அனுபவம் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,089
“என்னம்மா…டவுனில் போனமாதம் புதுசா ஒரு ஜவுளிக்கடை திறந்திருக்காங்க…அதை விட்டுட்டு பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு
துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது சென்டிமென்டா..?” – மேனகா தன் தாய் கனகாவிடம் கேட்டாள்.
”அந்தப் பழைய கடையில் இரண்டு துணிகள் எடுப்போம் அதே மாதிரி துணிகளின் விலையை புதுக்கடையில் விசாரிப்போம், அப்ப காரணம் புரிஞ்சிக்குவே” என்றாள் கனகா.
துணிகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தபொழுது புதுக்கடையில் விலை சற்று ஏற்றமாக இருந்தது.
“விலை இப்படித்தான் இருக்கும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்?”, மேனகா ஆச்சரியமாக கேட்டாள்.
“வட்டிக்கு கடன் வாங்கி, பிரபலங்களை அழைத்து புதுசா கடை திறக்கறவங்க, அந்த செலவையெல்லாம் வாடிக்கையாளர்களிடமிருந்து குறுகிய காலத்தில்
எப்படி வசுலிக்கலாம்னுதான் முயற்சிபண்ணுவாங்க. பழைய கடைக்காரங்க, பெரும்பாலும் கடனிலிருந்து மீண்டு வந்திருப்பாங்க, அதனால அம்மாதிரி செலவுகள்
அவர்களுக்கு தற்பொழுது இருக்காது. அதனால்தான் புதுக்கடையில் இந்த ஏற்றவிலை”.
படிக்காத தன் தாயின் அனுபவ அறிவைக்கண்டு வியந்து போனாள் மேனகா.
– எஸ்.எஸ்.ராமன் (பிப்ரவரி 2014)