ஒன்று பத்தானது!





“டேய் படவா ராசுக்கோலு நில்லுடா…” தந்தை ஓதியப்பன் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் காதில் வாங்காதவனாய் தாய் ஆதி கொடுத்த மோரை வாங்கி ஒரே மொடக்கில் குடித்து விட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு பட்டம் விடும் ஆசையுடன் தான் செய்த பட்டத்தையும், வாங்கி வந்த ஒரு கண்டு நூலையும் துணி பையில் போட்டு ஹேண்டலில் தொங்கவிட்டபடி தோட்டத்து வீட்டிலிருந்து வேக, வேகமாகக்கிளம்பினான் பத்து வயது சிறுவனான ராசு.
“காமராசரு மத்தியானச்சோறு பள்ளிக்கொடத்துல போட்டதும் போட்டாரு ஒரு பயலும் காத்தால சாணி வளிக்க தோட்டத்துப்பக்கம் வாரதில்ல. நீயும் ஊருல ஒரு பயல்களையும் உடாம பள்ளிக்கொடத்துக்கு கூட்டீட்டு போயிக்கறே… படிச்சுப்போட்டு வருங்காலத்துல எவனும் வெவசாயம் பண்ண வர மாட்டாம்பாரு…. என்ற மவன் பட்டம் உட்டுட்டே சாணியும் வளிக்காம, ஆடு, மாடும் மேய்க்காம சும்மாவே ஊரச்சுத்தீட்டு திரியறான். அவனப்படிக்க வெச்சா தோட்டத்துல வேல பண்ணறதுக்கு நானு ஆளுக்கு எங்க போறது…?” தனது மகனை பள்ளிக்கு அழைத்துச்செல்ல வந்திருந்த பள்ளி ஆசிரியரான ரங்கசாமியிடம் கேட்டார் விவசாயி ஓதிச்சாமி.
“படிச்சா விவசாயம் பண்ணக்கூடாதுன்னு ஆரு சொன்னது? படிச்சவன் விவசாயம் பண்ணுனா பத்து மூட்டைக்கு நூறு மூட்ட விளைய வைக்காட்டியும், விளைஞ்சத கெடாம பக்குவப்படுத்தி விலை விக்கிற போது வித்துக்காசு பண்ணிப்போடுவான். உள்ளூருல விலை கம்மியா போனா வெளியூருக்கும், வெளி நாட்டுக்கும் ஏற்றுமதியும் பண்ணுவான். நல்லாப்படிச்சா பெரிய சம்பளத்துல வேலையுங்கெடைக்கும்” என்றார் ஆசிரியர் ரங்கசாமி.
“படிக்கப்பள்ளிக்கொடம்போறேன்னு சொல்லிப்போட்டு பசங்க தோட்டத்துல வேலையே செய்ய மாட்டீங்கறானுக.
பள்ளிக்கொடமில்லாத நாள்ல கதபுத்தகம் படிச்சுட்டு ஊட்டுக்குள்ளயே வெயில் படாம இருக்கப்பாக்கறானுக. படிச்சவன் சூழ்ச்சிக்காரனா இருக்கறான், பொய் நெறையாப்பேசறான்னு வேற ஊருக்குள்ள பேசிக்கறானுக. அப்பறம் பொம்பளப்புள்ளைங்களுக்கு தனியா பள்ளிக்கொடம் ஆரம்பிச்சாத்தா பள்ளிக்கொடத்துக்கே அனுப்பறதா பல பேரும் சொல்லறாங்க. நானுந்தான். பஞ்சும் நெருப்பும் பக்கத்துல வெச்சா பத்திக்காம என்ன பண்ணும்? பொம்பளப்புள்ளைங்கல படிக்க அனுப்புனா ஊட்ல ஆருக்கும் இத்தன கஞ்சி தண்ணி கெடைக்காமப்போயிரும் பாத்துக்கோ… அப்பறம் படிச்சுப்போட்டா வேல கெடைச்சுப்போகும்னு உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அங்கோடியுங் கெட்டாந்தாசன், இங்கோடியுங் கெட்டாந்தாசனுங்கற மாதர அரசன நம்பி புருசனக் கைவிட்டு அரசனும் புருசனும் ஆத்தோட போற கதையாகப்போகுது பாத்துக்க” மாட்டுக்கட்டுத்தரையிலிருந்த சாணத்தை அள்ளி மூங்கில் கூடையில் போட்டுக்கொண்டே ஓதிச்சாமி கேட்ட கேள்வியில் உண்மையிருப்பதாகப்பட்டாலும், படிப்பைக்குறைத்து மதிப்பிட்டுப் பேசுவதை ஏற்க முடியாதவராய், “படிக்காதவனுந்தா பொய் பேசறான், சூழ்ச்சியோட இருக்கறான். படிப்பு கண்டிப்பா வேணும். உங்க பையன நாளைக்கு எப்படியாச்சும் பள்ளிக்கொடத்துக்கு கூட்டிட்டு வாங்க” சொன்னவரிடம் பொய்யாக “சரி அனுப்பறேன்…” எனக்கூறி ஆசிரியரை அனுப்பி வைத்தார் ஓதிச்சாமி.
“என்னையக்கேக்காம வாத்தியார இங்க என்ன மசுருக்கு வரச்சொன்னே…? படிப்ப தப்பாப்பேசி ரங்கசாமி வாத்தியாரு கிட்ட மொக்கப்பட்டம் வாங்குனதுதான் மிச்சம். ஒன்னி மேலு இந்த வேல வெச்சுக்காதே பாத்துக்கோ. கொய்யாக்கோல வெட்டி நாளைக்கு காத்தால அந்த ராசுக்கோல அடி புடிக்கிறம்பாத்துக்கோ… அப்பறம் காட்டுக்குள்ள போயி ஒழுங்கா பாடுபட்டு பழகுனாத்தான அவங்காலத்துல பொண்டாட்டி புள்ளைய காப்பாத்த முடியும்… ஏட்டுச்சொரைக்காயி கூட்டுக்கு உதவாதுங்கற கததான் பள்ளிக்கொடம் போறது…. அப்புடீம் போகோணும்னா பக்கத்துல இருக்கற தெக்காலூரு பள்ளிக்கொடத்துக்கு வேணும்னா போயிட்டு வந்து காட்டு வேலயும் பழகச்சொல்லு உன்ற மவன….” மனைவி ஆதியிடம் கோபத்துடன் பேசினார்.
“சும்மா ராசுக்கோலு, ராசுக்கோலுன்னு பெத்த பையன மரியதையில்லாமப் பேசறீங்களே…. அவனுக்கு எங்கப்பம் பேரு வெச்சு சோசியரு கிட்ட சாதகம் எழுதிலியாக்கு? அவுனுக்கு ராசுன்னு ராசாவோட பேரு என்றப்பன் வெச்சாராக்கு” கணவனிடம் கோபித்துக்கொண்டாள் ஆதி. மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த ராசு தாயின் பேச்சை மறைந்திருந்து கேட்டதும் ஓடி வந்து மடியில் தலை வைத்துப்படுத்துக்கொண்டான்.
“அம்மா….அம்மா….”
