வசந்த் + வதந்தி..!





(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-14
அத்தியாயம்-13
“இப்போ அஜிதாபேகம் எந்தவிதமான தப்பான முடிவிற்கும் போறதுக்குள்ள அவளைக் காப்பாத்த ஒரே ஒரு வழிதான் இருக்கு.” வசந்த் சொன்னான்.

“ஆமாம். அதைக் காலதாமதம் செய்யாம, வீண் பேச்சு பேசாம, எவ்வளவு சீக்கிரம் முடிக்கனுமோ முடிக்கனும்” அவனைத் தொடர்ந்து பாலு சொன்னான்.
“சொல்லுங்க?” கேட்டு கணேஷ் அவர்களை பார்த்தான்.
“முதல் காரியம் ராமு, ரோஜா…கையில கால்ல விழுந்து பேகத்துக்கு முன்னால திருமணம் முடிக்கனும். அதை வீடியோ எடுத்து உண்மை தெரியாம ராமு திருமணத்துக்காக இந்த வதந்தியைப் பரப்பி விட்டது நாங்கன்னு நாம உண்மையைச் சொல்லி அதையும் வீடியோ எடுத்து பேகம் கணவருக்கு வாட்சப்ல அனுப்பிட்டோம்ன்னா வேலை முடிஞ்சுது.” திட்டத்தைச் சொன்னான்.
“இது முடியற காரியமா தெரியல”. வெங்கடேஷ் முகம் தொங்கி சொன்னான்.
“எல்லாம் கண்டிப்பாய் முடியும். ஒரு பொண்ணோட வாழ்க்கை, உசுரு என்கிறதுனால ராமு, ரோஜா கண்டிப்பா சம்மதிப்பாங்க.”
எல்லோருக்கும் ஓரளவிற்கு நம்பிக்கை வந்தது.
“சரி புறப்படலாம்!” சேகர் எழுந்தான்.
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் எழுந்தார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பிறகுதான் முகமது யூசுப்பிற்கு…’மனைவி நம் கையில்!’ என்கிற நம்பிக்கையில் மூச்சே வந்தது!.
கடிதம் எழுதி போட்ட தினத்திலிருந்து அவன் பட்ட கஷ்டங்கள்…?
அப்பப்பா. !
அன்றைக்கு காசோலைக்குறிச்சியிலிருந்து அவன் உயிர் நண்பன் இவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விபரம் இப்படிப்பா! என்று சொன்னதுமே மனைவியைப் பற்றி நன்கு தெரிந்த யூசுப் சிரித்தான்.
“சிரிக்காதே யூசுப். உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியாது. இதை நான் ஏன் உன்னிடம் சொல்றேன்னா பின்னால நீ கேள்விப்பட்டு என் மேல வருத்தப்படக்கூடாதே என்கிறதுக்காகத்தான்.” சொன்னான்.
நண்பன் செயல் நியாமாமாக இருக்க, “சரி” என்றான்.
அடுத்துதான் அவனுக்கு அந்த விபரீத புத்தி வேலை செய்தது.
‘இதை வைத்து மனைவியுடன் விளையாடினாலென்ன?’ யோசனை வந்தது.
உடனே தாளும் பேனாவும் எடுத்து செயலில் இறங்கிவிட்டான்.
கடிதத்தை தபாலில் சேர்த்த பிறகுதான்…
‘மனைவி கற்பு உயிரோடு விளையாடி இருக்கிறோம்!’ விபரீதம் உரைத்தது.
மனமும் உடலும் நடுங்க.. உடன் செயலில் இறங்கினான்.
தபாலைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அடுத்து…மனைவியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.
அது தொழில் நுட்ப கோளாறு காரணமாக பழுது! சதி செய்தது.!
செய்தி சொன்ன நண்பனைத் தொடர்பு கொண்டு சேதி சொல்ல சொன்னான்.
அவன் விசயத்தை இவனிடம் தெரிவித்து விட்டதால் அவள் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு…
‘நீ உடனே வந்து சரி செய்!” சொன்னான்.
‘அதுதான் சரி!’ என்று கம்பெனிக்கு விடுப்பெழுதி கொடுத்து..மற்ற வேலைகளை உடன் முடித்து கிளம்ப இத்தனை நாள்!
யூசுப் வாடகை கார் பிடித்து பறந்தான்.
அத்தியாயம்-14
வசந்த், பாலு, கணேஷ், வெங்கடேஷ், சேகர்… ஐந்து பேர்களும் ஒரு வேனைப் பிடித்துக் கொண்டு…அதிகாலை சரியாய் 5.05 க்கெல்லாம் ராமு வீட்டு வாசலில் இறங்கினார்கள்.
ராமு வீட்டு கதவைப் பட படவென்று வசந்த் தட்டினான்.
தணிகாசலம், செண்பகம் தூக்கம் கலைந்து கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.
இவர்களை பார்த்து மிரண்டார்கள்.
பாலு அவர்களிடம் நடந்தது, நடக்க வேண்டியது எல்லாம் சுருக்கமாக சொல்ல…
அவர்கள், இதோ வர்றோம்! சொல்லி உள்ளே சென்று உடன் வந்து வேனில் ஏற…
அப்போது அதே வீட்டு வாசலில் இன்னொரு வேன் வந்து நின்றது.
எல்லோரும் திரும்பி பார்த்தார்கள்.
மாலையும் கழுத்துமாக ராமு, ரோஜா அதிலிருந்து இறங்கினார்கள்!
அவர்களைத் தொடர்ந்து ரோஜா அப்பா கோதண்டம், ராமு அக்கா தங்கைகள் குடும்பம் இறங்கியது.
இவர்களால் நம்பவே முடியவில்லை! திகைத்து நிற்க…
ராமு நண்பர்களை பார்த்து சிரித்தான்.
வசந்த்தான் சுதாரித்து ஓடி வந்து..
“ரோஜா ! எப்படி..?” வியப்பு, திகைப்பு மாறாமல் கேட்டான்.
ராமு…
“நான் சொல்றேன்டா! மனசு கஷ்டம், வலி தாங்காமாத்தான் நான் என் கடைசி தங்கச்சி வீட்டுக்குப் போனேன். நான் போன நேரம் அக்காவும் இன்னொரு தங்கச்சியும் அதே வீட்டுக்கு விருந்தாளியாய் வந்தாங்க. நான் விவரம் சொல்ல ஏன் இப்படின்னு எல்லோரும் சேர்ந்து திட்டினாங்க.
திருமணம் ஆகாமலிருந்தால் இப்படித்தான் யாராவது வதந்தி, புரளி கிளப்பி விட்டு வம்புக்கு வருவாங்க. இந்த சங்கதியே வேணாம். பேசாம கலியாணம் கட்டிக்கிட்டு ஊர் வாய், உலகத்து வாயை அடக்குன்னு அக்கா திட்டுச்சு.
அதோட மட்டும் விடாமல் நாங்களெல்லாம் திருமணம் முடித்து குடும்பம் கோத்திரமா இருக்கும்போது நீ இப்படி முடிக்காம இருந்து, அம்மா அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்கிறது தப்பு. இதால இப்போ வீண் கெட்ட பேர் வேற. இதெல்லாம் முடிக்கிறதுன்னா நீ திருமணம் முடிக்கிறதுதான் சரி.
மறுத்தால் உன்னோட உறவும் வேணாம், ஒட்டுதலும் வேணாம்! இதுதான் முடிவு சொன்னாங்க.
என்னக்கு இது பெரிய அதிர்ச்சியா இருந்தது. அக்கா சொன்னதையெல்லாம் மனசுல ஏத்திப் பார்த்தேன் அவங்க சொல்றது எல்லாம் சரியா இருந்தது. எதுக்கு வீண் வெட்டியாய் பிரம்மச்சாரியாய் வாழ்ந்து சாகனும் ? ஒண்டி ஓரியா இருந்து வயசான காலத்துல வேற முதியோர் காப்பகம் அணுகனும். எதுக்கு இப்படியெல்லாம் கஷ்டம்ன்னு நெனைச்சி கொஞ்ச நேரத்துல மனசு மாறி ரோஜா வீட்டுக்குப் போனோம்.
இவள் சத்தியம் அது இதுன்னு ரொம்ப அடம் பண்ணினாள். அவ்வளவுதான் கோபம் வர வாடி நாயே! ன்னு ஓங்கி ஒரு அறை விட்டு கைப் புடிச்சி தரதரன்னு இழுத்து வந்து ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டி முடிச்சி வர்றோம்” முடித்தான்.
“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா, அத்தை!” ரோஜா தன் கணவன் ராமு கையைப் பிடித்து அவனும் தானுமாய் தணிகாசலாம், செண்பகம் காலில் விழுந்தாள்.
“நல்லா இருங்க.” தம்பதிகள் முகம் மலர்ந்து அவர்களை வாயார வாழ்த்தினார்கள்.
“சீக்கிரம் வண்டியில ஏறுங்க. போற வழியில எல்லாம் விளக்கமா சொல்றேன் பேசிக்கலாம்” வசந்த் சொல்லி அவர்களை அவசரமாய் வேனில் ஏற்றினான்.
சிறிது நேரத்தில் ஆட்களை நிரப்பிக்கொண்டு வேன்கள் இரண்டும் சீறிப் பாய்ந்தது.
வசந்த், சேகர், கணேஷ், வெங்கடேஷ், பாலு…எல்லோரும் ஆதியோடு அந்தமாய் ராமு, ராஜாவிற்கு சொல்ல… அவர்கள் திறந்த வாய் மூடவில்லை.
இரண்டு மணி நேரத்தில்..வேன்கள் காசோலைக்குறிச்சியில் நுழைந்து பிள்ளையார் கோயில் தெருவில் திரும்பியது.
பேகம் வீட்டு முன் கொஞ்சமாய் மக்கள் கூட்டம்.
நண்பர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
வீட்டு வாசலில் இறங்கினார்கள்.
உள்ளே அஜிதா பேகம் சவமாய்க் கிடக்க….
“ஐயோ! புத்தி பிசகி விளையாட்டாய் எழுதி போட்டது வினையாய்ப் போச்சே. சமாதானப் படுத்தலாம்ன்னு விமானம் ஏறி ஊருக்கு வர்றதுக்குள்ள விசத்தைக் குடிச்சுட்டு உசுரைப் போக்கிக்கிட்டியே என் தங்கமே..!” யூசுப் மனைவி உடலைப் பார்த்து கதறி அழுது புரண்டான்.
வந்தவர்கள் உறைந்தார்கள்.
‘தயவு செய்து வதந்திகளைக் கிளப்பாதீர்கள். நம்பாதீர்கள்!’
மனதில் போர்டு தொங்கும் உணர்வு வர வசந்த், பாலு, கணேஷ், வெங்கடேஷ், சேகர் ஐவரும் மௌனமாக நின்று அஜிதாபேகம் உடலை வெறித்தார்கள்.
முற்றும்.
– 04-02-2002 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.