தொங்கல் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 5,389
“வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது…” என்று சொன்ன மேஜிஸ்ட்ரேட் அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார்.
“சவ்வு மாதிரி இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ…” அவிழ்ந்த தன் முண்டாசைக் கட்டியவாறு, தனக்குத்தானே புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி.
“வக்கீல் சமூகம்… வருஷம் நாலு ஆகுது..இப்படியே ஒத்திவைத்துவிட்டுப் போனா எப்போதாம் தீர்ப்பு வரும்?” கவலையோடு கேட்டான் வெங்கடேச பண்ணையார்.
“சிவில் வழக்கு வருஷக் கணக்கில் இழுக்கும். வேற வழியில்லை பண்ணையார் ஐயா. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுறதே மேல்னு சும்மாவா சொன்னாங்க.” என்றார் வக்கீல் சிரித்துக்கொண்டே.
வாதி பிரதிவாதிகளான பக்கிரிசாமியும் வெங்கடேசப் பண்ணையாரும் பல வருடங்களாக நீதிமன்றத்தில் தொங்கலில் இருக்கும் சிவில் வழக்கு பற்றி புலம்பிக் கொண்டிருப்பதால் கைலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கத்தில் அவர்கள் வக்கீல்கள் அச்சத்தில் இருக்கும் அதே நேரத்தில்…
முத்துவும் திருமலையும் ஜாலியாக கட்டை மாட்டு வண்டியின் பின்புறம் தொங்கியபடி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.