ஜமீலா




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தச் சின்னஞ்சிறு தகர வீட்டினுள் பழைய கயிற்றுக் கட்டிலில் தலைசாய்த்துக் கிடந்த ஜமீலாவுக்குக் காற்றோடு காற்றாய் மிதந்து வந்து மூக்கில் நுழைந்த பால் மணம் அவளைச் சுயநிலைக்குக் கொண்டு வந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நிற்க முடியாது நிமிர்ந்து விட்டநிலை என்பதால் மெல்லச் சிரமப்பட்டுப் படுக்கையில் இருந்து எழுந்து கவனத்துடன் இறங்கி நடந்தான்.
சில்லென்று சன்னல் வழியே குளிர்காற்று முகத்தில் படுகிறது. கொஞ்சம் சுறுசுறுப்புக் கூடுகிறது. தலையை மூடியிருந்த முக்காட்டைச் சரி செய்து கொண்டு அடுப் படிக்கு நகர்கிறாள். மனத்துக்குள் ஒரு சோகப் பந்து உருண்டு வந்து மூச்சையே அடைக்கிறது.
அது மூத்தவனின் நினைவா… இல்லை இளையவனின் நினைவ…அல்லது அந்த இரண்டு பேரையும் தந்து விட்டுப் போன புருஷனின் நினைவா என்று அவளுக்குத் தெரியவில்லை. பொங்கி வந்த பாலில் ஒரு கை தண்ணீரை அள்ளி ஊற்றினாள். அது அடங்கியது. ஆனால் பொங்கிப் பெருகிய மனத் துயரம் அடங்க மறுத்தது. பால் பானையைப் பார்த்தவாறே நிற்கிறாள்.
“ஜமீலா… வெறுங்காலோட இப்படித் தரையில் நின்னா காலைப் பிடிச்சு இழுத்துக்கும்… இப்ப எதுக்கா எழும்பிச் சிரமப்படறே… உனக்கும் தண்ணி கலக்கி எனக்கும் நானே கலக்கி எடுத்துட்டு வரமாட்டேனா நான்… வந்து கட்டில்ல இரும்மா நீ”
காதலும் கருணையும் நிறைந்த அவன் கணவன் ஜாகிர் உசேனின் கரும்புக் குரல் தான் அது. இருபத்து எட்டு வருஷங்கள் ஓடிப்போயிருந்தாலும் அவன் நினைவில் இமைகள் இப்போதுகூட நனைந்து போகின்றன. புக்கத் தீமா மலையேறும் பள்ளத்தாக்கில் அந்தச் சின்னஞ்சிறு தகரவீட்டில் தான் அவன் அவளைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றியவன். காலம் அவனை அவ்வளவு சீக்கிரம் அள்ளிக் கொண்டு போய் அவள் கனவுகளை எல்லாம் கலைத்துப்போட்டு வேடிக்கைப் பார்த்தது. அமீது பாய் அவளைப் பதினெட்டு வயதிலேயே ஜாகீர் உசேனுக்கு “நிக்காஹ்” செய்து கொடுத்துவிட்டார். சிராங்கூன் சாலை யில் ஒரு பிரபலமான நகைக் கடையில் வேலைபார்த்த ஜாகீர் அந்தக் கடையில் பொறுப்புடன் நடந்து, முதலாளியின் மனத்தில் இடம் பிடித்திருந்ததால் அவர் அவனைச் செல்லப் பிள்ளையாய் நடத்தினார். அவன் வேலைக்குத் தகுந்த சம்பளத்தைப் போட்டுக் கொடுத்தார். ஜமீலா வந்ததும் கூடவே கொஞ்சம் சம்பளத்தை அவனுக்குத் தந்தார்.
கையில் உள்ள பணத்துக்குத் தகுந்தவாறு அவள் குடும்பம் நடத்துவதுதான் ஜாகீருக்கு மிகவும் பிடித்தமான விஷயமாய் இருந்தது. அவள் அந்த அளவுக்குச் சிக்கனமாய் இருந்து சேமித்து வைத்திருந்தாள். மணமுடிந்த ஐந்தாண்டு களில் இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்து விட்டார்கள். இன்னொரு பிள்ளை அதுவும் ஒரு பெண்பிள்ளை பிறந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று மனைவியிடம் கேட்பான் ஜாகீர் உசேன்.
ஆண் பிள்ளைகள் மணமுடிந்து மனைவியுடன் போய்விட்டாலும், பெண் மக்கள் புகுந்த வீடுபோன பின்பும் பாசத்துடன் இருப்பார்களே என்றுதான் வெளியிடுவான். ஆனால் ஜமீலா அதை மறுத்துவிடுவாள். ஆசையை
“பிள்ளைகளைக் கட்டிக்கிட்டு வீட்டுக்கு வர்ற மருமகளுங்க நம்மளப் பாசத்தோட பார்த்துக்க மாட் டாங்களா என்ன… உங்க ஆசைக்காக நான் இன்னொரு பிள்ளையைச் சுமந்து அதுவும் ஆண்பிள்ளையா பொறந் துட்டா என்ன பண்றதாம். இப்ப இருக்கிற இந்த இரண்டு பேரும் போதும்; இவுங்கள வளர்த்துப் பெரியவங்களாக் கினா அதுவே போதுங்க என்பாள். அவன் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் அவள் சொன்னது போல் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்த மருமகள்கள் இருவரும் அவளை இன்றைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கும் இந்த அவலநிலையை நினைக்கும்போது கணவனின் நிறைவேறாத அந்த ஆசையும் நினைவில் வந்து மனத்தை இறுக்கியது. அஸ்ஸலாமு அலைக்கும் குரல் கேட்டுத் தன் நிலைக்குத் திரும்பிய ஜமீலா கண்களைத் துடைத்துக் கொண்டு வஅலைக்கும் ஸலாம் சொல்லியவளாய் வாசலுக்கு வரு கிறாள். எதிரே ஜூபைதா கையில் ஒரு சாப்பாட்டுக் கேரியருடன் நிற்பது கண்டு
வாங்க அக்கா, வாங்க என்று தடுமாறுகிறாள். கையில் இருந்த கேரியரைப் பக்கத்தில் கிடந்த சிறு மேசை மீது வைத்துவிட்டு, அந்த இடத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்க்கிறாள். ஜமீலா எதையும் பேசாமல் அவள் உட்கார இருக்கை கொண்டு வந்து போடுகிறாள்.
“இப்படி உக்காருங்க அக்கா… நான் தண்ணி கலக்கிட்டு வர்றேன்.
சொல்லிக் கொண்டே நகர்ந்தவளின் கையைப் பிடித்து “இங்க நீ கொஞ்சம் குந்து ஜமீலா… உங்கிட்டே கொஞ்சம் பேசிட்டுப் போகத்தான் நான் இப்ப வந்திருக்கேன்…” வலுக் கட்டாயமாய்த் தன் பக்கத்திலேயே இருத்திக் கொள்கிறாள்.
“நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா ஜமீலா… உன்னோட ரெண்டாவது மகனையும் விரட்டிட்டியாமே… கொஞ்சமாச்சும் பொறுமை வேணும் உனக்கு… பார்த்தா பசுமாதிரி இருந்துகிட்டு இப்படியா பாதகஞ் செய்யறது. சின்னவன் சொன்னான்’’
“யா அல்லாஹ்!” அக்கா நீங்க என்ன சொல்றீங்க… நான…நானா.. என்னைப் பார்த்தா இப்படிக் கேட்கறீங்க’ அவள் குழந்தைபோல் தேம்பினாள்.
“ஆமாம் ஜமீலா… பொம்பளைங்க பொறுமையின் அவதாரமா இருக்கணும். அதிலேயும் நம்ம மாதிரி பிள்ளைகள பெத்த மனுஷிங்க பொறுமையைக் கடைப் பிடிச்சு… விட்டுக் கொடுத்துப் போகணும். அப்பதான் வாழ்க் கையிலே அமைதி கிடக்கும். திருக்குர் ஆனையும் திருநபி(ஸல்) அவர்கள் வழிமுறைகளையும் பூரணமாய்க் கற்றறிந்த உனக்குத் தெரியலே” சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு அவளை உற்றுப் பார்க்கிறாள் ஜமீலா.
தன் குடும்பத்தை நன்கு அறிந்தவள்… தான் பட்ட சிரமங்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பவள். தன் பிள்ளைகள் நடந்து கொள்ளும் முறைகளையும் நன்றாகத் தெரிந்தவள். இவளா இப்படிக் கேட்கிறாள். இவளா இப்படித் தனக்கு அறிவுரை சொல்கிறாள். நினைக்கும் போதே அவளுக்குச் சிரிப்பு வந்தது. எல்லாம் காலத்தின் கோலம், என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
“இன்ஷா அல்லாஹ்… அப்படியே ஆகட்டும் அக்கா. நீங்க என்மேல வெச்சிருக்கிற அன்புக்கும் பிரியத்துக்கும் நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன்…”
பொறுமையாய்ச் சொல்கிறாள். ஜுபைதா எழுந்து கொண்டாள்.
“நல்லது ஜமீலா… எப்பவும் பொண்ணு பொண்ணாத் தான் இருக்கணும். அனாவசயமான கோபதாபங்களுக்கு ஆசாபாசங்களுக்கு இடந்தரக்கூடாதும்மா… நான் வர்றேன். போய்ப் பிள்ளைகளைப் பாரு… உள்ளேயே அடங்கிக் கெடக்காதே..”
அவள் போய்விட்டாள். ஜமீலா உள்ளே திரும்பினாள். மறுபடியும் கட்டிலில் வந்து உட்கார்ந்தாள்.
இன்றைக்கு மூன்றவாது நபர் வீடுதேடி வந்து தனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்குத் தன்னை ஆளாக்கிவிட்டுப் போன அருமை மக்கள் இருவரையும் நினைக்கிறாள். ஒவ்வொரு பிள்ளைக்கும் மடியேந்தித் தன் உதிரத்தையே பாலாக்கி இரண்டு வருடங்கள் வரை கொடுத்தவளாயிற்றே.
அந்த அமுத கலசங்களைத் தாங்கி நிற்கும் நெஞ்சுக் குழியில் துக்கம் பீறிட்டு வருகிறது. அந்தத் துக்கமே அவளை மீளாத் துயிலில் ஆழ்த்திவிடக் கூடாதா என்று இப்போது ஏங்குகிறாள்.மூடிய கண்ணுக்குள் ஜாகீரின் முகம் தெரிகிறது. வேலைக்குச் சென்றவன் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டு அங்கேயே கண்களை மூடிட அவளுக்கு இந்த உலகமே இருண்டு போன து. எல்லாமே அவனோடு போய்விட்டதாக நினைத் தாள். இரண்டு பிள்ளைகளையும் இரண்டு கைகளில் பிடித்துக் கொண்டு சுவரில் சாய்ந்து போனவளுக்கு மாலையில் தாய் பிள்ளைகள் ஒன்றுகூடி ஜனாஸாவைக் கொண்டுவந்து வைத்துக் கண்ணீரில் நின்றபோதுதான் இனி எதிர்காலம் அவள் கையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்ற உண்மை புரிய ஆரம்பித்தது.
“ஜமீலா…. நீ அழுதுகொண்டே இருந்தால் பிள்ளை களை யார் கவனிப்பது. நீ இப்படி எல்லாம் அழுதால் உன் கண்ணுக்கு மேலும் மேலும் கஷ்டம்தான் என்பதை நீ அறியாதவளா?
“நபிகள் நாயகத்தின் வாழ்க்கை திருக்குர்ஆனுக்கு ஒரு விளக்கவுரையாய்த் திகழ்வதுபோல… அல்லாஹ் அருளிய திருக்குர்ஆனை ஓதி அல்லாஹ்விடம் “துஆ” கேளு!’ இப்படியே அழுதுகிட்டே இருக்காதே.
“இறப்பு என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத நியதி என்பது உனக்குத் தெரியாததல்லவே இது ஈடு செய்ய முடியாத இழப்புதாம்மா… முஸ்லிம் பெண்கள் தங்கள் இஸ்லாமியக் கடமைகளை உணர்ந்து அண்ணலாரின் திருமகளார் பாத்திமா பாத்திமா நாச்சியாரின் வாழ்க்கையும், பிராட்டிமார்களாகிய கதீஜா, ஆயிஷா போன்றவர்களின் சீரிய வாழ்க்கையும் முன் மாதிரியாகக் கொண்டு மிச்சஞ் சொச்ச வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவாயாமா..? மனசைத் தேத்திக்கிட்டு மக்களைப் பாரு”
சுற்றி நின்றவர்கள் சொல்லிய ஒருமுறை, திருமுறை, பெருமுறை என்னும் முப்பெரும் புகழுக்குரிய வார்த்தை களே உடம்புக்குத் தெம்பூட்ட ஜமீலா புயலுக்குப்பின் அமைதி தேடும் பூங்கொடியாய் வாழ்க்கையைத் தொடர்ந் தாள். அங்கும் இங்கும் நாலைந்து வீடுகளில் வீட்டு வேலை செய்தாள்.
“நீ தான் நன்கு ஓதிய பிள்ளையாய் இருக்கிறீயே… பத்துப் பிள்ளைகளுக்கு ஓதக் கத்துக் கொடுத்தா உன்னோட மனசுக்கும் அமைதியா இருக்கும், வருமானமும் கெடைக்குமே” என்று அவள் வேலை பார்த்த டாக்டரின் வீட்டு அம்மா சொல்ல அதுவும் அவளுக்குச் சோறு போட்டது. பிள்ளைகள் படித்தார்கள், வளர்ந்தார்கள், உயர்ந்தார்கள், ஒவ்வொருவரும் உத்தியோகத்திலும் அமர்ந்து விட்டார்கள். ஆனால் அதற்காக அவள் தன்னைக் காப்பாற்றிய வேலையை விட்டுவிடவில்லை. மூத்தவன் உத்தியோகத்தில் அமர்ந்ததுமே பெரிய இடத்துப் பெண் ஒருத்தியை அழைத்து வந்தான். இவளைத் தான் “நிக்காஹ்’ திருமணம் செய்து கொள்வேன் என்றான்.
“பெரிய இடத்துப் பெண்ணுக்கு நம்முடைய வாழ்க்கை முறை ஒத்துப் போகாது மகனே…! நம்மைப் போல் எளிய பெண்ணாகப் பாரு என்றாள் ஜமீலா, ஆனாலும் அவன்தான் ஜெயித்தான். திருமணம் முடிந்து இரண்டு மாதங் களுக்குப் பின் அவன் தாயிடம் மெதுவாகச் சொன்னான் “பானுவுக்கு, வசதி போதலேம்மா” என்று முணக ஆரம்பித்தான், தாய் எதையும் பேச முடியாமல் திகைத்து நின்றாள்.
“அவுங்க வசதியினால எனக்குக் காரும் வீடும் வந்துருக்கும்மா, தம்பிக்கும் நல்ல இடத்தில வேலைக்குச் சிபாரிசு பண்ணியிருக்காங்க, நீ எதுக்கும் பயப்படாதே, எதுவும் வேணுமின்னா போன் பண்ணு… பத்து நிமிஷத்தில வந்து நிற்பேன்” என்றவனாய் ஒரு கையில் பெட்டியும் மறுகையில் மனைவியுமாய் நடந்தான். தன்னிடமிருந்து ஏதோ ஒன்று பிரிவது போல் துடித்தாள் ஜமீலா… இளையவன் ஆறுதல் சொன்னான்.
“நானில்லையாம்மா உனக்கு…!” என்றான். மனம் கொஞ்சம் ஆறியது. நாள்கள் வாரங்கள் மாதங்களாகி ஆண்டுகள் இரண்டும் ஓடிப்போயின.
இளையவனுக்கு ஜமீலாவே பெண் பார்த்து மணமுடித்து வைத்தாள். எளிய குடும்பத்தில் பெண், ஓரளவு படித்தும் இருந்தாள். அவளைத் தன் பிள்ளைக்குக் கொண்டு வந்த பின்பு ஜமீலாவுக்கு மனம் அமைதியானது. மகன் வேலைக்குப் போனான். அவன் வருமானத்தில் குடும்பம் கொஞ்சம் செழிக்க ஆரம்பித்தது. வந்த மருமகள் தம் மாமியாரைப் பற்றிக் குறைசொல்ல ஆரம்பித்தாள்.
“நம்மோட கௌரவம் என்ன ஆவுரது? இவுங்க ஏன் அடுத்த வீட்ல எச்சல் பாத்திரம் கழுவணும்…. வீட்ல உட்கார்ந்து சாப்பிட முடியாதா என்ன… எனக்கு வெளியே போக வெட்கமா இருக்குதுல்லே…?” என்று அவனுக்குத் தலையணை மந்திரம் போட்டாள். அது வேலை செய்தது. மனைவி சொல்லே மந்திரம் என்று மகனும் அம்மாவிடம் பேச ஆரம்பித்தான்.
“இப்படி நாலு வீட்ல வேலை செய்தா என்னைப் பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்களாம்மா… பேசாம வீட்ல இருங்களேன்” என்றான்.
ஜமீலாவுக்குச் சிரிப்புதான் வந்தது. எந்த வேலையைச் செய்து அவனை ஆளாக்கினாளோ அந்த வேலையையே அவன் பழிப்பதை நினைத்து தனக்குள் வருந்துவதைத் தவிர வேறொன்றும் அவளால் செய்ய முடியவில்லை. பேசாமல் வீட்டிலே உட்கார்ந்துவிட்டாள். அதுவே அவளுக்கு இல்லாத வியாதிகளையெல்லாம் கொண்டு வந்துவிட்டது.
இரண்டு வாரம் முழுசாய் முடியவில்லை. சின்ன மருமகள் தனது சித்து வேலையைத் தொடங்கினாள்.
“இப்படிச் சும்மா குந்தித் தின்கிறது நல்லாவா இருக்கு, வெளியே செய்த வேலைகளை வீட்ல செய்யலாம் தானே!” என்று இடித்துரைக்க ஆரம்பித்தாள். ஜமீலாவும் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.
ஒருநாள் ஏதோ காலையில் துணிக்குப் பெட்டி போட்டுக் கொண்டிருந்த துணி கருகியதைக் கவனிக்காமல் போய்விட்டாள். அதற்காக மருமகள் வாய்க்கு வந்தவாறு திட்டியதுடன் புருஷனிடம் குறை சொல்லவும் ஆரம்பித் தாள். அதிலிருந்து தினமும் ஏதாவது ஒரு குறை கண்டு பிடிப்பதும் வம்பு வளர்ப்பதும் வழக்கமாகிப் போனது. சின்ன மகன் ஒரு நாள் தாயிடம் சொல்லிக் கொள்ளா மலேயே வீடு பார்த்துக் கொண்டு வெளியேறிப் போனான். ஜமீலா இப்போது வருந்தவில்லை.
தன் வயிற்று இனக்கொழுந்துகள் வளர்ந்து ஆளானதும் தனக்கென்று ஒரு பந்தம் வந்ததும் தன் தொப்புள் கொடி பந்தத்தை அறுத்து எறிந்துவிட்டார்கள். அவ்வளவுதான் என்று தன் நாள்களைக் கடத்திக் கொண்டு மறுபடியும் வேலைக்குப் போகத் தொடங்கினாள். அவளுக்குத் தன் பிள்ளைகள் மேல் பாசம் இருந்தாலும் தன்மானம் பேசியது. தன்னை மதிக்காத பிள்ளைகளைத் தேடி அவள் தானாகப் போக விரும்பவில்லை. கஷ்ட நஷ்டம் எதுவானாலும் தன் கணவன் வாங்கிப் போட்டு வாழத் தொடங்கிய அந்தப் பழைய வீட்டிலேயே அந்த அன்பான கணவனின் நினைவுகளில் கரைந்து கொண்டிருந்தாள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றோரின் மேன்மையை எவ்வளவு அழகாகச் சொல்லி வைத்திருக் கிறார்கள்…
“உங்கள் தாய், தந்தைகள் உங்களுக்குச் சொர்க்கமும் ஆவர். நரகமும் ஆவர். அவர்களுக்குக் கட்டுப்படுவதால் சொர்க்கமும், மாறு செய்தால் நரகமும் கிடைக்கும் என்றும்,
“தாய் தந்தைகளின் வாழ்விலும், மரித்த பின்னரும் அவர்களுக்காக அருள்புரிய இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருப்பதும் பிள்ளைகள் மீதுள்ள கடமையாகும்.”
திருக்குர்ஆனின் வசனத்தையெல்லாம் தெரிந்தும் இவர்கள் உணரவில்லையே…!” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வாள். ஆனாலும் தாய் பிள்ளைகளில் சிலர் அவளைத் திமிர் பிடித்தவள் என்றும், மருமகளையும் மகன்களையும் வைத்துவாழத் தெரியாதவள் என்றும் குறை சொல்லித் திரிந்தார்கள். சிலர் நேரிடையாகவே கேட்டார்கள். அவள் அவர்களின் பேச்சுக்காகக் கவலைப்படுவதை விட்டுவிட்டாள்.
கையிலே திருக்குர்ஆனும், ஐந்து வேளை தொழுகையும், அவளுக்குத் துணையாய் இருந்தன. அவளைப் புரிந்தவர்களின் அன்பும் ஆதரவும் அவளின் கவலையை மறக்கச் செய்தன.
“பேசாம நம்ம வீட்ல பேரப் பிள்ளைகளைப் பார்த்துட்டு இருந்திடேன் ஜமீலா- நீ ஏன் வீடு வீடாப் போய் இன்னும் கஷ்டப்படறே!” என்று டாக்டர் அவர்களின் மனைவி கேட்டபோது, உங்க அன்புக்கு ரொம்ப நன்றிம்மா.. நான் உயிரோட இருக்கிறப்ப எப்படி உழைச்சி சாப்பிட்டேனோ அதே மாதிரி என் மவுத்துக்கு நானே நாலு காசை சேர்த்து வைக்கணும். அதனாலதான் இப்படிக் கஷ்டப்படறேன்” என்றாள்.
ஜமீலாவுக்கு உள்ள மன உறுதி அந்தப் படித்த பணக்கார அம்மாவை அயர வைத்தது.
“அல்கம்து லில்லாஹ்… உனக்கு எல்லா நன்மை களையும் இறைவன் செய்வார் ஜமீலா” என்று மனத்தால் வாழ்த்துகிறார். ஜமீலா சுவரில் தொங்கும் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி ஓடிக் கொண்டிருக்கிறது. இதோ ஜமீலாவும் ஓதத் தொடங்குகிறாள்.
– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.