ஒலிக்காத ஓலம்





(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னால் பாஷனைப் பற்றியோ அடுத்தவர்களைப் பற்றியோ அல்லது அரசியலைப் பற்றியோ ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசமுடியாது என்ற உண்மையில் நான் ஒரு சாதாரண மனிதனில் இருந்து ரொம்ப தூரம் விலகிப்போய் விட்டது எனக்கே நன்றாகத் தெரிந்த போதிலும் எனக்கு நானே ஒரு சுயகட்டுப்பாடு வைத்துக்கொண்டு இப்படி வாழ்வதில்தான் ஒரு இனிமை இழைவதாக எனக்குத் தோன்றுகிறது.
சென்ற வாரம் தினமலர் பத்திரிகையின் வார ஏட்டில் வெளியாகியிருந்த என் ‘பார்க்காத பார்வைகள்’ சிறு கதைக்கு வந்து குவிந்திருந்த விமர்சனக் கடிதங்களை மேலோட்டமாகத் தட்டிப் .பார்த்தபோது எனக்கு மிகவும் பரிசயமான அந்தக் கையெழுத்துக் கொண்ட ‘என்வலப்’பைக் கண்டதும் மனம் நிறைந்த மகிழ்வுடன் உறையைப் பிரித்தேன். “பல்கனி”யில் மெல்லிய இருள் கவிந்திருந்தும் இருளில் இருக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ ரசனையில் ஆழ்ந்துபோய் இருந்திருக்கிறேன் என்பது அந்தக் கடிதத்தைப் பிரித்து வாசிக்க முற்பட்டபோதுதான் உறைத்தது. எழுந்துபோய் ‘லைட்’ சுவிச்சைப் போட்டுவிட்டு வந்து படித்தேன்.
“கூலி வாங்கித் தாலி கட்டும் முதுகெலும்பற்ற ஆண்வர்க்கத்தை உங்கள் முற்போக்கான சிறுகதை நல்ல அடி கொடுத்துத் தாக்குகிறது. உங்களது எழுத்தாற்றல் எமது கேடுகெட்ட, நாறிப்போன சமுதாயத்தின் சீரழிவுகளைத் திருத்திவிடும் என்று நான் முற்றாக நம்புகிறேன்” என்று தொடங்கிய அவரின் கடிதம் என். எழுத்தாற்றலுக்குப் பெரிய சான்றிதழாய் அமைந்திருந்தது. வழக்கம் போலவே அந்த இன்பமான நிறைவின் அழுத்தத்தில் நான் லயித்து மயங்கியிருந்தேன்.
“இவர் எனது ஆக்கங்களைப் பாராட்டுபவராக மட்டும் இல்லாமல் என்னையே விரும்புபவராகவும் இருந்துவிட்டால்…” இவ்வாறான ஓர் இனிய கற்பனை உதிப்பதைத் தடை செய்யும் சுய கட்டுப்பாடு இல்லாதவளாய் அந்தக் கற்பனையைத் தொடரவிட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். கடிதத்தைப் பாதியில் நிறுத்திவிட்டது கூடத் தெரியாமல் மறைத்துக்கொண்டிருந்த கற்பனைச் சுகத்தின் முடிவில் எப்போதாவது ஒருநாள் எப்படியாவது ஒரு வகையில் இவரை நான் நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற பிடிவாதமான தீர்மானத்துடன் தொடர்ந்து கடிதத்தைப் படிக்கிறேன்.
மல்லிகையின் ‘ஜில்’ என்ற மணம் மூச்சைத் துளைத்து என் அக்காவின் வருகையை முன்னறிவிப்புச் செய்தபோது ஸ்கூலில் நடைபெறும் ஏதோ ஒரு ‘பார்டி’க்குப் போக ஆயத்தமாக அலங்காரம் செய்துகொண்டு வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டேன். இரண்டு வருடங்கள் இவ்வுலகில் என்னைவிட அதிகமாக வாழ்ந்துவிட்ட தோற்றம் அவளிடம் தோன்றாமைக்கு அவளது குழந்தைத்தனமான உள்ளந்தான் காரணமோ எனப் பலமுறை நான் ஐயப்பட்டுக் கொண்டதுண்டு. ‘பாஷனை’ப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தபோதிலும் புறப்படுமுன் ஒன்றும் தெரியாத என்னிடமே.
“என்னடி இலட்சியவாதி, இந்த சாறிக்கு இந்த பிளவுஸ் ‘மாச்’ பண்ணுதா? கொண்டையிலை பூ வைச்சது சரியா எண்டு பாரன்!” என்று இரண்டு வார்த்தை கேட்காமல் புறப்பட்டால் அவளுக்கு நிறைவு வராது எனது வாயால்.
“நல்லாயிருக்குது அக்கா” என்ற பதிலைக் கேட்பதில் அவளுக்கு ஒரு மகிழ்வு இருக்குமாயின் அதைக் கொடுப்பதில் எனக்கு என்ன நட்டம் ஏற்பட்டுவிடப்போகிறது என்ற நினைப்பில் நானும் “நல்லாயிருக்குது” என்று சொல்லிவிடுவேன். அவளுக்கு மிகவும் அக்கறை உள்ள ஒரு விடயத்தில் நான் ஒட்டிக்கொள்ளாமல் பதில் சொல்வதுபோலவே எனக்கு மிகவும் பிடித்தமான விடயத்தை அவள் மிக மேலோட்டமாகக் கேட்பாள்.
“அந்த உன்ரை-அவற்றை பெயர் என்னடி? கோபால் இல்லையே! அந்த அபிமான ரசிகரின்ரை விமர்சனம் வந்ததேடி!”
“வந்தது வந்தது” சுரத்தில்லாததுபோல் நான் பதில் சொன்னாலும் அவள் மேலும் அதைப்பற்றிக் கேட்கமாட்டாளா என்ற ஏக்கம் அந்தச் சுரத்தில்லாப் பதிலுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருந்தது. ஆனால் அவள் தான் ‘பார்ட்டி’க்குப் போய்த்தன் ‘போய் பிரண்டை’ச் சந்திக்கும் அவசரத்தில் இருக்கிறாளே!
“ஏதோ இரண்டு பேருமாய்ச் சேர்ந்து உலகத்தைத் திருத்திப் போடுங்கோ! நேரம் போயிட்டுது. நான் போட்டு வாறன்” என்று கூறிக்கொண்டே படியிறங்கி ஓடும் அவள் வேகத்திலேயே அவளுடைய சுரேஷைச் சந்திக்கும் அவசரம் தெரிகிறது. என்னிடம் – நான் அவளைவிட இளையவளாய் இருந்தும்கூட என்னிடம் – எப்போதோ வந்து குடிகொண்டுவிட்ட நேர்கொண்ட பார்வையும் நிதானமான நடையும் அக்காவிடம் இன்னும் வரவில்லை. சிறிய பிள்ளைகளுக்கு ஆசிரியையாக இருந்து எப்போதும் அவர்களுடன் பழகுவதாவோ என்னவோ இன்னமும் அதே குழந்தை ஓட்டமும் துள்ளல் நடையுந்தான்.
ஐந்து பக்கங்கள் முழுப்பக்கங்கள் நிறைய என் சிறு கதைக்கான விமர்சனம் என்ற பெயரில் என் எழுத்தாற்றலைப் புகழ்ந்திருந்த கோபாலின் கடிதத்தின் ஆறாம் பக்கத்தைப் புரட்டுகிறேன்.
“உங்கள் தரமான ஆக்கங்களுக்கு நல்ல விமர்சகனாக மட்டுமே இன்றுவரை இருந்துவரும் நான் உங்களை நேரில் பார்த்ததில்லை. அந்தக் குறையை நிறைவு செய்வதற்கு விரைவிலேயே ஒரு சந்தர்ப்பம் வரும்போல இருக்கிறது. ஆம், வருகிற வாரம் ஒரு நண்பனின் திருமணத்திற்காக யாழ்ப்பாணம் வரும்போது உங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்ய யோசித்திருக்கிறேன்…”
என் தலை திடீரென்று ‘ஜில்’ என்று குளிர்வது போலிருந்தது. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எனது அந்தரங்க ஆவல் இவ்வளவு விரைவில் நிறைவேறப் போகிறது என்ற நிச்சயமான தவிப்பில் மனம் பூவாகிப் பறந்தது. அந்தக் கணத்திலிருந்தே நான் அவருடன் கதைக்க வேண்டிய விடயங்களை மனம் உருப்போடத் தொடங்கி விட்டது. என்னைச் சுற்றியுள்ள எல்லாருமே ‘பாஷனை’ப் பற்றியும் அடுத்தவனைப் பற்றியும் பேசும்போது… என்னுடன் என்னைப்போல எனக்கு ஆர்வமுள்ள கலை, கலாசாரம், நாவல். இலக்கியம், புத்தகங்கள், இலக்கிய கர்த்தாக்கள் பற்றிக் கதைப்பதற்கு ஒருவர் வரப்போகிறார் என்பது எனக்கு நம்பமுடியாத நிச்சயமாய்த் தோன்றி என்னை மயங்க வைத்தது. எனது ஆழமான சிந்தனைகளைக் கொட்ட ஒரு வடிகால்… சீதனக் கொடுமை, சாதிப் பிரச்சினை, சமுதாய மூட நம்பிக்கைகள் இவற்றைப்பற்றி எல்லாம் யதார்த்தமாகக் கலந்துரையாட வேண்டும். அதற்கான எடுகோள்கள் பல எழுத்தாளர்களின் எண்ணங்கள் – இப்படிப் பலப்பல ஆயத்தங்கள்.
அக்கா அடுத்தநாள் கேட்டாள். என்ன திடீரென்று நூலகத்தையே திரட்டிக் கொண்டுவந்து வீட்டில் வைத்திருக்கிறாய்? இவ்வளவு புத்தகத்தையும் எங்கையிருந்து கொண்டுவந்து குவித்தாய்? என்ன விஷேசம்? நான் சொன்னேன்,
“கோபால் இங்கே வரப்போகிறார். அவரோடை இதைப் பற்றியெல்லாம் கலந்துரையாட வேணும்”.
“சரிதான்” அக்காவின் இதழ்க் கடையில் ஒரு மென்முறுவல் இழைந்து மறைந்தபோது என்னைப் பரிகசிப்பதுபோல் தோன்றினாலும், அடுத்தநாளே வீட்டில் காணப்பட்ட அழகான மலர்ச் செண்டுகளும், மேசை விரிப்புகளும், எனது விருந்தாளியை வீட்டிலே வரவேற்க அக்காவும் தன்போக்கில் ஆயத்தம் செய்கிறாள் என்று புரிந்தபோது, அக்காவின் நல்ல உள்ளத்தை எண்ணி நான் உள்ளூர மகிழ்ந்து போனேன்.
கோபால் படலையைத் திறந்துகொண்டு வரும்போதே பார்த்தேன். என்னைப் போல்தான் நிமிர்ந்த நிதானமான நடை. அக்காவைப்போல் மாநிறமாகவோ கறுப்பாகவோ இல்லாமல் என்னைப்போல் வெள்ளையாக இருக்கிறார். உயரம், எளிமை விரும்பியாக வெள்ளைக் காற்சட்டையும் வெள்ளைச் சேட்டுமே அணிந்த உருவம், சுருள் சுருளான மயிர், வெளித் தோற்றத்தில்கூட எங்களுக்கிடையில் எல்லாமே ஒற்றுமைப்பட்டு நிற்கும் அதிசயத்தை… நிதர்சனமாகக் கண்டபின்னும் என்னால் நம்பமுடியவில்லை.
அவர் உள்ளே வந்து அமர்ந்தபின் நான் நிதானமாக வந்து வணக்கம் தெரிவித்து உரையாடிக்கொண்டிருக்கிறேன்.
“இலக்கியம் என்பது யதார்த்தமாக இருக்க வேண்டும். அதீதமான கற்பனைகளும் குரூரம் ரசனைகளும், நடக்கமுடியாத சம்பவங்களும் கொண்ட சிறுகதை நாவல்களை நான் ரசிப்பதில்லை. அந்த வகையில் உங்கள் ஆக்கங்கள் தனித்துவம் பெற்றிருப்பதால் அவற்றை நான் மிகவும் விரும்பி வாசிப்பேன்.”
என்று அவர் சொல்லும்போது எனது முகம் என்றும் இல்லாமல் சிவந்து போகிறதுபோல் இருக்கிறது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் பேசுகிறேன்.
“நாம் ஒவ்வொரு நாளும் காணுகின்ற – கேட்கின்ற பிரச்சினைகளைப் பற்றியே இலக்கியமும் பேசுவதானால் அதில் என்ன சுவை இருக்க முடியுமென்று பலர் கேட்கிறார்களே!”
அந்தக் கேள்விக்கு அழகாக விடைசொல்ல எனக்குத் தெரிந்திருந்தாலும் கோபால் என்ன சொல்லுகிறார் என்று அறிவதில் இருந்த ஆர்வத்தில் அவரிடம் கேட்கிறேன்.
“நிச்சயமாக அதில்தான் சுவை இருக்கிறது. எமது வாழ்க்கை. போராட்டங்களும் பிரச்சினைகளும் நிறைந்தது. அதில் எமக்குப் புரிந்துகொள்ள முடியாத, விளங்கிக்கொள்ள முடியாத சம்பவங்கள் நிறைய நடைபெறுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நாவல்களும் சிறுகதைகளும் உதவவேண்டும். இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றிப்பேசி இருக்கிற பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
நான் நினைத்த பதிலை எனது மனதிற்குள்ளே சென்று பார்த்து வந்திருந்தால்கூட இப்படி அட்சரம் தவறாமல் சொல்ல முடிந்திருக்குமோ என்ற வியப்பில் இருந்து நான் விடுபடுமுன்பே அக்கா குசினி வாசலில் நின்று மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
“என்ன அக்கா?”
“இங்கே வாடி” என்று கூறிவிட்டு உள்ளே தலையை இழுத்துக்கொள்ளும் அக்காவிடம் போய் அவள் போட்டு வைத்திருந்த தேநீரை எடுத்துவந்து நீட்டும்போது அவர் கேட்கிறார்,
“அது யார் உள்ளே?”
“என் அக்கா. ஸ்கூல் ரீச்சராக இருக்கிறாள். புதியவர்களிடம் விரைவாகப் பழகமாட்டாள்.” என்று கூறிக்கொண்டே,
“அக்கா, வெளியிலை வாவன்” என்று குரல் கொடுக்கிறேன். அவள் நெளிந்து, வளைந்து மிகவும் சங்கடப்பட்டு வெளியே வருவதைப் பார்த்து,
“உங்கள் அக்காவுக்கு உங்களைப்போல் எழுத்தார்வம் இல்லையா?” என்று வேறு திசையில் கேள்வி கேட்கிறார் கோபால்.
அவளா? “காண்டேகர் என்று சொன்னால் அவர் எதைக் கண்டுபிடித்தார். நான் படிக்கவில்லையே!” என்று கேட்பாளே என்று நான் கூறிக் கோபாலுடன் சேர்ந்து வாய்விட்டுப் பெரிதாகச் சிரிக்கும்போது தலையைக் குனிந்துகொண்டு மெதுவாகப் புன்முறுவல் செய்கிறாள் அக்கா.
பல நாட்டின் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் அவர் பேசப்பேச அவருக்கு அருகே -மிக அருகே உள்ளம் செல்ல விழைகிறபோது எனக்கு அருகே இருந்த அவரது ‘சூட்கேசை’ என்னை அறியாமலே நீவி விடுகிறேன்.
பேச்சுவாக்கில், “வாசலில் போடப்பட்டுள்ள கோலம்…” என்று அவர் தொடங்க,
“அது அக்காவின் கைவண்ணம். எனக்கு இதெல்லாம் அவ்வளவு இன்ரறெஸ்ற் இல்லை” என்று நான் சொல்வதை,
“ஓ… ஐ… சீ… உங்கள் சிந்தனை எல்லாம் இலக்கியம் பற்றித்தானா?” என்று பெரிதாக எடுத்துக் கொள்கிறார்.
சாப்பிடும்போது பேச்சு. மறுபடியும் சீதனப் பேச்சுக்குத் திரும்புகிறது. “உங்கள் குடும்பத்தில் யாருக்கும் சீதனம் கொடுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.” என்று அவர் அபிப்பிராயப்படும் போது,
“இல்லை! இல்லை! அக்கா தன் சம்பளத்தில் மிஞ்சுவதெல்லாம் சீதனத்திற்கே சேமித்து வைக்கிறாள். நான்தான்… என்னை எனக்காக மட்டுமே விரும்புபவரையே திருமணம் செய்வதென்றிருக்கிறேன்.” என்று அவசரமாகக் குறுக்கிடுகிறேன்.
கோபால் போனபின்னர் அக்கா என்னைக் கேலி செய்கிறாள். “உனக்குப் பொருத்தமான ஆள்தான். நீ ஊரைத் திருத்தப் புறப்பட்டால் அவர் நாட்டையே திருத்தி விடுவார் போல் இருக்கிறது. இருவரும் சேர்ந்தால் உலகத்தையே திருத்திவிடலாம்.”
“ஆனாலும் அடக்கமான ஆசாமிதான். என்னை விரும்புகிறாரோ என்பதைப்பற்றி இலேசாகக் கூடத் தெரிவிக்கவில்லையே!”
எனக்குள்ளே இவ்வாறு சிந்தித்துக் கொண்டவள், இம்முறை வரும் கடிதத்தில் காதல் ராகத்தின் முதல் அரிச்சுவடி மீட்கப்படும் என்றுதான் பெரிதாக எதிர்பார்த்திருக்கிறேன்.
நான் எதிர்பார்த்தபடியே அவர் போன மூன்றாம் நாள் கடிதம் வந்தது. அவசரமாகப் பிரித்த எனக்கு இதயத்தை யாரோ சுறுக்கென்று முள்ளால் குத்தியது போலிருந்தது. அது… அக்காவிற்கு எழுதப்பட்ட காதல் கடிதம்…!
வேறொரு இளைஞரை ஏற்கனவே விரும்பும் அக்காவிற்கு அதை நான் காட்டவில்லை. இந்த உலகில் பேச்சும் செயலும் எவ்வளவு தூரம் முரண்பட்டுப் போய்க் கிடக்கிறதென்பது எனக்கு மட்டுமே புரிகிறபோது அந்த என் மௌனத்தின் அழுகுரல் எனக்கேகூடக் கேட்காமல் ஒலிக்காத ஓலமாய் பெரிதாக, மிகப் பெரிதாக எனக்குள்ளே உருவாகி ஓய்ந்து போகிறது.
– 31-12-1978 ஈழநாடு வாரமலரில் பிரசுரமானது.
– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.