“சொல்லு சாமி…”
“எனக்கு பள்ளிக்கொடம்போக புடிச்சிருக்குது. ஆனா அப்பா போகச்சொல்லற தெக்காலூரு பள்ளிக்கொடத்துக்கு போறதுக்கு புடிக்கலே. படிக்காதவங்கள வாத்தியாரு பெரம்புல ரத்தம் வாரமாதர அடிக்கறாராமா. அப்பறம் காட்டுக்குள்ளயும் வேலை செய்யோணும்னு அப்பா சொல்லறாரு. மாமம்புள்ள ராணி படிக்கப்போற வடக்காலூரு வாத்தியாரு பெரம்பே கொண்டு வர மாட்டாராமா…. நானும் அம்மாத்தா ஊட்ல போயி இருந்துட்டு ராணி கூட போயி படிச்சுக்கறேன். அங்க காட்டு வேலையும் செய்ய வேண்டியதில்ல. என்னை அந்தப்பள்ளிக்கொடத்துல அப்பாவ சேத்தியுடச்சொல்லம்மா…”
“பாத்தியா… பத்து வயசுப்பையனுக்கு வந்த ஆசைய… வெளில சொன்னா வெக்கக்கேடு. பாடு படாம நேம்பா இருக்கலாம்னு நெனைக்கறாம்பாரு. உன்ற தம்பி புள்ள ராணிய இப்பெல்லாம் ராசாவு அடிக்கொருக்கா நீ செய்யற பலகாரத்தக் கொண்டு போயிக்கொடுத்து பாத்துட்டு வந்தர்றாரு. அவகூட புருசம்பொஞ்சாதி வெளையாட்டு வெளையாடுன இந்தகழுவாட்டப்பாத்த பண்ணையத்துக்காரன் முனியன் வந்து சொன்னான். வெளையாட்ல அஞ்சு கொழந்தைகள பெத்துப்போட்டதா உன்ற பொறந்தவம்புள்ள வேற பேசுனாளாமா? நம்ம பையன விட ரெண்டு வயசு மூத்தவ வேற. நமக்கு கண்ணாலமாயி அஞ்சு வருசங்கொழந்தையில்லாம அப்பறந்தான இந்தப்படவா வந்து பொறந்தான். உன்ற தம்பிக்காரன் கண்ணாலமாயி பத்து மாசத்துலயே அந்தக்கழுதையப்பெத்துட்டானில்ல. பிஞ்சுலியே பழுத்துட்டா பாரு…” சொன்னவர் மனைவி சிலிப்பிக்கொடுத்த மோரை வாங்கிக்குடித்தார்.
“நானும் அப்ப நம்புலே. இப்ப நம்பறேன். ஒன்னுமில்லாத ஊட்ல நானும் உன்னக்கட்டியே ஒதவிக்கு கேக்க முடியாமக்கெடக்கறேன். இப்ப என்ற பையனுக்கும் அந்த ஊட்ல கட்டினா அவனும் பிச்சை எடுக்கத்தா போகோணும். தெக்காலூரு பள்ளிக்கொடத்துல படிச்சாப்படிக்குட்டு. இல்லேன்னா காட்டுக்குள்ளே பாடுபடாட்டீம் பரவால்ல, ஆலாமரத்துக்காட்டுக்குள்ள ஆட்ட, மாட்ட ஓட்டீட்டு போயி ஆட்டாந்தூறி ஆடிப்போட்டாச்சு வருட்டு. ஒன்னொருக்கா கந்தாயமில்லாத ஊட்ல பொண்ணு கட்டற ரோசனை எனக்கில்ல” தந்தை ஓதிச்சாமி கண்டிப்புடன் கூற கலங்கிய கண்களுடன் ராசு தாயை ஏறிட்டுப்பார்க்க, தாயும் கண் கலங்கினாள்.
அப்போது ஆதியின் தம்பி ராமசாமி தனது மனைவியுடன் வர ‘எதோ செலவு வைக்க வந்ததாக நினைத்த ஓதிச்சாமி அவர்களை வா எனக்கூட கேட்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு காட்டிற்குள் சென்றது ஆதிக்கு வேதனையாக இருந்தது. வந்தவர்களை அழைத்துச்சென்று உணவளித்தாள்.
“உன்ற கைல சோறுண்டு பத்து வருசமாயிப்போச்சக்கா. நாங்க சொத்துப்பத்து இல்லாதவங்கிறதுனாலயும், உனக்கு பின்னால கண்ணாலம் பண்ணி உனக்கு மொதல்ல கொழந்தையப்பெத்துப்போட்டோங்கிறதுனாலயும் தான மச்சானும் நீயும் திரும்பீங்கூடப்பாக்கறதில்ல. இன்னைக்கு என்ற புள்ள ராணி வயசுக்கு வந்துட்டா. ஒரே அத்த நீயி சீரு கொண்டு வார மொற. நம்ம சாதி சனத்துக்குள்ள நம்ம குடும்ப கௌரவத்தக்காப்பாத்திப்போடுவீன்னுதான் கூப்பிட வந்தேன்” சொன்ன தம்பியின் கைகளைப்பற்றி கண்ணீர் மல்க “உன்ற மச்சாங்கையக்காலப்புடிச்சாவது கொண்டு வாரேன். நீ கவலப்படாமப்போ” எனக்கூறி அனுப்பி வைத்தாள் ஆதி.
“ஆணையும் பெண்ணையும் வம்ச விருத்திக்கு மட்டும் ஆண்டவன் படைக்கிலே. மனசோட மனசா விருப்பமா, சந்தோசமா வாழறதுக்குந்தா படைச்சிருக்கறாரு. உன்ற பையன ராணிக்கு புச்சுப்போனது என்ன தப்பு. கண்ணால வயசு வந்ததும் கட்டி வெச்சா சந்தோசமா பொழைச்சுட்டு போகுதுக. சொத்து மட்டுந்தா சோறு போடுதா? பக்கத்து தோட்டத்து பாப்பாத்திக்குந்தா அவளோட அப்பங்காரன் பத்தேக்கறா எழுதி வெச்சாரு. அவ சந்தோசமாவா வாழறா….? அவ புருசன் மத்த பொம்பளைங்களோட சுத்தீட்டு, குடிச்சிட்டு ஊதாரியாத்திரியறாரு. பட்டிக்காட்ல பொறந்த படிக்காத என்னைய பட்டணத்துல வேலை பாக்கறவரு கட்டீட்டு போயி நல்லாத்தான பாத்துக்கறாரு. அஞ்சு பத்துக்கேட்டு எப்பவாச்சு உன்ற கிட்ட சீராடீட்டு வந்தனா….? உன்னையே நம்பி வாழறவ ஊட்ல ஒரு விசேசம். போனா என்ன கொறைஞ்சு போகும்?” நகரத்திலிருந்து வந்த தனது தங்கை ராசாத்தி தனது மனைவிக்காக வக்காலத்து வாங்கியது ஆச்சரியமாக இருந்தது ஓதிச்சாமிக்கு.
தங்கையின் பேச்சால் மனம் மாறியவர் மனைவி வீட்டிற்கு மைத்துனன் மகளுக்கு சீர் கொண்டு சென்று மனைவியின் மரியாதையைக்காத்ததோடு, மகன் ராசுவை அவன் விரும்பிய வடக்காலூர் பள்ளியிலேயே சேர்த்து விட, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கும் சென்றவன், படிப்பு முடித்து அரசாங்க வேலையில் சேர்ந்து முதல் சம்பளத்தை தனது மனைவியான அவனது தாய் கையில் கொண்டு வந்து கொடுத்தபோது , பணத்தை வாங்கிப்பார்த்த மனைவி ஆனந்தக்கண்ணீர் விட்டதைப்பார்த்தவர், ‘தன் மகன் படித்ததால் அவனுக்கு ஒரு மாதம் கிடைக்கும் சம்பளத்தில் பத்து பேருக்கு தோட்டத்தில் வேலை செய்ய கூலி கொடுக்கலாம். அவன் படிக்காமல் இருந்திருந்ததால் அவன் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்திருப்பான்’ எனக்கணக்குப்போட்டவர் கண்களுக்கு ஒரு மகன் பத்து மகன்களாகத்தெரிந்தனர்.