வேண்டாம் விளையாடாதே…
கதையாசிரியர்: சுப்ரா
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 14,660
கடைவீதியில் கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன் பத்தடி தள்ளி ஒன்றுமே தெரியாதவன் போல வந்து கொண்டிருந்தான் .
ஐந்தாறு அடிதான் நடந்திருப்பாள் . மீண்டும் சில்மிஷத்தை ஆரம்பித்துவிட்டான் . திலகாவிற்கு கோபம் வந்தது . திரும்பிப் பார்த்து முறைத்தாள் . அவன் ஜவுளிக் கடை பொம்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .
திலகா மீண்டும் நடையைத் தொடர்ந்தாள் . சிறிது தூரம் செல்வதற்குள் மீண்டும் குறும்பை ஆரம்பித்துவிட்டான் . திலகாவின் கோபம் அதிகமானது . கையில் இருந்த கூடை கனத்தது . அதை அப்படியே அவன் தலையில் கவிழ்த்துவிட வேண்டும் போல் எரிச்சல் உண்டாக்கியது .
கண்களில் கோபம் தெறிக்க முறைத்தாள் . அவன் எதுவுமே அறியாத அப்பாவியாக இடது கைமுட்டிகளில் வலது கை விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான் .
கணவரில்லாமல் கடை வீதிக்கு வந்தது தவறு என்று நினைத்துக் கொண்டாள் . அவரோடு வந்திருந்தால் இந்த தொல்லைகள் இராது .
“ வேண்டாம் …! விளையாடாதே ! செருப்பு பிஞ்சிடும் . “ குரலில் கோபத்தோடு எச்சரித்தாள் .
அவள் குரலின் கடுமையில் அவன் பயந்திருக்க வேண்டும் . அதன்பின் சிறிது நேரம் எந்த தொந்தரவும் இல்லை . ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் ஆரம்பித்துவிட்டான் .
“ சர்க்க் … “
திலகா கூடையை கீழே வைத்து விட்டு திரும்பி சட்டென்று அவனைப் பிடித்தாள் .
“ சொன்னேன்ல . பின்னாடியே வந்து என் செருப்பை மிதிக்காதேன்னு . இப்ப பாரு . பிஞ்சிடுச்சு . “
“ அப்புறம் என்னம்மா , எத்தனை தடவை சொல்லிட்டேன் . கேட்காம இந்த கிழிஞ்ச செருப்பை விடாம எல்லா இடத்துக்கும் அதையே போட்டுக்கிட்டு போயிட்டிருக்கே . இது பிஞ்சாத்தான் வேற வாங்குவேன்னுதான் இப்படிச் செஞ்சேன் . “
சிரித்தபடியே சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த செருப்புக் கடைக்குள் நுழைந்தான் அவளது எட்டு வயது மகன் வினோத் .
– அக் 28 – நவ 03 , 1994 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியான எனது சிறுகதை .
தொடர்புள்ள சிறுகதைகள்
நோன்பு
ஜே.எம்.சாலி
July 29, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 29, 2026
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
July 29, 2026
haahaahaa super anbaana maganin anbaana seyal
அருமையான எதிர்பாராத ஷாக் …..
மக்களின் மனம் எப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது !!