பருவம்!




வசந்திக்கு புரண்டு, புரண்டு படுத்தும் உறக்கம் பிடிபடவில்லை. ‘பெத்த பொண்ணு பருவத்துக்கு எப்ப வருவா?’ என கவலைப்பட்டு முன்பு உறக்கம் தொலைத்தவள், தற்போது வந்த பின்னும் உறக்கம் தொலைத்தாள்.
மற்ற பெண் குழந்தைகள் பத்து வயதிலேயே வந்து விட, தமது மகள் மகி பதினைந்தைத்தொட்ட போதும் பருவத்துக்கு வராததால் ‘உடலில் குறை இருக்குமோ?’ என மருத்துவரிடம் அழைத்துச்சென்ற போது, ‘உடலில் குறை எதுவும் இல்லை. பதினைந்து தான் சரியான வயது’ என மருத்துவர் கூறியதும் நிம்மதியடைந்தாள்.
முன்பெல்லாம் தைரியமாக உறவுகள் வீட்டிற்கு பெண்ணை அனுப்பியவள், தற்போது அனுப்புவதில்லை. எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்துச்சென்று விட்டு, திரும்பவும் அழைத்து வந்து விடுவது வாடிக்கையாகி விட்டது.

கவர்ச்சியை வெளிப்படுத்தும் ஆடைகளை வாங்கிக்கொடுக்காமல் சாதாரண ஆடைகளைத்தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவாள். ‘அளவாப் படிச்சாப் போதும். எட்டாவது பொட்டப்புள்ளைக்குப் பத்தாதா…?மாப்பிள்ள அமைஞ்சா சீக்கிரமா கண்ணாலத்த பண்ணி வெச்சுப்போடோனுமுங்க’ என கணவனிடம் அடிக்கடி கூறுவாள்.
“நீ எந்தக்காலத்துல வாழறே…? ஒவ்வொரு பொண்ணும் நாடு, நாடா தனியா ஏரோப்பிளேன்ல பறந்திட்டு இருக்கிற காலம். ஆம்பளைங்களுக்கு சமமா எல்லாத்துறைலையும் வேலை பார்க்கறாங்க. சும்மா எப்பப்பார்த்தாலும், எதுக்கெடுத்தாலும் இப்படிப்பயந்தா பொண்ண ஊட்டுக்குள்ள தான் வெச்சுப்பூட்டிக்கோணும். உலகம் போற போக்குல போனாத்தான் நாமும் நாலு பேரப்போல வாழ முடியும். நம்ம பொண்ண நாம மொதல்ல நம்போணும். நம்ம பொண்ணு தான் பொண்ணா? நம்பி வெளில விடறவங்களுக்கு அக்கறையில்லாமயா இருக்கும்?” மனைவி வசந்திக்கு தமது அறிவுரையை கூறினான் கணவன் முருகன்.
தாயின் கட்டுப்பாட்டின் போக்கு எல்லை மீற, கோபமாக கத்தி கூச்சலிட்டாள் மகி. “குண்டுச்சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டற உனக்கு வெளில இருக்கிற மனுசங்க, உலகம் தெரியல. மனசப்பத்தி நெனைக்காம ஒடம்ப பத்தியே நெனைச்சிட்டிருக்கறே. படிக்காத காலத்துல பருவத்துக்கு வராமையே பத்து வயசுலயும் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. வாழ்க்கைனா என்னன்னு தெரியறதுக்குள்ளேயே பத்துக்குழந்தைகளைப்பெத்தும் போட்டாங்க. ஒடம்பு கெட்டு செத்தும் போனாங்க. இப்ப காலம் மாறிப்போச்சு. நல்லா படிக்கனம். வேலைக்கு போயி சொந்தக்கால்ல நிக்கனம், அப்பறமா கல்யாணம் பண்ணிக்கனம்னு இப்பத்த பொண்ணுங்க யோசிக்கறோம்” முகம் சிவக்க பேசினாள்.
“எனக்கு மேல ஒசரமா வளர்ந்துட்டு நீ எதுத்தெதுத்து நீ பேசறே… உனக்கு பசிக்கிற போது நாமட்டும் பால் கொடுக்காம போயிருந்தேன்னா இப்ப வந்து இப்படி சட்டம் பேசுவியாடி….? அப்பனும் மகளுக்கே மேல் போட்டு பேசறாரு…. உன்ற வயசத்தாண்டி வந்ததுனாலதான் சொல்லறேன். பருவம் பத்தும் செஞ்சு போடும். பஞ்சு மாதர ஒடம்பு பட்டா பத்திக்கும். புத்தி வேலயே செய்யாது. பக்கத்தூரு வனிதா பையன் வேவாரத்துல நல்லா சம்பாதிக்கிறான். பொருத்தம் பாத்ததுல பத்துக்கு எட்டு இருக்குதுன்னு சோசியர் சொன்னதா சொன்னா. ‘நீ மட்லும் ம் னு சொன்னா வர்ற தைலயே உன்ற மக கழுத்துல என்ற மவன தாலிய கட்டச்சொல்லிப்போடுவேன். சொத்து பத்து நெறைஞ்சு கெடக்குது. அத்தன சொத்துக்கும் ஒரே வாரிசு அவன் தான். மகாராணியாட்ட வெச்சு உன்ற மவள காப்பாத்திப்போடுவான்’ னு நேத்து மத்தியானம் வந்தவ ராத்திரி வரைக்கும் இருந்துட்டு சொல்லிப்போட்டு போறா” தனது முடிவில் பிடிவாதமாக இருந்தாள் வசந்தி.
“வேலையில்லீன்னாத்தான் வேற சிந்தனை வரும். எனக்கு படிக்கிற வேலை இருக்குது. நீ நெனைக்கிற மாதர எனக்குத்தெரியாம எனக்கெதுவும் நடக்காது. ‘ஊசி எடம் கொடுத்தானே நூல் நுழைய முடியும்’னு பாட்டி அடிக்கடி சொல்லறதோட அர்த்தம் இப்பத்தான் புரியுது. என்னக்கல்யாணம் பண்ணச்சொல்லி வாதிக்காதே…. நா நெறையா சாதிக்கோணும்” மகளின் பேச்சின் உறுதியால் மறு பேச்சின்றி வீட்டு வேலைகளை செய்யத்துவங்கினாள் வசந்தி.
படித்து முடித்து வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைகிடைத்ததும், வேலைசெய்யும் இடத்திலேயே வாடகை வீடு எடுத்து தங்க தன்னுடன் தாயையும் அழைத்துச்சென்றாள். விமானத்தில் முதலாக ஏறும்போது மிகவும் அச்சப்பட்ட தாயை அரவணைத்து கூட்டிச்சென்று இருக்கையில் அமரச்செய்தாள் மகி. விமானத்திற்குள் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொண்டவர்களைப்பார்த்த போது வேறு உலகத்துக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு கொண்டாள் வசந்தி.
ஒருவருக்கொருவர் ஆண்களும் பெண்களும் கூட கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். ‘தப்பு, தப்பு கடவுளே….’ என பார்க்க விரும்பாதவளாய் கண்களை மூடிக்கொண்டதோடு, கைகளை வைத்தும் மறைத்துக்கொண்டாள்.
கோவையிலிருந்து மகள் வேலை பார்க்கும் பெங்களூர் நகரத்தின் மையப்பகுதியில் அபார்ட்மெண்ட் வீட்டில் மகளுடன் இருக்க சென்றவளால் ஒரு வாரம் கூட இருக்க முடியவில்லை.
“குருவி கூடு மாதர ஊட்ல என்றனால இருக்கவே முடியாது. வேலையும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். வா போகலாம்” பிடிவாதம் பிடித்த தாயின் செயலைக்கண்டு மனம் கலங்கியவள், வேறு வழியின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினாள் மகி.
“ஒன்னொருக்கா வேலைக்கு போகோனுமுன்னு நெனைச்சீனா செத்துப்போன என்ற கட்டையத்தாண்டிப்போ. நா மட்லும் உசுரோட இருக்கற வெரைக்கும் ஓரெட்டு நகரப்படாது’ என பேசிய தாயின் செயலைக்கண்டு எதிர்க்க இயலாமல் கண்ணீர் சிந்தினாள் மகி.
திருமணமாகி விட்டால் தம்மைப்பற்றிய மனபயம் தாயிடமிருந்து விலகி விடும். பின் கணவனுடன் வேலைக்கு வெளியூர் செல்லாம். அதைத்தடுக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்தவளாய் மாப்பிள்ளையை தன்னை பெண் பார்க்க வருமாறு தாயிடம் கூற, ஓடிவந்து உச்சி முகர்ந்து மகிழ்ந்தாள்.
திருமணமாகி ஒரு மாதம் கழித்து கணவனுடன் வேலைக்கு புறப்பட்ட மகள் மகியை தடுக்கவில்லை வசந்தி.
‘எப்படியோ என்ற சொமைய எறக்கி வெச்சுப்போட்டேன். பொம்பளப்புள்ளைக பருவத்துக்கு வந்துட்டா பெத்த தாயிக்கு மடில நெருப்பக்கட்னமாதர. ஒருத்தங்கையில புடிச்சுக்குடுக்க வெரைக்கும் கருக்கு, கருக்குன்னே பயத்த மனசு பூராஞ்சொமந்துட்டு இருக்கோணும். ஒன்னி நிம்மதியா இருந்து போடுவேன்’ என தனக்குத்தானே பேசி ஆறுதலடைந்து பெருமூச்சு விட்டாள் வசந்தி!