை எனக்கு தெரியும், நான் உன்னை காதலிக்கிறேன் “என்று சொல்லி அந்த ரோஜாப்பூவை அவளிடம் நீட்ட, லட்சுமி அதிர்ச்சி கலந்த முகத்தோடு, “ஏய் பேசாம போயிரு, ஏன் ஊரில இருக்கரவங்க யாராவது பாத்தா பெரிய பிரச்சனையாயிடும் ” என்று சொல்லி சுற்றும், முற்றும் பார்க்கிறாள்.

”நான் உன்னைத்தான் காதலிக்கிறேன், உன் ஊரை இல்லை” என்று தெனாவெட்டாக பதில்கூற, லட்சுமியின் மாமனான சுந்தரம் வருவதைப்பார்த்து, வேகமாக அங்கிருந்து வீட்டை நோக்கி செல்கிறாள் லட்சுமி.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கை கால் முகம் கழுவி படிக்க உட்காரும் சமயத்தில் சுந்தரம் வீட்டுற்குள் நுழைகிறான். மனதில் ஒரு வித அதிர்ச்சி, நேராக பின் வாசலுக்குச்சென்று,
”அக்கா, நம்ம லட்சுமி பண்றது எனக்கு என்னமோ தப்பா படுது,” ஒன்றும் புரியாமல் அவள், என்னடா சொல்ற என்று கேட்க பள்ளிக்கூடம் விட்டு வரும்போது, நம்ம லட்சுமி பக்கத்து
ஊரு பையன்கூட பேசிகிட்டு இருந்தா, என்னை பாத்ததும் வேகமா வீட்டுக்கு வந்துட்டா, என்று அவன் கூறி முடிப்பதற்குள், அவள் அம்மா லட்சுமியிடம் வந்து மாமா சொல்றது, உண்மையா லட்சுமி இல்லம்மா, அவன் யாருனே எனக்கு தெரியாது, அவன் தான் வந்து என்னை லவ் பண்றதா சொன்னான், உடனே சுந்தரம், அப்ப அவன் யாருன்னே ஒனக்கு தெரியாது,
தெரியாது மாமா பவ்யமான குரலில் லட்சுமி.

”அப்போ, எதுக்கு என்னை பாத்ததும் வீட்டுக்கு வேகமா ஓடின” மீண்டும் சுந்தரம்.

”தேவையில்லாம பிரச்சனை ஆயிடும்னு பயந்துதான், வேகமா வீட்டுக்கு வந்தேன்”.

”அக்கா இவ எதையோ மறைக்க நெனைக்கிறா”, என்றான் சுந்தரம்.

”லட்சுமியின் அம்மா, அய்யோ குடும்ப மானத்தயே கப்பல் ஏத்திட்டையேடி”?

லட்சுமி, ஐயோ நான் ஒன்னும் பண்ணலமா உடனே சுந்தரம், “ நான் பாத்தனால சரி , வேற யாராவது பாத்திருந்தா என்ன ஆயிருக்கும், அக்கா இது சரி பட்டு வராது, ஒடனே கல்யாணம் பண்ணி வச்சிற வேண்டியதுதான்”

லட்சுமி, ”வேண்டாம்மா நான் படிக்கணும்மா, எனக்கு டாக்டர் ஆகணும்”.

”அடி கழுதெ, நீ படிச்சு பட்டம் வாங்கினதெல்லாம் போதும், டேய் நீ மாப்பிள்ளைய பாருடா ”என்று அவள் தாய் சொல்ல

”பக்கத்து ஊருல பனியன் கம்பெனியில வேலை செய்யற, ஒரு பயன் இருக்கான், ஒரே பயந்தான் கை நெறய சம்பளம், அவனை பேசி முடிச்சிடவா”

ஒடனே அவங்கள பாத்து, பேசு என்று அவள் தாய் சொல்ல,

லட்சுமி, ஐய்யோ இப்ப கல்யாணம் வேண்டாம்மா, நான் படிக்கணும்மா, என்று அவள் கதற, அதோடு FLASHBACK முடிகிறது.

தன் தாலி கையிற்றை அவள் பார்க்கிறாள், அது அவளுக்கு போட்ட விலங்காகவே அவள் கண்ணில் தெரிய, ஆண்கள் எல்லோரும் அவளுக்கு எமன்களாக மாறிவிட்டதைப்போல் உணர்ந்து, பிளேடை எடுத்து தன் நாடியில் அறுத்து தன் உயிரை மாய்த்துகொல்கிறாள்.

தன் கணவன் இந்த நிலைமையில் பார்த்து, அவளை ஆஸ்பித்திரிக்கு கொண்டு சென்றாலும் நான் பிழைக்க மாட்டேன் என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது,ஏனென்றால் பக்கத்தில்தான் ஆஸ்பத்திரியே இல்லையே.

Print Friendly, PDF & Email

2 thoughts on “கிராமத்து பெண்ணின் கனவு

  1. என்ன ஏது என்று விசாரிக்காமல் இவ்வாறு ஒரு இலட்சியத்தை அழிப்பது மிகவும் கொடிய செயல் பல பெற்றோர்கள் இப்படி தங்களது குழந்தைகளின் இலட்சியங்களை அலட்சிய படுத்தி அவர்களுக்கு திருமணம் என்னும் வேலியை இடுவது மிகவும் தவறு … இதனை அருமையாக உணர்த்திய கதாசிரியரும் வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *