முரண்பாடுகளின் அறுவடை





(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கூ… ஊ ஊய்… கூஊ… ஊ… ய்…” மாங்கன்றுக்காகக் குரல் கொடுக்கிறாள் குறுக்குக் கட்டின ஒரு கிழவி.
“றேடியோவிலை பாட்டு முடிஞ்சுது. நேரம் அப்ப பத்து மணிக்கு மேலையாகிவிட்டுது என்னடி…?”
“மாங்கண்டு இவ்வளவு நேரமா என்ன செய்யிறாள்? ஒரு வேளை வேலைக்கு வரேல்லையோ?”
சீத்தைப் பாவாடையும் சட்டையும் போட்ட ‘பெட்டைகளும்’, சட்டை போட்டுத் தட்டுடுப்புச் சேலை உடுத்த பொம்பிளையளும்’ குறுக்குக் கட்டின கிழவிகளுமாய்… ஒரு பதினைந்து பேர் அந்தப் புளிய மரத்தடிச் சந்தியில் கூடியிருக்கிறார்கள். வருகிற வழி நெடுகிலும் ஒவ்வொன்றாகச் சேர்ந்து வந்திருக்கிற இந்தக் கூட்டத்தில் கடைசியாக வந்து சேரவேண்டிய மாங்கன்றும் வந்துவிட்டால் ‘விறுக்கு விறுக்கென்று நேரே வெங்காயத் தோட்டத்திற்கு நடக்கவேண்டியதுதான்.
“மாங்கண்டுக்கும் இரண்டு மாதம் சூதகம் வராமல் நிக்குதாமெல்லே?”
“பதினொரு மணிக்கும் போய்ச் சேராட்டித் தோட்டக்காரர் பேசப் போயினம் எக்கணம்…”
“கூ… ஊ… ஊய்… கூ… ஊ… ஊ… ய்” குரல் கொடுத்த ஐந்து நிமிடங்களின் பின்னர் புளியடிச் சந்திக்கு வருகின்ற கை ஒழுங்கையில் மாங்கன்று மெதுவாக நடந்து வருவது தெரிகின்றது. வழக்கம் போலக் கையையும் ஆட்டிக்கொண்டு வேகமாய் நடந்து வர அவளால் முடியவில்லை. அவளுடைய நடையிலே இருந்த பழைய லாவகமும் தென்படவில்லை. காலையிலே குடித்த பழம் பானைத் தண்ணி’ விரைவில் வெளியே வந்து விடுவேன் என்பது போலக் குமட்டிக்கொண்டு மேலே வருகிறது. காலையில் நித்திரைப் பாயில் கண்விழித்தபோதே, உலகமெல்லாம் சுற்றிக் கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.
“இண்டைக்கு வேலைக்குப் போகாமல் விடுவம்…” என்றுதான் படுத்திருந்தபடி யோசித்தாள். ஆனால்…
“வெங்காயம் நடுற காலம். புல்லுப் புடுங்கிற காலம், கிண்டுற காலத்திலைதான் இப்பிடி ஒவ்வொரு நாளும் வேலை வரும். இதுகளுக்குப் போய் ஒவ்வொரு நாளும் பத்துப் பத்து ரூபா வாங்கிக் கொணந்து வைக்காட்டிப் பிறகு வேலை கிடையாத காலங்களிலை அடுப்பெரியாது. மனுசன் சம்பாதிக்கிற காசு தவறணைச் செலவுக்குத்தான் காணும். உழைப்பு வாற காலத்திலை கொஞ்சம் மிச்சம் பிடிச்சு வைக்காட்டி… பிள்ளை பிறக்கிற காலத்திலை கஞ்சியும் கிடையாது… என்ற யோசனைகூட வந்து புறப்பட்டுவிட்டாலும் வழக்கமாய் இருக்கின்ற உற்சாகம் இல்லை உடம்பில்
“என்னடி மாங்கண்டு… எத்தினை தரம் குரல் கொடுத்தன்… உனக்குக் கேக்கேல்லையே…” கிழவி கேட்கிறாள்.
“கேட்டது அக்கை… என்னாலை இண்டைக்கு ஒண்டும் ஏலேல்லை… பேசாமல் கிடக்கப் பாத்திட்டுப் பிறகும் ஒழும்பி வாறன்.”
“சரி சரி வாருங்கோ கெதியாய் போவம்…” புகைவண்டியின் எஞ்சின் போல் கிழவி முன்னே செல்ல மிகுதி பதினைந்து பேரும் வரிசையாய்ப் பின்னால் ஓடி ஓடிச் செல்கிறார்கள்.
“நல்லா வெயில் ஏறினாப் பிறகு வாறியள்.. பேந்தும் பொழுதுபடமுந்திப் போயிடுவியள்… கெதியாத் தொடங்குங்கோ வேலையை…’ தோட்டத்தின் உரிமையாளரான பென்சனியர் ஆறுப்பிள்ளையின் அதிகாரக் குரலுக்கு எல்லாரும் கீழ்ப்படிகிறார்கள்.
நெருப்பு மாதிரி எரிகின்ற வெயிலில் தலைக்கு ஒரு பழந்துணி கூட இல்லாமல் வெங்காயத் தரையிலே இறங்கிவிட்டார்கள் சிலர். கையில் வைத்திருந்த பனை ஓலைப் பெட்டிகளைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு வேலையைத் தொடங்குகிறார்கள் கிழவிகள். மாங்கன்றும் ஈரத் தரையில் கால் புதைய இறங்கி நின்று குனிந்து ஒரு பாத்தியில் உள்ள புற்களைப் பிடுங்குகிறாள். ஓர் அரைமணி நேரம்கூட ஆகியிருக்காது, குடல் முழுவதுமே புரண்டு எழுவது போன்ற உணர்வுடன் மஞ்சள் மஞ்சளாய்ச் சத்தி எடுக்கிறாள் அவள்.
“கொஞ்ச நேரம் போய் உந்த ஆடுகால் நிழலிலை இரடி. உந்தக் கோதாரியோடை என்னத்துக்கு வேலைக்கு வந்தனி எண்டு எனக்கெண்டால் விளங்கேல்லை…”
பக்கத்தில் நின்ற கிழவி கண்டிப்பாய்ச் சொல்வது போலச் சொல்லுகின்ற வார்த்தைகளில் உள்ளூர ஓர் அநுதாபமும் பாசமும் இழையோடியதைப் புரிந்து கொண்டவளாய் இடத்தைவிட்டு வெளியேறுகிறாள் அவள்.
இறைத்துக் கொண்டிருந்த ‘மிசின்’ தண்ணீரில் நிறைய அள்ளி முகத்தையும் வாயையும் அலம்பிக்கொண்டு பூவரச நிழலில் சிறிது நேரம் களைப்பாறுகிறாள் மாங்கன்று. மத்தியானம் சாப்பிட்ட பிறகு மயக்கமும் பிரட்டும் கொஞ்சம் குறைந்து விட்டபடியால் பின்னேரம் அவள் தோட்டத்தில் இறங்கி வேலை செய்தாள். ஆனாலும் பின்னேரம் வேலை முடிந்து திரும்புகையில்,
“மாங்கண்டு அரைவாசி நேரம் வேலை செய்யேல்லையாம். அப்ப ஐஞ்சு ரூபா தந்தாப் போதுந்தானே” என்று கூறி அரைவாசிச் சம்பளம் தருகிறார் பென்சனியர்.
“அரசாங்க உத்தியோகமெண்டால் நாப்பத்திரண்டு நாள் லீவு எடுத்தாலும் சம்பளம் வரும். எங்கடை கெதி இப்பிடித்தான்…” அவள் மனதிற்குள் மெல்ல முனகிக்கொள்கிறாள்.
இப்போது அவளுக்கு ஐந்து மாதம். கருப்பையின் உள்ளே பிள்ளை. ‘ஊருவதும் துடிப்பதும்… முன்னர் அநுபவித்தறியாத ஒரு புதிய அநுபவமாய்… திடீரென்று ஒருமுறை துள்ளி எழுந்து வந்து அது மேல் வயிற்றில் இடித்துவிட்டுப் போகும்போது, மெலிதாய் ஒரு வேதனை தோன்றினாலும்கூட, அந்த இனிமை வேதனைகளை வென்றுவிடும்போது அவள் ஒரு சின்னச் சிரிப்புடன் தன் வேலைகளைத் தொடருகிறாள்.
“அரிசி கொஞ்சம் நனையப் போட்டிருக்காம்… வந்து இடிச்சு விடட்டாம் பின்னேரம்… கேட்டுதே மாங்கண்டு…” குடிசைக்கு வெளியே பென்சனியரின் குரல்தான் கேட்கிறது. இப்போது இரண்டு மூன்று நாட்களாய் எழுந்து நிற்கவே முடியாது என்பது போல் நாரி எல்லாம் விண் விண் என்று வலித்தாலும், பென்சனியர் வீட்டுக்குப் போய் அரிசி இடித்து வறுத்துக் கொடுத்தால் ஒரு கொத்துக்கு ஒரு ரூபா கிடைக்கும். அதை விட்டு விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
“சரி ஐயா… பின்னேரம் ஐஞ்சு மணிபோலை வாறன்…” மாலையில் பென்சனியர் வீட்டுப் படலைக்கு அவள் போய்ச் சேருகிறபோது வாசலில் கார் ஒன்று நிற்கிறது. பென்சனியரின் மகள் மங்கையை அவளின் கணவர் ஒரு பக்கத்திலும் தாய் ஒரு பக்கத்திலும் பிடித்து மெல்ல நடத்திக்கொண்டு வந்து காரில் ஏற்றுகிறார்கள். அவர்கள் போய்விட்ட பின்னர்… திரும்பி வந்து அமர்ந்த தாயிடம் இவள் கேட்கிறாள்,
“என்ன சுகமில்லையே… அவவுக்கு?”
“மங்கைக்கு இப்ப ஐஞ்சு மாதமாய் ரேண்ஸ் வராமல் நிக்குதெல்லே… ஸ்ரெயின் பண்ணப்பிடாது எண்டு அண்டைக்கும் டொக்டர் அட்வைஸ் பண்ணி விட்டவராம். நாங்கள் ‘கேற்றைத் தூரத்திலை போட்டதாலை… இங்கையிருந்து `கேற்’ வரைக்கும் நடக்க வேண்டியதாய்ப் போச்சு மங்கைக்கு… இல்லாட்டி நாங்கள் ‘பெட்’டாலை இறங்கவே விடுறேல்லை… பாத்தாப் பெரிய உடம்புதான். ஆனால் ரத்தம் இல்லை…”
மங்கையின் தாய் அடுக்கிக்கொண்டு போவதை, ஈக்குக் குச்சிபோல் கையும் காலும், கொடிபோல் மெலிந்த உடலமைப்பும் கொண்ட மாங்கன்று ஒரு விசித்திரம் போல் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும் ஐந்து மாதந்தான் ஆனால்…
இரண்டு கைகளிலும் மாறி மாறிப் பாய்கின்ற உலக்கை ஒரு லயத்துடன் உரலில் விழுந்து எழும்புகிறபோது ஒவ்வொரு முறையும் அவள் உடல் நொந்து வலிக்கிறது. உரலில் போட்ட மாவைக் குனிந்து அள்ளி இறக்கும்போது, கால் தொடைகள் உழைவெடுக்கின்றன. அடுப்பில் ஏற்றிய பெரிய இரும்புச் சட்டியின் கீழே பெரிதாக எரியூட்டி, அதன் முன்னால் அமர்ந்து வறுக்கும்போது அந்த வெம்மையில் உடம்பு எரிந்து வியர்வை ஆறாய் வழிந்து ஓடுகிறது.
மா வறுத்து முடிகிற நேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போன கார் திரும்பி வந்து வாசலில் தரித்து நிற்பதைக் கண்ட பென்சனியரின் மனைவி விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் மகளைக் கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வருகிறாள்.
“டொக்டர் என்ன சொன்னவர்?”
“நல்லா ‘றெஸ்ட்’ பண்ணட்டாம். இளநீர், தோடம்பழம், பால் நிறையக் குடிக்கட்டாம். ‘ஒப்றோன்’ குளிசை தொடர்ந்து சாப்பிடட்டாம். இண்டைக்கு முப்பது ரூபா கட்டி ஸ்பெசலிஸ்ட் டொக்டரிட்டைக் காட்டிக்கொண்டு வாறம்…”
மங்கையைக் கொண்டுபோய்ப் படுக்கையில் விட்டுவிட்டு…அவளுக்கு உடுப்பு மாற்றித் தேநீரும் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்த தாய்,
“மெய்யே மாங்கண்டு… உங்கை எங்காலும் தோடம்பழம் கிடைக்குமே? நல்லதாய்த் தேடிப் பாத்து ஒரு பத்துப் பன்னிரண்டு வாங்கித் தாறியே?” என்று கேட்கிறாள்.
எத்தனையோ இடங்களுக்கு நடையாய் நடந்து… அலைந்து, ‘பிள்ளைத்தாச்சி’க்குச் ‘சோட்டைச் சாப்பாடு’ தேடிக் கொடுத்தது முழுவதும் இந்தப் ‘பிள்ளைத்தாச்சி’தான். ஆனால் இந்தப் ‘பிள்ளைத்தாச்சி’…
ஒரு தோடம்பழம் கூடத் தின்று பார்த்ததில்லை.
இளநீர் குடித்ததில்லை.
பாலைக் கண்ணால்கூடக் கண்டதில்லை.
இறைச்சி வாங்கப் பணம் இருந்ததுமில்லை.
டாக்டரிடம் போக நினைத்ததுமில்லை.
மாதங்கள் வேகமாய் நழுவி ஓடுகின்றன. மாங்கன்றுவின் மனதிற்குள்ளே அந்தரங்கமாய் ஒரு வேகம்…
ஒன்பதாவது மாதமும் முடிந்த பின்பு ஒருநாள்… மாங்கன்று பென்சனியர் வீட்டு வளவில் கஞ்சல் கூட்டிக்கொண்டிருந்தபோது… மங்கைக்கு ‘வித்தியாசம்` இருந்ததென்று அவதிப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். அடுத்த நாட்காலையில் மாங்கன்று வந்து தாயிடம் விசாரித்தாள்.
‘இன்ஜெக்சன்’ குடுத்தும் பெயின்ஸ் எழும்பேல்லையாம். மங்கை சரியா வேதனைப்படுகிறாள். பாக்கப் பெரிய பாவமாக் கிடக்கு…”
அன்று மாலையில் மாங்கன்றுக்கும் ‘நோக்காடு’ கண்டது. ‘கார் பிடிச்சுக் கொண்டரச் சொல்லி’ யாரோ சொன்ன பின்னர்தான், பக்கத்து வீட்டில் நின்ற ஒரு பழைய சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனான் மாங்கன்றுவின் புருஷன். இரண்டு மைல் தூரம் சைக்கிளில் போய் அவன் ஒரு காரைத் தேடிக்கொண்டு வந்தபோது… ஒரு அழகிய ஆண் குழந்தையை ஈன்று முடித்திருந்தாள் மாங்கன்று.
“எல்லாம் முடிஞ்சாப் பிறகு இனி என்ன ஆஸ்பத்திரி? காரைத் திருப்பி அனுப்படா நீ…” இதுவரையில் மாங்கன்றுவின் ‘ஸ்பெலிஸ்ட்’ ஆகத் தொழிற்பட்ட குறுக்குக் கட்டின கிழவி கட்டளையிட்டாள். மாங்கன்றுவின் குழந்தைக்குப் பெரிய வரவேற்புத்தர யாரும் இல்லாவிட்டாலும் அவன் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி வந்துவிட்டானே!
“கேட்டியே மாங்கண்டு… பென்சனியற்றை மேளுக்கு இரண்டு மூண்டு நாளா… நோக்காடு வாறதும் போறதுமாப் பெரிய கஷ்டப்பட்டுக் கடைசியிலை வயித்தைக் கீறித்தான் பிள்ளை எடுத்ததாம்..” இரண்டு நாள் கழித்துக் கிழவிதான் புதினம் கொண்டு வருகிறாள்.
“கீறின காயத்திலை சிதல் பிடிச்சுப் போச்சாம்… இன்னும் இரண்டு கிழமை ஆஸ்பத்திரியிலை இருக்கவேணுமாம்…” ஒரு வாரம் கழித்து வந்த செய்தி இது.
மங்கை குடித்து முடித்த தோடம்பழங்களும் பாலும் இளநீரும் விழுங்கி முடித்த குளிசைகளும் மருந்துகளும் என்ன உபயோகத்தைச் செய்தன என்று புரிந்துகொள்ளாமல் தன் மகனைத் தூக்கி மார்போடு அணைத்துப் பால் தருகின்ற சுகானுபவத்தில் மூழ்கி இருக்கிறாள் மாங்கன்று.
– 1980இல் சுடர் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது.
– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.