நானே குபேரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 3,103 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லோகநாதன் வீட்டில், அவன் மனைவி சுசீலாவும் லோகநாதனும், சுசீலாவும் அவன் கணவன் லோகநாதனும் தான் வசித்து வந்தனர். 

அவர்களுக்குக் குழந்தைகள், குட்டிகள் ஒன்றுமில்லை.

ஆனால் அதற்காகச் சுசீலா எங்கெங்கே ஆலமரமிருக் கிறதென்று தேடிக்கொண்டிருக்கவில்லை. இராமேசுவரத் துக்குப் போவதற்காக ரயில் செலவு செய்யவில்லை; ஜாதகத்தை திரும்பத் திரும்பத் ஜோசியர்களிடம் காட்டிக் கொண்டிருக்கவில்லை. குழந்தை பிறந்தால் ஒரு வெள்ளித் தொட்டில் கொண்டுவந்து கொடுப்பதாக எந்தக் கடவுளிடமும் இரசிய ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. குழந்தை யாரையும் கேட்டுக்கொண்டு பிறப்பதில்லை என்று அவளுக்குத் தெரியும். தன்னைப்போலவே, பேர் வைத்துக்கொண்டிருந்தாளே, அந்தக் குசேலரின் மனைவி சுசீலா, அவளுக்கு அவள் ‘ஆர்டர்’ செய்தா பகவான் இருபத்தேழு குழந்தைகள் கொடுத்தனர். இல்லையல்லவா! ஆகையால், இந்த அசட்டுத்தனமான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. 

லோகநாதன் பீ.ஏ.படித்திருந்தும் வியாபாரஞ் செய்யத் தொடங்கினான். அவன் இருபதினாயிரம் ரூபாய் முதல் போட்டு ஓர் இரும்புக் கடை வைத்திருந்தான். சாதாரணமாக மாதம் நூற்றைம்பது ரூபாய் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு மனத் திருப்தியுடன் காலங் கழித்து வந்தான். 

அவன் காலையில் பன்னிரண்டு மணிக்குக் கடைக்குப் போவான். பிறகு நாலு மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவான். அவன் கீழ் வேலை செய்தவர்கள் அவனுக்கு எவ்விதச்சிரமமும் வைக்காமல் தாங்களே வியாபாரம், கணக்கு வழக்கு எல்லாவற்றையும் நன்றாகக் கவனித்து வந்தனர். லோகநாதன் கடையிலிருந்து வீடு திரும்பியதும் மனைவியுடன் கடற்கரைக்கோ, அல்லது நல்ல ஸினிமாக்களுக்கோ, பாட்டுக் கச்சேரிகளுக்கோ போவான். இல்லா விட்டால் வீட்டிலேயே இருவரும் ஆனந்தமாகப் பொழுது போக்கிக்கொண்டிருப்பார்கள். 

இதெல்லாம் ஐந்து வருஷங்களுக்கு முன்னர். அதாவது யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர். 

யுத்தம் தொடங்கி இரண்டு வருஷம் ஆகியிருந்தபோது லோகநாதனுக்கு நல்ல வியாபாரம் நடந்தது. அவனுக்குப் பிள்ளை குட்டிகள் இல்லாமற்போனாலும் அவனது இருபதினாயிரம் ரூபாய், லட்ச ரூபாயாகக் குட்டிபோட்டது. மூன்றாம் வருஷம் அந்த லட்ச ரூபாய் மூன்று லட்ச ரூபாயாகக் குட்டிபோட்டது. 

லோகநாதன் கடை இப்போது ஒரு பெரிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. தனக்கும் ஒரு பெரிய பங்களா சொந்தத்தில் வாங்கிக்கொண்டான். அந்த வீட்டுக்காரர் அதிலிருந்த டெலிபோனை எடுத்துக்கொண்டு போய்விடுவதாகச் சொன்னார். அதற்காக அவன் கூட ஒரு ஐயாயிரம் ரூபாய் சேர்த்துக் கொடுத்தான். 

அவன் வீட்டில் டெலிபோன் வைத்துக்கொண்டது தன் பெருமைக்காக அல்ல; வியாபார சௌகரியத்தை உத்தேசித்து மல்ல. சுசீலாவுக்காகவே அவன் டெலிபோன் வைத்தான். 

தன் கணவன் இப்படி பணத்தை வாரிக்கொட்டுவதில் சுசீலா பரம சந்தோஷமடைந்துவிடவில்லை. அவன் எப்போதும் போலவேதான் இருந்தாள். அவளுக்குத் தன் கணவனுடன் பேசிக்கொண்டு கவலையில்லாமல் இருந்தால் போதும். அதுவே சுவர்க்க போகமென்று எண்ணியிருப்பாள். ஆனால், லோகநாதன் இப்பொழுதெல்லாம் சீக்கிரமே காரியாலயத்துக்குப் போய் அஸ்தமித்துத்தான் வருவானானதால், அவனுடன் பேசிக்கொண்டிருப்பதற்காகவே டெலிபோன் வைக்கச் சொன்னாள். 

தினமும் நாலைந்து தடவையாவது சுசீலா தன் கணவனுடன் டெலிபோனில் பேசாதிருக்கமாட்டாள். அவனும் அவளைக் கூப்பிட்டு ஏதாவது வேடிக்கையாகக் கதைகள் சொல்வான். சில சமயம் அவர்கள் மாட்டில் கால்மணி நேரம் அரைமணி நேரம் பொழுது போனதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். டெலிபோன் ஆபீஸ்காரர்கள் குறுக்கிட்டு எச்சரித்த பிறகுதான் பேச்சை நிறுத்திக் கொள்வார்கள். 

லோகநாதன் வியாபாரம் மேலும் மேலும் அபிவிருத்தி யடைந்தது. அவன் இப்பொழுது இரும்பு வியாபாத்தோடு மட்டும் திருப்தியடையவில்லை. மார்க்கெட்டில் எந்தச் சாமானுக்குப் பெரிய கிராக்கி ஏற்படுமென்று எதிர்பார்த்து அவற்றை ஏராளமாக வாங்கி ‘ஸ்டாக்’ செய்து வைப்பான். கர்ப்பூரம், கொய்னா, ரேடியோ இது மாதிரி எத்தனையோ சாமான்களில் அவனுக்குக் கொள்ளை லாபம். அவன் அதி ருஷ்டம் கையிருப்பி லுள்ள சாமான்களை அவன் விற்ற பிறகுதான் சர்க்காருக்கு அதைப்பற்றிய விலை கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கவேண்டு மென்று தோன்றும். 

இப்படி யுத்தம் ஆரம்பித்த நான்கு வருஷ காலத்துக்குள் லோகநாதன் பத்து லட்சம் ரூபாய்வரை சேர்த்துவிட்டான். ஆனால், பணம் சேரச் சேர அவனுக்கு மேலும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. பங்குகள் மார்க்கெட்டில் புகுந்தான். ஏராளமான பங்குகள் வாங்கி விற்க ஆரம்பித்தான். அவன் தொட்ட தெல்லாம் பொன்னாய் மாறிற்று. 

இந்த யுத்தத்தின் பயனாய் நேற்று நம்மிடம் நாலணா கடன் வாங்கியவர்கள், இன்று குழந்தைகளைப் பள்ளிக் கூடம் அனுப்ப இரண்டாவது மோட்டார்கார் வாங்க ‘பர்மிட் இல்லையே என்று ஹிட்லரை வைவதைப் பார்க்கிறோம்! அப்படியிருக்க சாமர்த்தியசாலியான லோகநாதன் பெரிய பணக்காரனானதில் ஆச்சர்யமொன்றுமில்லை. அவன் பங்கு வியாபாரம் செய்யத் தொடங்கிய பிறகு ஐம்பது லட்சம் வரையில் சம்பாதித்துவிட்டான். 

பணச் சம்பாத்தியம் அதிகம் ஆக ஆக, லோகநாதன் மனைவியுடன் முன்போல் பழகவில்லை; பழக முடியவில்லை. அதற்குக் காரணம் அவனுக்கு அவள்மீது ஆசை இல்லாததல்ல. ஆசை இருந்தது; இருப்பதாகத்தான் அவனும் நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால், பண ஆசை அவனை அறியாமலேயே மனைவிமீதிருந்த ஆசையை விரட் டி க்கொண்டிருந்தது. அவனுக்கு இப்போது வேண்டிய தெல்லாம் பணம், பணம்தான். பதினையாயிரம் ரூபாய் இலாபம் வந்தால் “இன்றைக்கு ஒரு பதினைந்து ரூபாய் பண்ணினேன்” என்று தன் மனைவியிடமும், நண்பர்களிடமும் சொல்லிக்கொள்வதில் அவனுக்கு ஒரு ஆசை. 

சுசீலா தன் கணவளிடம் ஏற்பட்டு வந்த மாறுதலைக் கவனித்து வந்தாள். அவன் இப்பொழுதெல்லாம் காலையில் ஒன்பது மணிக்குக் காரியாலயத்துக்குப் போனால் இராத்திரி பத்துப் பதினோரு மணிக்குத்தான் திரும்பிவருவான். முன்போல் டெலிபோனில் கூடப் பேசுவதில்லை. அவள் அவனை அதில் கூப்பிடும்போதெல்லாம் அனேகமாக அவன் வேறு யாருடனாவது பேசிக்கொண்டிருப்பாள்.

இப்படித் தன் சந்தோஷத்துக்கு இடையூறு செய்யும் பணம் எதற்கு என்று அவளுக்கு வெறுப்புண்டாயிற்று. ஒரு சிறிய அரண்மனை மாதிரியிருந்த அவர்களுடைய பங்களாவில் அவளையும் வேலைக்காரர்களையும் தவிர வேறு யாரும் கிடையாது. ஒரு குழந்தை இருந்தாலும் பொழுதுபோகும் என்று அவள் எண்ணினாள். இத்தனை வருஷங் கழித்து இப்பொழுதுதான் குழந்தை இல்லாக் குறை அவள் மனத்தை உறுத்தியது. இராப் பகலாக விழுந்து, விழுந்து சம்பாதிக்கிறாரே, இதெல்லாம் யாருக்கு என்று எண்ணி ஏங்கினாள். மேலும், மேலும் இலாபம் வருவதால்தானே பங்குகள் வாங்கி விற்றுக்கொண்டிருக்கிறார். அதில் திடீ ரென்று நஷ்டம் வரும் என்று சொல்வார்களே, அப்படி நஷ்டம் வந்தால் தேவலையே என்று கூட அவள் எண்ணுவதுண்டு. 

நாளாக, ஆக லோகநாதன் பணம் பண்ணிக் கொண்டே இருந்தான். அத்தனைக்கத்தனை அவனுக்கு வீட்டு விஷயத்திலும், மனைவி விஷயத்திலும் சிரத்தை குறைந்து போயிற்று. அவன் மனைவியிடம் பிரியமில்லா திருந்தானென்பதில்லை. ஆனால் முன்போல் அவளே தெய்வமாய் அவன் இருக்கவில்லை. அவனுடைய குறி எல்லாம் சர்க்கார் யுத்த நிதிகளுக்கு விளம்பரஞ் செய்வதுபோல் ‘ஒரு கோடி ரூபாய்’ சேர்ப்பதுதான். அந்த  முயற்சியில் வெற்றியும் அடைந்துகொண்டு வந்தான். 

சுசீலா மறைமுகமாக அவன் பணப் பைத்தியத்தைக் கண்டித்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. சுசீலா ஒரு நாள் கடைத்தெருபக்கம் போன போது ஒரு பொம்மைக் கடையைப் பார்த்தாள். அங்கே சிறிதும் பெரிதுமாக ஸெலுலாயிட் குழந்தை பொம்மைகள் இருந்தன. அவள் மனதில் என்ன தோன்றிற்றோ தெரிய வில்லை, அந்தப் பொம்மைகளுள் ஒன்றைப் பொறுக்கி எடுத்து விலைக்கு வாங்கினாள். பின்னே வந்த மோட்டார் டிரைவர் அவள் அதை வாங்குவதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டான். ஆனால் அவன் அதைப்பற்றி விசாரிக்கவில்லை, 

லோகநாதன் பங்களாவில் சுசீலாவின் உபயோகத்துக்கென்றே இரண்டு அறைகள் இருந்தன. சுசீலா அவற்றில் ஒன்றில்தான் இப்பொழுது பொழுது போக்கலானாள். அவள் அடிக்கடி பொம்மைக் கடைகளுக்குச் சென்று பல விளையாட்டுப் பொம்மைகள் வாங்கி வருவாள். ஜவுளிக் கடைகளுக்குச் சென்று விதம் விதமான பட்டுத் துணிகள் வாங்குவாள். தையற்கடைக்குச் சென்று, எட்டு மாசக் பிள்ளைக் குழந்தைக்குப் போடும்படியாகக் கௌன்கள் தைக்கச் சொல்வாள். பிஸ்கெட், பெப்பர்மீண்ட் முதலிய தின்பண்டங்கள் பெட்டி பெட்டியாக வாங்குவாள். 

டிரைவருக்கு தன் யஜமானி இந்த சாமான்களை எல்லாம் வாங்குவது ஆச்சர்யமாயிருந்தது. அவன் இதை இரகசியமாகத் தோட்டக்காரனிடம் சொன்னான். தோட்டக்காரன் தான் கேள்விப்பட்டதைப் பரம ரகசியமாகப் பரிசாரகனிடம் சொல்லிவைத்தான். 

பரிசாரகனுக்கு இதன் மர்மத்தை எப்படியும் கண்டு பிடிக்கவேண்டுமென்பது. ஒரு நாள் சுசீலா தன் அறைக் கதவை மறந்து சார்த்தாமல் போய்விட்டாள். பரிசாரகன் கையில் ஒரு டம்ளர் காபியை எடுத்துக் கொண்டு மெதுவாக சப்தம் செய்யாமல் உள்ளே சென்றான். ஒருவேளை யஜமானி தன்னைப் பார்த்துவிட்டால் ‘காப்பி கொண்டு வந்தேன்’ என்று கூறிச் சமாளித்துக் கொள்ளலாமென்று தீர்மானித்திருந்தான். 

உள்ளே பரிசாரகன் கண்ட காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. சுசீலா மடியில் ஸெலுலாயிட் பொம்மையைப் போட்டுக்கொண்டு அதைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். 

‘சின்னஞ் சிறு கிளியே, கண்ணம்மா’ என்ற பாட்டை ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தாள். “ஏண்டா! கண்ணு தூங்கமாட்டேங்கறே. அப்பா வரணுமாடா!” என்று நடுவே நடுவே கொஞ்சினாள். 

பரிசாரகன் சிறிது நேரமிருந்து இந்தக் கூத்தைப் பார்த்து விட்டு வெளியே போய் விட்டான். 

அன்று சுசீலா தன் கணவணுக்கு டெலிபோன் செய்து “நான் ஆபீஸுக்கு வந்து பார்க்கிறேனே” என்றாள். லோகநாதன் சிறிது யோசனை செய்து விட்டு “வாயேன். இப்போ சும்மாதான் இருக்கேன்” என்றான். 

கால் மணி நேரத்துக் கெல்லாம் சுசீலா தன் கணவன் வேலை செய்யும் அறைக்குள் இருந்தாள். அவள் அங்கே போனது இதுதான் முதல் தடவை. லோகநாதன் உயர்ந்த ரக மேஜை நாற்காலிகள் போட்டிருந்த ஒரு தனி அறையில் கம்பீரமாக அமர்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தான். மனைவியைக் கண்டதும், அவன் புன்னகை புரிந்து அவளை ஜாடை காட்டி உட்காரச் சொன்னான். பிறகு டெலிபோன் சம்பாஷணையில் ஈடுபட்டான்:- 

ஊஹும் நிலக்கரி கறுப்பாக இருக்கிறதா? வேண்டாம். பாகிஸ்தான் மோட்டாரா! நூற்று ஐம்பத்தைந்தா? பதினாயிரம் வாங்கு. கள்ளிமலை எஸ்டேட்டா? மூங்கில் நிறைய இருக்காக்கும்! ஒரு இருபதினாயிரம் இருக்கட்டும். நாளைக்குப் பேப்பர் செய்ய மூங்கில் கிராக்கி ஏற்படுமோனா? ஆனால் அந்த மில்கள் சங்கதி என்னாச்சு? இராத்திரிக்குள்ளே பதில் வந்தாதான் எனக்குத் தூக்கம் வரும். எத்தனை மணியானாலும் எழுப்பி விஷயத்தைச் சொல்லணும். சரிதானே! ஆல்ரைட்!” 

சம்பாஷணை முடிந்ததும் “சுசீலா நானே உனக்கு ஆபீஸெல்லாம் காட்டணு மென்கிறது. நல்ல வேளை நீயே வந்தே. காண்பிக்கிறேன். வா” என்று காரியாலய மெல்லாம் சுற்றிக் காண்பித்தார். முக்கியமான பேர்களை அறிமுகப் படுத்தி வைத்தார். அன்று அகஸ்மாத்தாக அவருக்கு அதிக வேலை இல்லாமையால் இருவரும் ஸினிமாவுக்குப் போயினர். 

அங்கே படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சுசீலா நடுவே நடுவே படக்கதையைப் பற்றி ஏதாவது கேட்பாள். படத்திலே மனத்தைச் செலுத்தாத லோகநாதன் பதில் ஒன்றுஞ் சொல்லாமல் சிரிப்பான். அவள் “இந்தப் பெண் நன்றாக நடிக்கிறதே” என்று சொன்ன போது லோகநாதன் “ஆறு தியேட்டர்களை வாங்கிவிடலாம்” என்றான். நகரத்திலுள்ள ஸினிமாக் கொட்டகைகளை எல்லாம் ஏன் வாங்கிப் போடக்கூடாது என்று அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். சுசீலாவுக்கு அவன் ஏதோ பணம் பண்ணுவதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறானென்று ஊகித்துதாள் அவள் அவனுடைய பணப்பைத்தியத்தைப்பற்றிக் கவலைப்பட்டாள். பிறகு இருவரும் வீடு சென்றனர். 

இராப்போஜனத்துக்குப் பிறகு படுக்கச் சென்றார்கள். சுசீலாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. தூங்குவதுபோல் படுத்துக்கொண்டிருந்தாள். இரண்டு மணி இருக்கும். டெலிபோன் மணி அடித்தது. லோகநாதன் படுக்கையில் இருந்து ஒரே பாய்ச்சல் பாய்ந்து டெலிபோனில் குழாயை எடுத்து வைத்துக்கொண்டான். டெலிபோனில் வந்த சேதியைக் கேட்டபோது அவன் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது. 

“என்ன ஆறு மில்களையும் வாங்கி விட்டாயா? இன்னொருதரம் சொல்லு. இரண்டு ஸினிமா கொட்டகைகளா! ரொம்ப பேஷ்! இந்தப் பேரத்தில் நாற்பது லட்சம் லாப மென்று சொல். பேஷ், பேஷ், பேஷ் ஹா! ஹா! ஹா!” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். 

இந்த வினோதமான பேச்சைக் கேட்டதும் சுசீலா படுக்கையை விட்டு எழுந்து வந்து “ஏன் இன்னும் தூக்கம் தெளியவில்லையா? சொப்பனத்திலா பேசுகிறீர்கள்!” என்று படபடப்புடன் கேட்டுக்கொண்டே டெலிபோனைப் பிடுங்கி வைத்தாள். லோகநாதன் சிரிப்பு ஓயவில்லை. 

“நானா தூங்குகிறேன்! முட்டாள் பசங்கள் தூங்கிக் கொண்டிருப்பான்கள், நான் பணம் பண்ணுவேன். இன்றைக்கு ஐம்பது லட்சம் பண்ணினேன். நான் ஒரு கோடிக்கு ராஜா! நான் ராஜாதி ராஜன். நான் குபேரன். 

நானே கு…பே….ரன் ! 

நா னே குபே ரன்!

நானே கு பே ர ன்” 

என்று பாடத் தொடங்கினான். 

சுசீலாவுக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவள் கணவனைக் கட்டிக்கொண்டு “ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? உடம்பை என்ன பண்ணுகிறது?” என்று கேட்டாள். லோகநாதன் சில நிமிஷ நேரம் புலம்பிவிட்டு ஒய்ந்தான். 

பிறகு அவன் கண்ணைத் திறந்தபோது சுசீலாவைப் பார்த்து “அம்மா! எனக்குப் பெப்பர்மிட் வேணும்” என்று குழந்தைமாதிரி சொன்னான். 

சுசீலாவுக்கு உண்மை விளங்கிற்று. ஆனால் அவள் என்ன செய்யமுடியும்? “தரேண்டா. கண்ணே!” என்று தேற்றினாள்! அவளுக்குக் குழந்தை கிடைத்துவிட்டது!

– கதாமணி பிரசுரம் – 5, பதிப்பாசிரியர்: என்.ராமஸ்வாமி (துமிலன்), முதற் பதிப்பு: 1944, ஜோதி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *