விமான நிலையம்
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 8,778
கோயமுத்தூர் விமான நிலையம் !
அப்பொழுதுதான் சிங்கப்பூரிலிருந்து வந்திறங்கிய விமானத்திலிருந்து பயணிகள்
ஒவ்வொருவராக இறங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்யும் இடத்திற்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சுங்க இலாகா அதிகாரி விமல் பரபரப்பாய் இருந்தார். காரணம் இன்னும் சற்று நேரத்தில் ஒரு பட்சி அவரிடம் வகையாக மாட்டிக்கொள்ள போகிறது. இப்பொழுதே அவரது இதய துடிப்பு குதிரையின் வேகத்தில் இருந்தது.
கண்டிப்பாய் அந்த கடத்தல் ஆசாமி அவரிடம் மாட்டிக்கொள்வான் என்பதில் அவருக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருந்தது. காரணம் அவருக்கு கிடைத்த தகவல் அப்படிப்பட்டது. அது மட்டுமல்ல, அவருக்கு தகவல் கொடுத்தவரும் நம்பிக்கையான ஆள்தான். இது வரை அவர் கொடுத்த தகவல்கள் இவருக்கு உபயோகமாகத்தான் இருந்தது. அதனால் இந்த முறையும் கண்டிப்பாய் வருபவன் சிக்கிக்கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.
அதோ ஒவ்வொருவராக வருகிறார்கள். இவர் கண்கள் வருபவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது. வரிசயாக வருபவர்களில் நடு வரிசையில் வந்து கொண்டிருந்தவன்
ஆ..அதோ..கையில் கட்டுடன் வருகிறான், அவனைத்தான் பிடிக்க வேண்டும். முடிவு செய்தவர் அவனை அழைப்பதற்கு சற்று முன் நடந்தார்.
அவருக்கு வந்த தகவலை நினைவு படுத்தி பார்த்தார்..கையில் கட்டு கவனம்..இதுதான் அவருக்கு கிடைத்த தகவல்
ஹலோ இங்க கொஞ்சம் வர்றீங்களா?
என்னையா? அந்த இளைஞன் சற்று திடுக்கிட்டு கேட்டான்.
எஸ் உங்களைத்தான், கையில் என்ன கட்டு?
ஓ அதுவா, முந்தா நாள் வீட்டில் படியில் இறங்கும் போது விழுந்து விட்டேன், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது, சகஜமாய் பேசினான்.
விமல் அதற்கெல்லாம் அசருபவரா? உண்மையாகவா? ஆம் இதோ பாருங்கள், டாக்டர் கொடுத்திருந்த சர்ட்டிபிகேட்டுகளை காட்டினான்.
வாங்கி பார்த்தவர், உண்மைதான், அந்த நாட்டில் உள்ள மருத்துவர் ஒருவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். சரி உள்ளே வாருங்கள்.. அழைத்துக்கொண்டு சென்றார்.
இப்பொழுது இவன் முகத்தில் அதிருப்தியை காண்பித்தான். சே..இதுதான் இங்கே தொல்லை, தானாக பேசிக்கொண்டே அவருடன் நடந்தான்.
விமல் உள்ளே செல்லும் வரை நம்பிக்கையோடு இருந்தார். இவன் ஏதோ கடத்தி வந்திருக்கிறான். நமக்கு கிடைத்த தகவல் தவறாய் இருக்க வாய்ப்பு இல்லை.
ஆனால் அவன் கட்டை அவிழ்த்து பார்த்தவர் ஏமாற்றமாகி விட்டார். உண்மையிலேயே அவனுக்கு கையில் காயமாகி இருந்தது.
அப்படியானால் நமக்கு கிடைத்த தகவல் தவறா? எப்படி ஏமாந்தோம்.
சாரி…அவனிடம் சொல்லி விட்டு அனுப்பினார்.
கோபத்துடன் வெளியே வந்தான் அந்த இளைஞன்.
இவனுக்காக வெளியே காத்திருந்தான் ஒருவன். அவன் இவன் பின்னால் வந்தவனல்லவா?
சட்டென சுதாரித்த விமல் அவனை அழைக்க, அவன் சட்டென சுதாரித்து நகர முற்பட இவர் பக்கத்தில் இருந்த அதிகாரியிடம் சைகை காட்ட அவர் கப்பென, அவன் கையை பற்றிக்கொள்ள அப்புறம் என்ன?
அவனின் கணுக்காலில் கட்டு போடப்பட்டிருந்தது. பிரித்து பார்க்க சிறிய வேட்டை கிடைத்தது.
![]() |
பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பெத்த மனம் பித்து
யுக்தா கோபிநாத்
July 23, 2026
உறங்கும் போதும் கற்கிறேன்
உரு.வளவன்
July 17, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
July 14, 2026
