விடுமுறையில்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2025
பார்வையிட்டோர்: 964 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடுமுறை என்றதுமே மாமனாரின் ஊர்தான் ஞாபகத்துக்கு வரும். இந்தத் தடவையாவது கட்டாயம் அங்கே போயிறவேண்டி யதுதான். அடேயப்பா… எத்தனை நாளாச்சி அங்கே போயி… 

நினைத்ததும் முதல் ஞாபகத்துக்கு வந்தது அந்த மலைதான். மூணு சின்ன மலைகள்; நெருக்கமாக அக்கன்னா எழுத்துபோல ஒட்டிப் பிறந்த பிறப்பு. உச்சியிலிருந்து கீழே வரையும் பெரிசும் சிறுசுமான பலவித உருண்டை வடிவிலான பாறைகள். மரமும் அல்லாத செடியும் அல்லாத உயரங்களில் நெடுகிலும் வளர்ந்து மண்டிக்கிடக்கும் தாவரக்கூட்டம். என்ன செடிகள் என்றே அடையாளம் தெரியாத பறட்டைத்தலைச் செடிகள். 

பாறை இடுக்குகளில் விரல் நீட்டிக்கொண்டிருக்கும் அகலச் சோகைகள் கொண்ட புல்லைக் கிள்ளி முகர்ந்து பார்த்தால் வரும் மணம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனை தரம் முகர்ந்து பார்த்தாலும் அலுக்காது. அப்படி ஒரு ரஞ்சிதம். மலையின் நிறம் கருப்பு, மழைகளினால் காலங்காலமாக நனைந்த கன்னங்கருப்பு. பல்லாண்டு மழையில் நனைந்த சுண்ணாம்புக்காரை வீடுபோலக் கருத்துப்போயிருந்தது. 

அடுத்து ஞாபகம் வருவது. அந்த உருண்டைப் பாறைகளின்மேல் நூற்றுக்கணக்கான மயில்கள் உட்கார்ந்துகொண்டிருக்கும். 

அவனுக்குச் சின்ன வயசிலிருந்தே அந்த மலையோடு சிநேகம் உண்டு. மாமனாரின் வீட்டில் சாப்பிடுகிற நேரம்தவிர மற்ற நேரங்களி லெல்லாம் அந்த மலையோடுதான் இருப்பு. படுக்கையில் முழிப்புத் தட்டியதும் பார்த்தால் ஜன்னல் வழியாக மலை தெரியும். படுக்கை யில் உட்கார்ந்து காப்பி சாப்பிட்டுக்கொண்டே மலையைப் பார்ப்பான். முழு நிலாவில் இங்கிருந்து பார்த்தால் மலை எப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டு. அப்போது அவன் நடுநிலைப்பள்ளி மாணவனாயிருந்தான். 

பின்பு அவன் உயர்நிலைப்பள்ளி மாணவனாக ஒரு லீவில் போன போதுதான் திடீரென்று மலையின்மீது கணக்கில்லாத மயில்களைப் பார்த்துப் பிரமித்தது. அதுவரையில் அவன் மயிலைப் படத்தில்தான் பார்த்திருந்தான்! வீட்டுக்கு வந்து மாமனாரிடம் கேட்டபோது. “ஆமாம்; அது இப்போ பெரிய்ய தொந்தரவு. எங்கயோ இருந்து கொஞ்ச நாளைக்கு முந்தி நாலைஞ்சு மயில் தட்டுப்பட்டமாதிரி இருந்தது. இப்போ கணக்கில்லாமப் பெருகிட்டது” என்றார் சலிப்புடன். 

மலையிலிருந்து அவன் சிரமப்பட்டுத் தேடி எடுத்துக்கொண்டு வந்த இரண்டு மூன்று மயில் இறகுகளை அவன் நினைத்ததுபோல் யாரும் அங்கே அதிசயமாகப் பார்க்கவுமில்லை, ஆர்வத்தோடு விசாரிக்கவும் இல்லை. அவனுக்கு மட்டுந்தான் அவை வியப்புறு பொருளாக அபூர்வமாக இருந்தது. 

வண்ணம் அமைந்த அபூர்வப் பறவைகளின் இறகுகளைத் தலையில் அழகுக்காகச் சொருகிக்கொள்ளும் ரசனை மிகுந்த மலை வாழ் பழங்குடி மக்களின் படங்களை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் அவர்களில் யாரும் மயில் இறகுகளைச் சூடிக்கொண்ட ஞாபகம் இல்லை. 

