செய்தி – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,771
கணேசன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து, ‘நாட்டு நடப்புகளை தினமும் தெரிஞ்சுக்கணும்.
அதனால் நாளையில இருந்து வீட்ல பேப்பர் போடச் சொல்லிட்டேன். தினமும் பேப்பர் படிங்க’ என்றார்.
பேப்பரை படித்த மனைவி சாந்தி, ‘பார்த்தீங்களா அந்த ஊரு பொண்ணு! புருஷன் ஆபீசுக்கு போன சமயம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரன் கூட தொடர்பு வச்சிருக்கா…’ என்றாள்.
மகள் திவ்யா, ‘அந்த ரவுடி கூரியர் பாய் மாதிரி அந்த வீட்ல போய் கொள்ளையடி்சிட்டு, வீட்டுக் காரம்மாவையும் அநியாயமா கொலை பண்ணிட்டான் பாருங்கப்பா…’ என்று வருத்தப்பட்டாள்.
ஒரு மாசம் கழித்து பேப்பர்காரன் சந்தா கேட்டு வந்தான்.
‘இந்தாப்பா பணம் இனி பேப்பர் போடாதே’ என்றார் கணேசன்.
‘என்ன சார் என்னாச்சு?’
‘வீட்ல உள்ளவங்க பேப்பர்ல கள்ளக்காதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு இந்த மாதிரி விஷயங்களைத்தான் சுவாரஸ்யமா படிக்கிறாங்க. இது அவங்க மனசை பாதிச்சுடும். அதனால் இனி பேப்பர் போடவேண்டாம்’ என்றார் கணேசன் தீர்க்கமாக.
– எஸ். முகம்மது யூசுப் (ஜூன் 2014)