கீரியும் பாம்பும்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீங்க என்னைக் கலியாணம் செஞ்சிக்கிட்டீகளா, இல்லே உங்க அம்மாவைக் கலியாணம் செஞ்சிக்கிட்டீகளா?”
லோகாவின் இந்தக் கேள்வியால் நவனீது அதிர்ந்து நின்றான்.
சுவை மிகுந்த அந்த மெல்லிய நாக்கா இப்படிப் பேசுகிறது!
இனிமை சொட்டிய உதடுகளா இப்படிப் பேசிற்று !
சொர்க்க மிதக்கத்தில் அமிர்தம் கசியும் பற்கள் வழியாகவா இந்த வார்த்தைகள் வெளிவந்தன!
முகம் புதைத்து அழுத்தும் கிளுகிளுப்பில் அவள் உடம்பே கூச்சத் தினால் பொங்கிச் சிரிப்பாய்க் குலுங்குமே, அந்தக் கழுத்தின் வழியாகத் தான் இந்தச் சொற்கள் வெளிவந்தனவா!
அவன் கண்கள் விரிந்தன; பிறகு சிறுத்து அவளைப்பார்த்தன. கொல்லன்பட்டறைத் துருத்தியாய்ச் சூடான காற்றைச் சுவாசப்பை இரைத்தது. சிவந்த கண்கள் நீராவியைக் கக்கின. இரண்டு நெருப்புத் துண்டுகள் அதிலிருந்து சொட்டின.
அவன்முன் அவள் அழகுப்பேயாய் நின்றுகொண்டிருந்தாள். அவனுடைய அந்தப் பார்வையினால் அவள் சிறிதும் நாணியதாகத் தெரியவில்லை; பதிலுக்குத் தீர்க்கமாய்ப் பார்த்தாள் அவனை. தன்னுடைய சொல் அம்பு அவனைப் படுத்துவதில் குரூரத் திருப்தி.
தனிமையில் ஒருநாள், கொடிப் பின்னலாய்ப் ‘பின்னி’க்கொண்டி ருந்தபோது லோகா தனது உணர்ச்சியை வெளியீடு செய்தாள். மனிதர் கள் விசித்திரமானவர்கள்; ஒவ்வொருவரும் தங்கள் உணர்ச்சிகளை ஒவ்வொருமாதிரி வெளியீடு செய்கிறார்கள். லோகாவுக்கு உணர்ச்சி அதிகமாகும்போது குறிப்பிட்ட இடத்தில் நறுக்கென்று கடித்து விடுவாள்.
வெட்கத்திரை அவிழ்ந்து சகஜமாகிக் கனிந்த முதல்முதலில் அவள் கடித்த அன்று, நவனீது, “அம்மா…”என்று வேதனையின்பம் தாங்காமல் அரற்றினான்.
இன்பத்திலும் துன்பத்திலும் அவன் உச்சரிக்கும் அந்த ‘அம்மா’ எனும் மந்திரச்சொல் அவளுக்கு அறவே பிடிக்காமல் போயிற்று.
மறுதரம் அவன் அப்படி உச்சரித்தபோது லோகா அவனை முன்னிலும் பலமாகக் கடித்து, “அம்மாவாம், அம்மா…நினைக்கிற வேளையையும் நேரத்தையும் பார்,” என்றாள் பொய்ச்சீற்றத்துடன், அப்புறம்தான் அது பொய்ச்சீற்றம் என்று அப்பேதை உணர்ந்தான்.
மாதத்தில் அவள் போடுகிற ‘மூணு நாள் லீவி’ன்போது -மாமியாள் காதில் விழாதபடி – புருஷன் காதில் கடுமையாகப் புகார் செய்வாள். “என்ன காரம் என்ன காரம்! சை. மனுசி தின்பாளா இதை?” அவள் முகம் கோணும்போதுகூட நல்லா இருக்கே என்று நினைப்பான். பெண், தனது அழகைக் காண்பிக்க – நிரூபிக்க – முகத்தை இப்படி யெல்லாம் கோணிக்காட்டுவதும் உண்டா என்றுதான் நினைத்து மகிழ்ந்தான் அப்போது.
அந்த ‘லீவின்’போது மூணுநாளும் தாயார் தனம்மாவின் சமையல் நவனீதுவுக்கு அமிர்தமாக இருக்கும். மூலையில் உட்கார்ந்திருக்கும் லோகாவுக்கும் மனசு இருப்புக்கொள்ளாது. படித்துக்கொண்டிருக்கிற வாரப்பத்திரிகையில் கண் இருந்தாலும் காது சமையல் அறையில் இருக்கும்; அம்மாவும் பிள்ளையும் என்ன பேசிக்கொள்கிறார்களோ என்று. சிரித்துப் பேசும் சத்தம் வந்தால் அது தன்னைப்பற்றியதாக இருக்குமோ என்று ஓர் ஐயம். என்னதான் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டாலும் காற்று சில வார்த்தைகளை அடித்துக்கொண்டு போய்விடும். காற்றுக்கும்கூட இந்த வஞ்சகம் வேண்டாம்.
“அப்பண்டு வத்தக்குழம்பு எப்படி இருக்குடா?”
“கேக்கணுமாம்மா எத்தனெ நாளாச்சி இப்பிடி சாப்ட்டு.”
தனக்குச் சாதம் கொண்டுவரும்போதே லோகா பளிச்சென்று சொல்லிவிடுவாள், “எனக்கு மோரும் சாதமும் போதும்”, என்று. தனம்மாவும் நினைப்பாள், ‘இதை அவளுக்குப் போடக்கூடாது’ என்று. ஆனாலும் ஒப்புக்கு: “மோர்சாதத்துக்குப் பக்கத்திலே கொஞ்சம் வத்தக்கொழம்பு போட்டுக்கோயேன்.” முகத்தை உர்ர் என்று வைத்துக் கொள்ளும் மௌனம்தான் அதுக்குப் பதில். மனசுமட்டும் உள்ளுக்குள் இப்படிச் சொல்லிக்கொள்ளும்; ‘ஒன் வத்தக் கொழம்பைக் கொண்டு போயி குப்பையிலெ கொட்டு.’
மாமியாளைப் பார்க்கும்போது அவளுக்கு, ‘எப்படித்தான் வந்துட்டுப் போகுது’ என்பதுபோல் இருக்கும்.
தனம்மாவுக்கும் இவளைப் பார்க்கும்போது, ஒரு நல்ல பருத்திச் செடிக்குப் பக்கத்தில் முளைத்துவிட்ட செழிப்பான களைமாதிரித் தெரியும். ‘எங்கிருந்தோ வந்தா எனக்கூண்ணு’ என்று நினைப்பாள்.
பாசத்துக்கும் பந்தத்துக்கும் பிரகடனம் செய்யாத ஒரு போர் நடந்துகொண்டே இருந்தது.
கல்யாணமாகி வந்த புதுசில் அவள் சீதனமாகக் கொண்டுவந்த நகைகளையெல்லாம் அவளுக்குப் பூட்டி அழகு பார்ப்பாள் தனம்மாள். எத்தனை வகை நகைகள் அவள் கொண்டுவந்திருந்தாள்! அந்தக் கிராமத்திலேயே யாருக்கும் அத்தனை
அத்தனை வகை நகைகள் கிடையாது.
பூடி.
அலுக்கு.
தாழம்பூ
ஒன்னப்பு.
முருகு.
குருத்தட்டு.
பச்சைக்கல்.
வெத்திலைச் சுருட்டு.
மூண்டுக்கு மணி.
குவலை.
பீங்காந் தட்டு.
பவளம்.
புடை தாங்கி.
நெத்திச்சுட்டி.
பெருவிரல் முடிச்சு.
பீலி.
பில்லணை.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மாலையில் நண்பர்களோடு ‘வாக்’ போய், அரட்டை அடித்து விட்டு வீடு திரும்ப நவனீதுக்கு ராத்திரி ஆகிவிடும். வீட்டில் அருவம் ஒடுங்கி விளக்கின் வெளிச்சம் தணிந்து அவனுக்காகவே காத்திருப்பது போலிருக்கும். ‘கேட்’ அருகில் தொட்டியில் பெருக்கி வைத்துள்ள குளிர்ந்த தண்ணீரில் கை கால் அலம்பிக்கொண்டு உள்ளே நுழைவான். எழுந்துநின்று ஒரு கனிந்த சிரிப்புடன் அவள் வரவேற்பாள். தலை நிறைய மல்லிகைப் பாரம்; துணைக்குக் கனகாம்பரம்; விளக்கின் வெளிச்சத்திற்கும் முகத்தின் மஞ்சளுக்கும் பற்களின் நிறத்துக்கும் ஏதோ கூடிப் பேசிவைத்தமாதிரி ஓர் ஒற்றுமை.
உள்ளே நுழைந்ததும் வழக்கம்போல அவனுடைய அந்த முதல் கேள்வி. “அம்மா சாப்பிட்டாச்சா?”
முதல்நாள் இந்தக் கேள்விக்குச் சந்தோஷமாகவே பதில் சொன்னாள்.
மறுநாள், “ம்,” என்று தலையை ஆட்டினாள்.
அதற்கு மறுநாள் ‘ம்’ இல்லை. வெறும் தலையசைப்பு மட்டும். அடுத்த நாள் மௌனம்.
அதற்கடுத்த நாள் கொஞ்சம் அழுத்திக் கேட்டதும் ‘வள்’ என்று ஒரு பதில்.
“சாப்டாமெயென்ன; இங்கெயென்ன சாப்பாடு போடாமெ கட்டிப்போட்டு வைக்கோலா போடுறாகெ.”
‘நான் கேட்டதில் என்ன தப்பு இருக்கு; ஏன் இப்படி இவள் பொரியணும்?’ நவனீது அதிர்ந்துதான் போனான். அன்று வயத்துக்கு மாத்திரம் சோறு; மற்றதில் பட்டினி. இனிமைக்கு மறுபக்கம் இப்படி ஒரு கசப்பும் உண்டோ?
லோகாவுக்குப் பக்கத்தில் நவனீது இருக்கும்போது தன் மகன் தனக்கு அந்நியமாகிவிட்டதுபோல் தெரியும் அவளுக்கு.
அவனுடைய தாயாருக்குப் பக்கத்தில் அவன் இருந்துகொண்டு சந்தோஷமாய்ச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தால், தன்னுடைய பிரியத்தைப் பங்கு போடவந்த பங்காளி என்ற ரீதியில் அவளைப் பார்ப்பாள் லோகா.
ஒருதரம் மகனுக்குக் குளிப்பறையில் வெந்நீர் எடுத்து வைத்திருந்த அழகைப் பார்த்து திடுக்கிட்டுப் போனாள். “இதைவிட பச்சைத் தண்ணியே தேவலை,” என்றாள் மாமியாள். நகவெதும்பலாய் இப்படித் தான் இருக்கணும் என்று சொல்லி, சூடான வெந்நீர் திரேகத்தில் பட்டால் தோலின்மேலுள்ள மினுமினுப்பு மங்கிவிடும் என்றாள் மருமகள். இருவரும் மோதிக்கொண்டார்கள். அவரவர் கட்சிக்கான வாதங்களை எடுத்து முன்வைத்தார்கள் வக்கீல்களும், ‘லா’ பாயிண்டு களும் கெட்டது கேடு.
முற்ற முற்ற நவனீதுவால் காதுகளைப் பொத்திக்கொள்வதைத் தவிர வழி இல்லை. ‘நேத்து வந்தது’க்கும் ‘அநாகரிக’த்துக்கும் ஏற்பட்ட புகைச்சலுக்குள் மூச்சுத் திணறினான்.
தனம்மா தன்னுடைய மகளின் ஊருக்குப் போய்ச் சிலநாள் தங்கி இருக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். அப்போது ‘கோடை’ மறைந்து திடீரென்று ‘வசந்தம்’ வந்துவிட்டது போலிருக்கும். அவள் திரும்பிய வுடன் அவளோடு அக்கினிநட்சத்திரம் வந்துவிடும்.
குடும்பத்தைக் கூட்டாகயிருந்து இனியும் நடத்திக்கொண்டு போவது முடியாதோ என்று பல சமயம் தீர்மானத்துக்கு வரவேண்டிய திருக்கும். சிரிப்பும் கலகலப்பும் கும்மாளமும் போய் அழுகையும், சிடுசிடுப்பும் சில சமயங்களில் தம்பதிக்குள் வாய்ச்சண்டை முற்றி அபூர்வமாக கைச்சண்டையும் போடவேண்டிய கட்டமும் உண்டு.
பாவம் நவனீது பாடுதான் ரொம்பவும் கஷ்டம். ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கோ இரண்டு பக்கமும் அடி.’ அவனுக்கு, ‘புலியும் ஆடும் புல்லுக்கட்டும்,’ கதை ஞாபகத்துக்கு வரும்.
கிராமத்துச் சராசரிப் பெண்கள் நடந்துகொள்கிறமாதரியே அவர்களும் சந்தித்தவுடன் முதலில் நாள் பூராவும் உட்கார்ந்து பேசித் தீர்த்தார்கள். மறுநாள் ஒருவர் தலையில் ஒருவர் பேன் பார்த்தார்கள். மூணாவது நாள் பேசிக்கொள்ளாமல் உம் என்றிருந்தார்கள். நாலாவது நாள் எரிமலை வெடித்தது போல் சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.
குடும்பத்தில் ஆண் சம்பாதித்து, பெண் சுகவாசியாக இருப்ப தென்பது ஒரு வகை. உழைப்பில் பெண்ணும் சமபங்காளியாக உழைப்பதோடு அவள், வீட்டிலும் வந்து அதிகப்படியாக உழைக்கிறது என்று ஒன்று இருக்கிறது. நவனீதுவின் குடும்பம் இரண்டாவது வகை. பெண் இங்கே அதிகம் சக்தி கொண்டவள். அதோடு லோகா பத்து ஏக்கர் கரிசல் நிலம்வேறு கொண்டுவந்திருக்கிறாள்.
நாட்கள் செல்லச் செல்ல, ‘தனிக்கூடு கட்ட’ வேண்டுமென்ற உணர்ச்சியைத் தூண்டி வந்தாள் லோகா. பிறகு அதுவே அவளது தாரகமந்திரம் ஆகிவிட்டது.
குடும்பத்தினுள் அமைதி போய்விட்டது. ஒரே கலவரம். பிறந்த வீட்டுக்கு அவளை அடித்துத் துரத்தினான். நிலைமை சீர்திருத்தத்துக்கு வரவில்லை, முன்னிலும் சிக்கல் ஆகியது.
ஊர்ப் பெரியவர்கள் இருதரப்பாரையும் சண்டைபிடித்து லோகா வைக் கொண்டுவந்துவிட்டார்கள். வெடித்துக் கீறிய வெள்ளறிப் பழத்துக்குப் பூண் பிடித்துவைத்தால் நிற்குமா? முன்னையும்விட பிரச்னை தீவிரமாகத் தலையெடுத்தது.
நவனீது பிடிவாதமாகத் தன் நிலையிலிருந்து அசையவில்லை. தனம்மாவுக்கு அவன் ஒரே செல்ல மகன். தனது வீட்டுக்காரர் தவறியதிலிருந்து அவளே தந்தையாகவும் இருந்து பிரியமாக வளர்த்தவள்.
“நான் வேணுமா; உங்க அம்மா வேணுமா?” என்ற கேள்வி பிறந்தது.
“அம்மாவும் வேணும்; நீயும் வேணும்.”
“அது ஒருக்காலும் நடக்காது.”
“நடக்கும். அதை நடத்திக் காண்பிப்பேன்.”
அப்போதுதான் அவள் முதலில் சொன்ன அந்த அஸ்திரத்தை பிரயோகித்தாள் அவன்மீது.
அதோடு விடவில்லை. அவள் மற்றொரு ‘பிரம்மாஸ்திர’த்தை எடுத்தாள். அப்போது பூமி நடுங்கியது. அந்தப் பூர்வீக வீட்டிலுள்ள மூதாதையரின் ஆவிகள் காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுத்தன. சொல்லவே கூசும் அந்த அபாண்டத்தை அவன்பேரில் சுமத்தினாள். தசரதனைக் கொன்ற கைகேகியையும் நல்லவளாக் கினாள் இவள்.
நெஞ்சில் வாங்கிய அடியினால் தள்ளாடினான் நவனீது.
தள்ளாடிக் கீழே சாய்வதற்குள் ஓடிவந்து அவனை ஏந்திக் கொண்டாள் தனம்மாள்.
கைகளில் ஏந்திக்கொண்டபடி மருமகளை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்தப் பார்வைக்கு லோகாவால் எதிர்ப்பார்வை பார்க்க முடியவில்லை.
– குமுதம், ஜூன் 1975.