ஐம்பது கிலோ தங்கம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 5,759 
 
 

அலுவலக வேலையை முடித்து விட்டு ஹெல்மெட்டைத்தலையில் கவிழ்த்தபடி தனது பேரழகை மறைத்தவளாய் சாதாரணப்பெண்ணைப்போல் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சிட்டாக பாதையில் சென்றாள் ரஞ்சனா.

தலையை மறைத்தாலும் அவளது உடலின் கட்டமைப்பு பருவப்பெண் என்பதை உறுதி செய்ய, வாலிபர்களின் வாகனங்கள் மலரைச்சுற்றும் வண்டுகளாய் அவளை வட்டமிட்டன.

ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் போதும், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பும் போதும் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘திக், திக்’ என பயம் அவளது மனதைக்கவ்வியது.

“அம்மா… பேசாம லோன் போட்டு கார் வாங்கிடலான்னு பார்க்கிறேன்….”

“காரா….? அத நிறுத்தரதுக்கு இந்த வீட்ல எடம் இருக்கா….? உங்கொப்பாவுக்கு வந்த சம்பளத்த வெச்சு உன்னப்படிக்க வெக்கத்தா முடிஞ்சுது. ஒரு பவுன் நகை கூட இன்னும் சேர்த்து வைக்கல. அதுவும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமா ஏறிட்டே போறது வயித்துல புளியக்கரைக்குது. அவரும் தீராத நோயால இருந்த சொந்த வீட்ட வித்து ஆஸ்பத்திரி செலவு பண்ணீட்டு போய் சேர்ந்துட்டாரு. உனக்கு வேலை கெடைச்சதனால நிம்மதியாச்சு. உனக்கு வர்ற சம்பளத்துக்கு மாசம் ஒரு பவுனு எடுத்தாங்கூட ரெண்டு வருசத்துல இருபத்து நாளாவது ஆயிடும். இருபத்தஞ்சு பவுனாவது போட்டாத்தான் நல்ல வரன், அதுவும் சொந்தமா வீடு வெச்சிருக்கிற மாப்பிள்ளையாச்சுங்கிடைப்பான்….” பேசிய தாயின் கண்களில் வந்த கண்ணீரை தனது கைகளால் துடைத்தாள்.

“நகைய வாங்கி வீட்ல பீரோவுல பூட்டி வெச்சா என்னக்காப்பாத்துமா? தங்கச்சிலை மாதிரி என்னப்பெத்து வெச்சுட்டு நகை, நகைன்னு புலம்பாதே. இருபத்தஞ்சு பவுன் நகைக்கு ஆசப்பட்டு இந்த ஐம்பது கிலோ தங்கத்த தொலைச்சிடாதே….” சொன்ன மகளை அப்போது தான் முதலாகப்பார்ப்பது போல் ஆச்சர்யமாகப்பார்த்தாள் ரஞ்சனாவின் தாய் நிர்மலா.

“சரி, காரே வாங்கிடு. இல்லேன்னா வாடகை அதிகமா போனாலும் பரவாயில்லேன்னு ஆபீஸ் பக்கத்துல வீடு பார்த்திடு. அப்பனில்லாத பொண்ணு பாதுகாப்பில்லைன்னு தெரிஞ்சிட்டே பாவிக ஃபாலோ பண்ணறானுக போலிருக்குது” தன் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட தனது தாயைக்கட்டியணைத்து முத்தமிட்டாள்.

“எதுக்காக காலிப்பசங்களுக்கு பயந்துட்டு கடன் வாங்கி கார் வாங்கப்போறதா சொல்லறே….? சொந்தக்காரங்க பக்கத்துல இருக்கற, உன்னோட அம்மா தினமும் கும்பிடற மாரியம்மன் கோவில் பக்கத்துல இருக்கிற வீட்ட எதுக்கு மாத்தப்போறதா சொல்லறே….? டூட்டி டிரஸ்லயே வீட்ல இருந்து வா…. வீட்டுக்குப்போ… ஒருத்தனாவது உன் பின்னால வாரானான்னு பார்த்திடுவோம்…” இன்ஸ்பெக்டர் சொன்ன யோசனை சப்இன்ஸ்பெக்டர் ரஞ்சனாவுக்கு சரி எனப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *