ஒரு கேள்வி வீணாகிறது..!






அன்று விடுமுறை உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் பரமேஸ்வரன். டிவியில் ஒருத்தர் இண்டர்வியூ எடுக்க வந்தார். மைக்கைக் கையில் வைத்துக் கொண்டால்.. கேள்வி கேட்பது என்பதில் ஒரு பெரிய அறிவு நுட்பம் அடங்கியிருப்பதை உணராமல் பதில் சொல்பவர் இங்கிலீசில் பதில் பேச ஆரம்பிக்க, இவர் அவசரப்பட்டு இங்கிதமே இல்லாமல், ‘ஏன் நீங்க தமிழ்நாடுதானே?! தமிழ்லயே பேசலாமே?!’ என்றார். பதில் சொல்லவந்தவர் முகம் அஷ்ட கோணலானது!.
கேள்வி கேட்டவர் ஒருகணம் யோசித்திருக்க வேண்டும். கேள்விக்கு பதில் தமிழ்லதான் சொல்லணும்னு ஒண்ணும் கட்டாயமில்லை! ஆனாலும், ஆங்கிலத்தில் பேசிவிட்டதைக் குறையாய்ச் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம் எப்படி என்கிறீர்களா?!
பாஸ்கர்ராஜ்தான் அடிக்கடி சொல்வார். ‘நம்ம ஆளுங்களுக்கு மாலை போட்டுட்டு செருப்புல அடிச்சா வாங்கிக்குவாங்க!. ஆனா, செருப்புல அடிச்சுட்டு மாலை போட்டா யாரும் ஒத்துக்க மாட்டாங்கன்னு!’.
உண்மைதான்! இதே பிரச்சனையை அவர் வேறுவிதமாய்க் கையாண்டிருக்கலாம்.
‘சார், நீங்க இங்கிலீசு மீடியத்துல படிச்சவங்கன்னு நெனைக்கிறேன்! அதான் தமிழ்வரலைனு சொல்லியிருந்தா…’ பதில் சொன்னவரையும் அது காயப்படுத்தியிருக்காது! கவுரவமாய் இருந்திருக்கும்!. ஒரு கேள்வி வீணாய்ப் போனதுதான் மிச்சம்!.
எதிர்க்கட்சியாய் இருப்பது ரொம்ப ஈசி! ஆனால், ஆளுங்கட்சியா இருந்தாத்தான் கேள்விகளின் அவஸ்தை புரியும்.
எதையும் கேட்கறது ஈஸிதான். ஆனால் பதில் தருவதுதான் கஷ்டம்.’ஒரே கேள்வி உனைக் கேட்பேன் ஹரே ராம ஹரே கிருஷ்ணா உலகம் எப்போ உருப்படப்போகுது?! ஹரே ராம ஹரே கிருஷ்ணா?!’ என்ற எம்.எஸ்.விஸ்வநாதனின் அந்தக் காலப்பாட்டுதான் நினைவுக்கு வருது! இந்தக் கேள்வியாவது வீணாகமலிருந்தால் சரி! என்ன சொல்றீங்க?!