ஒரு விதையின் பயணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 86 
 
 

ஒரு அடர்ந்த காட்டில், பூமிக்கு அடியில் ஒரு சிறிய விதை இருந்தது. அதைச் சுற்றி எப்போதும் கும்மிருட்டு. மேலே இருந்த மற்ற மரங்கள் உயரமாக வளர்ந்து சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருந்தன. ஆனால், இந்தச் சிறிய விதை மட்டும் ஈரமான மண்ணுக்குள் புதைந்து கிடந்தது.

அந்த விதை தினமும் அழுதது, “நான் ஏன் இங்கே இருக்கிறேன்? என் வாழ்க்கை வெறும் இருட்டுதானா? நான் அந்த மரங்களைப் போல வளரவே முடியவில்லையே என வருந்தியது. மேலே இருக்கும் மரங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்!” என்று வருத்தப்பட்டது.

ஒரு நாள், அந்த விதையின் அருகில் இருந்த , ஒரு முதிய வேர் மெல்லிய குரலில் பேசியது: “தம்பி, நீ இப்போது இருப்பது கல்லறையில் அல்ல, கருப்பையில்! இருட்டு என்பது உன்னை அழிப்பதற்கல்ல, உன்னை உருவாக்குவதற்கு.”

விதை ஆச்சரியத்துடன் கேட்டது, “இந்த அழுத்தமான மண்ணையும் இருட்டையும் தாண்டி என்னால் எப்படி வெளியே வர முடியும்?”

அதற்கு அந்த வேர் சொன்னது, “உனக்குள் ஒரு ரகசிய வலிமை இருக்கிறது. நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்; உனது ஓட்டை உன் வலிமையால் உடைத்துக் கொண்டு வெளியே வா. அந்த வலிமைதான் உனது வளர்ச்சிக்கான வழி.”

விதை முடிவெடுத்தது. தன்னைச் சுற்றியிருந்த இருட்டைப் பார்த்து பயப்படுவதை நிறுத்தியது. தன் முழு பலத்தையும் திரட்டி, தன் கடினமான ஓட்டை உடைக்கத் தொடங்கியது. அது மிகப்பெரிய வலியைக் கொடுத்தது. ஆனால், ஓடு உடைந்த அடுத்த நிமிடம்…

அதன் சிறு துளிர்கள் மண்ணைத் துளைத்துக் கொண்டு மேலே சென்றன. ​முதல்முறையாகச் சூரிய ஒளியின் ஸ்பரிசத்தை உணர்ந்தது. ​பல வருடங்களுக்குப் பிறகு, அந்தக் காட்டின் மிக உயரமான, அழகான மரமாக அது வளர்ந்து நின்றது.

நீதி:

​நம் வாழ்க்கையிலும் சில நேரங்களில் தோல்விகள், வறுமை அல்லது தனிமை என்ற இருட்டில் நாம் புதைக்கப்பட்டிருப்பதாக உணரலாம். நீங்கள் இருட்டில் இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

​’என்னால் முடியாது’ என்ற உங்கள் பழைய எண்ணங்களை (ஓட்டை) நீங்களே உடைக்க வேண்டும். அது உங்கள் கடமை. அந்த வலி தற்காலிகமானது, ஆனால் அதன் மூலம் கிடைக்கும் வளர்ச்சி நிரந்தரமானது.

உலகம் உங்களை அழுத்துவதாக நினைப்பதை விட, அந்த அழுத்தம் தான் நீங்கள் மேலே வளர உதவும் உரம் என்று நம்புங்கள்.

​”உங்களை மண்ணிற்குள் புதைக்க நினைப்பவர்களுக்குத் தெரியாது, நீங்கள் ஒரு விதை என்று! நீங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறீர்கள். எழுந்து வாருங்கள்!”

உங்களால் எதையும் சாதிக்க முடியும்!

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *