பார்வை
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வாரமாக, ‘பாஸ்டன் லேருந்து என் கஸின் வரா”, என்று சாதா சொல்லிக் சொல்லிக் கொண்டு வீட்டிலிருந்தவர்களின் அலுப்பை யும் சலிப்பையும் சம்பாதித்துக் கொண்டிருந்தாள் அம்மா. எங்களின் முகச் சுளிப்புகளுக்கோ, கிண்டல் புன்னைகைகளுக்கோ கொஞ்சமும் திருந்தி விடாமல் தொடர்ந்து எங்களைப் படுத்திக் கொண்டிருந்தாள். அம்மாவின் தூரத்து அக்கா முதல் முறையாக சிங்கப்பூருக்கு வருவதாக இருந்தனர். அம்மாவுக்கு ஒரே உற்சாகம்.
முதல் நாளே இதைச் சமைக்கவா, அதைச் சமைக்கவா என்று வீட்டில் கருத்துக் கணிப்பு நடந்தி ஓய்ந்து, பிறகு தானே ஒரு பட்டியலைப் போட்டு, சமைக்க ஆரம்பித்து விட்டாள். வீட்டில் இல்லாத கொத்து மல்லிக்கும், வெங்காயத்துக்கும் அப்பாவைக் கடைக்கு தனித் தனியே இரண்டு முறை பணிவாக விரட்டினாள். இருபது வருடங்களில் அம்மாவின் அமளிகளுக்குப் பழக்கப் பட்டிருந்த ஒரு கேள்வி கூடக் கேட்காமல் கிளம்பிப் போனார் அருகிலிருந்த காய்கறிச் சந்தைக்கு.
நான்கு நாட்களுக்கு முன்பே இரவு நேராக இங்கே தான் வருவார்கள் என்று தானாகவே நினைத்துக் கொண்டு, ஒரு முறை சமைத்து வைத்துக் காத்திருந்தாயிற்று. தனது எட்டாவது வயதில் பார்த்த பிறகு முப்பத்து மூன்று வருடங்கள் கழித்துப் பார்க்கப் போகும் தூரத்து சொந்தமாக நினைக்காமல், ஏதோ சொந்த அக்காவை வருடக் கணக்கில் பார்க்காமல் பார்க்கப் போகும் ஆவல் எப்படித் தான் வந்ததோ அம்மாவுக்கு. ஆனால், சாங்கி விமான நிலையத்திலிருந்து அம்மாவின் அக்கா,”விசாலம், நாங்க வந்து எறங்கிட்டோம். ஸோ டயர்ட். என்னோட ஒண்ணு விட்ட நாத்தநார் ஆத்துல தான் தங்கறதா இருக்கோம். அவா நம்பர் எழுதிக்கறியா?, என்று சொல்லி அம்மாவை ஏமாற்றி விட்டார்கள். அவளின் குண்டு முகம் சட்டென்று வாடித் தான் போனது அன்று.
எப்படித் தான், மிக இயல்பாக அக்கா, அக்கா என்று போனில் குழைந்து பேச முடிகிறதோ என்று நினைத்துக் கொண்டேன். நானும் வேறு பெரியம்மா என்று கூப்பிட வேண்டுமென்று எதிர் பார்த்தாள். திடீரென்று எப்படி வரும் எனக்கு? அம்மாவின் மறு பெயர் தான் அலாதியோ? “வீக் டேஸ்ல வரதவிட ஞாயித்துக் கெழம வரோமே, இவருக்கும் உங்காத்துக்காரர பாக்கணுமாம்., ஓகேயா? பை”, என்று போனை வைத்ததும் அம்மா புலம்பினாள். “நீயாவே ஏம்மா நேர அவா இங்க தான் வரான்னு ‘அஸ்யூம் பண்ணிண்டு, சமைச்சு வச்சுண்டு அவதிப் படற”, என்று நான் கேட்டதுக்கு அம்மா ஒன்றுமே சொல்லாமல் என் முகத்தையே திருதிருவென்று விழித்துபடி பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்த நாளும் நாங்கள் சமைத்ததையெல்லாம் மீண்டும் ஒருமுறை சாப்பிட்டுத் தீர்த்தோம்.
ஞாயிறு காலையிலேயே சமையறையில் பல விதமான ஓசைகள் கேட்டன. தினப்படிச் சமையலை அமைதியாக முடித்து விட்டு வெளியேறும் அம்மாவுக்கு, யாராவது ஒரு ஆள் சாப்பிட வருவதாயிருந்தால் திடீரென்று சமையலறை, அங்குள்ள சாமான்கள் மற்றும் சமையல் பக்குவங்கள் எல்லாமே எப்படி அந்நியமாகிப் போகின்றன என்று நூற்றியோராவது முறையாக அதிசயித்தேன். வரவிருக்கிறவர்களை மகிழ்விக்கவும் திருப்திப் படுத்தவும் அம்மா எடுக்கும் பிரத்யேக பிரயத்தனங்கள் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன என்று தான் எனக்குத் தோன்றியது.
“பெரியம்மா வரபோது உள்ள போய் நீ பாட்டுக்குப் படிச்சுண்டிருக்காதடி ஸ்ரீநிதி. கொஞ்சம் ஹாலுக்கு வந்து பேசிண்டிரு, அவா பொண்ணும் வராளாம், அவளுக்காவது கொஞ்ச நாழிக்கி கம்பனி கொடு,” என்று அம்மா முதல் நாளே சொல்லி விட்டிருந்ததால், நான் முடிக்க வேண்டிய அஸைன்மெண்டை முடிக்கும் மும்முரத்தில் இருந்தேன். அம்மாவின் சமையலறைச் சாகசங்கள் சாகசங்கள் ஏற்படுத்திய ஓசைகள் அடைத்திருந்த அறைக் கதவின் இடுக்கு வழியாக வந்து காதில் மோதித் தொந்தரவு கொடுத்தது.
ஞாயிறு மதியம். சூரியத் தொலைக் காட்சியில் ‘சப்தஸ்வரங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அடித்துப் பெய்யாமல் பிசுபிசுவென்று போக்குக் காட்டிக் கொண்டிருந்தது மழை. அவர்கள் வரும் போது, வழக்கமாய் நாங்கள் சாப்பிடும் நேரம். குசலங்கள் பரஸ்பரம் விசாரிக்கப்பட்டு, சிங்கப்பூரின் சீதோஷணத்தைச் சகிக்க முடியாத அவர்களின் நிலையை அவர்கள் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தோம் சோபாக்களில் உட்கார்ந்து கொண்டு.
அம்மாவின் முகமெங்கும் பல்லாகத் தெரிந்தது. அம்மா அப்பாவின் ஜாடை துளிக் கூட இல்லாமல், ஆனால் மிகவும் லக்ஷணமாக, கோதுமை நிறத்தில் பளிச்சென்று இருந்தாள். என்னை விட ஒரு நான்கு வயது மூத்தவளாகயிருப்பாள். அமெரிக்க ஆங்கிலத்தை நாவால் சுழற்றிச் சுழற்றி வேகமாகப் பேசினாள். சிரித்த முகம். நாங்கள் பேசியவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு எங்களுடன் சிரித்தாள். ஆனால், தமிழில் பேசவேயில்லை. தமிழில் கேட்ட கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் தான் பதில்.
இஷிதாவின் அப்பா அதிகம் பேசவில்லை. சேர்த்து வைத்து அவளின் அம்மா லொடலொடவென்று பேசித் தள்ளினார். மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் தன்னுடைய கார் பறியும், தான் பார்த்த நர்ஸ் வேலை பற்றியும், பக்கத்துவீட்டு நாய் பற்றியும் வாய் மூடாமல் பேசினார். இடையிடையே இட்டு நிரப்ப இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று வந்திருந்த சிரெங்கூன் ரோட் அனுபவங்கள். சாப்பிட்ட சாப்பாடெல்லாம் பேச்சிலேயே போய்விடுவதால் தான் கிள்ளியெடுக்க சதையில்லாமல் ஒல்லியாக இருந்தாரோ?!
“இஷிதான்ற பேர் புதுமையா அழகா இருக்கு ஆண்டி”, என்று சொல்லிக் கொண்டே நான் இஷிதாவின் முகத்தைப் பார்த்தேன்.
பெரியம்மா என்று கூப்பிட வரவில்லை எனக்கு. அவளுடைய அம்மா பெரிதாகச் சிரித்துக் கொண்டே, “ஐயோ, நீ எங்கம்மாவக் கேக்கணும், சாகற வரைக்கும் ‘ஈஷித்தா, ‘ஈஷல்லயா’ன்னு என்ன கண்றாவின்னு சொல்லிண்டே இருந்தா. இஷிதான்னு கடசி வரைக்கும் சொல்லவரல்லயே அவளுக்கு. சாகற வரைக்கும் சிந்து சிந்துன்னு தான் கூப்டுண்டிருந்தா”, என்றுபோது இஷிதாவுக்கு சிரிப்பதா, இல்லை வேறு என்ன செய்வது என்ற குழப்பம் முகத்தில். ஏற்கனவே கேட்டுப் புரிந்து கொண்டிருப்பாள் போலிருந்தது. என் அம்மா தேவைக்கதிகமாக சிரித்தாற்போலிருந்தது. ஆண்கள் இருவரும் சடங்கிற்காகச் சிரித்து வைத்தனர்.
அம்மாவுக்கு இஷிதாவைப் பிடித்து விட்டது. “ஸ்ரீநிதி, உன்னோட ரூமக் காட்டும்மா இஷிதாவுக்கு”, என்றதும் நான் என் அறைக் கூட்டிப் போய் காட்டினேன். அவள் என் புத்தக அலமாரியிலிருந்து சில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தாள். அம்மா அறைக்குள் வந்து, “ஸ்ரீநிதி, ஏதாவது குடிக்கறாளா கேளு அவ”, என்று சொல்லும் போது தான் கவனித்தேன், அம்மா அன்று மகிழ்ச்சியாக இருந்தாள் என்று. நேரமாகி விட்டதால், சாப்பிட்டு விடலாம் என்று இஷிதா சொல்லி விட்டாள்.
சாப்பாட்டு நேரத்தின் போது தான் அம்மாவின் மனநிலை சடக்கென்று திடீர் திருப்பம் கண்டது. அதை நினைத்து எனக்கு மிகவும் வேடிக்கையாகத் தான் இருந்தது.
“இஷிதாவுக்கு நாங்க மொதல்ல டிக்கெட்டே எடுக்கல்ல. நாங்க திரும்பிப் போனப் பறமா அவளையும் அவளோட பாய் ஃப்ரெண்டையும் சிங்கப்பூருக்கு வெகேஷனுக்கு அனுப்பி வைக்கலாம்னு தான் ப்ளான். ஆனா, இவளோட ஃப்ரெண்ட் ‘எல்வின்’ அவள எங்க கூடவே ஜாயின் பண்ணிக்கச் சொல்லிட்டான். அவனுக்கு டிராவல்னாலே பிடிக்காது. இவளுக்கு என்ன மாதிரி டிராவல்னா ரொம்பப் பிடிக்கும், எங்ககூட வரல்லேன்ன பாவம் இவளுக்கு ஒரு ச்சேஞ்சே இருக்காது, அதான் கடைசி நேரத்துல டிராவல் ஏஜண்ட்ட தொரத்தித் தொரத்தி டிக்கெட் வாங்கினேன்”, என்று சொன்னதுமே அம்மா சில கணங்கள் அப்படியே வாய் திறந்த படி நின்றிருந்ததை நான் மட்டும் தான் பார்த்தேன். சட்டென்று மீண்டும் சாதம் எடுக்கவென்று போவதைப் போலச் சமையலறைக்குள் போய் விட்டாள்.
“இப்ப தான் ஒரு வருஷமா ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கா. வீட்டை சுத்தமா அழகா வச்சிருக்கா. எங்களோட இருக்கற வரைக்கும் டீ குடிச்ச கப்பக் கூட ஸிங்க்ல போட மாட்டா. இப்ப, நான் போனா காஃபி போட்டுக் கொடுக்கறா. ஆச்சரியமா இருக்கு. சந்தோஷமாவும் இருக்கு”, என்று சொல்லிக் கொண்டே போனார் அப்பளத்தைக் கடித்தபடி.
அம்மாவின் முகம் அவளுக்குள் ஓடிய சிந்தனையை கண்ணாடியைப் போலப் பிரதிபலித்துக் காட்டியது எனக்கு. அம்மாவின் மனதில் தன் ஒரே பெண்ணான என்னைப் பற்றிய கவலை ஆரம்பித்து விட்டது என்று தெரிய எனக்குத் தான் போதிய அனுபவம் இருந்ததே. என்னைப் பற்றி மிக நன்றாக அறிந்திருந்த போதிலும் அம்மா அவசியமேயில்லாமல் அப்படித் தான் கவலைப் படுவாள்.
என் சிநேகிதி ஒருத்தி. ‘மெய்ஃபெங்க் என்று பெயர். மிக நல்ல பெண். நன்றாகப் படிப்பாள். என்னுடன் போன வருடம் படித்த போது பாடம் சம்பந்தமாக நாங்கள் எங்கள் வீட்டில் தான் சந்தித்து வந்தோம். சேர்ந்து படித்ததில் இருவரும் பல வகையில் பயனடைந்தோம். எல்லாமே ஒரு நாள் மாறியது. அவள் தன் ஆண் நண்பனுடன் தனியே வசிக்க ஆரம்பித்து விட்டதை என்னிடம் சொல்ல நான் அம்மாவிடம் சொல்ல, அம்மாவிற்கு பயம் பிடித்து விட்டது. அவளுடன் சேராதே, பழகாதே, பேசாதே என்று வரிசையாய் தடை. கோபம் வந்தது. அவளின் தனிப் பட்ட வாழ்க்கைக்கும் என் நட்பிற்கும் என்ன சம்மந்தம் என்றேல்லாம் வாதிட்டேன். ஆனால், முடிவில் அம்மாவின் வழிக்குப் போவதை தவிர வேறு வழியே இருக்கவில்லை.
சாப்பிட்டு முடிந்து மீண்டும் சோபாக்களில் அமர்ந்து கொண்டோம். எல்வினின் புகைப் படத்தை எங்களுக்கெல்லாம் காட்டச் சொல்லி இஷிதாவை அவளின் அம்மா மிகவும் வற்புறுத்தவே, அவளும் வேறு வழியில்லாமல் தனது பர்ஸைத் திறந்து போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டினாள். நான் பார்த்து விட்டு அப்பாவிடம் கொடுக்க அப்பா பார்த்து விட்டு அம்மாவிடம் கொடுத்தார். அம்மாவின் முகம் இறுகிக் கிடந்தது. அம்மாவிற்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. அதே சமயம் பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. அம்மாவின் முகத்தைக் கூர்ந்து நான் கவனிப்பதை அம்மா பார்த்து விட்டாள். முகத்தைச் சுளிக்காமலிருக்க எவ்வளவு பாடு பட்டாள் என்று எனக்குப் புரிந்தது. அவள் பட்ட பாட்டைப் பார்த்துச் சிரிப்பு வந்தது எனக்கு.
அவன் ஒரு கருப்பினத்தவன். குத்துச் சண்டை வீரன் முகமது அலி சிறுவயதில் ஒரு வேளை அப்படித் தான் இருந்திருப்பாரோ. சுருட்டை முடியுடன் தடித்த உதடுகளும் தீர்க்கமான கண்களுமாக, கபடின்றிச் சிரித்துக் கொண்டிருந்தான் நிழற்படத்தில்.
இஷிதாவின் அம்மாவிற்கு அங்கு திடீரென்று நிலவிய மௌனம் அசௌகரியமாக இருந்திருக்கும் போல.
மௌனத்தைப் பிளந்தபடி, “என்ன செய்ய, விசாலம். காலம் மாறிண்டு வரது. இருக்கறது பாஸ்டன். பழகறதெல்லாம் வெள்ளக்காரா. அங்கேயே பிறந்து வளர்ந்துட்டா இஷிதா. அந்த பழக்க வழக்கங்கள் வராம இருக்குமா. அதெல்லாம் சர்வசாதாரணம் இல்லையா அங்க. நானும் மொதல்ல எல்லாம் சொல்லிப் பார்த்தேன், வேண்டாம்னு. ஆனா, ஒண்ணும் நடக்கல்ல. நாங்களே பேசாம அவ வழிக்கிப் போயிட்டோம். வாரத்துக்கு ஒருதடவ வருவா. தனியாப் போனதுலருந்து நல்ல மெசூரிட்டி. எங்க அருமையத் தெரிஞ்சுண்டான்னு வை”, என்று பெரிய விளக்கம் கொடுத்ததைப் பார்த்தால் அவர் அம்மாவின் உள் மன உறுத்தலைத் தெளிவாகப் புரிந்து கொண்டார் என்றே தோன்றியது. அம்மா ஒன்றுமே சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள். பேச்சை மற்ற அப்பா தன் பங்கிற்கு அவர்களின் ஊரைப் பற்றியும் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் கேட்க ஆரம்பித்தார்.
மெதுவாக சாதாரண குரலில், “எல்வின் நல்ல பையன் தான். அவனையே கல்யாணம் பண்ணிண்டுட்டான்னா பரவாயில்ல”, இஷிதாவின் அம்மா சொன்னபோது, அதில் இருந்த சந்தேகத் தொனியால் அம்மா கொஞ்சம் தடுமாறிப் போனாள் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இஷிதாவும், “கமான்மா, வீ ஆர் ட்ரையிங்க் ஃபார் தாட் ஒன்லி, யு நோ”, என்று கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் எரிச்சலும் குழைத்துச் சொன்னாள்.
அம்மாவிற்கு திடீரென்று பிடிக்காமல் போனதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு தான் வந்தது. அவளின் ஒழுக்க விழுமியங்களுக்குச் சிறிதும் மாறுதலாய் இருந்தால் அவளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லையே என்று நினைக்கும் போது ஒரு குழந்தையைப் போலத் தான் தோன்றியது எனக்கு அவளைப் பார்க்கும் போது. ஆசைப் பட்ட பொருள் கிடைக்காத ஏமாற்றம் முகத்தில் தேங்கி நிற்கும் ஒரு சிறுகுழந்தை.
எல்லோரும் கிளம்பிப் போனார்கள். பெரும் மழை அடித்து ஓய்ந்த அமைதி வீட்டில் கவிந்தது. அம்மா சமையலறையை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தாள். என் கல்லூரி அஸைன்மெண்ட் என்னை அறைக்கு அழைத்தது. இருந்தாலும், அம்மாவுக்கு உதவலாமென்று டைனிங்க் டேபிளிலிருந்து ஒவ்வொரு பாத்திரமாகக் கொண்டு போய் சமையலறை மேடையில் வைத்தேன்.
“ப்ச், நா நெனச்ச மாதிரியில்ல அக்கா, ரொம்ப மாறிட்டா”, என்று ஆரம்பித்தாள் அம்மா. தான் எட்டு வயதிருக்கும் போது தன் பன்னிரண்டு வயது அக்காவை என்ன புரிந்து கொள்டிருப்பாள் அம்மா? குபீரென்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நீ எதிர்பார்க்கற மாதிரியே எல்லாரும் இருப்பாளாம்மா. தவிர, நீ ஏன் ஒரு எதிர் பார்ப்ப மனசுல உண்டாக்கிக்கற? அதது எப்டி எப்டி இருக்கோ அப்டி அப்டியே பார்க்கவும் ஏத்துக்கவும் பழகிட்டோம்னா பிரச்சனையே இல்ல”, என்று சொல்லிக் கொண்டே, மீந்து போயிருந்த தயிரை எடுத்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்தேன்.
“ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சிண்டிருந்தேன். ஆமா, ஏம்மா இஷிதா அந்த ‘ஆண்டிய மாதிரியுமில்ல, ‘அங்கிள மாதிரியும் இல்ல, ம்?”, என்று சாதாரணமாக நான் கேட்டதும், “ஓ, அதுவா அக்காவுக்கு கன்ஸீவ் ஆன ஒண்ணு கூட தங்கல்லயாம். எவ்வளவோ, வேண்டுதல், கோவில் கொளம்னு போனாளாம். ஹூஹூம், ஒண்ணும் கை கொடுக்கல்ல. கடசீல அமெரிக்காலயே ஒரு மாசக் கொழந்தை ஒண்ணும் கிடைச்சதும் தத்தெடுத்து வளர்த்துண்டு வரா. குஜராத்திகளோட கொழந்தைன்னும் சொல்லிண்டா.”
“ஓ, நோ வொண்டர். அதானா அப்படி? ஆனா, ‘தத்து’ விஷயம் ரொம்ப நல்ல விஷயம் தான். இல்லம்மா? “
“என்ன தாஞ்சொல்ற, அதானா அப்படின்னா என்ன?”
“இல்ல, நீயே யோசிச்சுப் பாரேன். நிச்சயமா, அந்த ‘ஆண்டி தன் சொந்த ரத்தமா இருந்திருந்தா, பொண்ணோட நடவடிகைக்கெல்லாம் ஒத்திண்டிருந்திருப்பாளா, மூட்டைக் கண்டிண்டு கண்டிண்டு இண்டியாக்கே போயிருப்பா. என்ன?”, என்று நான் கேட்டதும் அம்மா தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டாள் என் முகத்தைப் பார்த்துக் கொண்டே. இந்தியாவே இவற்றில் மேற் கத்தியத்தைப் பின் பற்ற ஆரம்பித்து விட்டது என்ற அடிப்படை வாதமெல்லாம் அம்மாவுக்குத் தோன்றவில்லை.
பின் அம்மாவை எப்படித் தான் என் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வது? சூழல் மற்றும் நட்பு வட்டத்தில் பார்த்துப் பழகி நானும் பின் பற்றுவேன் என்று அம்மாவுக்கு ஒரே பயம். இருக்கும் தலைவலிகள் போதாதா எனக்கு? சில வேளைகளில் அம்மா தான் எனக்கு மகளோ என்று தோன்றி விடுகிறது. நான் மெதுவாக நழுவி என் அஸைன்மெண்ட்டை முடிக்க என் அறைக்குள் போனேன்.
– பின் சீட் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, நிலா புக்ஸ்.