சுப்பன்னா




(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இத்துப் போன பழைய மண்வீடு சரிந்து விழுந்ததுபோல அந்தக் குடும்பம் விழுந்து நொறுங்கிவிட்டது.
மிஞ்சினது கடேசியாக சுப்பன்னா ஒருத்தன்தான்! ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டது:
“இவன் போய்த் தொலைஞ்சிருக்கணும் மொதல்லெ.” “போறதுக்கும், வரணுமில்லெ?”
“அளுத்தி எளுதீட்டான் தலையிலெ!”
“பாவம்! இருந்துட்டு போட்டும். நம்ம தலை மேலெயா இருக்கான்?”
“பெத்தவ அவனைச் செல்லமா வளர்த்துட்டா,”
“வாயெத் தொறந்து அம்மான்னு சொல்றதுக்கே அனைய. நாள் ஆயிட்டதெ…
“பல்லும் சொல்லும் மெல்லத்தானெ வரணும்பாகெ?”
“இது ரொம்பவும் மெள்ளெ !”
“சின்ன வயசிலெ பய பொத்து பொத்துண்ணு இருப்பான்.”
“கம்மஞ்சோறும் கட்டித் தயிறும் செஞ்ச வேலை!”
குடும்பத்தில் கடேசிக்கு முன்னதாக மிஞ்சினது அம்மாவும் பிள்ளையும்தான்.
உயிர் பிரியும்போது சுப்பன்னாவின் அம்மா சொன்னது:
“அய்யோ…இந்தப் பிள்ளையெ விட்டுட்டுப் போறனே எப்பிடிப் பிழைக்கப் போறானோ.”
‘ரங்கய்ய நாயக்கருடைய குடும்பமும் இப்பிடி ஆயிட்டதே’ என்று அதிசயமும் கவலையும் பட்டது ஊர்.
அம்மா சாகும்போது அவனுக்கு ஜாதகப்படி வயசு பதினாறு. உடம்பின் வயசுப்படி பார்த்தால் அதைவிடக் குறைவு.
மனசின் வயசுப்படி பார்த்தால் அதைவிடக் குறைவு.
இந்தக் ‘குழந்தை’யெ இனி யாரு காப்பாத்துவா?
“டேய் சுப்பன்னா, எத்தனை நாளைக்கிடா இப்பிடி இருப்பெ… ஏதாவது வேலைக்குப் போகக்கூடாதா?” என்றால் “என்னையெ இந்தக் காக்கா வலிப்புல்லெ திடீர் திடீர்ண்ணு வந்து கெடுக்கு மாமா.. இல்லைண்ணா நா இப்பிடி இருப்பனா?” என்பான்.
சொந்தக்காரர்களின் வீடுகளில் நடக்கும் நல்லது பொல்லது களுக்குக் கூப்பிட்டு சோறு போடுவார்கள். அன்றைக்கு மட்டும் சுப்பன்னா மாரிலே சந்தனமும், முகத்திலே குங்குமப் பொட்டும், வெத்திலைச் சிகப்புமாய் முழக்கிக் கொண்டிருப்பான்.
மற்ற நாளையில் பசி வயிற்றைக் கிள்ளும்போது, தெருவழியாய் தெரிந்தவர்களின் முகங்களைப் பார்த்துக்கொண்டு, பசி விஷயத்தை மட்டும் பேசாமல், மற்ற விஷயங்கள்பற்றிப் பேசிக்கொண்டிருப்பான்.
சோறு போட்டுச் சலித்த சொந்தக்காரர்கள், கண்டதும் விலகிப் போய்விடுவார்கள். சிலர் பேசிவிட்டு மட்டும் விலகிப் போவார்கள்.
களத்துக் காலங்களில் கோழிகளை விரட்ட அவனைக் காவல் இருக்கச் சொல்லுவார்கள். அவனும் விசுவாசமாய் இருப்பான். சன்மானமாக பத்துப் பைசா கொடுப்பார்கள். அது கையில் கிடைத் ததும், தான் வேலைசெய்து சம்பாதித்துவிட்டதாக நினைப்பான்! அம்மாவுக்கு மிகவும் முடியாமல் படுக்கையில் கிடந்தபோது, “நீ செத்துப் போயிட்டா எனக்கு யாரு கஞ்சித் தண்ணி ஊத்துவா… நீ இருக்கும்போதே எனக்கு ஒரு கலியாணம் செஞ்சி வச்சிட்டுப் போ. அவ எனக்கு கஞ்சி காச்சி ஊத்துவா!” என்றான்.
ஒரு அம்மாவுக்குத் தனது பையன் இப்படி ஒரு ‘சமர்த்தாய்’ பேசிவிட்டால் போதுமே! “நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சால்லெ அவ ஒனக்கு கஞ்சித் தண்ணி காச்சி ஊத்துவா.”
“பின்னெ, சம்பாதிக்காமெ சும்மாவா. இந்தா பாரு கண்ணு மொதலாளி களத்துலெ காவல் இருந்து சம்பாதிச்சனாக்கும்!” என்று பத்துப் பைசாவைக் காட்டினான்.
பெத்தவளுக்கு ஒரு வகையில் பொங்குதலும், மறுவகையில் துக்கமும் அடைத்தது.
அம்மா இறந்தவுடன் சொந்தக்காரர்கள் அவனைக் கூட்டிக் கொண்டு போய் கொஞ்சகாலம் வைத்திருந்தார்கள். பிறகு, பையப் பைய ஊர்க்காரர்களிடம் அவனைப்பற்றிய குறைகளை எடுத்து விளக்க ஆரம்பித்தார்கள்.
“விடிஞ்சதும் பட்டுண்ணு எந்திரிக்காமெ பெரிய்ய சீமா வீட்டுப் பிள்ளை கெணக்கா படுக்கையிலேயே புரண்டுகிட்டுக் கிடக்கான்”.
“ஒரு ஏங்கல் தாங்கலுக்கு வந்து உதவலைன்னாலும் பச்சைப் புள்ளையெ கொஞ்சம் பொறுப்போடெ பாத்துக்கிடலாமில்லையா?”
“வீட்டுப்பிள்ளைகளோடெ சரிவாதாட்டம் வாதாடிக் கிட்டிருக்காங்ஙெ!”
“எனக்கு கம்மஞ்சோறு வேண்டாம். நெல்லுச்சோறுதான் வேணும்ங்கான்! நமக்கென்ன தீரவாசத்துலெ நஞ்சையா கெடக்கு?”
“காலு கழுவ குளத்துக்குப் போகாதலேண்ணாக்க கேக்கமாட் டேங்கான். பாத்துக்கிட்டேயிருங்க. ஒரு நாளைக்கியில்லேன்னாலும் ஒரு நா வலிப்பு வந்து தண்ணியிலே மிதக்கத்தான் போறான்.”
சொந்தக்காரர்கள் அவனைக் கைகழுவிய பிறகு, சம்மந்தகாரர்கள் கொஞ்சநாள் ஆதரித்துக் கைவிட்டார்கள். அவன் இப்போது கேர்* வீட்டுப்பிள்ளை?
(கேர்* அமெரிக்க உதவியுடன் பவுடர் பாலும் மக்காச் சோள ரவை உப்புமாவும் ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நேரம் தினமும் கிடைக்கும்.)
நாளுக்கு நாள் சுப்பன்னா மெலிந்து கந்தல் உடுக்கையுடன், ஊத்தைப் பற்களுடன், குளிக்காத அட்டுடன், காக்காய் வலிப்பு வந்து திடீரென்று கீழே விழுந்த காயங்களில் மொய்க்கும் ஈக்களுடன் திரிந்து கொண்டிருந்தான்.
அந்தநிலையிலும், அகோரப்பசியிலும், அவன் தனக்குத் தெரிந்தவர் கள் தட்டுப்பட்டால், “என்ன சின்னையா, எங்கெ போறீக… என்ன வேலை நடக்கு?” என்று முகம் மலரக் கேட்பான்.
“அத்தெ. யாரைத் தேடுறீகெ… ஒங்க சுலோசனா இப்பத்தான் இப்படிக்கூடி போனா” என்பான்.
“மாமா ஒங்க மைனர் ரொம்பத்தான் என்னெக் கேலிபண்ணு தான். கொஞ்சம் சண்டைபிடிங்க!” என்று சிரிப்பாணியோடு சொல்லுவான்.
“என்ன பெரியாத்தா, கடைக்குப் போகணுமா? நாம் போறேனே ?” என்று கேட்பான்.
யாருமே இவனை அங்கீகரிப்பதில்லை.
பசி, தாங்கமுடியாமல், வயிறு நமட்டும்போது மட்டுமே சொந்தக் காரர்களின் வீடு தேடி வந்து குடிக்கத் தண்ணீ கேட்பான்.
நீத்துப்பாகம் கிடைத்தாலும் கிடைக்கும். தண்ணீர் கிடைத்தாலும் கிடைக்கும்; வசவு கிடைத்தாலும் கிடைக்கும்.
இந்தச் சமயத்தில் அந்த ஊரில் நடந்த ஒரு ‘விசேஷ’த்துக்காக வந்த தூரத்து ஊர்க்காரரும் சுப்பன்னாவின் சொந்தக்காரருமான சின்ன குருவய்ய நாயக்கர் கண்ணில் சுப்பன்னா பட்டான். அவன் இரும்புச் சட்டத்தில் உட்கார்ந்துகொண்டு, பிய்ந்துபோன
பிய்ந்துபோன முட்டாசுப் பெட்டியில் சிறிய குச்சியால் தாளம் போட்டுக்கொண்டு,
“அங்க முத்து மங்கமுத்து
தண்ணிக்குப் போனாளாம் -அவ
தண்ணிக்குப் போனாளாம்..”
என்று பாடிக்கொண்டிருந்தான். அதைக் கேட்ட நாயக்கருக்கு சிரிப்பு வந்தது. புருவக்கட்டில் கையை வைத்து வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு அங்கே பார்த்து, “இது யாரு பிறவிடா?” என்று விசாரித்தார்.
“அவந்தான் புலிகுத்தி சுப்பா நாயக்கர் பேரன் – மங்கம்மாவின் மகன்” என்று கேள்விப்பட்டதும் பதறிப்போனார். ஆனால் அவனோ, அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே,
“தண்ணிக்குப் போனாளாம் – அவ
தண்ணிக்குப் போனாளாம்…”
என்று ராகத்தை நீட்டி நீட்டிப் பாடிக்கொண்டிருந்தான்.
மங்கம்மா என்று நினைத்ததும் அவர் கண்கள் பனித்துவிட்டன. அவர் சிறுவனாக இருந்தபோது இந்தக் குடும்பத்தில் வந்து மாசக் கணக்கில் தங்கி விருந்தாடியிருக்கிறார். ஊருக்குப் புறப்படும்போதெல் லாம் புத்தாடைகள் எடுத்து வைத்து வழியனுப்புவார்கள்.
இந்த ஊருக்கு அகதி பரதேசிகள் என்று யார் வந்தாலும் பசி அமர்த்தி நிழல் தரும் குடும்பம் அது. அடடா! எப்பேர்ப்பட்ட கைகள் அவை?
“அரே சின்னய்யா…” என்ற ஆதூரத்துடன் அழைத்தார் அவனை. அந்தக் குரல் அவனை என்னவோ செய்தது. ரொம்ப நாளைக்கப்புறம் இந்தக் குரலைக் கேட்கிறோம் என்று பட்டது. அவர் உட்கார இருப்புச் சட்டத்தில் கொஞ்சம் இடம் ஒதுக்கித் தந்தான்.
“டேய், உனக்கு நான், முறைக்குத் தாத்தா வேணும்டா… எங்க ஊருக்கு வாடா. வா போயிருவோம்.”
திடீரென்று சுப்பன்னாவுக்கு, ‘இதென்ன சீண்ரம்!’ என்று பட்டது. அவனது உலகத்துக்குள் புகுந்த சூறாவளி அங்கே நிம்மதியாயக் கிடந்த தூசிகளை எல்லாம் வாரிச்சுழற்றியது.
திரும்பவும் வாத்ஸல்யத்துடன் அவனை அழைத்தார். “முடியாது… நா வரமுடியாது” என்று வெடுக்கென்று பதில் சொன்னான். கொஞ்சம் கழித்து, “அங்கெ உப்புமா கிடைக்குமா?” என்று கேட்டான்.
“இது என்னடா உப்புமா, நாறப்பய உப்புமா… நல்ல பாம்பே ரவையிலெ நிஜமான உப்புமாவே உனக்கு தினமும் கிண்டித் தரச் சொல்றேன்”
அவர் அவனுக்குத் தரப்போகும் புது ஆடைகள், பலகார பண்டங்கள் எல்லாத்தையும் வர்ணித்தார்.
சுப்பன்னாவுக்குக் கேட்கக் கேட்க தேட்டம் வந்தது என்றாலும், அதெல்லாம் இங்கேயே கிடைத்தால் என்ன என்றிருந்தது.
“இன்னும் இங்கெ இருக்காதடா… வம்பா செத்து போகப்போறெ. பேசாம ஏங்கூட வந்து சவுரியமா இரு” என்றார்.
செத்துப்போய்ட்டா, அம்மா இருக்கிற எடத்துக்கு போயிறலாம் என்று நினைத்தான். உடனே பாடும் சந்தோஷம் நின்று போனது.
‘இந்த ஆளோடு ஊருக்குப் போறதா… அங்கெ அந்த ஊரில் என்ன இருக்கப்போகுது?”
இங்கே அவனுக்கு எவ்வளவோ உண்டு. எவ்வளவு நல்ல மரங்கள் இங்கே.. இந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்தால் அவர்க ளுடைய வீடு தெரியும். அந்தத் தெருவோடு நடந்துபோக பிரியமாக இருக்கும்.
ஒரு நாள் தெரு ஜன்னல் வழியாய் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். அம்மாவும் தானும் படுத்திருந்த கட்டில் அதோ, அங்கே தெரியுது. அம்மா படுத்துக் கிடந்த அறை அந்தா, அங்கெ இருக்கு.
“ஏலெ! என்னடா எட்டிப் பாக்கெ? இந்த சோலியெல்லாம் வச்சிக்கிடாதெ. போ அந்தாலெ” அந்த வீட்டை வாங்கியவர் சினந்து சொன்னார் அவனைப் பார்த்து.
‘சரிய்யா பாக்கலை. கிட்டெ வந்துதானே பாக்கக்கூடாது. தூரத் லேர்ந்து பாக்கலாமில்யா?” என்று நினைத்துத் திரும்பிவிட்டான்.
ஊர் மடத்திலெ அவன் படுக்கிறதுக்குண்ணு ஓர் இடம். தலை வச்சிக்கிட அவனுக்குண்ணு ஒரு மரக்கட்டை. அதுக்குப் பதிலா வேற எதை வச்சாலும் தூக்கம் வராது. இங்கெ அவ்வளவும் தெரிஞ்ச முகங்கள் – அவனைக் கேலி செய்யவும், வையவும், அதட்டவும், கோபிக்கவும், சிரிக்கவுமாக.
தெக்குத் தெருவிலே ருப்பிணிச் சித்தி இருக்கா. எப்பவாவது கூப்பிட்டுக் கஞ்சி ஊத்துவா. கடையிலே வாங்கித் திங்க, ஒரு கூறு பருத்தி கொடுப்பா.
அடித்திரும்பின பிறகு கம்மாய்க்கரை மரத்து எணல்லெ மாடு மேக்கிற பிள்ளைகளுக்கு நொண்டி நாயக்கரு கதை சொல்லுவாரு. பண்டுகம் அய்யாவு உடுக்கடிச்சிப் பாட்டுப் படிப்பான்.
“ம்ஹூம்…. நா ஒங்க ஊருக்கு வல்லெ.”
“அடக் கோட்டிக்கார பயலே தினோமும் நா ஒனக்கு வாங்கித் திங்க துட்டுக் குடுப்பேண்டா…”என்றார் அவர். அப்படிச் சொல்லி விட்டு, வேட்டியின் சொருகு முனையை உருவி, முடிச்சை அவிழ்த்து 25 பைசா நாணயத்தை எடுத்து, “இந்தா கால்ரூபா” என்றார்.
“எனக்கு இது வேண்டாம். பெரிய கால் ரூபாய் வேணும்” என்று தனது உள்ளங்கையில் ஒரு வட்டம் போட்டும் காட்டினான். சரி என்று ஒரு 50 பைசா நாணயத்தைக் கொடுத்ததும், அமைதியாக வாங்கிக் கொண்டான்.
அவர் அங்கே இருக்கும்வரை அவனுக்கு தினமும் ஐம்பது பைசா கிடைத்தது. புதுச் சட்டையும், கால்சட்டையும் வாங்கிக் கொடுத்தார். கொஞ்சநாளைக்கெல்லாம் சுப்பன்னா அவரோடு அவருடைய ஊரான கங்கரிசல்பட்டிக்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.
சுப்பன்னா போனபிறகு ஊர்க்காரர்களுக்கு அவன் இருந்த இடம் வெறீச்ன்ெறு இருப்பதுபோலத் தெரிந்தது.
அதைக் கொஞ்சநாள் பேசிச் சிரித்துவிட்டு மறந்துபோனார்கள். எப்பவாவது திரும்பவும் ஞாபகத்துக்கு வரும்.
சுப்பன்னா போயிருந்த கங்கரிசல்பட்டி கிராமத்துக்கு இங்கே யிருந்து யாராவது நல்லது பொல்லதுகளுக்குப் போய்வந்தவர்கள், அவனைப்பற்றிச் சொல்லுவார்கள்.
“பய, இப்பொ நல்..ல கிழங்குகெணக்கா இருக்கான்!”
“அவுக சௌக்யமா? இவுக சௌக்யமா? அதெப்படி இருக்கு. இதெப்படி இருக்குண்ணு தொளைச்சித் தொளைச்சி விசாரிக்கான்.”
ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ஒருவர் சொன்னார்: “ஊர் மடத்துலெ நா படுக்கிற இடத்திலே இப்பொ யார் படுக்குறா?”ண்ணு கேக்கான்!
ருப்பிணிச் சித்தியிடம், சுப்பன்னா விசாரித்ததாகச் சொன்னதும் ரொம்ப நெகிழ்ந்துபோனாள்.
சில மாதங்கள் கழித்து ஒருநாள் திடீரென்று சுப்பன்னா இங்கே வந்து எல்லாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தான். அப்புறம் ஒரு திகைப்பு-அம்புட்டு வசதியோடு இருந்தவன் இங்கே எப்படி இருப்பான் என்று. வரிசையாய் ஒவ்வொரு தெரிந்த வீட்டுக்கும் போய் சேம லாபங்கள் விசாரித்தான்
“சித்தீ, சவுரியமா இருக்கியா?”
“சித்தப்பா எப்படி இருக்கீஹெ?”
“பெரியம்மா, ஒனக்கு இன்னும் தொறத்தல் நிக்கலையா? இதைக் கேட்டதும் அந்தப் பெரியம்மாவுக்கு ஆயாசம் அதிகமாகி தொடர்ந்து ஒரு பாட்டம் தொறத்திவிட்டு, “நிக்கலையேயப்பா…. என்னெ கொண்டுபோக மாட்டேங்கானே… ஆமா நீ ஏ இங்கே வந்தே… பேசாம அங்கெனையே கெடக்கப்படாதா?”
“என்ன பெரியம்மா அங்கனையே இருந்தா எப்பிடி? நா ஒங்களை யெல்லாம் பாக்க வரவேண்டாமா?”
ஆமாம்! வரணுந்தான். எப்போ நீ அங்கே திரும்பிப் போகப் போறே?”
“நாம் போகலை பே… நா இங்கெனதாம் இருக்கப்போறேன்.”
“ஏண்டா! அங்கென ஒனக்கு என்ன கொறைவு? ராசாவாட்டம் இருக்கயே இப்பொ. நண்டு கொழுத்தா செலவுகுள்ளே இருக்காதாம்.” என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே அவளுக்குத் தொறத்தல் ஆரம்பித்துவிட்டது “போ பெரியம்மா அது நம்ம ஊருமாதிரி இல்லே” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
திரும்பவும் சுப்பன்னா ஊர் வாய்க்குள் விழுந்து மெல்லப் பட்டான்.
எல்லா கிராமங்களையும் போலத்தான் இந்தக் கிராமத்திலேயும் உலகக்காரியங்கள் ஒழுங்காக, பின்னம் பிசகாமல் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
வேப்ப மரத்தின்மேல் ஒழுங்காக காகங்கள் கூடு கட்டி முட்டை இட்டன. காகங்களுக்கும் தெரியாமல் – சமயம் பார்த்து குயில்கள் முட்டைகளை அதில் வைத்துவிட்டுச் சென்றன. நாய்கள் காரண மின்றி குரைத்தன. ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொண்டன. அன்னக்காவடிக்காரன் சோற்றுப்பிச்சை வாங்கிக்கொண்டு போனான்.
சித்தேசிகள் வெங்கல மணியையும் மரமணியையும் லயம் தவறாமல் அடித்துப்பாடி, துட்டு வாங்கிக்கொண்டு சுவரில் காவிக் கட்டியால் கிறுக்கிவிட்டுப் போனார்கள். ராத்திரிகளில் ராப்பாடியும் கால வீரனும் வந்து குரல் ஆழத்திலும் எச்சுலும் பாடுவது குழந்தை களுக்குப் பயமாக இருந்தது.
காலை வேளைகளில் கரைமரத்து நிழலடியில் தச்சாசாரி கலப்பைக் குத்திகளைச் செதுக்கிச் சேர்க்கும் நேர்த்தியையும்-
சாயந்திரம் கொல்லாசாரி பட்டறையில், பழுக்கக் காய்ச்சிய இரும்பின் தகதகப்பையும் அது குறடுக்குள் அகப்பட்டு, சம்மட்டி, சுத்தியல் இரண்டின் மாறி மாறி அடிகளுக்குப் புரண்டு புரண்டு கொடுப்பதையும் தெவிட்டாமல் பார்த்துக்கொண்டேயிருப்பான் சுப்பன்னா.
எப்பவாவது சில வாரங்கள் போய் கங்கரிசல்பட்டியில் இருந்து விட்டு இங்கே திரும்பிவரும்போது, பிரிந்த குழந்தையைத் தாய் ஆவலோடு பார்க்க ஓடி வருவதுபோல வந்து,
சித்தீ சௌக்கியமா?
பெரியம்மா சுகமா?
மாமா எப்படி இருக்கீஹெ?
என்று விசாரிப்பான்
ஏன் இப்படி ஓடி ஓடி வருகிறான் இந்த ஊருக்கு… இந்த ஊரில் அவனுக்கு அப்படி என்ன இருக்கு என்று மண்டையைக் குடைந்து கொள்கிறார்கள்…. விடை தெரியவில்லை யாருக்கும்.
– சதங்கை, ஏப்ரல் 1981.