அவள் அகமுடையாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 2,187 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெகுவேகமாக ஓடிக்கொண்டிருந்த அந்த ‘எம்.ஆர்.டி’ பொதுவிரைவு ரயிலின் இருக்கையில் கண்ணாடி ஓரமாய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வெளிப்பக்கம் பார்த்தவாறு கையிலிருந்த டிஸ்யூவினால் தன் கண்களையும் மூக்கையும் மாற்றி மாற்றித் துடைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைத் தன் பக்கம் திருப்பி

“என்ன ஆச்சு உனக்கு.. ஏன் இப்படி உடைஞ்சு போயிருக்க என்று கேட்க வேண்டும்போல் இருந்தது கவிதாவுக்கு. ஆனால் வண்டியில் இருந்த நெரிசல் அதற்கு வழி கொடுக்கவில்லை.

மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த ரயில்வண்டி… வந்து நின்றது. பலர் இறங்கினார்கள். சிலர் உள்ளே தாவினார்கள். அந்த நேரம் பார்த்து தன் இடத்தை மாற்றிக்கொண்டாள் கவிதா. அவள் வந்து அமர்ந்த வேகத்தில் அந்த்ப் பெண்மணி அவளைத் திரும்பிப் பார்க்கிறாள். கவிதாவின் கண்களில் மின்னலடித்தது.

“ராதிகா” என்று எழுந்துபோய் எதிரே இருந்தவளைத் தன்னோடு இறுக்கமாய் அணைத்துக் கொள்கிறாள். இருவருக்குள்ளம் இளமையில் அரும்பிய நட்பின் மணம் இப்போது சுற்றுச் சூழலை மறக்க வைத்து மனதை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது.

“என்னடி இது… எவ்வளவு வருசமாச்சு உன்னைப் பார்த்து.. ! ஏண்டி இப்படி இளைச்சுப் போயிட்ட.. உன்னோட வீட்டுக்காரர். பிள்ளைகள்லாம் நல்லாயிருக்காங்களா…”

கவிதாவின் கேள்வி ராதிகாவைப் பேச முடியாமல் திணறவைத்தது. மனதுக்குள் பால்ய சினேகிதியின் பாசம் பரிவுகளாய் உருக வைக்கின்றன. அந்த இனிய இளமைப் பருவ நாட்களில் அவர்களின் கனவுகள் லட்சியங்கள் ஆசைகள் எல்லாமே தலைகீழாய்ப் போய்விட்ட பின் இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று அவள் நினைக்காத வேளையில் அவள் திடுதிப்பென்று வந்து தழுவிக் கொண்டதன் தாக்கம் அதிகமாய் அவளை பாதித்தது. கவிதா அவளிடமிருந்து விலகி நிற்கிறாள்.

“ராதிகா.. ஏன்டி பேச மாட்டேன்கிற.. என்கிட்ட சொல்லக் கூடாதா.. நான் என்ன உனக்கு அன்னியமா என்ன? வாடி இந்தப் பக்கம்” என்று தன் அருகே இழுத்து இருக்கையில் அமர்த்திக் கொள்கிறாள்.

“கவிதா.. உன்னைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீண்டுவர முடியலெடி.. நீ என் கூட வீட்டுக்கு வாயேன்.. நாம மனம் விட்டுப் பேசலாம்..”

மெல்லிய குரலில் தோழியின் காதுக்குள் கிசுகிசுக்கிறாள் ராதிகா. கவிதாவுக்கு மனம் சில்லிட்டுப் போகிறது. எங்கே எதையும் பேசாமல் போய் விடுவாளோ என்ற பயத்தில் இருந்தவளுக்கு இந்த பதில் மகிழ்ச்சியைத் தந்தது. தோழியின் தோளில் கைபோட்டுக் கொண்டாள்.

“ரொம்ப நன்றி ராதிகா… நீ எங்கே போறியோ.. அங்கேயே நானும் வாரேண்டி.. இப்போ எங்கே இருக்கே நீ முன்னே இருந்த இடத்தில் தானே…

“ஆமா கவிதா… அங்கேயேதான் இருக்கேன்.. ஆனா வேலை செய்ற இடம்தான் மாறிப்போச்சு… இப்ப ஒரு வாரமாத்தான் இந்த இடத்துக்குப் போய்ட்டிருக்கேன்… ஏண்டா புது இடத்துக்கு மாநினோம்கிற கவலைதான் மனசில்லாம போய்க்கிட்டிருந்தேன். ஆனா இந்தப் புது இடம்தான் எங்கிட்டேயிருந்து காணாமப் போயிருந்த உன்னை எங்கிட்டே கொண்டு வந்து சேர்த்திருக்கு.. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்..”

“இல்லேடி இந்த எம்.ஆர்.டி. ரயிலுக்குத்தான் நன்றி சொல்லணும்..” இருவரும் சிரித்தார்கள. ராதிகாவின் மனம் கொஞ்சம் லோசாகிப் போன மாற்றம் முகத்தில் தெரிகிறது.

அவர்கள் இருவரும் பிரிந்து ஏறக்குறைய ஆறு ஏழு ஆண்டுகள் ஓடியிருக்கும். இருவருமே தங்களின் உயர்நிலைப் படிப்பை முடித்ததும் வேலையில் சேர்ந்து விட்டார்கள். வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்குப் போயிருந்தாலும் அவர்களின் நட்பு வேறுபட்டுப் போகவில்லை. தொலைபேசி அவர்களை இணைத்து வைத்திருந்தது. முகம்பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் மனம் பார்த்துக் கொண்டது. இந்த நிலையில் ஒரு நாள் திடீரென்று ராதிகாவின் குரலும் காணாமல்போனது.

அதன்பின் ஓர் ஆண்டுக்குப் பின் ராதிகாவின் திருமணப் பத்திரிகை கவிதாவின் விட்டுக்குத் தபால் வழி வந்து சேர்ந்தது. அந்த மணநாளுக்காக கவிதா விடுமுறை போட்டுவிட்டு தோழியை வாழ்த்தி விட்டு வந்தாள். அவளது கணவர் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் இனிய சுபாவம் கொண்டவராகவும், ராதிகாவுக்குப் பொருத்தமானவராகவும், அவர் காணப்பட்டதால் ராதிகா அதிர்ஷ்டசாலி என்றும் நல்ல வாழ்க்கை அவளுக்கு கிடைத்துவிட்டது என்றும் நினைத்தாள். அதன்பின் அவர்களின் சந்திப்புக்கு இடமே இல்லாமல் சூழ்நிலை அமைந்துவிட்டது. தொழில் கல்வி தொடர்பாய் கவிதா இடையில் வெளிநாடு சென்று விட்டதால் அவர்கள் பொது இடங்களில் கூடச் சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை.

கவிதா தன் பயிற்சி முடிந்தபின் இந்த மாதம்தான் அலுவலகத்தில் தன் புதிய பணியைத் தொடங்கியிருந்தாள். அலுவலத்திற்குத் தன் சொந்த வாகனத்தில் சென்று வந்து கொண்டிருந்தவள் சிக்கனம் கருதி விரைவு ரயிலில் தன் பயணத்தைத் தொடங்கிய முதல் நாளே அவளுக்குப் புத்துணர்ச்சி நாளாய் அமைந்தது.

தன்தோழியைச் சந்திக்க.. அவளோடு உரையாடி மகிழ நேரம் கிடைத்தது குறித்த அவள் மகிழ்ந்து கொண்டாள். தோழியுடன் வீட்டுக்குச் சென்று அவள் கணவருடன் குழந்தைகளுடன் ஒரு சிறு பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி கொண்டாள்.

நடுத்தர வசதி கொண்ட மக்கள் வசிக்கின்ற யூனோஸ் வட்டாரத்தில்தான் ராதிகாவின் வி.வ. கழக அடுக்குமாடி இருந்தது. இரண்டு சிறிய அறைகளும் ஒரு பெரிய அறையும்கொண்ட அந்த மூவறை வீட்டின் அமைப்பு மிகவும் கலையம்சத்தோடு இருந்தது. கவிதாவுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. ஒரு சின்னக் குழந்தையைப் போல் வீட்டின் ஒவ்வொரு அறையையும் ஓடி ஓடிப் பார்க்கிறாள்.

என்ன ஆச்சரியம்! செடியில் பூத்து நிற்கும் மலர்களைப் போன்ற துல்லியமான சுத்தம், வைத்தது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அடுப்படிகூட அவ்வளவு சுத்தமாய்ப் பளிச்சென்று துலங்கியது. படுக்கையறை மெத்தை வரவேற்பறை நாற்காலிகளின் மெத்தை விரிப்புகள், அலங்காரப் பொருட்கள் ஆங்காங்கே அழகாய் இருந்தன. வீடு அமைதியாய் இருந்தது. ராதிகாவின் கணவரும் குழந்தைகளும் இன்னும் வீடு திரும்பவில்லை என்பதை அந்த அமைதி எடுத்துக் காட்டியது.

ராதிகா உள்ளே போய் உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு வந்தாள். இருவரும் வரவேற்பறையில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்.

“என்னடி சாப்பிடறே..! கூலா, ஹாட்டா? முதல்ல ஏதாச்சம் தண்ணி சாப்பிடு.. அப்பறமா நான் டிபன் பண்றேன். சாப்பிட்டுப் போகலாம்”

கவிதா தலையை ஆட்டினாள். “எனக்கு இப்ப உன்னைப் பத்தின சில விஷயங்கள் தெரியணும். காபியும் சாப்பாடும் எனக்குத் தேவையில்லை.. உன்னைப் பார்த்ததே எனக்குப் பெரிய சாப்பாடு.. இப்ப உன்னோட பிள்ளைங்க குழந்தைகள்லாம் எங்கே.. எப்ப வருவாங்கன்னு சொல்லு.. அவுங்க வந்துட்டா அவுங்கள பார்த்துட்டா ஒரு விருந்தே சாப்பிட்ட மாதிரி ஆயிடும்… சொல்லு ராதிகா.. அவுங்கள்லாம் எப்ப வருவாங்க?”

ஆர்வம் பொங்கக் கேட்கிறாள் கவிதா.. தோழியின் ஆர்வம் காட்டாற்று வெள்ளமாய் அவளை எங்கேயோ அடித்துப் புரட்டிக் கொண்டுபோனது. ஊருக்கும் உலகத்திற்கும் உறவுக்கும் நட்புக்கும் இடையே தான் போட்டுக் கொண்டிருக்கும் இந்த வேஷம் இவ்வளவு சீக்கரம் கலையக் கூடிய நேரம் வந்து விட்டதே என்று மனதுக்குள் தடுமாறினாள். தன்மேலும் தன் குடும்பத்தின் மேலும் தன் தோழி வைத்துள்ள மதிப்பும் நம்பிக்கையும் தன் பதிலைக் கேட்டு கல் விழுந்த கண்ணாடி பொம்மையாய் நொறுங்கிப் போய் விடுமோ என்ற அச்சம் வேறு அவளை அலைக்கழித்தது.

“என்னடி! நான் கேட்கக் கூடாததைக் கேட்டுட்ட மாதிரி சிலையாட்டம் நிக்கறே..?”

“கவிதா உன்னோட அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலடி. நீ ஏன் என்கிட்ட இவ்வளவு பிரியமா இருக்கே… என்னோட வாழ்க்கையில சந்தோஷத்தை எதிர்பார்க்கிற உனக்கு அது அறவே இல்லேன்னு தெரிஞ்சா என்னைப் பத்தி என்னதான் நெனைப்பே…”

தோழியின் கையைப பற்றிக் கொண்டு தலை கவிழ்கிறாள் ராதிகா. கவிதாவின் பிடரியில் யாரோ தட்டியது போன்ற உணர்ச்சித் துடிப்பு.

“என்ன சொல்ற ராதிகா.. சந்தோஷமே இல்லேன்னா.. உன்னோட பிள்ளைகள். குழந்தைகள் இப்ப உன்னோட இல்லையா..”

“கணவர் இருக்கிறார்.. ஆனா பிள்ளைகள்தான் இல்லே.. நான் பொண்ணா பொறந்ததற்கு திருமணம்கிற அந்தஸ்து கிடைச்சுது. ஆனா என்பெண்மையின் பெருமைக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கலே.. வெறும் தரையாக கட்டாந்தரையாகவே வாழ்க்கை போயிடுமோன்னு பயமா இருக்குடி”

தன்வீட்டுக்குள் தன் தோழியிடம் மனம் விட்டுக் கதறுகிறாள் ராதிகா. கவிதாவுக்கு பேச்சு வராமல் வாயடைத்துப் போகிறது.

“என்ன ராதிகா.. இந்த நவீன நாகரீக காலத்தில நீ இப்படிப் பேசலாமா.. பிள்ளை இல்லாதவுங்களுக்கு எத்தனையோ விஞ்ஞான கண்டு பிடிப்புகள் வந்துட்ட இந்த காலத்தில போய் பத்தாம்பசலி மாதிரி பேசிட்டிருக்கியே.. டாக்டர்கிட்ட சோதனையில என்ன குறையின்னு தெரிஞ்சுட்டா அதுக்குத் தகுந்த நடவடிக்கையே எடுக்கலாமில்லியா..”

“சோதனையெல்லாம் பண்ணியாச்சு.. ஆனா அதுக்குமேல நடவடிக்கை எடுக்க முடியாமப் போச்சு..”

“என்னடி பைத்தியமாட்டம் பேசற.. எத்தனையோ சிசிச்சை முறைகள் இருக்கே.. ஒன்று கூடவா கைகொடுக்கலே?”

“ஆமாண்டி.. எதுவுமே கைகொடுக்க முடியாத சூழ்நிலையை கடவுள் உண்டு பண்ணிவெச்சிருக்காரு.”

“ராதிகா..!?”

“ஆமாம் கவிதா.. குறை என்கிட்ட இருந்தா அதை நான் மருத்துவ ரீதியில் நிவர்த்தி செய்துக்கலாம்.. ஆனா குறை அவர்கிட்டேயில்லேயிருக்கு..”

மடை உடைந்த வெள்ளமாய் கண்ணீர் பெருக குழந்தை ஒன்று தாய் மடியில் விழுந்து அழுவதுபோல் குமுறுகிறாள் ராதிகா.

கவிதா அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறாள். இருவரும் சிறிது நேரத்தில் அமைதி அடைகிறார்கள்.

“என்னோட கணவர்மேலே எனக்கிக்கிற மரியாதையும் அன்பும் எதனாலேயும் மாத்த முடியாதது கவிதா.. அவர் என்மேல் வெச்சிருக்கிற பிரியத்துக்கு ஈடா இந்த உலகம்கூட வர முடியாது. எங்களுக்குப் பிள்ளை இல்லேன்னு அவரோட சொந்தக்காரங்கள்லாம் அவருக்கு ரொம்பவே கஷ்டத்தைக் கொடுத்துட்டாங்க. உனக்கு வாரிசு வேணும்டா.. நீ சீக்கிரம் மறுமணம் பண்ணிக்கோ.. இவள விவாகரத்து செய்துடுன்னு வருஷக் கணக்கா சொல்லிக்கிட்டு இருக்காங்க.. அவரு தன்னோட நிலையை நெனைச்சி தூண்டில் புழுவா துடிச்சிட்டிருக்காரு”
“எவ்வளவு நாளைக்கு இந்த வாழ்க்கையை நீங்க வாழ முடியும். வெறுமை தட்டிப் போயிடாதா..நீ மனசுக்குள்ளேயே வெந்து சாகப்போறியா. இதுவே உனக்கு எமனாய்ப் போவுதடி.. மனைவிகிட்ட குறை இருக்குன்னு தெரிஞ்சா கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாம அவளை விட்டுட்டு இன்னொருத்தியைக் கட்டிக்கிற ஆண்கள் இல்லியா.. நீ மட்டும் ஏன் இப்படிப் பத்தாம் பசலித்தனமா வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்கே.. நீ வாழ்ந்ததுக்கு ஒரு அடையாளம் வேண்டாமா ராதிகா.. கணவரை விவகாரத்து பண்ண உனக்கு சரியான காரணம் இருக்கு.. வாடி. வெளியே வா.. தியாகம் பண்ணுவதுக்கும் அளவு வேணாமா? பெண்ணுரிமையைப் பத்தி எப்படி எல்லாம் பேசுவே.. நீயா இப்படி செத்த பாம்பாயிட்டே. வேண்டாம் ராதிகா.. இந்தப் பொந்துக்குள்ளேயிருந்து வெளியே வந்திடு.. உனக்குனு ஒரு உலகம் பிரகாசமா இருக்கு..” உணர்ச்சிமயமானாள் கவிதா.

ராதிகா பூவாய் சிரிக்கிறாள். தோழியின் பேச்சு சிரிக்கத்தான் தோணுது. “கணவன் மனைவி உறவுங்கிறது, அனுபவிச்சப்பறந்தான் என்னனு புரியும்.. நீ இன்னும் கல்யாணம் பண்ணாதவ..உனக்கு குடும்ப உறவுகளின் அருமை இன்னமும் புரியலேன்னு நெனைக்கிறேன். என்னோட கல்யாணத்தை நான் வெச்சுக்கிறதும் வேணாங்கிறதும் என்னோட இஷ்டமில்லே.. நான் யாருமே இல்லாம இந்த உலகத்துக்கு வந்துடல.. அதே மாதிரி யாருமே இல்லாம இந்த உலகத்தில் நான் வளர்ந்துடலே.. என்னோட பிறப்புக்கும் வளர்ச்கிக்கும் வாழ்க்கைக்கும் காரணமானவங்க இந்த சிங்கை மண்ணில என்னைச் சுத்தி நெறைய பேரு இருக்காங்க. அவுங்கள நான் நெனைக்கணும். அவுங்களோட கௌரவத்தை மதிக்கணும். என்னை மணமேடையில அமர்த்தி இந்த மரியாதையைத் தந்த அவுங்கள எப்படி நான் உதாசீனப்படுத்த முடியும். என்னோட சுயகௌரவத்தை மட்டும் நெனைச்சி, என்னோட உரிமையயை கேட்டு நான் விவாகரத்துப் பண்ணினா அது அவுங்களை அவமதிக்கிற மாதிரி ஆகாதா.. எனக்கு என்னோட அப்பா அம்மா வேணும், என் சொந்தக்காரங்க வேணும்.. என் மேல அன்பும் மரியாதையும் வெச்சிருக்கிற என் நண்பர்கள் வேணும்.. எல்லாத்துக்கும் மேலா நம்ம பண்பாடு பாரம்பரியங்கிற கலாச்சாரமும் வேணும்.. அதுக்காகத்தான் இந்த வாழ்க்கையை நான் விடாமப் பிடிச்சிட்டிருக்கேன்.. எனக்கு ஒரு புள்ளை வேணும்கிறதுக்காக என் கணவரை விட்டுட்டு வந்துட்டா இதெல்லாம் என்னைவிட்டுப் போய்டும் கவிதா..

பிள்ளை இல்லேங்கிற கவலை இப்ப அதிகமா இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல அதுவும் மறந்து போயிடும். அப்படியே பிள்ளை வேணும்கிற ஆசை அதிகமாத் தொல்லை பண்ணிணா… அவரோட பேசி ஒரு பிள்ளையை நான் தத்தெடுத்துப்பேன்..

நாமா அமைச்சிக்கறது தானே வாழ்க்கை.. அது நரகமாகறதும் சொர்க்கமாகறதும் நம்ம கையிலதானே இருக்கு..”

‘ராதிகா” என்று அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்.

“வெறும் பணம் பகட்டு பதவிக்காகத் தனக்குத் துணையைத் தேடிக்கிட்டு போலி வாழ்க்கை வாழ்கிற எத்தனையோ பேருக்கு நடுவில இப்படி ஒரு புனித யாகத்தை நடத்திக்கிட்டு புடம் போட்ட தங்கமா நிக்கிற உன் மனசை என் வார்த்தைகள் துன்புறுத்தி இருந்தா என்னை மன்னிச்சுடு ராதிகா”

தோழிகள் மனப்பாரம் குறைந்து தேநீர் பலகாரத்தைத் தொட ஆரம்பித்த போது ராதிகாவின் கணவர் வருகிறார். கவிதாவின் கண்கள் அவர்மேல் படிகிறது.

கொஞ்சமும் கவலையே தெரியாமல் பூரண நிலவாய் தெளிவுடன் துலங்கும் அந்த முகத்தில் ராதிகா முழுமையாய் தெரிந்தாள். அவளது அழகு முகத்தின் காரணம் அவள் அகத்தில் உறைந்திருக்கும் கணவனின் உண்மையான அன்பும் சேவையும்தான் என்பது தெளிவாய் அவளுக்குப் புரிந்தது.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *