யாரை எங்கே வைப்பது என்று..!
‘எல்லாருக்கும் வாழ்க்கை உண்டு., வரலாறு உண்டா என்று கேட்டுவிட்டு எவனொருவன் தான் வாழுகிற காலத்தில் வாழுகிற சமுதாயத்தை ஓரங்குலமாவது உயர்த்தப்பாடுபடுவானோ அவனுக்கு வரலறு உண்டு என்று சொல்வார் கவிஞர் வைரமுத்து தன் ‘கவிராஜன் கதையில்’.. அந்த உள்ளுணர்வின் உந்தலில் எழுந்தது இந்தக் கதை. வரலாறு வேண்டியல்ல… அவர்களும் (?!) வாழ வேண்டுமே!’என்ற சிந்தனை வேண்டி!
மாலை வாக்கிங்க் போவது என்பது எல்லோருக்கும் வழக்கம். வாசுதேவனுக்கு,ம் அப்படி வழக்கம் உண்டு. வாக்கிங்க் போகிற எல்லாருக்கும் எதாவது ஒரு காட்சி கண்ணில் படும் கருத்தைக் கவரும். வாசுதேவனுக்கோ அவன் கண்ணில் படுகிற வண்ணம் இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று மணி டிரான்ஸ்பர் செய்யும் ‘ஈ செண்டர்’ ஒன்று. அதன் அருகில் இருந்த டாஸ்மாக் கடை ஒன்று.

தினமும் இரண்டிலும் கூட்டம் ரவுண்டு கட்டும். ஆனால் ஈ செண்டரில் சனிக்கிழமை மாலை மட்டும் கூட்டம் நிரம்பி வழியும். வாரம் முழுமையும் வராத நார்த் இண்டியன்ஸ் சனிக்கிழமை ஈ செண்டரில் குவிவார்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை பெற்றவர்களுக்கு குடும்பத்திற்கு அனுப்ப! வாரம் முழுமையும் இரவில் டாஸ்மாக்கில் மற்றவர்கள் நிரம்பி வழிவார்கள்.
ஒருநாள் ஈ செண்டர் போன ஒரு வடக்கிந்தியனை ஒரு நடுத்தர வயதுக்காரன் சட்டையைப் பிடித்து இழுத்து குடிக்க காசு கேட்டு நச்சரிக்க, அவன் தனக்குத் தெரிந்த தமிழில் சொன்னான், ‘அண்ணா ஊர்ல அம்மா ஒடம்பு முடியாம இருக்காங்க.. ரெண்டு பேரும் ஓண்ணாத்தானே வேலை பார்க்கிறோம்…?! நீ, டெய்லி குடிக்கறே! நான் வாரம் ஒருக்கா ஊருக்குப் பணம் அனுப்பறேன். விடுங்கண்னா பிளீஸ் என்று கெஞ்சினான்., போதை தலைக்கேறிய இவன் அவனைத் தள்ளித் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றான். இந்தக் காட்சியை ஈ செண்டர் பெண் தன் செல்லில் படமெடுத்தாள் சாட்சி கேட்டு வந்த போலீசுக்கு செல் படம் உதவியது. அதை அவள் போலீசுக்கு அனுப்ப, கொன்றவன் கூண்டேறினான்.
‘நன்றி!’ என்று தனக்குச் சாதகமாக உதவிய பெண்ணுக்கு நன்றி சொல்லி நார்த் இண்டியன் கை குவிக்க அவன் கைகளைப் பற்றிக் கொண்டு, அவள் சொன்னாள்,’
‘என்னைக் கட்டிக்குவயா… ஒரு குடிகார ஊதாரியைவிட ஊர் பேர் தெரியாவிட்டாலும் ஒரு உழைப்பாளியைத் திருமணம் செய்வது என் படிப்புக்கும், பணிக்கும் பெருமையாகக் கருதுகிறேன்’ என்றாள்.
அவனோ என்ன் சொல்வதென்றே தெரியாமல் விழித்தான். குடித்துச் சாகும் உள்ளூர்க்காரனைவிட குடிக்காத உழைப்பாளி எந்த ஊரானாலும் சரி என்ற நினைத்தாள் அந்தப் பெண்.
நார்த் இண்டியன்ஸ் எல்லாரும் திருடர் என்று நினைப்பதும் உள்ளூர்க்காரர்கள் ஒழுக்கவாதிகள் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் இதயம் குளிர்ந்த இலக்கிய வாசகம் மின்னியது வானில் ஒளிப்பிழம்பாக.