குழந்தைத் தெய்வங்களான பாலகோபாலனும் பாலமுருகனும் மயில் இறகைத் தலையில் அழகாகச் சூடிக்கொண்டிருப்பதைப் படங்களில் பார்த்திருக்கிறான். 

பெண்டுகள் தலையில் பின்புறத்தில் ஒற்றை ரோஜாப்பூவைச் செருகிக் கொள்வதுபோல் இந்த மயில் இறகின் நுனிப்பகுதியைச் சொருகிக்கொண்டால் அழகாக இருக்குமே என்று நினைத்தான். 

கையில் வைத்துக்கொண்டிருந்த இறகில் ஒன்றை மாமனாரின் மகளிடம் நீட்டினான். அப்போது அவள் ஏனங்களைச் சாம்பலால் துலக்கிக்கொண்டிருந்தாள். “என்னத்துக்கு இது?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள். தலையில் வைத்துக்கொள்ள என்று சொல்ல, இவனுக்குச் சங்கோஜமாக இருந்தது. நீட்டிக்கொண்டே ஒன்றும் சொல்லாமல் 

சொல்லாமல் வெளிச்சத்தில் மின்னும் இறகுகளின் மின்னாப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான். “அப்பிடி வையுங்க” என்று ஒரு இடத்தை முகத்திலேயே அசைத்துக் காட்டினாள். 

கட்டிலின்மேல் அந்த இறகை வைத்துவிட்டு மற்ற இரண்டு இறகுகளை நிலைக்கண்ணாடியின் பக்க வளையங்களில் சொருகி வைத்து அழகு பார்த்தான். 

அந்த மும்மலைக் கிராமத்தில் அவனுக்கு ஒரு சேக்காளி இருந்தான். முதல்முதலில் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து பழக்கம். வெங்கட்ராயலு என்ற அவன் பெயரைத் தெலுங்கில் எங்கட்ராயலு என்று சொன்னார்கள். 

ஒருதடவை மட்டும் அவன் இவனோடு மலையைச் சுற்றிப் பார்க்கத் துணைக்கு வந்தான். அந்தக் கிராமத்துப் பிள்ளைகளுக்கு இந்த மலை விஷயம் அவ்வளவு சுவாரஸ்யப்படவில்லை போலிருக் கிறது. மயில் விஷயமும் இப்பொ அப்படித்தான் தோன்றுகிறது. 

இவன் எங்கட்ராயலுவைத் தேடிப் போனான். அவனுடைய வீடு கீழக்கடைசியில் இருந்தது. இவன் போய்ச் சேர்ந்தபோது வீட்டில் மற்றவர்கள் யாரும் இல்லை. அவன் நீளமான வாலுள்ள பெரிய அகப்பையால் கோழிக்கூண்டுக்குள் இருக்கும் முட்டைகளை இழுத்து எடுத்துக்கொண்டிருந்தான். அந்தக் கூண்டின் அமைப்பு திண்ணையா கவும் கோழிக்கூண்டாகவும் அமைந்திருந்தது. அதில் எந்தப் பக்கமும் ஜன்னல் கிடையாது, ஒரு முழ உயரமும், முக்கால் முழ அகலமும் கொண்ட ஒரு வாசல்மட்டுமே உண்டு. 

இவனைக் கண்டதும் எங்கட்ராயலு மகிழ்ச்சியில் சிரிக்க மட்டுமே செய்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து ரொம்பநாள் ஆச்சு, எங்கட்ராயலு அப்படியேதான் இருக்கான்! பள்ளி விடுமுறை நாட்களில் அந்தக் கிராமத்துப் பிள்ளைகள் பொழுதைக் கழிக்க எங்கேயும் போகிறது கிடையாது. அவர்களுக்கு செய்து முடிக்க வேண்டிய விவசாய வேலைகள் இருந்துகொண்டே இருந்தன. பள்ளி நாட்களில்கூடப் பள்ளி நேரம்தவிர மற்ற நேரங்களில் அவர்கள் வேலை செய்து பெற்றோர்களுக்கு உதவி செய்வார்கள். சனி ஞாயிறு லீவு நாட்களில் காட்டுவேலைக்குப் போவார்கள்; விறகு சேகரிக்கிறது, சாணம் பொறுக்கி உரம் சேர்க்கிறது, தொழுக்குப்பையை அள்ளிக் குப்பைக் கிடங்கில் கொண்டுபோய்க் கொட்டுகிறது, கோமியத்தைப் பானையில் கோரிக் குப்பையில் கொண்டுபோய் ஊற்றுகிறது, பால் மாடுகளைக் காலையிலும் மாலையிலும் சிறு மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு போய்வருவது, கண்மாயில் மாடுகளைக் குளிப்பாட்டுகிறது, காளைக்கன்றுகளை நடை பிடிக்கிறது, பருத்தி வெடிப்புக் காலங்களில் பருத்தி எடுக்கிறது, இப்படியாக அவர்கள் சம்சாரி வேலைகளைத் தங்கள் குடும்பத்துக்கு உதவியாகச் செய்துகொண்டே இருப்பார்கள். விடுமுறை நாட்களிலும்கூட அவர்கள் இப்படி விழுந்து விழுந்து வேலை செய்வது இவனுக்கு ஆச்சரியமாகவும் எரிச்சலாகவும்கூட இருக்கும். மலையைப் பார்க்கவோ மயிலைப் பார்க்கவோ எந்தப் பிள்ளையைப் கூப்பிட்டாலும் “நாங்க வரலை; வேலை இருக்கு” என்று சொல்லுகிறார்கள்! 

கூட்டினுள் அகப்பையை விட்டு முட்டையை இழுத்து எடுத்துக் கொண்டே எங்கட்ராயலு “நேத்து ராத்திரி இதிலெ ஒரு நல்ல பாம்பு அடிச்சோம்” என்றான். 

“அநேகமாக மாசத்துக்கு ரெண்டு பாம்பாவது அடிப்போம்”

எதுக்காக, ஏன் என்று இவனுக்குப் புரியவில்லை. 

“அடிக்கடி முட்டைகளைத் திங்கவருது. நேத்து ராத்திரி திடீர்னு கோழிக்கூண்டுக்குள்ளே கோழிகள்ளாம் கலைஞ்சி கெக்கரிச்சது. லைட் அடிச்சுப் பார்த்தா… உள்ளே சரியான பாம்பு!” 

“பெறகு?” 

“பெறகென்ன குத்துக் கரத்தை எடுத்துட்டு வந்து குத்தி இழுத்தா… ஏங்ஙப்போவ்…. ஒரு பாகம் நீளமிருக்கும்” என்று அகப்பையைக் கீழே வைத்து அகலித்துக் காண்பித்தான் கைகளை. 

அகப்பையால் இழுத்துச் சேகரித்த முட்டைகளை ஓலைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டுபோய் அரங்கு வீட்டுக்குள் வைத்துவிட்டு வந்தான். இருவரும் கம்மாக்கரை நிழலுக்குப் போனார்கள் உட்கார்ந்து பேச. 

அப்போதுதான் இவன் சொன்னான்; மயில்களைப் பார்த்த தாகவும், மலைமேல் ஏறிப்போய் மயில் இறகுகள் கிடந்து எடுத்துக் கொண்டு வந்ததையும். 

“மயில் முட்டைகள்கூட இருக்குமே; பாத்தியா?” 

“முட்டையா! நான் பார்க்கலையே, எப்பிடி இருக்கும்?” 

“மூணு கோழிமுட்டைகளைச் சேர்த்தா எம்புட்டு இருக்குமோ அம்புட்டுப் பெரிசா இருக்கும்.” 

‘அப்பிடியா? நான் பார்க்கலையே” 

“இங்கே எல்லாரும் எடுத்துக்கிட்டு வருவாக”.

“எடுத்துட்டு வந்து?” 

“எடுத்துட்டு வந்து, முட்டையைப் பொரிச்சுச் சோத்துக்கு வெஞ்சனமாக வச்சித் திம்பாக.” 

அவனையே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தான் இவன்! 


மறுநாள் இவன் எங்கட்ராயலுவைத் தேடிப் போனபோது அவன் வீட்டில் இல்லை. காட்டுக்கு வேலைக்குப் போய்விட்டதாக யாரோ அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இவனுக்குப் பொழுது போச வில்லை. கம்மாய்க்கரைப் பக்கம் அப்படியே நடந்தான். அங்கே ஒரு மீசைக்காரர் – ‘ராமரைப் போல்’ – தோளில் தெப்பை வில்லைப் போட்டுக்கொண்டு மரங்களின் உச்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார். 

ஒவ்வொரு ஊரிலும் இப்படி வேட்டைக்காரர்கள் – ஒன்று போல! இருப்பார்கள் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டான். 

இந்த வேட்டைக்காரர்களோடு ஒரு சங்கடம். இவர்கள் யாரோடும் ஒட்டமாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் தனிமை; சளசளப்பில்லாத அமைதி. 

நைசாய் அவரோடு பேச்சுக்கொடுத்துச் சினேகம் கொள்ள நினைத்தான். 

ஆனால் அவரோ மரங்களின் உச்சியைத்தான் பார்த்துக்கொண்டி ருந்தார். இவனும் மேலே பார்த்தான்; அவர் என்னதான் பார்க்கிறார் என்று தெரிந்துகொள்ள. ஒன்றும் தெரியவில்லை! என்றாலும் அவர் கூடவே இவனும் மௌனமாகப் போய்க்கொண்டே இருந்தான். திடீரென்று அவர் தோளிலிருந்து வில்லை எடுத்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ, பழையபடி அந்த வில் தோளுக்கே போய் விட்டது. நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே மத்தியில் ஒன்றிரண்டு தடவை இவனையும் பார்த்துக்கொள்வார். ஆனால் பேசவில்லை. 

மேலும் இரண்டு மரங்கள் கடந்ததும், இவனைப் பார்த்து, “யார் வீட்டுக்கு வந்திருக்கே?” என்று விசாரித்தார். இவன் சொன்னான். தலையை அப்படியா என்று அசைத்தாலும் பார்வை மரத்தில்தான் இருந்தது. 

அவரே முதலில் பேச்சுக் கொடுத்ததால், இவனுக்குள்ள ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டான். “மயில் முட்டையைச் சாப்பிடலாமா?” 

மரத்திலிருந்து முகத்தைத் திருப்பி இவனைப் பார்த்தார். திரும்பவும் மேலே பார்த்து “முட்டை என்ன, மயிலையே சாப்பிடலாம்” என்றார்! 

என்ன சொல்லுகிறார் ?! 

இவனுடைய திகைப்பு அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இவனைப் பார்த்து ஆமாம் என்பதுபோலக் குறுஞ்சிரிப்புச் சிரித்தார். 

சில விநாடி இடைவெளிவிட்டு “வான்கோழிப் பிரியாணி சாப்பிடறோமில்லையா அதுமாதிரிதான் இதுவும்” என்றார். 

‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ பாட்டு ஞாபகத்துக்கு வந்தது! 

“நீங்க மயில் கறி சாப்பிட்டிருக்கிறீர்களா?” 

“ஓ!” 

“மயில் நம்ம தேசியப் பறவை இல்லையா?” அதைச் சாப்பிடலாமா என்ற அர்த்தத்தில் கேட்டான். அது அவருக்கு விளங்கவில்லை; தேசியப் பறவை என்றால் கிடைக்காத அபூர்வப் பறவைபோலிருக்கு ‘பழவௌவாலை’ப் போல – என்று புரிந்துகொண்டு. 

“அதுதான் இங்கே பெருவாரியாகக் கிடைக்கே என்றார்.” 

பேச்சில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. 

கொஞ்சம் கழித்து, “அது முருகனோட வாகனமில்லையா” என்றான்; அதைத் தின்பது பாவம் அல்லது தெய்வ தூஷணம் என்ற அர்த்தத்தில், 

ஆமா; முருகனோட வாகனந்தான். இல்லைன்னு யாரு சொன்னா? சேவலும்கூட முருகரோட கொடிதான்!” என்று சொல்லி விட்டு சிரித்தார். 

‘சீ’ என்று இருந்தது இவனுக்கு 

அங்கே நிற்கப் பிடிக்கவில்லை, மெல்ல மலையைப் பார்த்து நடந்தான். 


மலையைச் சுற்றிலும் ஒரு பகுதி கரிசல்க்காடு; ஒரு பகுதி இறவைத் தோட்டங்கள்; ஒரு பகுதி பண்படுத்த முடியாத மலையின் மிச்ச சொச்சங்கள்; ஒரு பகுதி கண்மாயும் கரை மரங்களும் கிராமமும். 

இறவைத் தோட்டங்கள் உள்ள பகுதியின் வழியாக இன்று மலைமீது ஏறவேண்டும் என்று போனான். 

தோட்டங்களில் மிளகாய்ச் செடிகள் காய்த்துக் குலுங்கின. 

தோட்டங்களின் சொந்தக்காரர்கள் கைகளில் கவணும் கற்களும் வைத்துக்கொண்டு மயில்களைத் துரத்தியடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் போச்சு; அவை பச்சை யோடு பச்சையாய்த் திருட்டுத்தனமாய் நுழைந்து மிளகாய்ப்பழங் களைத் தின்றுவிட்டுப் போய்விடும் என்று சொன்னார்கள். 

இந்த மயில்களால் அவர்களுக்குத் தோட்டங்களிலும், காடு களிலும் தாங்கிக்கொள்ள முடியாத, அழிவு ஏற்பட்டுக்கொண்டு வந்தது. அவைகளை ரொம்பவும் கீழ்த்தரமாகத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். எழுதமுடியாத தாழ்ந்த வசவுகளால் வைது கொண்டே ஒரு பெண் அவைகளை விரட்டியடிப்பதைப் பார்த்தான். 

ஒரு தோட்டத்தில் பால் கோத்திருந்த ஒட்டுக் கம்புக் கதிர்களை மயில்கள் மேய்ந்துகொண்டிருப்பதை இவன் பார்த்தான். மனசுக்குச் சங்கடமாக இருந்தது. சம்சாரிகள் மொழிகளில் அதைச் சொல்வ தென்றால் ரத்தத்தைத் தண்ணீராகப் பாய்ச்சி உண்டாக்கினது; அது அவர்களுடைய ஒரு வருஷத்திய உணவு. என்னதான் இவன் அழகின் உபாசகனாக இருந்தாலும் இவனும் ஒரு சம்சாரி வீட்டுப் பிள்ளை. அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. கற்களைப் பொறுக்கி எடுத்து அவைகளின்மேலே படாமல் வீசிக் கலைத்து விரட்டினான். ஒரு பெரியவர் நல்ல வயசாளி, அவர் ஓடிவருவதைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. மயில்களின் பரம்பரைக்கும் அவைகளைப் பெற்ற தாய்களுக்கும் உடன்பிறந்த சகோதரிகளுக்கும் சேர்த்துக் கிடைத்த வசவுகள் அவைகளின் ஏழு ஜென்மங்களுக்கும் காணும்! 

இவன் கற்களால் முதலில் எறிந்ததை அவைகள் துளிக்கூட சட்டை செய்யவில்லை. அந்த வயசாளியின் வரத்தைக் கண்டதும்தான் கூட்டமாகப் பறந்துபோய் மலை உச்சியில் உள்ள பாறைகளின்மேல் உட்காடர்ந்து கொண்டன. அவைகள் பறந்து போனபிறகும் அவருடைய சீற்றம் அடங்கவில்லை. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அந்த மலையைப் பார்த்து ஒரு வசவையும் சேர்த்துக்கொண்டு சொன்னார், “இந்த மலைகதான் இதுகளுக்கு தாப்பு. வெடிமருந்து வச்சி இதைச் சுக்குச்சுக்கா ரவை ரவையா நொறுக்கி எறியணும். செத்த உக்காந்து கஞ்சி குடிக்க விடமாட்டேங்குதே…ம்-” 

அப்பொழுதுதான் அவர் கையைக் கவனித்தான். கம்மங்கஞ்சியின் கரைசல் ஒட்டியிருப்பது தெரிந்தது. ஓடி வந்த அலுப்புத் தாங்க மாட்டாமல் உட்கார்ந்துவிட்டார் பாவம். 


இப்போது அந்தப் பெரியவர் இருக்காரோ என்னவோ. அநேக மாய்ப் போய்ச் சேர்ந்திருப்பார். அப்பவே அவருக்கு வயசு ரொம்ப. 

அந்த மும்மலைக் கிராமத்தையும் அதன் மக்களையும், அந்த மலையையும் மயில்களையும் மீண்டும் பார்க்கவேண்டும் என்று தாகமாய் இருக்கிறது. 

அவன் புறப்பட்டான். 

– கல்கி, விடுமுறை மலர், 1982.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *