வாடகைவீடு…வரமா? சாபமா?
வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா? இது, ஒன்றும் பட்டி மன்றமல்ல..! பட்ட அனுபவத்தின் வெளிப்பாடுதான்!. வாடகை வீடு என்றால்…, அதில் ஹவுஸ் ஓனர் மட்டுமல்ல..! வீட்டு வசதி எல்லாமும்தான் அடங்கும்.

இருவருக்கும் ஒத்துப்போவது என்பது, ஆறுமாசம் ஓனர் குடியிருப்பவனை அவதானிப்பதும், குடிபோனவன் ஆறுமாசம் ஓனரை அவதானைப்பதும் அடங்கும். இருவரில் ஒருவர் முன்னேறினாலும் அடுத்தவனுக்கு ஆத்திரம் வருகிறது! அதான் ஏனோ தெரியவில்லை!
அந்த வீட்டு ராசியோ என்னவோ அந்த வீட்டுக் குடிபோனவுடன் கவர்மெண்ட் வேலை கிடைத்தது அவனுக்கு!. வேலை மாற்றம் குடிபோனவனுக்குக் குதூகலம் கொடுத்ததோ என்னவோ ஓனருக்கு வயிற்றெரிச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.
முதல் ரெண்டு வாரம் பேச்சைக் குறைத்தார்., அப்புறம் ஒருநாள் வந்து அருகில் உட்கார்ந்தவர் தன் அரசியல் மேலாண்மையை மெல்ல இறக்கினார்., அன்பு ததும்பும் வார்த்தைகளால்…!
‘சார்.. வாடகையை ஏத்தலாம்னு இருக்கேன்! வெலவாசி ஏறீட்டே இருக்கே?!. நீங்க வீட்டை எல்லாம் உடனே காலி பண்ண வேண்டாம். அந்தப் பாவமெல்லாம் வேண்டாம்!. நீங்க ஒண்ணு பண்ணுங்க மாசாமாசம் கொடுக்கிற வாடகைல முன்னூறு முன்னூறு ஏத்தி ஏத்திக் கொடுத்திட்டே வாங்க இரண்டாயிரத்து நூறு ஏறினதும் அதாவது ஏழு மாசத்துக்கு அப்புறம் இரண்டாயிரத்து நூறுசேர்த்துக் கொடுங்கன்னார்.’
இப்படி உங்க யாருக்குமே ஏன் உலகத்துல ஒருத்தருக்கும் பேசத் தெரியாது! சரி, உடனே காலி பண்ணுன்னு சொல்லாம சொல்றான்னு தெரிஞ்சது!. இருக்கறவனுக்கு ஒரு வீடு! அதுலதான் இருக்கணும்!. இல்லாதவனுக்கு எத்தனையோ வீடுன்னு, வீடு மாற முடிவெடுத்தான்.
அப்போதெல்லாம் அவனுக்குத் தோள்கொடுத்து உதவினவன் மாட்டு வண்டி ஓட்டும் சென்னிமலைதான்.
‘சென்னிமலை மெயின் ரோட்டில் வண்டி நிறுத்தி இருப்பான். உடனடியா அவன் கிட்டயே சொல்லி, ஒரு வீடு பார்த்துத் தரச் சொல்லி வீடு மாற ஜாமான்களை அவனுடைய ஒற்றைக் கருப்புக் காளை மாட்டு வண்டியிலேற்ற புது வீடு நோக்கிப் பயணப்பட்டான். புது வீடு பழைய வீட்டின் பழைய வாடகையே என்பதால் எந்த யோசனையுமில்லாமல் அங்கே அட்வான்ஸ் கொடுத்து, நல்ல நாள் பார்த்துப் போக,
அந்தப் புது வீட்டின் வாசல் ரோட்டிலிருந்து கொஞ்சம் உயரமா இருந்தது இவன் டூவீலரில் போய் புது வீட்டு வாசலில் நிறுத்தினான்.
சென்னிமலை வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தினான்.
வீடு மாறுகையில் பழைய வீட்டின் அட்வான்ஸை திருப்பிக் கேட்க, நீங்க இப்படி திடீர்னு காலி பண்ணு வீங்கன்னு எனக்குத் தெரியாதில்லையா? அதுனால அடுத்த ஆள் வரும் வரை பொறுத்திருங்க! அவங்க அட்வான்ஸ் தந்தா ஃபோன் பண்றேன். வந்து வாங்கிக்கோங்க! என்றார் பழைய ஹவுஸ் ஓனர்.
வண்டி நிறுத்தி, புது வாடகை வீட்டுக்குள் உப்பு நிறைகுடம் தண்ணீர் விளக்கு மஞ்சள் குங்குமம் என மங்கலப் பொருட்களோடு உள்ளே போக வாசலில் நிறுத்டியிருந்த அவன் டூவீலர், ரோட்டின் மேடு பள்ளத்தால் ‘டமார் என்று சப்தத்தோடு சரிந்து விழுந்தது!. விழுந்த சப்தத்தில் பதறிய கருப்புக் காளைமாடு ஏற்றி வைத்திருந்த ஜாமான்களோடு பதறி ஓடி பாதுகாப்பான இடத்தில் பத்தடி தள்ளி, சென்னிமலை அடக்கலுக்கு அடங்கி நின்றது. அதற்குள் விழுந்து சிதறின வீட்டு சாமான்கள். அதில் சில கண்ணாடி குப்புகள் உடைந்து நொறுங்க..’ என்னடா புதுசா குடிவர வீட்டு ராசி இப்படி இருக்கேன்னு வருத்தப்பட சென்னிமலை சொன்னான்…” சார்… போதும் சார்!, நீங்க கஷ்டப் பட்டது! அடுத்து இங்கிருந்து வீடு, மாத்தினா சொந்த வீட்டுக்குத்தான் நான் வண்டில ஜாமான் ஏற்றிவேன்!’ என்றான் சபதம் செய்தது போல!!.
விழுந்து நொறுங்கின கண்ணாடி குப்பிகளும் மனமும் சென்னிமலையின் ஒற்றை வார்த்தையால் ஒட்டிக் கொண்டன. உறவும் நட்பும் தராத உன்னத நெருக்கத்தை உண்டுபண்ணியது! சென்னிமலை சாதாரண வண்டி ஓட்டிதான்! ஆனால், ஹவுஸ் ஓனரைவிட குணத்தில் சிகரமாய் மன சிம்மாசனத்தில் அமர்ந்தான்.
அவன் வாய் முகூர்த்தம் பலித்தது. ஒருவருடத்தில் சொந்த வீட்டுக்குக் குடிபோனான். மறக்காமல் சென்னிமலை வண்டியிலேயே ஜாமான் களை ஏற்றிக் கொண்டு போனான்…!
‘சென்னிமலை, கொஞ்சம் உள்ளே வா…! வந்து, உன்கையால் விளக்கை ஏற்று..! பணத்துக்காக பாசமாய் இருப்பவன் போல் பாசாங்கு செய்பவனைவிட, என் கஷ்டத்துக்குக் கண்ணீர் வடித்த நீ தான் பவித்திர கங்கை!’ என்றான். மனப்பூர்வமாக.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்றாளே அவ்வைப் பாட்டி…அது சென்னிமலை உருவில் பளிச்சிட்டது!!