கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 15,710 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அன்புள்ள ‘கல்கி’ ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். ‘உறவின் கைதிகள்’ நான்காவது அத்தியாயத்தில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் கல்லூரி விழாவிற்கு வந்திருந்தார்கள் என்றுதான் எழுதியிருந்தேன், இருபத்தையாயிரம் பேர் என்று குறிப்பிட்டது தங்கள் காரியாலயத்தில் நிகழ்ந்த தவறு. இதை அப்போதே ‘கல்கி’ அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் சுட்டிக் காண்பித்தேன்.

10-8-80 ‘வட்ட மேஜையில்’ இத் தவறைச் சுட்டிக்காட்டிய தஞ்சை ஷோபாவின் கடிதத்தை பிரகரித்த தாங்கள், தவறு தங்களுடையது தான், எழுத்தாளருடையது அல்ல என்று விளக்கம் கூறாமல் விட்டுவிட்டது ஏனோ?

ஜெயலலிதா,
சென்னை- 66


அத்தியாயம்-9

என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!
என் உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உள்ளே யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன்! புகழும் வேண்டேன்
-பாரதிதாசன்

பூர்ணிமாவும் உஷாவும் சஃபையர் தியேட்டர் போய்ச் சேரும்பொழுது, சுரேஷ் ஏற்கனவே அங்கே வாசலில் தயாராக நின்று கொண்டிருப்பதை உஷா உடனே கவனித்தாள். பூர்ணிமாவுக்கு அவனைத் தெரியாது. அவளும் அதே கல்லூரியில் உஷாவுடன் படிப்பவள்தான் என்றாலும் அன்று ராஜீவை விழாவுக்கு அழைக்கப் போனவர்களில் அவளும் ஒருத்தி அல்ல. ஆதலால், அவள் சுரேஷைப் பார்த்திருக்கவில்லை.

காரை பார்க் செய்வதற்காக பூர்ணிமா வண்டியை ஒரு பக்கமாக ஓட்டிச் சென்று நிறுத்தினாள்.

“சுரேஷ் வந்துட்டார்டீ!” – உஷா இன்னும் காரை விட்டு இறங்கவில்லை.

“எங்கே?”

“அதோ பார்… நேவி ப்ளூ ஷர்ட், அதே கலர் பேண்ட்… அங்கே படிகளுக்கு முன்னாலே நிற்கிறார் பார்…”

”ஓ! அவர்தான் சுரேஷா?”

“உம்”

“சரி பின்னே கிளம்பு. இன்னும் ஏன் இங்கேயே உட்கார்த்துக்கிட்டு இருக்கே?”

உஷா ஒரு விநாடி தயங்கினாள், “பயமா இருக்கு நிம்மி…”

பூர்ணிமா அவளைப் புரிந்து கொள்ள முடியாதபடி விழித்தாள், “ஐ ஸே உஷா, வாட் இஸ் ராங்க் வித் யூ? உங்க ‘அவரை’ பார்க்ணும்னு இந்த நிமிஷம் வரைக்கும் துடிச்சுக்கிட்டு இருந்தே: இப்ப திடீர்னு என்ன ஆச்சி?”

“தெரியலை நிம்மி… ஆல் அஃப் அ ஸடன். ஐ ஃபீல் நர்வஸ்…”

உஷா சட்டென்று பூர்ணிமாவுடைய கையைப் பற்றிக் கொண்டாள்.

அவளுக்குத் தைரியமூட்டும் வகையில் பூர்ணிமா அவள் கையை அழுத்தினாள்.

“ஐ லீவ் இட் டு யூ… வேண்டாம்னு உனக்குத் தோணிச்சுன்னா நோபடி கேன் கம்பெல் யூ. நேரா போய் வர முடியாதுன்னு அந்த சுரேஷ் கிட்டே சொல்லிவிட வேண்டியதுதானே?”

உஷா யோசித்தாள், உண்மையாகவே அவளுக்கு வேண்டாமென்று தோன்றியதா? “டார்லிங், ப்ளீஸ் ஐ மஸ்ட் வி யூ ஸ்ளீட் ஹார்ட், ஸே யூ வில் கம்” அந்த வார்த்தை இன்னும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தனவே!

ராஜீவ் அங்கேயே அவள் பக்கத்திலேயே இருந்து கொண்டு அதே வார்த்தைகளை ஆண்மை மிக்க அவன் குரலில் பேசுவதைப் போன்ற ஒரு பிரமை உஷாவுக்கு உண்டாயிற்று. அவள் வருவாளென்று எத்தனை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்! அவனை ஏமாற்றுவதா? அவனுக்காக அவளது ஒவ்வொரு நரம்பும் ஏங்கிக் கதறிக் கொண்டு இருக்கையில், கடைசி நிமிஷத்தில் ஏன் இந்த வேடிக்கையான தயக்கம்? தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

”இல்லை நிம்மி, ஐ’ம் பீயிங் சில்லி. நான் போயிட்டு வறேன்,”

உஷா கதவைத் திறந்து காரை விட்டு இறங்கவிருந்தபோது பூர்ணிமா மீண்டும் அவள் கையைச் சட்டென்று பிடித்து நிறுத்தினாள்.

“உஷா…”

உஷா திரும்பிப் பார்த்தாள். பூர்ணிமாவின் முகத்தில் சஞ்சலம் தெரிந்தது.

“உஷா, ஆர் யூ ஷ்யூர்?”

அவளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உஷா புன்னகைத்தாள்.

“யெஸ் நிம்மி. ஐ’ம் ஷ்யூர். என்னைப் பத்திக் கவலைப்படாதே.”

“ஓ.கே. பீ கேர்ஃபுல். அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்… உஷா, யூ நோ, என்ன நடந்தாலும் ஐ ஆம் யுவர் ஃபிரண்ட்.” நன்றி மிக்க பாவனையோடு உஷா அவளைப் பார்த்தாள்.

“ஐ நோ டியர். தேங்க்யூ ஃபார் எவ்ரிதிங். உன்னுடைய உதவி இல்லேன்னா, நான் அவரைப் பார்க்கவே முடிஞ்சிருக்காது.”

”தென் கேரி ஆன். எனக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இங்கேயே உட்கார்த்துக்கிட்டு இருந்தா, வெயிட் பண்ணி, பண்ணி போர் அடிச்சு உங்க ‘அவர்’ எங்கேயாவது போயிடப் போறார்” இருவரும் சிரித்தனர்,

“தேங்க் யூ நம்மி, பை” சட்டென்று உஷா தோழியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

”நோ. நோ எனக்கு வேண்டாம். ஸேவ் இட் ஃபார் ஹிம்” என்றாள் பூர்ணிமா குறும்புத்தனமாக, உஷா சிரித்தபோதிலும் அவள் முகமெல்லாம் உஷ்ணமாகிவிட்டது.

வேகமாக இறங்கி சுரேஷை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்டதுமே சுரேஷ் மரியாதையாக ”குட் மார்னிங், ப்ளீஸ் கம் திஸ் வே” என்று அவளை ஒரு கருப்பு நிற அம்பாஸிடர் காரிடம் அழைத்துப் போனான். பின் கதவைத் திறந்து விட்டான், உள்ளே அமர்ந்ததும் கதவைச் சாத்தி விட்டான்.

ஒருநிமிஷம் உஷா திணறிப்போனாள். ஒன்றுமே புரியவில்லை.உள்ளே ஒரே இருட்டு, அப்புறம் அந்தக் காரிருளின் காரணம் விளங்கிற்று.

பக்கத்துக் கண்ணாடி, பின்கண்ணாடி அனைத்துமே கருப்புத் துணியால் மூடப்பட்டிருந்தது. காரின் பின் ஸீட்டுக்கும் முன் ஸீட்டுக்கும் இடையே ஒரு கண்ணாடிப் பிரிவு விசேஷமாகப் பொருத்தப் பட்டிருந்தது. அதுவும் கருப்பு நிற காட்டனால் மூடப் பட்டிருந்தது.

ஒரு வினாடி இருட்டில் உஷா மூச்சுத் திணறினாள். நாலு புறமும் கண்ணாடியை ஏற்றிப் போர்வையாலும் மூடிவிட்டால் எப்படி மூச்சு விடுவது? அடுத்த நிமிடமே சந்தேகம் நீங்கிற்று.

முன்னால் டிரைவர் ஸீட்டில் சுரேஷ் ஏறி உட்கார்ந்து கதவைச் சாத்திக் கொள்ளும் சப்தம் கேட்டது. அவனைப் பார்க்கமுடியாததால், அது சுரேஷாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டாள். காரைக் கிளப்பி, சுரேஷ் ஒரு ஸ்விட்சைத் தட்டியதும் உஷா உட்கார்ந்திருந்த காரின் பின்புறம் ஜீல்லென்று குளிர்ந்து விட்டது. காரினுள் ஏ.ஸி. இயங்க ஆரம்பித்தது.

எவ்வளவு ஜாக்கிரதையான, முன்யோசனையுள்ள ஏற்பாடு! வெளியிலிருந்து பார்ப்பவர் கண்களுக்கு காரை ஓட்டிச் செல்லும் சுரேஷ் மட்டுமே தெரிவான். பின் ஸீட்டில் யார் இருக்கிறார்கள் என்று யாருமே பார்க்க முடியாத வண்ணம் நாலு புறமும் கண்ணாடி கருப்புத் துணியாலும் மறைக்கப்பட்டிருந்தது!

உஷாவுடைய மனத்துக்கு ஒரு சிறிய ஆறு தல் ஏற்பட்டது. பயம் கொஞ்சம் குறைந்தது. குறைந்தபட்சம் இந்த ஏற்பாட்டால், அவள் ராஜீவுடைய இல்லத்துக்கு வருவதையும் போவதையும் யாரும் பார்த்து விட முடியாதே!

கார் ஒரு கேட்டுக்குள் திரும்புவது போல் தெரிந்தது. கர்ட்டனைச் சற்றே விலக்கி பார்த்தாள். ஆம்! ராஜீவுடைய வீடேதான்! வந்து சேர்ந்துவிட்டாள்!

கார் முன் போர்டிகோவுக்குப்போகவில்லை, சுரேஷ், வீட்டின் பின்புறத்தில் காரைக் கொண்டு போய் நிறுத்தினான், அவன் வந்து கதவைத் திறந்து விடவே உஷா இறங்கினாள். ஒரு சைட் வராந்தா மாதிரி தெரிந்தது. அதன் எல்லாப் பக்கங்களிலும் உயரமான சுவர் எழுப்பப்பட்டு அதன் மீது போகன் வில்லாக் கொடிகள் அடர்த்தியாகப் படர்ந்திருந்தன. அவள் அங்கே நிற்பது, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யாருக்குமே பார்க்க முடியாது. வீட்டுக்கு வெளியே போகும் சாலைக்கும் தெரியாது.

”வாங்க,” சுரேஷ் அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனான். வராந்தாவிலிருந்து உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய அறை தெரிந்தது. அங்கிருந்து மாடிப் படிகள் மேலே சென்றன. “மாடிக்குப் போங்க.” சுரேஷ் இதைக் கூறிவிட்டு மறைந்துவிட்டான்.

இது மெய்ன் ஸ்டேர்கேஸாக இருக்க முடியாது. அன்றைக்கு அவள் பார்த்திருந்த பெரிய ஹாலும் வேறு பக்கம் வீட்டின் முன் பக்கம் இருக்க வேண்டும். இந்த மாடிப் படிகள் கால் நடை ஓசை கேட்காதவாறு சிகப்பு நிற கார்ப்பெட்டால் மூடப்பட்டிருந்தன.

மெதுவாக உஷா படிகளில் ஏறிச் சென்றாள். நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது. படிகளின் இடையில் வந்த திருப்பத்தைக் கடந்து மேலே பார்த்தாள், இன்னும் ஆறு படிகள் மீதம் இருந்தன.

அந்தப் படிகளின் உச்சியில் விரிந்த புன்னகையோடு ராஜீவ் அவளுக்காகக் காத்து நின்றான்.

ஒரு கணம் உஷா இருந்த இடத்திலிருந்தே அவனைப் பார்த்தாள். “ஸோ. மை லிட்டில் ப்ரின்ஸெஸ் இஸ் ஹியர் அட் லாஸ்ட்! வெல்கம், ஸ்வீட் ஹார்ட்!” ராஜீவ் தனது இரு கரங்களையும் நீட்டினான்.

உ.ஷாவின் முகம் மலர்ந்தது. கண்கள் பளிச்சிட்டன. உதடுகள் துடித்தன, கடைசி ஆறு படிகளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்று அவன் இரும்புக் கரங்களின் வளையத்துக்குள் போய்ச் சரண் அடைந்தாள், அவன் இருக்கமான அணைப்பில் உருகினாள். அவன் அகன்ற மார்பில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

சில நிமிஷங்கள் இருவரும் அப்படியே மௌனமாக நின்றனர், தனது சக்தி வாய்ந்த கரங்களினால் உஷாவுடைய மெல்லிய உடம்பைத் தன்னோடு நெருக்கமாக அணைத்து நின்றபோது-விவரிக்க முடியாத ஒரு புதிய உணர்வு ராஜீவின் நெஞ்சினுள் படர்ந்தது. வேறு எந்தப் பெண்ணிடத்திலும் இந்த மாதிரி உணர்வு அவனுக்கு ஏற்பட்டிருக்க வில்லை. என்ன இது? இந்த உணர்வுக்குப் பெயர்தான் என்ன? மோகம்? காமம்? சபலம்? இல்லை! இல்லவே இல்லை! அதற்கெல்லாம் அப்பாற்பட்டது இந்த உணர்வு.

உஷாலின் நறுமணம் கமழும் கூந்தலில் முகத்தைப் புதைத்து அந்தச் சுகந்தத்தை நுகர்ந்தான். வேறு யாரிடத்திலும் ஏற்படாத மென்மையான உணர்ச்சி அவனுள் பிறந்தது. எவ்வளவு இனிமையானவள்! எதுவுமே தெரியாத பச்சிளம் குழந்தை போன்றவள்! அவனையே நம்பித் தன்னை அவனிடத்தில் அர்ப்பணித்துக் கொள்ள எத்தனை அன்புடன், எத்தனை நம்பிக்கையுடன் அப்பாவித்தனமாக வந்திருக்கிறாள்! இவளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பேணி சீராட்ட வேண்டும்! இவளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் அவன் காக்க வேண்டும்! இப்படிப் பல புதிய எண்ணங்கள் அவன் உள்ளத்துக்குள் தோன்றின.

உஷாவின் மார்பு துடித்தது, அவள் உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தான்.

”உள்ளே வா டார்லிங்.”

மெல்ல அவளை உள்ளே தனது படுக்கை அறைக்கு அழைத்துப் போனான். அங்கே ஒரு சோபாவில் அவளை அமரச் செய்தான், உஷாவின் நெற்றியில் உன்னிப்பாக மிகச் சிறிய வியர்வை முத்துக்கள் தோன்றியிருந்தன. அதை ராஜீவ் கவனித்தான். தனது கைச்குட்டையை எடுத்து அவள் நெற்றி வியர்வையை மெதுவாக ஒத்தி எடுத்தான், ஒரு தாயைப் போல.

அவனையே ஒருவித மலைப்போடு பார்த்தாள். அவனுக்கு இத்தனை மென்மையா? ராஜீவ் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். உஷாலின் இரு கரங்களையும் தன் கைகளில் எடுத்துக் கொண்டான்.

”அட! என்ன இது! உன் கைகள் ஐஸ் கட்டி மாதிரி இப்படி ஜில்லிட்டுப் போயிருக்கே!”

உஷா தரையைப் பார்த்தாள். இன்னும் அவளால் பேசமுடியவில்லை. அவள் கைகளைத் தனது இரு கைகளின் நடுவே எடுத்துக் கொண்டு, ராஜீவ் அவள் கைகளை வேகமாகத் தேய்த்துச் சூடேற்றினான், உஷாவின் கைகளி லிருந்து பனி போன்ற குளிர்ச்சி நீங்கியது. பழக்கமில்லாத ஓர் இனிய வெது வெதுப்பு அவள் உடல் முழுவதும் பரவிற்று.

“‘ஃபீலிங் பெட்டர் நௌ?” என்று கேட்டான், அக்கறையோடு உஷா ஆமாம் என்பது போல் மௌனமாகத் தலையை அசைத்தாள். ராஜீவ் மெல்ல அவள் முகவாய்க் கட்டையின் அடியில் ஒரு விரலை வைத்து அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.

“உஷா? ஏம்மா, கண்ணு, என்னைப் பார்த்துப் பயப்படறியா?” அந்தத் தழைந்த குரலில் எவ்வளவு மென்மை. எவ்வளவு கனிவு, எவ்வளவு அன்பு! அவன் விழிகளுக்குள் நோக்கினாள். அவன் கண்கள் எவ்வளவு ஆழமான அன்போடு பளிச்சிட்டன! இந்த அன்புத் தெய்வத்திடமா அச்சம். நடுக்கம். பயம்? எதற்கு?

அவள் பவழ இதழ்கள் துடித்து லேசாக விரித்தன. ”இல்லை” என்று தலையை அசைத்தாள்.

“உஷா ஐ லவ் யூ” இந்த வார்த்தைகளை இதுவரை விளையாட்டுக்குக் கூட ராஜீவ் யாரிடமும் பயன்படுத்தி இருக்கவில்லை. இதற்கு முன்பு அவன் பங்கு பெற்ற காமக் களியாட்டங்களின்போது தப்பித் தவறிக் கூட “லவ்” என்ற வார்த்தையை அவன் பிரயோகப்படுத்தி யிருக்கவில்லை. இப்போது முதன் முறையாக அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றிற்று, சொன்னான். “ஐ லவ் யூ!” ராஜீவ் சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் எத்தனை அழுத்தமாக, உண்மையாகத் தொனித்தன!

தன் இதயத்தையே தனது விழிகளில் தேக்கி உஷா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள், சந்தேகம், அச்சம், குற்ற உணர்வு எல்லாம் அவள் மனத்தை விட்டு அகன்று விட்டன. இப்பொழுது அவள் மனத்தில் தெளிவும் ஆழமான நம்பிக்கையும் பிறந்தன.

ராஜீவிடம் சொல்லில் அடங்காத அன்பு அவள் நெஞ்சை நிரப்பி, வேறு எந்த உணர்வுக்கும் இடமில்லாமல் செய்துவிட்டது. நிர்மலமான அவள் காதலை அவள் கண்கள் பிரதிபலிக்க, “ஐ லவ் யூ ராஜீவ்!” என்றாள், உஷா, மெல்லிய, அதே சமயத்தில் திடமான குரலில்.

”ரியலி, மை ப்ரின்ஸெஸ்?”

”யெஸ், ட்ரூலி”

“ஐ ஷல் ட்ரை டு பீ வர்தி அஃப் யுவர் லவ், மை ப்ரின்ஸெஸ்”

புனிதமான தெய்வீகக் கலசத்தை ஏந்துவதைப் போல், அவள் முகத்தைத் தனது இரு கரங்களின் நடுவே ஏந்திக் கொண்டான் அவன், அவள் இதழ்களைத் தனது இதழ்களுக்குச் சொந்தம் ஆக்கிக் கொண்டான். இந்த இனிய இணைப்பிலேயே மெய் மறந்து இருவரும் சிறிது நேரம் நீடித்தார்கள்.

“நான் சேர வேண்டிய இடத்துக்குத் தான் வந்து சேர்ந்துவிட்டேன்” என்ற வினோதமான எண்ணம் திடீரென்று உஷாவின் உள்ளத்தில் தோன்றிற்று.

“இறைவா! இவள் எப்போதும் என் அருகில் இருந்தால் போதும்! வேறு எதுவும் எனக்கு இனி வேண்டாம்!” என்ற புதிய எண்ணம் ராஜீவின் உள்ளத்தில் உதயம் ஆயிற்று.

அத்தியாயம்-10

எனக்குத்தான் அவன் எனக்குத்தான்
என்னைத்தான் அவன் காதலித்தான்! -பாரதிதாசன்

இப்பொழுதெல்லாம் ராஜீவ் சனி, ஞாயிறு தினங்களில் யாருக்கும் கால்ஷீட் கொடுக்க மறுத்தான். அந்த இரண்டு நாட்கள் உஷாவுக்கு மட்டுமே சொந்தமானவை, அவளுக்காகவே அந்த நாட்களை ஒதுக்கி வைத்தான்.

திரைப்படத் துறையில் இது ஒரு விநோதமான விஷயமாகப் பேசப்பட்டது, ‘இப்பொழுதெல்லாம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராஜீவ் குமார் எத்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வதில்லை; எந்தப் பத்திரிகை நிருபர்களுக்கும் பேட்டி அளிப்பதில்லை; அந்த இரண்டு தினங்களில் யாரையும், முக்கியமான தயாரிப்பாளர்களைக் கூட வீட்டுக்கு வர அனுமதிப்பதில்லை! ஒவ்வொரு சனி ஞாயிறும் அஞ்ஞாதவாசம் போய் விடுகிறார்! என்ன காரணமோ?” என்று வியந்தார்கள். உண்மையான காரணம் யாருக்கும் தெரியவில்லை. மிகவும் முக்கியமான விஷயமானால், அந்த இரு நாட்களில் எப்போதாவது மாலை வேளைகளில் மட்டும் உஷா பத்திரமாக அங்கிருந்து போய்விட்ட பிறகு, யாருக்காவது வீட்டில் பேட்டி அளிப்பான்.

உஷாவைக் கண்ட நாள்முதல், ராஜீவ் எந்தப் பெண்ணையும் நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டுமென்று கூட அவனுக்குத் தோன்றவில்லை, இப்பொழுது அவன் இரவுகளைத் தனியாக, உஷாவின் நினைவிலேயே கழித்தான்.

இதுவரை அவன் அனுபவத்தில், இப்படிப் பட்டகளங்கமில்லாத உண்மையான அன்பை யார் அவனிடம் காண்பித்திருந்தார்கள்? இதுவரை அவனுக்குத் தெரிந்ததெல்லாம் திட்டம் போட்டு அவனிடமிருந்து என்னென்ன லாபங்களைக் கரக்கலாமென்ற எதிர்பார்ப்புடன் வந்த விலைமாதுகளின் போலிக் கொஞ்சல்கள் தானே? அப்படி வந்த பெண்களில் ஒருத்திகூட கன்னியாக இருந்ததில்லை. உஷாவின் வாழ்க்கையில் அவள் அறிந்த முதல் ஆண் அவன்தான் என்ற உண்மை சொல்லில் அடங்காத பெருமிதத்தில் அவனைத் திளைக்க வைத்தது. அந்த விவரம் அவன் உள்ளத்தைப் பூரிக்க வைத்தது.

தங்கள் முதலாளியின் போக்கில் இந்தப் புதிய மாற்றத்தைக் கண்ட ராஜீவுடைய வீட்டு வேலைக்காரர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள் – “யாரோ இந்தச் சின்ன அம்மா ரொம்ப நல்லவங்களாகத் தெரியறாங்க.”

“ஆமாம். நம்ப ஐயாவை முழுசா மாத்திட்டாங்க!”

“இந்தச் சின்ன அம்மா வர ஆரம்பிச்சதி லிருந்து, அந்தத் தறுதலைங்க எல்லாம் இப்ப வர்ரதே நின்னுப் போயிட்டது, கவனிச்சியா?”

“இந்த அம்மாதான் அதற்குக் காரணம். மகாலட்சமி மாதிரி இருக்காங்க. இவங்களையே நம்ம ஐயா கட்டிக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்!”

“அப்பத்தான் இந்த வீடு, வீடு மாதிரி இருக்கும். புதுக் களை பிறக்கும்!”

ராஜீவுடைய மனத்திலும் போகப் போக இப்படிப்பட்ட எண்ணங்கள் மெதுவாகத் துளிர்விட ஆரம்பித்தன, தன் வாழ்க்கையில் முதன் முறையாக, ராஜீவ் உண்மையாகக் காதல், நேசம் என்ற வார்த்தைகளின் பொருளை உணர்ந்தான். நாளடைலில் அவனுக்கும் உஷாவுக்கும் இடையில் ஓர் அபூர்வமான அன்னியோன்யம் உருவாயிற்று. அவள் பால் அவனுக்கேற்பட்ட அன்பின் ஆழம் அவனையே அதிர வைத்தது.

“இப்படிப் பட்ட ஒரு பெண்ணைத்தான் என் வாழ்நாள் முழுதும் நான் எனக்கே தெரியாமல் தேடிக் கொண்டிருந்தேன்!” என்று எண்ணினான். உஷா இல்லாத வாழ்க்கை இனித் தேவையே இல்லை என்று கருதினான். அவளே அவன் வாழ்வின் அச்சாணி ஆகிவிட்டாள், அவளுடைய வெகுளித்தனம், குழந்தைத் தனம், பவித்திரமான, கள்ளம் கபடமில்லாத அன்பு அவனை அவளுக்கு அடிமைப் படுத்திவிட்டது.

உஷாவைப் பொறுத்தவரையில் அவள், கட்டிலடங்காத ஆனந்தத்தில், பரவசமடைந்த இன்ப நிலையில் திளைத்தாள். என்றைக்குமே ராஜீவ் அவள் கனவுகளின் மன்னனாக இருந்தவன். இப்போது உண்மையாகவே நிஜ வாழ்க்கையிலும் அவளுக்குச் சொந்தமாகி விட்டான். இத்தனை காலம் தூரத்திலிருந்து அவள் ஹீரோ வொர்ஷிப் செய்து வந்த அவன், அவளுக்கே சொந்தம் ஆகிவிட்டதை எண்ணும் போது கால்கள் பூமியில் நிற்கவில்லை.

அவள் பார்வையில் அவன் எந்தக் குறையுமே இல்லாதவன். இருவருடைய வயதில் இருந்த நீண்ட இடைவெளி உஷாவுக்குக் கொஞ்சமும் வித்தியாசமாகப் படவில்லை. மாறாக, அதுவே அவளுக்கு அவரை இன்னும் கவர்ச்சிகரமாகக் காண்பித்தது. குழந்தைப் பருவத்தில் தந்தையின் அன்பை அறியாத இளம் பெண்கள், சாதாரணமாக வயதில் அவர்களை விட மிகவும் முதிர்ந்த ஆண்களையே விரும்புவார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுவார்கள்.

உஷாவின் விஷயத்தில் அதுவே உண்மை யாகிவிட்டது. நீனைவு தெரியும் முன்பே தந்தையை இழந்து, தாயின் பாதுகாப்பில் மட்டும் வளர்ந்த உஷாவுக்கு, ராஜீவ் ஒரு தகப்பனைப் போல, ஒரு ஃபாதர் ஃபிகர் ஆக விளங்கினான்.

அவனே அவளுடைய உலகமாகி விட்டான். அவனே அவளுக்கு எல்லாம். தாய், தகப்பன், காதலன், நண்பன், ஆசான், குரு – சகலமும் அவனே. தாயைப் போல அன்பு காட்டினான், தன் கையாலேயே அவளுக்குச் சோறு ஊட்டினான், தகப்பனைப் போல மடியில் வைத்து அவளைக் கொஞ்சினான், சீராட்டினான், காதலனாக அவளை இன்ப சுகத்தில் மிதக்க வைத்தான், அவள் சிரித்து, விளையாடி, எது வேண்டுமானாலும் விவாதிக்கக் கூடிய நண்பனாக விளங்கினான். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், வேதாந்தம், இசை, நாட்டியம், ஓவியம் போன்ற விஷயங்களில் தனது கல்வி அறிவால் அவளைத் திணறடிக்கச் செய்து, இவற்றில் மேதை ஆகிய அவன் ஆசானாக மாறி, அவளுக்குத் தெரியாத பல புதிய விஷ்யங்களை அவளுக்குக் கற்பித்தான்.

மாடிக்கே சாப்பாடு கொண்டு வரப் பணியாளருக்கு உத்தரவிடுவான், வைத்துவிட்டுப் போய்விடச் சொல்வான்.

“நான் உங்களுக்குச் சாப்பாடு போடறேன்!'” என்பாள் உஷா.

“ஊஹூம். வேண்டாம். நான் தான் உனக்குப் பரிமாறணும்!” என்பான் ராஜீவ்.

”ஏன்?”

“பாத்திரங்கள் கடும். மிருதுவான கை குடு தாங்காது எரியும்!” என்று அவள் கையின் மேல் முத்தமிடுவான். அந்த அன்பு அவள் கண்களைக் கலங்க வைக்கும். தொண்டையை அடைத்து விடும். மேலும் விவாதிக்க முடியாமல் விட்டு விடுவாள்.

வீட்டின் மூன்றாவது மாடியில் ஒரு மினி ப்ரொஜக்ஷன் தீயேட்டர் இருந்தது. சில அரிய ஆங்கிலப் படங்களை வரவழைத்து அங்கே அவளுக்காகப் பிரத்தியேகமாகப் போட்டுக் காண்பிப்பான். தன்னுடைய புதிய படங்கள் சிலவற்றையும் அவளுக்குக் காண்பிப்பான்.

“‘பேப்”, “ரிலே கோஷே”, “ஷெனல்’, “லி ஏர் டு டெம்ப்ஸ்” போன்ற அரிய வெளி நாட்டு சென்டுகளால் அவளைக் குளிப்பாட்டினான். இத்த நறுமணங்களில் பெயர்களைக்கூட உஷா அதுவரையில் கேள்விப்பட்டிருக்கலில்லை..

இன்னும் அவளுக்காக எவ்வளவோ செய்ய வேண்டும் என்று துடித்தான், வைரங்கள், நவரத்தினங்கள், பட்டுப் புடவைகள் – இப்படி அவள் மடியில் பரிசுகளாகக் குவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். ஆனால், உண்மையில் உயர்த்த விலையுள்ள எந்தப் பொருளையும் அவளிடமிருந்து பெற்றுக் கொள்ள அவள் மறுத்தாள்.

“நான் ஆசையாக் கொடுக்கிறதை வேண்டான்னு சொல்லாதே. என்னை இன்ஸஸ்ட் பண்ற மாதிரி இருக்கு” என்றான்.

“ஏன் இப்படிக் கோவிச்சுக்கிறீங்க! இதுக்காக நான் உங்ககிட்டப் பழகலையே!”

“அது எனக்கும் தெரியும், நானா பிரியப்பட்டுக் கொடுக்க விரும்பறதை ஏன் வேண்டாம்னு சொல்றே?”

“ப்ளீஸ் ராஜீவ் டார்விங், ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட், இந்த பிரஸண்ட்ஸ் எல்லாத்தையும் நான் ஏத்துக்கிட்டாலும், எங்கே கொண்டு போய் வெச்சுக்க முடியும்? ஹாஸ்டல் ரூம்லே என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க. போவாங்க, இதேல்லாம் உனக்கு ஏதுன்னு கேட்டாங்கன்னா நான் என்ன பதில் சொல்ல முடியும்? எனக்கு எவ்வளவு சங்கடமா யிருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.” இப்படி சாமர்த்தியமாக அவரைச் சமாதானப்படுத்தினாள்.

“உம்…நீ சொல்றதும் வாஸ்தவம்தான். பட் உஷா, ஐ வாண்ட் டு கிவ் பூ த ஹோல் வர்ல்ட்!” என்றான் ராஜீவ்.

”நீங்கதான் என் உலகம். நீங்க இருந்தாப் போதும், எனக்கு வேறே எதுவுமே வேண்டாம்” என்றாள் அவள்.

ஒரு நாள் ஏதோ பேச்சின் இடையில். “ராஜீவ், நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கல்லை?” என்று உஷா கேட்டாள்.

ஒரு வீசித்திரமான பாவம் அவன் முகத்தில் தோன்றியது.

”கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இருபது வருஷங்களுக்கு முன்னாலே” என்று பதில் சொன்னான்.

“என்ன உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டதா?” – உஷா அதிர்ந்து போனாள். அவள் தலை சுற்றியது. முகம் வெளுத்து விட்டது.

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “உறவின் கைதிகள்

  1. படிக்க படிக்க திகட்டாத ஒரு அற்புதமான கதை தோரணை………

    உறவின் கைதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *