வாழ்க்கைப் பயணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2025
பார்வையிட்டோர்: 282 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு மூன்று நாள்கள் தொடர்ந்தாற் போல் விடுமுறையை எடுத்துக் கொண்டு அம்மாவைப் போய்ப் பார்த்து வரப் புறப்பட்டான் அருண்குமார்.

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வசிக்கும் அவனுக்கு அங்மோ கியோவில் உள்ள அம்மா வீட்டுக்குப் போவது என்றால் முன்பெல்லாம் அலுப்புதான் மிஞ்சும்.

ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கு அப்படி யொரு அலுப்புத் தட்டுவதே கிடையாது.

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் பொதுமக்கள் நலன் கருதிப் புதிதாய் அமைக்கப்பட்ட எம்.ஆர்.டி. வழித்தடம் திறக்கப்பட்டதும் நேரமும் மிச்சம், செலவும் குறைவு, நெரிசலும் கிடையாது.

அம்மா வீட்டுக்கு மட்டுமல்ல… சிங்கப்பூரின் பிறபகுதி களை அடைய இந்த வழித்தடம் உதவியாய் இருந்தது. உற்சாகமாய் ஓடி வந்தவன் சட்டென்று எதிரே தெரிந்த விளம்பரப் பலகையில் கண்ணைப் பதித்தான்.

“ஸ்டாப் பிரஸ் என்ற அழகிய எழுத்துகள் பளிச்சிட… சிங்கை ‘தமிழ் முரசு’ மற்றும் பல வண்ண நாளிதழ்கள் வார ஏடுகள் பல மொழிகளில் வரிசைப்படுத்தி அடுக்கி வைத்திருந்தன.

கடையின் அமைப்பும் பெயரும் மனத்தைக் கவரத் தனக்குத் தேவையான சிலவற்றுடன் தமிழ் முரசு ஞாயிறு பதிப்பும் வாங்கிக் கொண்டு வந்து வண்டியில் அமர்ந்தான்.

“இப்பவெல்லாம் நாம் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லாம போச்சு… கடைசி நேரத்தில கைக்குப் படிக்க ஒன்றுமில்லையேன்னு தவிக்காம நம்ம விருப்பம் போல வாங்கிக்க வசதி பண்ணியிருக்காங்க பத்திரிகைகள் மட்டுமில்லே… பயணிகளுக்குத் தேவையான மற்ற வசதிகளும்தாம்…’

வெள்ளி மணியோசையாய்க் காதில் பதியும் அந்தக் குரலைக் கேட்டுக் கண்களைத் திருப்பியவன் எதிரே உட்கார்ந்திருக்கும் அவளைப் பார்த்து அதிர்ந்து போனான்.

அதிர்ச்சி என்றால் அது திகிலான அதிர்ச்சி அல்ல. மாறாக அது இனம் புரியாத ஓர்இன்ப அதிர்ச்சிதான்.

“சுகன்யா….நீங்களா… நீங்க எப்படி இந்த வண்டியில் அதுவும் இந்த நேரத்திலே?” வியப்புடன் வந்தது அவனது குரல். அவள் அமைதியாய்ச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

“பாதை மாறிப் போச்சு… பயணமும் மாறிப் போச்சு… புதுவண்டி… புதுப்பாதை… புது வேலை” கணீரென்ற தஞ்சைத் தமிழ் அங்கே உதிர்கிறது.

“அடேயப்பா, எத்தனை நாளாச்சு இந்தக் குரலையும், மொழியையும் கேட்டு…”

ஆனாலும் அழுத்தமாய்ச் சொன்னாள், “நின்னுக் கிட்டுருந்தா எப்படி.. உட்கார வேண்டியதுதானே..’

இடத்தை விரலால் சுட்டிக் காட்டினாள். உட்கார்ந்து கொண்டே நன்றி சொன்னான். வண்டி வேகமாக ஓடியது. அவன் நினைவும் திரும்பி ஓடியது.

சுமார் ஓராண்டுக்கு முன்பு வரை அவன் மலேசியாவில் தன் அக்கா வீட்டில்தான் தங்கி இருந்து படித்தான். அப்போது அப்பா இருந்தார். அம்மாவையும் தங்கைகள் இருவரையும் அவர் கவனித்துக் கொண்டார்.

ஜோகூரில் இருக்கும் அக்காவும் மாமாவும் தங்கள் பிள்ளைபோல் இவனைப் பிடித்து வைத்துக் கொண்டு படிப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுத்து மனிதனாக்கி விட்டார்கள். நல்ல சம்பளம், நல்ல உத்தியோகம்.

அந்த நேரத்தில்தான் சுகன்யாவை அவன் சந்தித்தான். அவன் பணிபுரிந்த அலுவலகத்தில்தான் பணிபுரிந்தாள். அவனைப் போலவே அவளும் ஒரே அவளும் பகுதியில் வேலை செய்தாள்.

ஆரம்பத்தில் அவளைப் பார்க்கவோ பேசவோ அவன் கூச்சப்படுவான். நாளடைவில் அது எப்படியோ காணாமல் போனது. சக ஊழியர்களுடன் வெளியே வரும்போதும் அவள் அவனுடன் பேசுவாள். ஒரு சில நாள்களுக்குப் பின் அவள் தன்னுடன் ஓர் இளைஞனை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினாள்.

அவன் ஆழமாக இருந்தான். அவள் அழகுக்குப் பொருத்தமானவனாக இருந்தான். இருவரின் ஜோடிப் பொருத்தம் அவனுக்கே பொறாமையாய் இருந்தது. இருந்தாலும் அவன் பொறாமைப்படவில்லை. அவளைக் கவர்ந்த அவனை அவன் வாழ்த்தினான்.

அவர்கள் மூவரும் நண்பர்களாகிப் போனார்கள். அவர்களோடு அவனும் பல இடங்களுக்குப் போய் வந்தான். அப்போதெல்லாம் அவள் பேச்சழகில் வாய்விட்டு அவன் பாராட்டியதுண்டு.

இப்படியே இவர்களின் நட்பு வளர்ந்து கொண்டிருந்த போதுதான் அவனது அப்பா திடீரென்று மாரடைப்பால் காலமாகிப் போனார். குடும்பத்தின் ஒரே ஆண்பிள்ளை என்ற பொறுப்போடு, அக்கா மாமாவை அம்மாவிடம் ஓடி வந்தான். அப்பாவின் இடத்தில் இருந்து விட்டு கடமைகளைத் தொடர்ந்தான்.

தானுண்டு, தன் குடும்பம் உண்டு, தன் தங்கைகள் உண்டு என்ற போக்கில் போய்க் கொண்டிருந்தவனுக்கு அம்மா திருமணம் செய்து வைக்கப் பலமுறை முயன்றும் தோற்று தான் போனார்.

அவனுக்குத் திருமணத்தில் ஆர்வமோ பெண்கள் மேல் விருப்பமோ இல்லாதிருந்தது. அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை.

“யாரையாவது காதலிக்கிறாயா அருண்! சொன்னா நான் திருமணத்தை முடிச்சு வைப்பேன்” என்று அம்மாவும்,

“ஏண்ணா, இப்படி அடம் பிடிக்கிறே… சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஓர் அண்ணியைக் கொண்டு வாயேன்..”

என்று தங்கைகளும் கேட்கும்போது அவனுக்கே அவன் மேல் சந்தேகம் வரும். தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு அவனே பதிலையும் சொல்லி முடித்துக் கொள்வான்.

சுகன்யாவை முதன் முதலில் பார்த்தபோது அவனுக்கு அப்படி ஓர் ஆசை வந்ததா என்று அவனுக்கே தெரிய வில்லை. ஆனால் அவள் இன்னொருவன் காதலியாகிப் போனதும் அவனுக்குள்ளேயே ஒரு வறுமை கட்டட மாயிருந்தது மட்டும் அவனுக்குத் தெரிந்தது.

அதனால்தானோ என்னவோ அவன் அதற்குப் பிறகு வேறு பெண்ணைப் பற்றி நினைக்கவும் மறந்து போனான். அது மட்டுமல்ல. இந்தச் சுகன்யாவும் அவன் மனத்தில் இருந்து பறந்து போயிருந்தாள்.

ஆனால், அன்றைக்குதான் நெஞ்சுக் கூட்டில் வைத்துக் காவல் காக்க நினைத்தவனின் கண்களை விட்டுப் பறந்து போனவள் இப்போது மறுபடியும் பறந்துவந்து பக்கத்தில் அமர்ந்து சிரிக்கிறாளே இது என்ன மாயம்!

“எப்படி இருக்கீங்க அருண்… ரெண்டு வருஷம் இருக்குமா நாம சந்திச்சு..”

சாதாரணமாய்த்தான் அவள் கேட்டாள். சட்டென்று கற்பனைச் சிறகு ஓடிவந்து தரையில் விழுந்த நிலை அவனுக்கு…

“ஆமா..ஆமா நான் நல்லா இருக்கேன்… நீங்க நீங்க எப்படி..?”

தடுமாறிப் போனான். அவள் பூவாய்ச் சிரித்தாள்.

“இங்கே வந்து எவ்வளவு நாளாச்சு சுகன்யா”

நிதானமாகிப் போயிருந்தான். கையில் இருந்த நாளிதழை மடித்து வைத்தவளாய்ப் பேசினாள்.

“ஒரு வாரம் ஆகுது. வேலைக்கும் இதுலதான் போய்க்கிட்டிருக்கேன்..!”

அவள் முகத்தைப் பார்த்தவன் கண்கள் சட்டென்று கழுத்தில் பதிந்தன. மனம் எதையோ தேடியது. எப்படிக் கேட்பது என்று தயங்கியவன்.

“ஆமா நீங்க இங்கே வந்துட்டீங்களே… பாஸ்கர் எங்கே… அவர் எப்படி இருக்கிறாரு..”

தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த சரியான நேரம் அது என்று மனத்தில் நினைத்துக் கொண்டான்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டவள் பேசினாள்.

“பாஸ்கரன்தானே… அவர் நல்லாயிருக்கிறார் அருண் இப்ப சீனாய் ஏர்போர்ட்ல வேலை…! நல்ல வசதியோட சந்தோஷமா இருக்கிறாரு. ஒரு குழந்தையும் இருக்குது!”

“அவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்க எதுக்கு இங்கே.”

“என்னோட வயிற்றுப்பாட்டை நான் பார்க்க வேணாமா என் அம்மா, தங்கச்சி, தம்பி எல்லாம் நான்தான் பார்க்கணும்…” அவள் பதிலில் அவன் அதிர்ச்சியடைந்தான்.

“என்ன சொல்றீங்க நீங்க. கல்யாணமாயிட்டா இரண்டு பேரோட கஷ்ட நஷ்டத்தையும் இரண்டு பேருந்தானே பகிர்ந்துக்கணும். இப்படித் தனித்தனியா ஏன் கஷ்டப் படணும். குழந்தையோட எதிர்காலம் என்ன ஆகும்..?”

“இதுல எதுவும் நஷ்டமாகலியே அருண்! அவர் பிள்ளையை அவர் மனைவி பாத்துக்குவா. அவர் குடும்பத்தை அவர் பார்த்துக்குவாரு… அவருக்கு அதுல எந்தவிதக் கஷ்டமும் கவலையும் கிடையாதே!”

எவ்விதக் கவனமும் இல்லாமல் அவள் சொல்லிக் கொண்டு பார்வையை வெளியே செலுத்தினாள். இப்போது ஒருசோகக் காற்று எங்கிருந்தோ வந்து அவள் முகத்தில் வீசுகிறது.

“சுகன்யா… நீங்க அவரைக் கல்யாணம் பண்ணிக்கிலியா… அவர் உங்களை ஏமாத்திட்டு வேறே பெண்ணைக் கட்டிக்கிட்டாரா?”

உரிமையோடு கேட்டான். கண்கள் கூடக் கொஞ்சம் கலங்கியிருந்தன. அவள் அவனைப் பார்த்தாள்.

“நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கல அருண்! என்னைவிடப் பெரிய உத்தியோகம் பார்த்த வசதி படைத்த பொண்ணு அவருக்குக் கெடைச்சிருக்குன்னு அவரோட அப்பா அம்மா சொல்றாங்கன்னு சொன்னாரு. காரு, வீடு, பேங்க் பேலன்ஸ் எல்லாம் அந்தப் பொண்ணு மூலமா கிடைக்குதுன்னு சொன்னாரு. அவருக்கு என்னைவிட அந்த வசதியான வாழ்க்கை மேலதான் ஆசையிருக்குன்னு அவர் பேச்சிலேர்ந்து புரிஞ்சு போச்சு எனக்கு.

அதனாலே நானே அவருக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பிட்டேன். திருமணப் பத்திரிகைகூட அனுப்பி யிருந்தாரு அருண். போய் வாழ்த்திப் பரிசு கொடுத்துட்டுச் சாப்பிட்டும் வந்தேன்.”

சலனமின்றிப் பேசினாள். அவன் மலைத்துப் போனான்.

அவனுக்கு அந்த நாள்கள் நன்றாகவே நினைவில் நின்றன. அப்போதெல்லாம் சுகன்யாவைப் பார்க்கும் போதும் அவள்தான் கொஞ்சம் அதிகமாகவே அவனுக்குச் செலவு செய்வாள்.

அருண்கூட நினைப்பான். “என்ன நாகரிகம் இது! ஒரு ஆணுக்குப் பெண் செலவு செய்வதா?” என்று! ஆனாலும் அடுத்த கணமே “அது அவர்களின் சொந்த விஷயம்” என்று அவன் மனம் அவனை எச்சரிக்கும். கண்டும் காணாதவனாய்ப் போய்விடுவான். காலப்போக்கில் இப்படி ஒரு நிலை வருமென்று அவன் அப்போது நினைத்துப் பார்த்ததில்லை.

“சுகன்யா! உங்களுக்கு இதிலே வருத்தமோ ஏமாற்றமோ கிடையாதா?”

உண்மையான கழிவிரக்கத்துடன் கேட்டான். அவன் புன்னகைத்தாள்.

“இல்லை அருண். காதல் தியாகம்னு சொல்லிக்கிட்டு ரெண்டு பேருமா காலம் பூரா வறுமையிலே வாடுற வாழ்க் கையை விட அவராச்சும் நிம்மதியா சந்தோஷமா வாழட்டுமே… எனக்குன்னு இறைவன் எதை முடிவு பண்ணி இருக்கின்றாரோ அது நிச்சயம் நடந்தே தீரும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு! அந்த நம்பிக்கையிலதான் இந்தப் பயணத்தை விடாம தொடர்ந்தேன்.”

அருணுக்கு மனத்தில் ஏதோ ஓர் ஆர்வம் மொட்டுவிட்டு மலர்கிறது.

“நான் ஒண்ணு சொன்னா சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே.” கவனம் பிசகாமல் நிதானமாய்க் கேட்டான்.

“நான் தப்பா எடுத்துக்கிறதும் எடுத்துக்காததும் நீங்க கேட்கப் போற விஷயத்தை வெச்சுதானே இருக்கும். முதல்ல கேளுங்க.”

சொன்னவள் கண்களை ஆழமாய்ப் பார்த்தாள். மனத்தில் புதுத் தெம்பு பிறந்தது.

“உங்களை நான் திருமணம் பண்ணிக்க நெனைச்சா நீங்க அதுக்கு சம்மதிப்பீங்களா! இந்தப் பயணத்திலே நீங்க மட்டும் தனியா போறதைவிட நாம ரெண்டு பேருக்கும் பயணம் நல்லபடியா முடியும்னு நான் நெனைக்கிறேன். உங்க பதில்.”

அவள் வியப்புடன் பார்த்தாள். அவள் விழிகள் அகலமாய் விரிந்தன.

“ஆசைப்படறது நாமா இருக்கலாம். ஆனா அதை நடத்தி வைக்கிறது தெய்வ சித்தமாச்சே..”

அருண் சட்டென்று எழுந்தான். அவளின் பக்கத்தில் இடம் காலியாக இருந்தது.

“தெய்வம் காட்டுமே தவிர எடுத்து ஊட்டி விடாது. அதை நாம தான் புரிஞ்சுக்கணும்” சொல்லிக் கொண்டே அவளருகில் போய் அமர்ந்து கொண்டான்.

கூச்சத்துடன் நகர்ந்தவளின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அது அவளது மனத்தில் எழுந்த படபடப்பை ஆறுதல் படுத்தியது. அவள் மனத்தில் நீண்ட நாளாய் உறங்கிக் கிடந்த ஒரு உண்மையை விழிக்க வைத்தது.

– தமிழ் முரசு 14-9-96

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *