எங்கிருந்த போதும் உனை மறக்க முடியுமா?





புகுந்தவீடு நுழைந்த புதுப் பெண்ணுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!’ங்கறா மாதிரி எல்லாம் பயத்தையே உண்டு பண்ணின…!
கட்டிக்கொண்ட கைலாஷ் முதல் மாமனார் மைல்சாமி வரை எல்லாரையும் சந்தேகப்பட வைத்தது சூழல்..!

‘நீ என்ன வாழ வந்தாயா?! இல்லை, வம்புவளர்க்க வந்தாயா!? இப்படியா உன்னை ரெண்டுங்கெட்டானாக வளர்ப்பார்கள் உன் பெற்றோர்கள்?’ கை ஓங்கினான் கைலாஷ். கலங்கிப்போனாள் கல்பனா. அவன் ஓங்கக் காரணம் கல்பனாவின் சந்தேகம்..!
அடிக்கடி கணவன் பாடுவதும், கணவனைப் பெற்ற மாமனார் பாடுவதும், அந்த ஒரே பாடல்தான்! ஒருத்தனுக்கு எது மனசில் ஆழமாய்ப் பதிந்திருக்கிறதோ அதுதானே பாட்டாய், வசனமாய் வந்து அவர்கள் உள்ளக்கிடக்கையை ஊருக்கு உணர்த்தும்?! இது, கல்பனா மனசின் ‘மைண்ட் வாய்ஸ் ‘ஒலிக்கும் எச்சரிக்கை மணி!
‘அதென்ன அப்படி மைண்டு வாய்ஸ் உண்டு பண்ணுகிறதென்றால்…’
‘எங்கிருந்த போதும் உனை மாறக்க முடியுமா? என்னை விட்டு உன் நினைவை அகற்றமுடியுமா?’ என, அடிக்கடி பிள்ளை பாடுவதும், அப்பா பாடுவதும்… அட மனுஷனுக எப்ப வாயை மூடுவாங்கன்னு ஏங்க வைத்துவிடும்.! அப்பா பிள்ளை ரெண்டு பேரையும் பற்றி ஊருக்குள் அப்படி இப்படித்தான் அரசல்புரசலாக பேசிக்கொள்கிறார்கள். அப்படி இருக்குமோ?! இருக்கலாம் ரெண்டு பேரின் பார்வையுமே பல நேரங்களில் பவித்திரமாய் இல்லையே?!
ஆனால், உண்மையில் கல்பனா நினைப்பதுபோல் எதுவுமில்லை. ‘சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தாலும் வந்தது அப்பா, பிள்ளை ரெண்டு பேருக்குமே அடிவயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது. கல்யாணமாகி வரும் பெண் போட்டுவரும் நகை நட்டு, கொண்டுவரும் சீதனம் எல்லாம் அவளுக்கு அவள் அப்பா வீட்டுச் சொத்தாகக் கருதப்படும். அதில் புகுந்த வீட்டார் எந்த உரிமையும் கொண்டாட முடியாது!’ என்ற தீர்ப்பு இடியாய் இதயத்தில் இறங்க… சர்வசதா நேரமும் பணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் கைலாசும் அவன் அப்பா மைல்சாமியும் மயக்கம் போடாததுதான் குறை!
பணத்தை… பரிசுப்பொருட்களாகக் கொண்டுவந்த சீதனத்தை மனம் சதா எண்ணிக் கொண்டிருக்க, சுப்ரீம்கோர்ட் சமீபத்தில் அதற்கு மங்களம் பாடியது!.
கைலாஷ், மைல்சாமி இருவர் மனமும் ‘எங்கிருந்தபோதும் உனை மறக்கமுடியுமா? என்னை விட்டு உன் நினைவை அகற்றமுடியுமா’ என்பதை ஊரில் பல பேரைப் போலவே கல்பனா உள்ளமும் நினைத்தது தப்பில்லைதானே…?! ‘கல்பனா சக்தி’ என்றாலே.. கற்பனை சக்தி என்றுதானே பொருள்?!