எல்லைகள்





(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்தில் கொஞ்சம் கருமுகில்கள் காணப்பட்டாலும், சூரியனின் கிரணங்கள் கிழக்குத் திசையில் இருந்து புறப்பட ஆரம்பித்துவிட்டன. கருமுகில் படைகளின் எல்லைகள் அழிந்தழிந்து புதிதாக உருவாகின்றன.
தோட்டத்தில் வெங்காய இறைப்பு முறை என்றபடியால், கந்தப்பர் விடியமுன் எழுந்து மிசினையும் இழுத்துக்கொண்டு தோட்டப்பக்கம் போய்விட்டார். இரவு நீர் ஊற்றி வைத்திருந்த பழஞ்சோற்றை ஒரு மண் சட்டியில் கொட்டி, துண்டு துண்டாக வெட்டிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் அதற்குள் போட்டுத் தேசிக்காய்ப் புளியும் மோரும் விட்டுப் பிசைந்து, பனாட்டுத் துண்டை ஒரு கையில் ரசித்துக் கொறித்தபடி, மற்றொரு கையில் பலாவிலையைக் கோலி, அதற்குள் பிசைந்த பழஞ்சோற்றை அள்ளிப்போட்டு, வயிறு நிறையும்வரை குடித்தாள் செல்லாச்சி. கந்தப்பர் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை. வெறுந் தேநீர் மட்டும் குடித்துவிட்டுத் தோட்டப்பக்கம் போனால், மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் வந்துதான் சாப்பிடுவார். பன்னிரண்டரைக்குப் பின்னர் உலை வைத்தாலும், ‘பக்ரறிச் சங்கு. இரண்டு மணிக்கு ஊத முன்னர் சமையலை முடித்துவிடுவதில் செல்லாச்சி கெட்டிக்காரிதான். சோறும் மரவள்ளிக் கிழங்குக் கறியுந்தானே!
பன்னிரண்டரை மணிவரை நீண்டு கிடக்கும் இந்த நேரத்தில் இன்று எப்படியும் ஒரு நாலு பூவரசங் கதியாலாவது வெட்டி வேலி இல்லாமல் கிடக்கும் பனங்காணிக்குப் போடவேண்டும். கந்தப்பரின் பனங்காணிக்கும், அவரின் மச்சான் சின்னத்தம்பரின் வீட்டிற்குமிடையில் உள்ள வேலி பல வருடங்களாக அடையாமற் கிடந்து இழுபடுகிறது. எல்லைக்கு அடையாளமாக இருப்பது நன்றாகப் பருத்து வளைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறி நிற்கும் மூன்றுநாலு முட்கிழுவைகள் மாத்திரமே!
தாழ்வாரத்தில் கிடந்த முக்காலியை எடுத்து வைத்து அதன்மேல் ஏறி, வீட்டு வேலியில் ஐந்தாறு பூவரசங்கதியால்களை வெட்டிக்கொண்டு, பாரையையும் எடுத்துக்கொண்டு காணிக்குப் போனாள் செல்லாச்சி. இரண்டு கிழுவங்கதியாலுக்குமிடையில் கயிறு கட்டிக் கயிற்றுக்குத் தெற்குப்புறமாக அதாவது உபாத்தியாயர் சின்னத்தம்பரின் வளவுப் பக்கமாய்க் கிடங்கு கிண்டி, கயிற்றை அவிழ்த்துவிட்டுக் கதியால்களைக் கிடங்கில் வைக்கும்போது வீட்டு விறாந்தையில் நின்று மெதுவாக எட்டிப் பார்த்தாள் தங்கமுத்து.
“என்ன… செல்லாச்சி மச்சாள்! கதியால் போடுறியள் போலை கிடக்கு…” விறாந்தையில் நின்றபடியே உரத்துக் குரல் கொடுத்தாள்.
“ஓம் ம் தங்கமுத்து..! எத்தினை வருஷமாத்தான் எல்லையில்லாமல் கிடக்கிறது! பனங்காய், விறகுகளுக்கு ஒரு அறுக்கை இருக்கத்தானே வேணும்…”
வலிந்து வரவழைத்த ஒரு புன்னகையைத் தனது முகத்தில் தொற்றவிட்டுச் செல்லாச்சி பதிலளித்தாலும்கூட, பனங்காயும் விறகும் தாங்கள் களவெடுப்பதாக இவள் சொல்லாமல் சொல்கிறாளோ என ஓர் ஐயப்பாடு மனதில் உதிக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே,
”ஓமோம்! போடத்தான் வேணும்!” என்று சொல்லிக்கொண்டே படியிறங்கித் தனது பருத்த தேகத்தையும் இழுத்துக்கொண்டு வேலிப்பக்கமாக அசைந்து வந்தாள் தங்கமுத்து. இதற்குள் கதியாலை நிறுத்தி, மண்போட்டு, பாரையின் அடிப்பாகத்தால் உரம் போட்டுக்கொண்டிருந்தாள் செல்லாச்சி. அண்மையில் வந்து பார்த்தாளோ இல்லையோ, தங்கமுத்துவின் குரலில் திடீரென ஒரு மாற்றம் தென்பட்டது.
“என்ன? கேக்க ஆக்களில்லை எண்டு நினைச்சுக்கொண்டு நினைச்சபடி அடைக்கப் போறாய் போலை கிடக்கு…”
இப்போது மச்சாள் என்ற உரிமை, நீங்கள் என்ற மரியாதைப் பன்மை எல்லாம் மெதுவாக ஓடி ஒளிந்து விட்டன.
“ஏன் என்ன பிழை?”
கீழே இருந்தபடியே தலையை நிமிர்த்தி, கண்களைச் சுருக்கித் தங்கமுத்துவைப் பார்த்தாள் செல்லாச்சி.
“என்ன பிழையோ? பழைய கதியால் எங்கை நிக்குது? புதுக்கதியால் எங்கடை வளவுக்குள்ளை ஒரு முழம் தள்ளி நிக்குது… களவாக் காணி பிடிக்கிற பழக்கம்…” தனக்குள் சொல்வது போல அந்தக் கடைசி வசனத்தைத் தங்கமுத்து முணுமுணுத்தாலும்கூட. அது செல்லாச்சியின் காதில் விழுந்ததோ இல்லையோ அவளின் மனம் கொதித்துக் கனக்க, வெஞ்சினம் தொனிக்கும் குரல் உச்சஸ்தாயியில் ஏறி ஒலித்தது.
“பொத்தடி வாய்! ஆர் களவாக் காணி பிடிக்கிறது? உங்கடை பரம்பரையிலைதான் உந்தப் பழக்கங்கள். நான் கயிறு கட்டி நேராகத்தான் போட்டிருக்கிறன்…”
தங்கமுத்துவுக்கு இப்போது ரோசம் வந்துவிட்டது. சேலையை இழுத்துச் சொருகிக்கொண்டு, தனது ஆனைக்கால் போன்ற கையை மடித்து நீட்டிக் காலை ஒரு அடி முன்னால் வைத்துத் தனது தடித்த குரலை உயர்த்தி,
“என்னைப் பொத்தடி வாய் எண்டு சொல்ல நீ ஆரெண்டு கேக்கிறன்… சொல்லுவியோ… சொல்ல ஆளாவிட்டியோ… எப்ப வந்த பணம் உங்களிட்டை… வீணா வாயைக் காட்டினா உன்ரை மண்வெட்டிப் பல்லைக் கொட்டிக் கையிலை தருவன்… ஓ…” இரண்டு வசனம் உரத்துக் கதைத்ததில் தங்கமுத்துவுக்கு மூச்சு இரைத்தது.
பலமாகக் கதைப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகின்ற தனது தாய், உரைத்துக் கதைத்த சந்தடி கேட்டு உள்ளிருந்து வெளியேறி சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு வந்தான் தங்கமுத்துவின் மகன் நந்தகுமார்.
“அம்மா, ஒரு அரை அங்குலக் காணிக்காண்டி வீணா என் சண்டை பிடிக்கிறியள்? போங்கோ உள்ளை… மாமி நீங்களும் போங்கோ”
தன்னை ஓர் ‘இண்டலெக்சுவல்’ என்று எல்லாரிடமும் சொல்லிக்கொள்கிற நந்தகுமார் நியாயமாகவே பேசினான். ஆனால் தங்கமுத்து அவனைப் பேசவிடவில்லை.
“நீ போ மோனை உள்ளுக்கு… உனக்கு உவையின்ரை குணம் தெரியாது” என்று மெதுவாகத் தொடங்கி,
“இடம் குடுத்தால் தலைக்கு மேலை ஏறி நிப்பினம்… இண்டைக்கு அரை முழம் பிடிப்பினம். நாளைக்குக் காணி முழுவதும் தங்களின்ரை எண்டு நிப்பினம்…” என்று படிப்படியாக உயர்த்தி,
“விட்டிட்டுப் பேசாமல் நிற்கிறதே?” என்று உச்சஸ்தாயியில் முடித்தாள்.
செல்லாச்சியும் தங்கமுத்துவும் பிரச்சினைப் படுகிறார்கள் என்ற செய்தி ஊரில் உள்ள செய்தி காவும் அலுவலர்களால் விரைவில் கடத்தப்பட்டுத் தோட்டத்தில் இறைத்துக் கொண்டிருந்த கந்தப்பருக்கு எட்டிவிட்டது. அவர் இடுப்பில் சொருகிய குழைக் கத்தியும் தலைப்பாகையுமாக விரைந்து நடந்தார் பனங்காணியை நோக்கி!
இவ்வளவும் நடக்கும் வரை ‘இருண்டது விடிஞ்சது’ தெரியாமல் பேப்பர் படித்தபடி ஈசி செயரில் படுத்து நித்திரையாகிப் போய்க்கிடந்த சின்னத்தம்பு உபாத்தியாயர், மகன் வந்து எழுப்பிய பின்னரே சோம்பல் முறித்தபடி எழுந்து வந்தார்.
வேடிக்கை பார்க்கவென ஒழுங்கையில் சேர்ந்துவிட்ட பத்துப் பன்னிரண்டு பேருக்கிடையில் பஞ்சுப் பரியாரியார் மாத்திரம் சமரசம் செய்யவென முன்னுக்கு வந்தார்.
“என்ன செல்லாச்சி அக்கா, உதுக்கெல்லாம் அடிபிடிப்படு கிறதே… மச்சாளும் மச்சாளும்… ஒண்டுக்கை ஒண்டு… கோட்டுக்குப் போனால் எத்தினை ஆயிரம் செலவு… ஒரு மாதிரிப் பார்த்துச் சமாதானமாப் போங்கோ அக்கா…”
செல்லாச்சி செய்தது பிழை என்று ஒரு பத்துப் பேருக்காவது. நிரூபிக்காமல் சமரசம் செய்யக்கூடாது என்று நினைத்த தங்கமுத்து,
“அண்ணை, நீங்கள் தலையிடாதேங்கோ… உவையள் தங்கடை வீட்டுக்குத் தெற்காலிக் காணியையும் உப்பிடித்தான் ஒரு முழம் ஒரு முழமா ஒரு பரப்புப் பிடிச்சுப் போட்டினமாம். முத்தர் அளந்து பாக்க… அவற்றை காணி இப்ப இரண்டு பரப்புக் குறையுதாம். அந்தச் சேட்டை எங்களிலையும் விடப் பாக்கினம். உது என்னட்டைச் சரிவராது” என்று மூச்சு இரைக்க இரைக்க நிறுத்தி நிறுத்திச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விழுந்து கிடந்த தலைமயிரை ஒரு முறை அள்ளி முடித்துக்கொண்டு முன்னுக்கு வந்த செல்லாச்சி, தங்கமுத்துவின் குரலுக்கு மேலே கேட்கும்படி குளறிக் குளறிச் சொன்னாள். வார்த்தைகள் சிதறிப் பறந்தன.
“ஆற்றை கோழி காணிக்குள்ளை வந்தாலும் உடனை பிடிச்சு அறுத்துக் காச்சுறது எங்களுக்குத் தெரியாதெண்டு நினைச்சின மாக்கும்…”
“ஆரடி அது? கள்ளக் கோழி பிடிக்கிறதெண்டு சொல்ல நீ ஆரடி?”
என்று கதறிய தங்கமுத்து அதற்கு மேல் உரத்துக் கதைக்க முடியாமல் கோபத்திலும் பயத்திலும் உடல் பதறிப் பின்னே திரும்பி,
“இஞ்சை பாருங்கோவன் இவள் என்னைக் கள்ளக் கோழி பிடிச்சதெண்டு சொல்லுறாள். நீங்கள் கேட்டுக்கொண்டு நிக்கிறியள் இன்னொரு ஆம்பிள்ளையெண்டா…”
என்று உபாத்தியாயரைத் துணைக்கு அழைத்து அவரின் ரோசத்தையும் தூண்டிவிட்டாள். இதுவரை தனது மனைவி எதற்காகச் சண்டையிடுகிறாள் என்பது புரியாதவராய் விழித்துக்கொண்டு நின்ற உபாத்தியாயர், தங்கமுத்து கண்களைக் கசக்கிக் கொண்டதைக் கண்டதும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு,
“செல்லாச்சி பெண்ணாய்ப் பிறந்தவளாய்க் கிடக்கு. இல்லாட்டி இப்ப நடக்கிற சங்கதி வேறை…” என்று வீர வசனம் பேசி நிலத்தில் கிடந்த செல்லாச்சியின் கத்தியையும் கையில் எடுத்துக்கொண்டார். செல்லாச்சி ஒரு பெண் என்றபடியால்தான் உபாத்தியாயர் கத்தியைக் கையில் எடுத்தார் என்பதும், முன்னால் ஓர் ஆண்மகன் நின்றிருந்தால் அவர் துணிந்து சண்டைக்குப் போக மாட்டார் என்பதும் ஊர் அறிந்த இரகசியம். தனது வீரத்தைச் சோதிப்பதற்கு ஓர் உரைகல்லாக இந்தச் சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்த விரும்பினார்.
உபாத்தியாயர் கையில் கத்தியை ஓங்கிக்கொண்டு நிற்பதையும் தனது மனைவி உரத்துக் கத்துவதையும் தூரத்தில் வரும்போது பார்த்துவிட்டுக் கத்தியுடன் ஓடிவந்தார் கந்தப்பர். கோபத்தில் அவர் மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன.
“செல்லாச்சியைத் தனிய வைச்சுக்கொண்டு அவை புருஷனும் பெண்டிலுமா வெருட்டினமோ… நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்து போச்சினம் போலை…”
கந்தப்பர் ஓடிவருவதைக் கண்டுவிட்டு, ஓங்கிய கத்தியைத் தாழ்த்திக்கொள்வது கௌரவக் குறைவு என்று நினைத்த உபாத்தியாயர், அந்தக் கத்தியால் செல்லாச்சி போட்டிருந்த கதியால்களையெல்லாம் தயவு தாட்சண்யமின்றிப் பரபரவென்று வெட்டிக்கொட்டினார்.
கந்தப்பரின் சிவந்த விழிகளையும் துடிக்கும் கைகளையும் தூரத்திலேயே கண்டுவிட்ட உபாத்தியாயரின் மகன் – அந்த இன்றலெக்சுவல் விசயம் விபரீதமாகப் போவதாக எதிர்பார்த்து முற்றத்தில் சாத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு பொலிஸ்டேசனுக்கு ஓடினான்.
“செல்லாச்சி போட்ட கதியாலை வெட்டிறியோ… நீயோ” என்று கந்தப்பரும் கதியாலும் உபாத்தியாயரும் இழுபறிப்பட்டதில், கந்தப்பரின் கத்தி உபாத்தியாயரின் கையைக் கீறிவிட்டது.
“கந்தப்பர் என்னை வெட்டிப் போட்டான்…” என்று கத்திக் கொண்டே உபாத்தியாயர் வீட்டுக்குள் ஓட, தனது தேகத்தைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு அவரின் பின்னால் ஓடினாள் தங்கமுத்து. எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாமல் அதற்குள் கூடிவிட்ட இருபத்தைந்து முப்பது ஊர்ச்சனம் கந்தப்பரையும் செல்லாச்சியையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தான் போட்ட கதியால்களை வெட்டினார் என்று உபாத்தியாயர் மேல் வழக்குப் போட்டிருக்கிறார் கந்தப்பர். தனக்குக் கத்தியால் குத்த முயன்றார் என்றும், மனைவியை அவமானப்படுத்தினார் என்றும் உபாத்தியாயர் வழக்குப் போட்டிருக்கிறார்.
“வழக்குச் செலவு எவ்வளவு? ஓர் அங்குலக் காணியின் பெறுமதி எவ்வளவு?” பஞ்சுப் பரியாரியார் உபாத்தியாயரிடம் கேட்டார்.
பெறுமதி பற்றி ஒண்டுமில்லைக் காணும். செல்லாச்சி, கந்தப்பர் செய்தது பிழையெண்டு நீதவான் சொல்ல வேணும்.” உபாத்தியாயரின் குரலில் கடுகடுப்பு ஓயவில்லை. சொந்தங்கள் எல்லாம் பிசிறின்றி அறுந்துபோவது பற்றி, மச்சான், மச்சாள் என்ற நெருங்கிய உறவுகளுக்கிடையில் பெரிய எல்லைகள் போடப்பட்டு விட்டது பற்றி யாருக்கு என்ன கவலை?
– 1980 மார்ச் மாத மல்லிகையில் பிரசுரமானது.
– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.