கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,407 

அந்தக் கடிதம் இப்படித் தொடங்கி, அப்படி முடிந்தது…

‘உன் கணவன் இளம்பெண்களைப் பார்த்தால் வழிகிறான். நேற்றுகூட ஒரு அழகியுடன் ஹோட்டலில் சாப்பிட்டான். ஏகப்பட்ட போன் கால்கள்… மனைவிங்கற ஸ்தானம் பறிபோகாமல் பார்த்துக்கொள்!

உண்மை விளம்பி’ கடிதத்தைப் படித்த சுதாகர் அதிர்ந்து, வியந்து கேட்டான்… ‘‘என்னடா, உன் அட்ரசுக்கு நீயே மொட்டைக் கடுதாசி எழுதற?’’

‘‘ஆமா… பொறுத்திருந்து பார். இந்தக் கடிதம் என் மனைவி கையில கிடைக்கணும்’’ என்றான் ஆனந்த்.

சில நாட்களுக்குப் பிறகு… ‘‘என்ன ஆச்சு? அந்த லெட்டரைப் படிச்சுட்டாங்களா? பூகம்பமா வீட்ல?’’ – கேள்விகளை அடுக்கினான் சுதாகர்.

‘‘படிச்சுட்டா… ஆனா, பூகம்பம் இல்லை… பூ மழைதான்! எப்பவும் டிவி முன்னாடி உக்கார்ந்தே குண்டா ஊதிப் போயிருந்த என் மனைவி இப்ப யோகா, எக்சர்சைஸ்னு ஆரம்பிச்சுட்டா. தமன்னா போல மாறிக் காட்டறேன்னு சபதம் எடுத்திருக்கா. அப்புறம்… என்னையும் நல்லா கவனிச்சுக்கறா!’’

‘‘எம்டன் மவன்டா நீ!’’ என்றான் சுதாகர்.

– செப்டம்பர் 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *