ஆடிவெள்ளி தேடியுன்னை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 3,529 
 
 

‘சே! ஆடிவெள்ளிக் கிழமையும் அதுவுமா., நல்ல நாளும் அதுவுமா இப்படி ஒரு வார்த்தை கேட்கும்படியாடிச்சே’ன்னு அங்காலத்துக் கொண்டாள் அனுசூயா. மயக்கம் தட்டிச் சரிய இருந்தாள்.

வேலை முடிந்து வீடு திரும்பும் வேளை! ஆள் அரவமில்லாத அந்த மண்தரைச்சாலையில் தனியொருவளாய் நடந்து வந்து கொண்டிருந்தவளைப் பின் தொடர்ந்தது அந்த சப்தம்!.

தன்னை யாரோ ரொம்ப நேரமாகப் பின் தொடர்கிறார்கள் என்று உள்ளுணர்வு உணர்த்தியது. இதைத்தான் ‘பெண்புத்தி பின் புத்தி என்கிறார்களோ?!’ தெரியவில்லை! நடையில் வேகம் கூட்டினாள், உருவமும் சப்தமும் வேகம் கூட்டியது.

பயம் மெல்லக் கவ்வ ஆரம்பித்தது. திரும்பிப் பார்க்க பயம்.

வீட்டுக்காரனுக்கு வருமானம் போதாது, பையன் மெட்ரிக் பள்ளியில் எலிமெண்டரி கிளாஸ் படிக்கிறான். மூன்று மாசத்துக்கொருமுறை ‘டெர்ம்பீஸ்’னு புடுங்கித் தின்னறானுக! நம்ம மாதிரி இல்லாம நம்ம கொழந்தையாவது நல்லா படிச்சு நல்லா இருக்கட்டுமேன்னுதான் இப்படி நேரங் கெட்ட நேரம் வீடு திரும்பும் வேலை போகிறாள் அவள்.

உருவம் அவளை நெருங்கிவிட்டது. கத்தினால் கூட உதவிக்கு வர ஒருவருமில்லா ‘கும்’ இருட்டு நேரம்! நெருங்கிய உருவம் சடக்கென அவள் கழுத்தைச் சுற்று வளைத்து பின்புறமிருந்து இழுத்து அணைத்தபடி கழுத்தில் கை வைத்து அவள் அணிந்திருந்த ஐந்துபவுன் செயினை அறுக்க, …அய்யோ…கூடாது கூடாது! இதை அவன் அறுக்க விடக்கூடாது! திமிறினாள் பிடியிலிருந்து தப்பிக்க முயல…

‘அய்யோ…விடு!.. விடு…! அது என் தாலிச் செயின்!’ என்று எப்படியோ உயிர் பலம் கூட்டி அலறினாள்!

திரும்பிப் பார்த்தாள்…கழுத்தை நெறித்தவனை. அவன் ஒற்றை ஆள் அல்ல..! அவனோடு இன்னொருத்தனும் துணைக்கு நின்றிருந்தான். அவன் கையில் நெளிநெளியான கத்தி..! கூர்மையாய்…தயாராய்ப் பிடித்திருந்தான்!

‘அண்ணே.! அது அது…என் தாலிச் செயின்…!’ கத்தினாள். அதற்குள் அவன் முழுசாய் அந்தச் செயினை அறுத்துக் கையில் எடுத்துவிட்டான்.

அவளை நெட்டித் தள்ளினான் கீழே! நல்ல வேளை, அடுத்து எந்த ஆபத்தையும் அரங்கேற்றவில்லை!.

‘போச்சு! போச்சு!’ கஷ்டப்பட்டு காலத்துக்கும் சேர்த்த கழுத்துச் செயின் போச்சு…! அது, போனதும் அட, ஆடிவெள்ளியான நல்ல நாள்லயா போகணும்?!. மனசு புலம்ப…

வாய்விட்டுக் கதறினாள்..

‘அடப்பாவிகளா…! நல்ல இருப்பீங்களாடா நீங்கெல்லாம்!? வெள்ளிக் கிழமையுமதுவுமா ஒரு சுமங்கலியின் தாலி பறித்த சாபத்து ஆளாயிட்டீங்களே?!’ அலற…

இரண்டு பேரில் இன்னொருத்தன் ’இத பாரு சும்மா பினாத்தாதே!.. வெள்ளிக் கிழமை ஆடி வெள்ளிக் கிழமையும் அதுவுமா தாலியை இழந்து போறேன்னு தவிக்காதே! தாலி அறுத்தவளா போகாதே! இந்தா கழுத்தில் இதைப்போட்டுட்டுப் போ!ன்னு ஒரு இணுக்கு விரலி மஞ்சள் இணைத்த மஞ்சள் கயிறை அவள் கைகளில் வீசி, இந்தா இது ‘என் தாலியைக் கட்டிட்டுப் போன்னு!’ சிரித்துச் சொல்லிப் போக மூர்ச்சையானாள் அனுசுயா.

விழிப்பு வர இருவரில் ஒருவன் கையிலிருந்த கத்தி நழுவிக் கீழே விழுந்து கிடந்தது. குனிந்து அதை எடுத்தாள் ஒரே குத்து தாலி அறுத்தவன் அடிவயிற்றில் ஒரு குத்து குத்திக் கிளறி வெளியே எடுத்துக் கொன்று விட்ட திருப்தியில் உரக்கச்சொன்னாள் ‘எவன் வேணுமானும் கட்ட இந்தக் கழுத்துச் சாதாரண இடமல்ல அனுசுயா கழுத்து! இது எவன் வேணுடுமானாலும் தாலி கட்டும் இடமில்லை.. தக்கவனாள் தக்கபடி கட்ட காட்டப்பட்ட இடம்!’ சொல்லிவிட்டு, காவல் நிலையம் நோக்கி நடந்தாள்!

அடுத்தநாள் காலை செய்தியில் தப்பித்துப் போகையில் சறுக்கி விழுந்தவனுக்குச் சர்க்கார் சார்பில் மாவுக் கட்டுப் போடப்பட்டதுன்னு செய்தி வெளியாயிற்று! பின்னால் கத்திதோடு நின்றவன் பிடறியிலிருந்து கயிறு தொட்டிலாய்த் தொங்க, மாவுக் கட்டோடு காட்சி கொடுத்தான் தொலைக்காட்சியில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *