கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 189 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

காலை நேரம் 7 மணி,

கடிகார அலாரம் அடித்து கொண்டு இருந்தது.

அதனை சற்று தள்ளி வைத்தான் சந்தோஷ்.

அந்த பக்கத்தில் இருந்து, அவனை நோக்கி தள்ளினான் கணேஷ்.

இருவரும் கல்லுரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடி சென்னை வந்து சில மாதங்கள் ஆகி விட்டன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கம்பெனி, கம்பெனியாக ஏறி ஏறி இறங்கியது தான் மிச்சம்.

வேலை கிடைக்கவில்லை. இருவரும் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

வீட்டில் இருந்து கொண்டு வந்த பணம் கரைய துவங்கியது. வேலை தான் அவர்களுக்கு பிடித்த மாதிரி அமையவில்லை.

பிடித்த வேலை இல்லை என்றாலும் , கிடைத்த வேலையை பார்க்கலாம் அல்லவா ? அதுவும் இல்லை.

இருவரையும் நம்பி தான் அவர்கள் குடும்பம் இருக்கு.

அலாரம் சப்தம் எரிச்சலை உண்டாக்க , வேற வழி இன்றி இருவரும் எழுந்தனர்.

உடனே எழுந்து குளிக்க சென்று , வேலை தேட கிளம்பினர். நேரம் காலை 8 ஆகியது.

இருவரும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பினர் .

இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்தான் கணேஷ்.

சக்கரத்தில் காற்று கம்மியாக இருந்தது.

“காத்து கம்மியா இருக்கு ? “ என்று சந்தோஷ் கேட்டான்.

“ஆமாட , நேத்து நைட் நிப்பாட்டும் போது நல்ல தான் இருந்துச்சு , சரி வா போற வழியில காத்து அடிச்சிட்டு போவோம்” என்றான் கணேஷ்.

“ கணேசா, லேட் ஆக்கிராத பார்த்துக்கோ, 9 மணிக்குள்ள போனா தான் , பார்க்க முடியும்.” என்றான் சந்தோஷ்.

இருவரும் இருசக்கர வாகனத்தில் கொஞ்ச தூரம் தான் சென்று இருப்பார்கள்.

டூவீலர் பஞ்சர் ஆகி தடுமாறியது.

இருவரின் முகமும் மாறியது. நேரத்தை பார்த்து மேற்கொண்டு கோவம் ஆனது இருவருக்கும்.

“ஒரு இடத்துக்கு போகும் போது தான் இப்படி எல்லாம் நடக்கும். இந்த வண்டிய எப்போ பஞ்சர் பார்த்து நாம போறது “ என்று எரிச்சலாய் கூறிய படி கணேஷ்.

“லேட் ஆகிற கூடாதுடா, பார்த்துக்கோ” என்றான் சந்தோஷ்.

“சரி வா , அப்போ ஆட்டோ பிடிச்சு போயிருவோம் , பஸ்ல போனா ரொம்ப லேட் ஆகிரும். அவசரமா போகணும், ஆட்டோவ பிடி. 9 மணிக்குள்ள போனாதான் பார்க்க முடியும்.” என்றான் கணேஷ்.

எதிரில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை நிறுத்தினான் சந்தோஷ்.

சில நிமிடம் பேரம் பேசினான் சந்தோஷ். ஆட்டோக்காரர் சம்மதிக்கவில்லை.

“டேய் சந்தோஷ், என்னடா பேரம் பேசுற நேரமா இது , ஆட்டோக்காரர் கேட்ட காச கொடு, சீக்கிரமா கிளம்பு, மணிய பார்த்தியா 8.30 க்கு மேல ஆச்சு. 9 மணிக்குள்ள அங்க இருக்கணும். வாடா, அண்ணா, நீங்க ஆட்டோ எடுங்கன்னா. கொஞ்சம் அவசரம்” என்றான் கணேஷ்.

ஆட்டோ அவர்கள் கேட்ட பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக பயணிக்க துவங்கியது.

இருவருக்குள்ளும் பதட்டம், குறித்த நேரத்திற்குள் சென்று விட முடியுமா? என்ற சந்தேகம்.

“ஆட்டோகரன்னா , கொஞ்சம் வேகமா போங்கண்ணா , 9 மணிக்குள்ள போகணும்” என்று இருவரும் கூற, ஆட்டோக்காரர், “கண்டிப்பா போயிரலாம் தம்பிகளா” என்று கூறினார்.

ஆட்டோ வேகமாக சென்றாலும் , இருவருக்கும் மெதுவாக செல்வது போலவும் , நேரம் தான் வேகமாக போகிறது மாதிரி தெரிந்தது.

ஆட்டோ காரர் இருவரின் கையில் இருக்கும் சான்றிதழ் கோப்புகளை பார்த்து விட்டு “என்ன தம்பிகளா? ரெண்டு பேரும் அங்க இருக்கிற ஒரே கம்பெனிக்கு தான் வேலைக்கு போறிங்களா ?“ என்று ஆட்டோக்காரர் கேட்க,

இருவரும் பதில் அளிக்காமல் பதட்டத்துடன் இருந்தார்கள்.

மீண்டும் ஆட்டோக்காரர் கேட்டார். “அண்ணா கொஞ்சம் பேசமா வேகமா ஓட்டுங்க , டைம் ரொம்ப முக்கியம்” என்றான் கணேஷ்.

ஆட்டோகாரரும் “ரெண்டு பேரும் வேலைக்கு இண்டர்வியூ போறாங்க போல, போகட்டும், நல்ல படியா வேலை கிடைக்கட்டும்” என்று மனதில் நினைத்த படி , ஆட்டோவை வேகமாக ஓட்டினார்.

அவர்களின் பேருந்து நிறுத்தம் வந்தது.

இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கி ஆட்டோகாரருக்கு பணத்தை கொடுக்க, ஆட்டோகரரோ “தம்பி கொஞ்சம் நில்லுங்க, இந்தாங்க அம்பது ரூபா வச்சிகோங்க, வேலை கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்” என்று கூறி விட்டு கிளம்பினார்.

இருவரும் அந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினர்.

அவர்களின் வருகைக்கு பிறகே அந்த தனியார் பெண்களை அழைத்து செல்லும் ஐடி பேருந்து அங்கே வந்து நின்றது.

அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2 பெண்கள் அந்த பேருந்தில் ஏறி சென்றனர்.

சந்தோஷ் மற்றும் கணேஷ் இருவரும் அந்த பேருந்தில் நான்காவது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கும் அந்த பெண்ணை உற்று நோக்கினர்.

அந்த பெண்ணோ என்னமோ அவர்களை கண்டுகொள்ளவில்லை.

இவர்கள் இருவரும் அந்த பேருந்து அங்கிருந்து நகர்ந்து செல்லும் வரை வச்ச கண்ணு மாறாமல் அந்த பெண்ணை சைட் அடித்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

“டேய், கணேஷ், இன்னைக்கு மஞ்சள் சுடிதார்ல செம்மையா இருக்காடா” என்று ஜொள்ளு வடிந்தவாறு சந்தோஷ்.

“ஆமாடா, சந்தோஸ், இன்னைக்கு ரொம்ப பியூட்டி புல்லா இருக்கா!” என்று இருவரும் ஒரே பொண்ணை ஜொள்ளு வடிக்க தான் இந்த அவசரமா?.

பேருந்து கடந்து சென்றது. அந்த பெண்ணை பார்த்து இன்றைய பொழுது நல்ல பொழுதாய் அமையும் என்ற படி இருவரும் நகர்ந்து செல்கின்றனர்.

அவசரம் மிக அவசியம் தான்!…

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *