ஆனந்தக் கண்ணீர்





(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை மயங்கி இரவு வந்து கொண்டிருந்த நேரம் எல்லா வீடுகளிலும் விளக்கேற்றிவிட்டார்கள். சிவகாமி எழுந்து போய்ப் பூசை மாடத்தில் இருந்த காமாட்சி விளக்கை எடுத்துப் பார்க்கிறாள். அதில் எண்ணெய் குறைந்து போய்த் திரி மட்டும் கிடந்தது. பக்கத்தில் இருந்த பாட்டிலை எடுத்து மெதுவாக அதில் எண்ணெயை ஊற்றித் திரியை விரல்களால் நசுக்கிச் சரி செய்து மாடத்தில் இருந்த இடத்திலேயே வைக்கிறாள்.
பக்கத்தில் இருந்த சிறு செம்பில் புதிதாக நீரைப் பிடித்து வந்து வைத்துவிட்டு, அங்கே அவளையே பார்த்த வாறு அமர்ந்திருக்கும் அன்னை மூகாம்பிகையின் திருவுருவச் சிலையை உற்றுப் பார்க்கிறாள். சிலையின் மீது காய்ந்து கிடந்த மல்லிகைச் சரங்கள் மனத்தை நெருடுகின்றன. எடுத்துப் பார்த்துவிட்டு ஓரமாய் மாட்டியிருந்த பிளாஸ்டிக் கூடையில் போட்டுவிட்டுச் சற்று முன்பாகக் கட்டிவைத்த மலர்ச் சரத்தை எடுத்துச் சிலைக்குச் சாற்றுகிறாள். கையில் தீப்பெட்டியை எடுத்து விளக்கைப் பொருத்துகிறாள். குப்பென்று ஒளி பரவி அவள் கண்களில் பரவசத்தை உண்டாக்குகின்றது.
உடம்பு முழுவதும் புல்லரித்துப் போய் நிற்கிறாள் சிவகாமி. கையிரண்டும் தாமரை மொட்டுப்போல் குவிந் திருக்க அப்படியே சிலையாக நிற்கும் சிவகாமியை.. வெளியே நின்று அழைக்கும் கணவரின் குரல் சுயநினைவுக்குக் கொண்டு வருகிறது. இரு கைகளாலும் கன்னத்தில் போட்டுக் கொண்டு வாசலுக்கு வருகிறாள். இடுப்பில் தொங்கும் சாவிக்கொத்தை எடுத்துக் கதவைத் திறந்து கொண்டே கணவனைப் பார்க்கிறாள்.
“பூஜை நேரத்தில் வந்து இப்படித்தான் தொல்லை பண்றதா?” என்பது போன்ற பார்வையில் திகைத்து நின்ற தில்லைநாதன்.
“என்ன ஆச்சுன்னு இப்படி முழிக்கிற என்னைப் பார்த்து? வெளியே போயிட்டு வந்தா, வாங்கன்னு சொல்லக் கூட நினைப்பில்லாம நிற்கறியே”
மனைவியின் பின்னாலேயே போகிறார் அவர். அவருக்கு முன்னால் நடந்து விடுவிடுவென்று பூசை மாடத்துக்கு முன்னால் போய் நின்று கற்பூரத்தை ஏற்றி அம்பாளின் முன்பு காட்டுகிறாள். வாயில் ஏதோ பாடலை முணுமுணுக்கிறாள். பின்னாலேயே வந்து நின்று அவளை வேடிக்கையாகப் பார்க்கும் கணவனை இப்போது கொஞ்சம் கோபமாகவே பார்க்கிறான்.
“ஏங்க, நீங்க இன்னும் சின்னப் பிள்ளையா என்ன..? வாக்கிங் போய்ட்டு வர்றேன்னு சொல்லிவிட்டுக் காடு மேடெல்லாம் அலைஞ்சு திரிஞ்சுட்டு வந்து குளிக்காம பூஜை மாடத்தில் வந்து நிக்கறீங்களே. முதல்ல போய்க் குளிச்சிட்டு வாங்க, போங்க..”
கோபமும் அதட்டலுமாய் வார்த்தைகள் வந்து விழ… அவர் திரும்பிப் போய் சோபாவில் விழுகிறார். காலில் மாட்டியிருந்த காலுறையை காலுறையை அவிழ்த்துப் அவிழ்த்துப் போட்டுக் கொண்டே மனைவியைப் பார்க்கிறார். அந்த ஐம்பது வயதிலும் அவளது தோற்றம் அவர் கண்ணுக்குள் குற்றால அருவி போல் குளிர்ச்சியாய் இறங்கியது. அப்படியே கட்டுக் குலையாமல் இருந்தாள். ஆனாலும் முகத்தில் மட்டும் ஒரு வாட்டம்…
அது ஆழமான மனப்பாதிப்பின் பிரதிபலிப்பாய் அவருக்குத் தெரிந்தது. முன் வகிடில் இருகூறாய்ப் பிரிகின்ற வெள்ளிக் கம்பி முடிகளில் படிந்திருந்த மஞ்சளில் செம்பளமாய் மின்னும் குங்குமமும் அகன்ற நெற்றியில் தீபம் போல் செந்தூரப் பொட்டும் தழையக் கிடந்த முடியை முடிந்துவிட்டு அதிலே அளவாய் வைத்திருந்த மல்லிகைச் சரமும்… அத்தனை வேலைகளுக்கு நடுவிலேயும் தன்னைச் சீராக வைத்திருக்கும் அந்த அழகு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆனாலும் எவ்வளவு தான் வெளியே வேஷம் போட்டாலும் உள்ளுக்குள் குமுறும் எரிமலையின் புகைச்சல் வெளியில் தெரியாமல் இல்லை.
ஒன்றா இரண்டா… முப்பத்து இரண்டு ஆண்டுகள் அவளோடு நிழலாகத் தொடர்கின்ற அவருக்கா அவளின் மனநிலை தெரியாமல் போகும்?
கற்பூரத் தட்டை வைத்து இரு கைகளினாலும் அதைக் கும்பிட்டு மூன்று விரல்களால் திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு திரும்பியவளைப் பார்க்கும்போது அவருக்கு, அன்புடைய மனைவிமேல் அனுதாபம் அலைஅலையாய் மனத்துக்குள் எழுகின்றது.
“இன்னுமா உனக்கு இந்த வீணாப் போன வேலை… நீயுந்தான் கருத்துத் தெரிஞ்ச நாள்ளேர்ந்து கையேந்தி நிக்கிறியே சிவகாமி! அந்தத் தெய்வத்துக்குதான் உன் மேல ஈவு இரக்கமில்லாமப் போச்சே.. இன்னுமா இப்படித் தீபமும்- திருநீறும்..?”
அலுத்துக் கொள்கிறார். அறுபத்தாறு வயதைத் தொட்டுவிட்ட தில்லைநாதன். அவள் அவரை ஆச்சரிய மாய்ப் பார்க்கிறாள். நடந்து வந்து அவருக்குப் பக்கத்தில் உட்காருகிறாள். அவருக்கு மூக்கில் குப்பென்று ஏறுகிறது சந்தன மணம். காலடியில் கிடந்த காலுறையைத் தன் கையில் எடுத்துக் கொண்டவள் கணவனைப் புன்னகையுடன் பார்க்கிறாள்.
“எதுங்க வீணாப் போன வேலை! எனக்கா அம்பாள் கண்பார்க்கல… இதோ என் பக்கத்தில் நீங்க இருக்கீங்களே இதைவிட எனக்கு இன்னும் என்னங்க பெரிய ஐஸ்வர்யம் வேணும்… இதைவிடப் பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இருக்க முடியுமா?” எனக்கு.
மனம் நிறைந்த வார்த்தைகள் தாம் என்றாலும் தில்லைநாதன் அதை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மனைவியிடம் வாதம் செய்ய விரும்பாதவராய் எழுகிறார்.
“சரி… சரி… உங்கிட்டே பேசி நான் ஜெயிச்சிட முடியுமா என்ன… நான் குளிச்சிட்டு வந்து பேசிப் பாக்கிறேன்… அப்ப தெரியும் நீ ஜெயிக்கிறியா. நான் ஜெயக்கிறேனான்னு”
அவர் குளியலறைக்குள் போய்விட்டார். சிவகாமி தன் கணவனுக்குத் தேவையான தேநீரையும், சூடாக இரண்டு சப்பாத்தியையும் எடுத்து மேசையில் வைக்கிறாள். உள்ளே கணவரின் பாட்டுக் குரல் காதில் விழுகிறது. இன்னும் தன்னை ஓர் இளைஞனைப் போலவே எண்ணிக் கொண்டு இந்த வயதான காலத்திலும் தனக்காக உழைக்கின்ற அவரை எண்ணும் போது அவளுக்குக் கண்ணீர் மடை திறந்து கொண்டது.
அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னாலும் அவர் உழைக்கிறார் என்றால், அதுவும் அவர்கள் இருவரின் மனத்தில் பட்ட இரணத்தை ஆற்றிக் கொள்ளும் ஒரு மாற்று மருந்துதானே தவிர அவர் உழைத்து தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.
“என்னால இந்த வீட்ல இனிமே இருக்க முடியாது சிவகாமி..நான் வெளியே போகணும். அப்படியே வெளியே போய் நாலு பேரைப் பார்த்தாதான் நான் உயிரா இருப்பேன்… இல்லைன்னா நான் இந்தக் கழுதைகளை நினைச்சே செத்துப் போயிடுவேன்.”
சோபாவில் தொய்ந்து கிடந்த நிலையில் அன்று அவர் சொன்னபோது அரண்டு போன சிவகாமி, அவரின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் அவர் விருப்பத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தாள்.
தில்லைநாதனுக்கு நெஞ்சு நிறைந்த சந்தோஷம்… சிறகு முளைத்த கிளி ஒன்று இறக்கை விரித்துப் பறந்து போனதுடன், அது தனது கூரிய நகங்களால் முகத்தில் பிராண்டிவிட்டுப் போன துன்பமும், துயரமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போயின. உற்சாகமாய்க் கடையைக் கவனித்தார்.
கண் மூடித் திறப்பதற்குள் ஓடிப்போகும் “எம்ஆர்.டி’ தஞ்சோங்பகார் விரைவு ரயில் பகுதியில் அவரது கடை இருந்தது. பத்திரிகைகள், புத்தகங்கள் என்று அடுக்கி வைத்து விற்பனை செய்துவந்த அவருக்கு அவர் வயது நண்பர்களின் வருகைவேறு கவலையை விரட்ட மாமருந்தாய் அமைந்தது.
“அந்தக் காலத்திலேயே நான் உனக்குச் சொன்னேன்… நீ கேட்டால்தான… பிள்ளை இல்லேன்னு அடுத்தவன் பிள்ளையை எடுத்து வளத்தா இது அப்படித்தான் கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாம நெஞ்சில் அடிச்சிட்டுப் போகும்…விருதுபட்டி சனியனை விலைகொடுத்து வாங்கின கதையாய்ப் போச்சே இப்ப..”
பழைய நண்பரின் ஆறுதல் தரும் ஆலோசனை இது! காலுக்கு வாங்கிய செருப்பு காலைக் கடித்து, அதுவே ஆறாத இரணமாகிக் காலுக்கே எமனாவது போல், அவர்களுக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்பதற்காக ஆசை ஆசையாய் வாங்கி வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்துப் பட்ட தாரியாக்கி ஊர் மெச்சும்படி உத்தியோகமும், வாங்கி வைத்து அவனையே உயிராக நினைத்து வாழ்ந்திருந்த நேரத்தில்தான் அவன் அவர்களுக்கே புயலாக மாறிப்போனான்.
வேலைக்குப்போன இடத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் மேல் காதல் கொண்டான். அவளை மணந்து கொள்ளப் போகிறேன் என்று வீட்டில் அவன் சொன்ன போது அவனுக்கு எவ்வித ஆட்சேபணையும் எழவில்லை.
திருமணம் என்பது ஒன்றுபட்ட இரண்டு மனங்களின் சங்கமம் என்பதைத் தன் வாழ்க்கையின் மூலம் நன்குணர்ந்தவர் தில்லைநாதன் என்பதால் அவர்களின் காதலுக்குப் பச்சைக் கொடியைக் காட்டினார்.
ஊரும், உறவும் மெச்சும்படியே மகனுக்குத் திருமணம் முடிந்தது. இருவரும் கைநிறைய சம்பாதிக்க ஆசைப் பட்டார்கள். போட்டி நிறைந்த உலகில் தாங்களும் மற்றவர்களைப் போல் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அவர்கள் ஆசைப்பட்டதைத் தில்லைநாதன் வரவேற்றார். இந்த வயதில் சம்பாதிப்பதும் சேமிப்பதும்தான் அவர்களின் எதிர்காலத்திற்குப் போடப்படும் உறுதியான அஸ்திவாரம் என்று அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். குடும்பத்தில் சிவகாமி இருந்து பணிகளைக் கவனித்துக் கொள்ள மற்றவர்கள் வேலைக்குப் போனார்கள்.
ஈராண்டு முடிந்த பின்னும் தங்களுக்கு இன்னும் பேரப் பிள்ளையின் முகத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்க வில்லையே என்ற ஏக்கம் தில்லைநாதன், சிவகாமி தம்பதி களை வாட்டியது. காலையிலும், மாலையிலும் சாமி படத்திற்கு விளக்கேற்றி வைத்துக் கையேந்தி நின்று கண் கலங்குவதே சிவகாமியின் வேலையாய்ப் போய்விட்டது.
எங்கே தனக்குக் குழந்தை இல்லாமல் போனதுபோல் மகனின் வாழ்க்கையிலும் ஒரு சூன்யம் ஏற்பட்டுப் போய்விடுமோ என்று தில்லைநாதன் கவலைப்பட்டார். மகனிடம் இதைப்பற்றிக் கேட்கவும் மனம் அஞ்சியது. மனத்திற்குள் குறுகுறுக்கும் உணர்வுகளை அப்படியே அங்கேயே போட்டுப் புதைத்துக் கொண்டு நாள்களை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு இப்போது ஏதோ ஒரு பெரிய பயங்கரத்தில் சிக்கிக் கொண்டதுபோல் அதிர்ச்சி.
ஒரு வாரம்கூட ஓடியிருக்காது. ஒருநாள் மனைவி யிடம் கேட்டார்.
“சிவகாமி இத்தனை வருஷமா நீ எப்படி இந்த சூன்யத்தில் தனியாக் கிடந்தே… என்னால முடியலேயம்மா…எனக்குப் பைத்தியமே பிடித்துடும்போல இருக்கே சிவகாமி.”
சிறு குழந்தைபோல் தவிக்கும் கணவனுக்குக் கலங்கரை விளக்கமாகிறார் சிவகாமி.
“தப்புங்க.. நீங்க நினைக்கிறது பெரிய தப்பு… இனிமேலதான் உங்களுக்கு இந்த உலகம் ஒரு பூஞ்சோலைன்னு புரியப் போகுது. ஒவ்வொரு மனுஷனும் தன்னோட வேலை ஓய்வு வர்ற காலத்தில் தாம் புது மனுஷனா பிறந்து வெளியே எழும்ப ஆரம்பிக்கிறான். இதை நீங்க புரிஞ்சுகிட்டா இந்தப் பயம் எல்லாம் போயிடும்… உலகத்தில் எந்த இடமும் சூன்யம் இல்லை… நீங்க நினைச்சா எந்த இடமும் சொர்க்கமாகிடும்.’
சூடு பறக்கும் காபியை அவரிடம் நீட்டிக் கொண்டே கூறும் சிவகாமியைப் பார்க்கும்போது கொஞ்சம் தெளிவு பிறக்கிறது. அவருக்கு.
“என்னங்க அப்படிப் பார்க்கிறீங்க… இதுவரைக்கும் வேலை வேலைன்னு வெளியே சுத்திக்கிட்டிருந்தீங்க… இனிமே ஓய்வுக்காலம்ன்னு ஏன் நினைக்கிறீங்க…அதைவிட அதிகமான வேலைகள்தாம் உங்களுக்குக் காத்துக்கிடக்குதே… அதைக் கவனிக்கிறதுலேயே நேரம் ஓடிடுமே..’
ஆவல் பொங்க மனைவியின் முகத்தைப் பார்த்த தில்லைநாதன் அடுத்து அவள் சொன்ன வார்த்தை யினால் சப்பென்று அடங்கிப் போனார்.
“சரிதான் போ… அதுவரைக்கும் எனக்கு அந்த நல்ல செய்தியை மருமகள் சொல்லணும்னு காத்துக் கிடந்தேன்… மகன் கையில சாக்லேட்டோட ஓடிவந்து என் வாயில சாக்லேட்டைப் போட்டு நான் அப்பா ஆகப்போகிறேன்னு சொல்லுவான்னு காத்துக் கிடந்தேன்… இப்பெல்லாம் அப்பா ஒருத்தன் வீட்ல இருக்கிறான்கிற எண்ணமே இல்லாமப் போச்சே…
“இதுல எங்கே மகனோட மருமகளோட பொழுதைப் போக்கறது…பேரன் பேத்தியைக் கொஞ்சி மகிழறது?
அதிகமாகவே அலுத்துக் கொண்டார் தில்லைநாதன். வயதாகிவிட்டதே என்று மனத்துக்குள் வசந்தம் வறண்டு போய் இனம்புரியாத பாலைவனச் சூழல் ஒன்று உருவாகும் போது அங்கே பனித்துளிகளாய் விழுந்து மீண்டும் ஓர் இளவேனிற் காலத்தை உருவாக்கும் உறவல்லவா… பேரக் குழந்தைகள்! அந்த உறவின் வரவுக்காக எதிர்பார்த்து ஏமாந்துவிட்ட ஏக்கம் குரலில் தொனிப்பது சிவகாமியின் நெஞ்சில் சிறு வலியை உண்டாக்காமல் இல்லை. இன்று அந்த ஏக்கத்திற்கு ஒரு முடிவு கண்டுவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் கணவனைச் சமாதானப்படுத்துகிறாள்.
இரவு நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மகனும் மருமகளும் வீடு திரும்பவில்லையே என்று கவலையோடு உட்கார்ந்திருந்த இருவரையும் தனியாக வந்த மகன் அதிர்ச்சி அடைய வைத்தான். அவசர அவசரமாய் என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கியபோது அவன் சர்வசாதாரணமாக –
“அதெல்லாம் ஒன்றுமில்லேப்பா… அவளுக்கு திடீ ரென்று வயிற்றுவலின்னு அழ ஆரம்பிச்சிட்டா… அதுதான் கிளினிக்கில் விட்டுட்டு வந்திருக்கேன். இரண்டு நாள்ல வந்துடுவா… டாக்டர் ஓய்வு வேணும்னு சொல்லியிருக்காங்கம்மா.”
அவன் போய்க் குளித்து முடித்து அம்மா எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை முடித்துக் கெண்டு போய்ப் படுத்துவிட்டான். ஆனால் அவர்கள் தூங்கவில்லை. பொழுது விடியட்டும் என்று காத்துக் கிடந்தார்கள். விடிந்ததுமே அவனிடம் மருமகள் இருக்கும் கிளினிக்கின் முகவரியை வாங்கிக் கொண்டு அரக்கப் பறக்க ஓடிப்போய் அவள் இருக்கும் இடத்தைத் தேடி அவள் படுக்கையைப் பார்த்ததுமே அவர்கள் இருவருக்கும் உயிர் வந்தது. மருமகள் படுக்கையில் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அங்கு வேலையாய் இருந்த தாதியிடம் அவள் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார்கள். அன்றாட வாழ்வில் அந்தப் பெண்ணைப் போல் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன அந்தத் தாதி –
“இதுவெல்லாம் இப்போ ரொம்ப சகஜமாகிப் போச்சுங்க…நாளைக்கு அதுவும் வேலைக்குப் போகலாம்… ஆரம்பத்திலேயே கலைச்சதால பெரிய பிரச்சினை ஏதும் இல்லாமப் போச்சு. இரண்டு நாள்ல நார்மலாயிடுவாங்க.”
புரிந்தும் புரியாத நிலையில் தில்லைநாதன் நிற்க, எல்லாமே புரிந்துபோன சிவகாமி மருமகளின் முகத்தைப் பார்க்க விரும்பாதவளாய்க் கணவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள்.
தங்கள் குடும்பத்தில் புதியதாய் ஒரு வாரிசு வரவில்லையே என்ற கவலையில் அவர்கள் இருவரும் அல்லும் பகலுமாய் ஆண்டவனிடம் கையேந்திக் கொண் டிருக்கும்போது, அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் ஆரம்பத்திலேயே அந்த உயிரைத் தலைகாட்டாமல் செய்துவிட்டது பெரிய ஏமாற்றமாய்ப்… பேரதிர்ச்சியாய் இருந்தது.
“ஏண்டா தம்பி இப்படிச்செய்தே… உனக்கே இது நல்லாயிருக்குதா… முதல் குழந்தையைப் பார்க்கணும்னு ஆவலோட ஒவ்வொரு கணவனும், மனைவியும் தவமா தவம் கிடக்கிறப்ப நீ எப்படிப்பா இவ்வளவுதூரம் கல்மனசுக் காரனா மாறிப்போ.”
மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுத தாயுடன் அவனும் அழுகிறான்.
“என்னை மன்னிச்சிடும்மா… என்ன அவ ஏமாத் திட்டாம்மா… அவ இதுக்காகத்தான் கிளினிக்குக்குப் போறான்னு எனக்குத் தெரியாதும்மா… தனக்குக் கடுமையான வயிற்று வலின்னு சொல்லிட்டாம்மா… அவனும் விவரம் அறியாமல் ஏமாந்துபோன அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதன்பின் அவர்கள் அங்கிருக்கவில்லை. அவன் தன் பெற்றோர்களுக்காகப் பரிந்து பேசுவது பிடிக்காமல் அவள் அவனைத் தன்னுடன் கொண்டுபோய்விட்டாள். அவனுக்காகத் தாயும் தந்தையும் அனுதாபப்பட்டார்களே அன்றி ஆத்திரப்படவில்லை.
மனைவியின் பின்னால் போன மகனைப் பற்றி அவர்தாம் தினமும் கவலைப்பட்டார். ஆனால் சிவகாமி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் நாள்களை நகர்த்திக் கொண்டிருந்தாள். அவள் கவலையெல்லாம் தன் கணவரின் சந்தோஷத்திலேயே இருந்தது. அதற்காகவே மனக்கவலையை மறந்து கணவரின் முகத்துக்குத் தன்னை தனது கண்ணாடி ஆக்கிக் கொண்டாள்.
தில்லைநாதன் குளித்துவிட்டு வருகிறார். மறுபடியும் சிவகாமி கற்பூரத்தை ஏற்றி அவரிடம் கொண்டு வருகிறாள்.
“எல்லாம் உங்களுக்காகத்தான்… ஓடிப்போன மகனுக் காகவும் மருமகளுக்காகவும் நீங்க மனமாரப் பிரார்த்தனை பண்ணுங்க… அவங்க நம்ம பிள்ளைங்க… அவங்க நல்லா யிருக்கணும்னு நீங்க வேண்டினா நிச்சயம் நல்லா யிருப்பாங்க…”
அன்பும் அதிகாரத் தோரணையுமாய்ச் சொல்லும் மனைவியின் கையிலிருந்த கற்பூரத்தைக் கும்பிட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
“என்னமோ சிவகாமி… உன்னோட நம்பிக்கையாச்சும் ஜெயிக்கட்டும். உன்னோட ஆசைக்காக நானும் அந்த அம்மாளை வேண்டிக்கிறேன்….’
சொல்லிக்கொண்டே திருநீற்றை எடுத்து மனைவியின் நெற்றியில் வைக்கிறார். மனம் நிறைந்து சிவகாமி தன் வலது கைப் பெருவிரலினால் திருநீற்றைக் கணவரின் நெற்றியில் அழுத்தமாய் வைக்கிறாள். தொலைபேசி அழைக்கிறது. தில்லைநாதன் போய் எடுக்கிறார். எதிர்முனையில் மகனின் குரல்! திகைப்புடன் மறுபடியும் ஹலோ என்கிறார்.
“அப்பா… நான் சுதன் பேசுகிறேன் அப்பா. அப்பா நான் அப்பா ஆகப்போறேன்ப்பா…!” அவன் பேசிக் கொண்டிருக் கிறான். நெஞ்சம் கொள்ளாத சந்தோஷத்தில் மனைவியைப் பார்க்கிறார் தில்லைநாதன்! அருகில் வந்தவளை ஆரத்தழுவிக் கொள்கிறார். ஆறாய்ப் பெருகும் ஆனந்தக் கண்ணீரில் அவள் நனைகிறாள்.
– தமிழ் முரசு 22-9-96
– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.