அப்பா






ரதி உன்னோட படிப்பு எப்படி போய் கொண்டிருக்கிறது என அவளின் அப்பா சுரேஷ் கேட்கிறார். உங்ககிட்ட சொல்லணும்ன்னு அவசியம் இல்ல என சொல்கிறாள். நீங்க என்கிட்ட எதுக்கு பேசுறீங்க உங்ககிட்ட பேச விருப்பம் இல்லன்னு எத்தன தடவ சொல்றது என கூறுகிறாள். சமையலறையில் இருந்து வெளியே வந்த அருணா, ரதி எத்தன தடவ நான் உங்கிட்ட சொல்லிருக்கேன் அப்பா கிட்ட இந்தமாறி பேசகூடாதுன்னு என திட்டுகிறாள். என் அப்பா அந்த போட்டோல இருக்கிறவர் தான். இவரு ஒன்னும் என் அப்பா இல்ல. உன் தேவைக்காகவும் சந்தோஷத்துக்காவும் நீ இவர கல்யாணம் பண்ணிக்கிட்ட அதுக்காக நான் இவர அப்பான்னு ஏத்துக்கமுடியாது என கூறவும், அருணா அவளை அறைந்துவிட்டாள்.
ரதி கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டாள், அருணா சுரேஷிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவ எனக்கும் பொண்ணுதான் நான் அவள பிரிச்சுலாம் பாக்கல நீ என அவள அடுச்ச பிள்ள பாவம் ரொம்ப கஷ்டப்படுவ என கூறுகிறான். உங்கள போய் அவ இப்படி பேசிட்டாளே அதான் எனக்கு வருத்தமா இருக்கு என கூற அவன் ஆறுதல் கூறுகிறான். ரதி படிக்கும் பள்ளியில் தான் அருணா ஆசிரியராக வேலை செய்கிறாள், அன்றைக்கு அவள் வேலைக்குச் செல்லவில்லை ரதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வருகிறாள். குளிச்சுட்டு வா சாப்பாடு எடுத்து வைக்குறேன் என அருணா கூற எனக்கு பசிச்சா நான் சாப்டுக்குவேன் யாரும் எனக்கு போடணும்ன்னு அவசியம் இல்ல என கூறிவிட்டு ரூம்க்கு சென்று விடுகிறாள். இவ்வாறு இருவரும் பேசிக்கொள்ளாமலே ஒரு வாரம் கடந்தது.
அருணா நீ ஏன் ஒருமாறி இருக்க வீட்டுல எதும் பிரச்சனையா என அருணாவின் நெருங்கிய தோழி சாரதா கேட்க ஆமாம் என தலையசைக்கிறாள். என்ன ஆச்சு என கேட்க கேன்டீண் போய் பேசுவோமா? என அருணா கேட்கிறாள், சரி என இருவரும் செல்கின்றனர். அதேசமயம் ரதியும் அங்கு வருகிறாள், ரதி என்னய பாத்து உன் தேவைக்காகவும் சந்தோஷத்துக்காவும் நீ இவர கல்யாணம் பண்ணிக்கிட்ட அதுக்காக நான் இவர அப்பான்னு ஏத்துக்க முடியாதுன்னு சொல்றா. நான் என் சந்தோஷத்துக்காகவா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவரு செத்ததுக்கு அப்புறம் ஒரு வாரம் சொந்தப்பந்தம் பாத்துக்குச்சு அதுக்கு அப்பறம் உனக்குன்னு ஒரு பிள்ளை இருக்கு அதுக்காக நீ ஓடனும்ன்னு சொல்லி வேலைக்கு அனுப்பிட்டாங்க.
வேலை முடுஞ்சு வீட்டுக்கு போறப்ப உன் புருஷன் தான் இல்லையே நான் வேணா துணைக்கு வரவான்னு சில மிருகங்கள் கேட்கும் போது அவர்களை கடந்து நான் வீட்டுக்கு வர எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நைட் நாம தூங்கிட்டு இருக்கும்போது எவனாவது வீட்டுக்குள்ள வந்துருவானோ? நாம பொண்ணுக்கு எதாவது ஆயிருமோன்னு எத்தன ராத்திரி காவல்காத்து நின்னுருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அப்பா இருந்தா நமக்கு இத வாங்கி குடுத்துருப்பாரு என்ற ஒரு நினைப்பு அவளுக்கு வந்துர கூடாதுன்னு அவ கேக்குறத வாங்கி குடுக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இன்னைக்கு நான் இருக்கேன் ஒருவேளை நான் இல்லாம போய்ட்டா அவள யாரு பாத்துப்பாங்க அவளுக்கு ஒரு ஆளு வேணும்ன்னு தான் கல்யாணம் பண்ணேன் இதான் காரணம்ன்னு சுரேஷ்கிட்டயும் சொல்லிட்டேன்.
அவரும் உங்க பொண்ணு எனக்கும் பொண்ணு மாறி தான் நான் பிரிச்சுலாம் பாக்கமாட்டேன் உங்களையும் நான் கட்டாய படுத்தமாட்டேன்ன்னு சொன்னாரு. அந்த மனுஷன்கிட்ட மூஞ்சி குடுத்து பேச வேணாம் குறைந்தபட்சம் அசிங்க படுத்தாம இருக்கலாம்ல. எப்ப கல்யாணம் பண்ணிகிட்டோனோ அப்ப இருந்து அவ என்னய அம்மான்னு கூப்டுறதையே நிறுத்திட்டா அவ்ளோ கஷ்டமா இருக்குடி என்கிறாள். உனக்கே தெரியும் வெளியூர்க்கு போய் வேலை செய்யணும்ன்னு நான் எவ்ளோ ஆசைப்பட்டேன்னு அதுக்கான வாய்ப்பு கிடைச்சும் நான் அங்க போகாம இவளுக்குக்காக உங்கிட்ட கேட்டு இங்க வேலைக்கு சேந்தேன் எதுக்கு, பிள்ளை நாம கண்ணு முன்னாடியே இருக்கட்டும்ன்னு. என் சந்தோஷத்த குழி தோண்டி பொதச்சுட்டு இவளுக்காக வாழ்ந்த என்னய பாத்து உன் சந்தோஷத்துக்காக நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு கேட்டாளோ அப்பயே நான் செத்துட்டேன் டி என கூறுகிறாள்.
சரிவிடு அருணா எதையும் யோசிக்காத ஒருநாள் புரிஞ்சுக்குவா உன்னையும் அவரையும் நீ அழாத கண்ண தொட உன் கிளாஸ்க்குக்கு போணும்ல என சாரதா கூறுகிறாள். சரி நீ போ நான் பாத்ரூம் போய்ட்டு வரேன் என கூறிவிட்டுச் செல்கிறாள் அருணா. பள்ளி முடிந்ததும் அருணா தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறாள், அம்மா என ரதி அழைத்ததும் திரும்புகிறாள். ஓடிவந்து அருணாவை அணைத்துக் கொண்டாள், உன்ன புருஞ்சுக்காம ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்னய மன்னுச்சுரும்மா என கூறி அழுகிறாள், அம்மாக்கு உன்மேல எந்த கோபமும் இல்லடா நீ அழாத என்கிறாள்.
இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர் சுரேஷ் வெளியே புக் படித்துக் கொண்டிருந்தான் அம்மாவும் பொண்ணும் ஒன்னா வரீங்க ஆச்சர்யமா இருக்கு என்கிறான். ஆமாப்பா என ரதி சொல்லவும் அவனை அறியாமல் புக் கீழே விழுந்தது. என்னை மன்னுச்சுருங்கப்பா உங்கள புருஞ்சுக்காம நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என அவனிடம் கூற அப்படிலாம் எதுவும் இல்லம்மா உன்மேல அப்பாக்கு எந்த கோவமும் இல்லம்மா உன்மேல இந்த அப்பாக்கு கோவபட தெரியாதுடா, என சுரேஷ் கூறவும் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டாள் ரதி. அந்த நிகழ்வை எவ்வாறு வர்ணிப்பது என அவனுக்கு தெரியவில்லை. இருவரின் கையை பிடித்துக்கொண்டு முதல்முறையாக வெளியே சென்றாள்…..