ஜாதின்னா என்ன?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 3,912 
 

ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம்.

மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்.

மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா.

ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட எம் பி பி எஸ் படித்த டாக்டர்கள் தான். மொத்தத்தில் அது ஒரு டாக்டர் குடும்பம்.

ஊர்மிளா, மிருதுளாவுக்குப் பிறகு பதினைந்து வருடங்கள் கழித்துப் பிறந்தவன் மகேஷ். வீட்டில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையான ‘ மகேஷ்’க்கு தீராத குழப்பம் ‘ஜாதி என்றால் என்ன? என்று புரியவில்லை அவனுக்கு. ஆறாம் வகுப்பில் படிக்கும் மகேஷ்க்கு ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்பது சரியா? ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா..’ என்பதுதான் சரியா? எனக் குழப்பம் வந்தது.

பெரிய அக்கா ஊர்மிளா ‘எம் பி பி எஸ்’ முடித்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று திரும்பியபோது அவள் தன்னுடன் ஒரு டாக்டரை அழைத்துவந்தாள். “மம்மி… டாடி… ஹி ஈஸ் மிஸ்டர் ஜோசப். மை க்ளாஸ் மேட்..” என்று அறிமுகப் படுத்தினாள்.

சேஷாத்ரி ஹலோ சொல்லி ஜோசப்பிற்குக் கை கொடுத்தார். அம்மா கை கூப்பி வணங்கி சந்தோஷித்தாள்.

டாக்டர் ஜோசப், மகேஷின் கன்னம் கிள்ளி ‘ஹலோ’ சொல்லிச் சிரித்தார். ஜோசப்பிற்கும் ஊர்மிளாவுக்கும் ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவுத் திருமணம் நடந்தது. மகேஷ்க்கு புதுச் சொக்காய் கிடைத்தது.

கல்யாணம் ஆன கையோடு ஊர்மிளா ஜோசப்போடு பம்பாய் சென்று விட்டாள்.

“புரோகிதர், அதுவும் கனபாடிகள் பேத்தி கிறித்தவனை இழுத்துண்டு வந்துட்டாளாமே…?”

“ஏழைப்பட்ட குடும்பமா இருந்தா இடிச்சிப் பேசுவாங்க. ஜாதிப் ப்ரஷ்டம் செய்வாங்க. காசுல மிதக்கற பசையுள்ள குடும்பம். கண்டும் காணாத விட்டுட்டாங்க.”

“பாப்பார ஜாதீல பொறந்து இப்படி புத்தி போகுமோ…?”

“காசு பணம் இருந்தா ஆச்சா..இப்படி ஜாதிக் கலப்படம் பண்ணிட்டாளே…”

“ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணிண்டா ரெண்டும் ஒத்துப் போகாம அறுத்துக் கட்டிண்டுதான் நிக்கணும்…”

இப்படி எத்தனையெத்னையோ வம்புப் பேச்சுகள். ஊரார் பேசுவதெல்லாம்மகேஷ் காதில் விழுந்தாலும் அதையெல்லாம் பகுத்துணரும் வயதோ பக்குவமோ அவனுக்கு இல்லை அப்போது.

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

மகேஷ் வீட்டுக்கு அருகாமைக் கட்டடம் சங்கர மடம். மடத்தோடு இணைந்த வேத பாடசாலை. விடிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் பாடசாலை வித்யார்த்திகள் வேதம் சொல்ல சங்கர மடம் கலகலப்பாகி விடும்.

சரியாக ஆறரை மணிக்கு சேகண்டி, கொத்து மணி, தாளம் ஒலிக்க சங்கர பாதுகைக்கு தீபாராதனை நடைபெறும்.

ம்ருதுளா தினமும் சங்கர மடத்தில் தீபாராதனை முடிந்ததும் விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வருவாள். மடத்திலிருந்து வந்த பதினைந்தாவது நிமிடம் டூட்டிக்குக் கிளம்பிவிடுவாள்.

இன்று காலை சங்கர மடத்திலிருந்து மிருதுளா அக்கா வந்ததும் அப்பா சேஷாத்ரி மிருதுளாவை “ஒரு நிமிஷம்” என்று அழைத்தபோதுதான் மகேஷ் படுக்கையை விட்டு எழுந்தான்.

“மிருதுளா.. உன் முடிவுல எதுவும் மாற்றமில்லையா?” என்று சற்றுக் கடுமையாகவே அப்பா மிருதுளாவைக் கேட்க, மகேஷ் படுக்கையிலேயே படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

“இல்லேப்பா..” என்றாள் மிருதுளா

“நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவுக்கு வந்தியா..? பின்னால வருத்தப் படுவே..”

“…”

“இன்னும், இப்பவும் மோசம் போயிடலை. இதோ இந்தக் கவர்ல பாரு நிறைய ‘போட்டோஸ்’ இருக்கு இதுல ஒண்ணு எடுத்துக் கொடு. இனம் இனத்தோடதான் சேரணும்…”

அப்பா கொடுத்த கவரை புறங்கையால் ஒதுக்கினாள்.. அப்பா என்னை வற்புறுத்தாதீங்க. என் முடிவுல மாற்றமில்லை..” என்று மிருதுளா அவ்விடத்தை விட்டுக் கிளம்ப…

“ஒரு நிமிஷம் மிருதுளா. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடறேன். எந்த ஜாதியா இருந்தாலும் பரவாயில்லே. நம் ஜாதியா இருந்தாத்தான் காலம் கவலையில்லாம ஓடும். ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணினா ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்துப் போகாம அறுத்துக் கட்டற கதைதான் ஆகும்.” என்றார் சேஷாத்ரி.

‘பெரிய அக்கா ஊர்மிளா கிறித்தவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தபோது ஊர் பேசிய அதே பேச்சு. இன்று அப்பாவின் வாயிலிருந்து வருகிறதே..’

‘பெரிய அக்காவைப் போலவே சின்ன அக்காளும் வேறு ஜாதிப் பையனை கல்யாணம் செய்ய விரும்புகிறாளோ?’

‘பெரிய அக்காவின் திருமணத்தில் ஒரு வேளை அப்பாவுக்கு விருப்பம் இல்லையோ? வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக்கொண்டாரோ?..’ என்று மகேஷின் எண்ணங்கள் ஓட அடுத்த நொடி குழம்பிப்போனான்.

“இதோ பாரு மிருதுளா.. உன் தலையெழுத்து அப்படித்தான்’னா நான் என்ன செய்ய முடியும். உன் பெரிய அக்கா புத்திசாலி. மிகச் சரியா முடிவெடுத்தா. ஆனா நீ..? எப்படியோ போ. நானும் உன் அம்மாவும் நிச்சயம் இந்தக் கல்யாணத்துல கலந்துக்க மாட்டோம்..” என்று அப்பா கோபமாய்ச் சென்றவுடன்…

மிருதுளா புது நூல் புடவை கட்டிக் கொண்டாள். மகேஷை எழுப்பி அவனை தயார்ப் படுத்தி சங்கர மடத்திற்கு கூடவே அழைத்துச் சென்றாள்.

சங்கர மடத்தில் பூஜை செய்யும் உமாசங்கர சாஸ்திரிகளுக்கும் மிருதுளாவுக்கும் சங்கர மடத்திலேயே வேத கோஷம் முழங்க மாலை மாற்றிக் கொண்டு திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு வந்திருந்த ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள்.

“இந்தக் கல்யாணம் கண்ணுக்கு எவ்வளவு நன்னா இருக்கு பாரேன்..”

“அந்தந்த ஜாதீல கல்யாணம்ன்னா ஜனக்கட்டு, மனுசாக்கட்டு இருக்கும்…”

“சின்னவளா இருந்தாலும் புத்திசாலித்தனமா நடந்துனுட்டா பாரேன்..”

“…”

“பெரியவ ஜாதி விட்டு ஜாதி…ச்சே.. அதைப் பத்திப் பேசாதே; அது அவ தலையெழுத்து…”

அப்பா அம்மா ஒத்துக் கொள்ளாததை ஊர் மக்கள் ஒத்துக் கொள்வதும், ஊர் மக்கள் ஒத்துக் கொள்ளாததை அப்பா அம்மா ஒத்துக் கொள்வதும்…ஒரே குழப்பமாக இருந்தது மகேஷ்க்கு.

வகுப்புக்குச் சென்று அமர்ந்த மகேஷுக்கு ஒரு புது யோசனை தோன்றியது. தமிழாசியர் வந்ததும் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். தமிழாசிரியர் வந்ததும் “ஜாதி மதங்களைப் பாரோம்…’ என்று சொன்னானே பாரதி…’ என்று பாடம் தொடங்கி விட்டார்.

மகேஷுக்கு மேலும் குழப்பமாகியது.

(போரொலி சிற்றிதழ் பொங்கல் சிறப்பிதழ் (2004)

Print Friendly, PDF & Email

1 thought on “ஜாதின்னா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *