இவர்களின் அன்பு வேறு வகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 5,102 
 

கந்தசாமி தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே அவன் மனைவி இவனை அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள்.

ஒரு வேலை செய்ய துப்பிருக்கா ? எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கே ! யாராவது ஏதா கேட்டாங்கன்னா துக்கி கொடுத்திக்குடுவாரு, இவரு பெரிய துரை. சில வார்த்தைகளை நாம் எழுத்தில் எழுதக்கூடாது.

தேமே..என்று கேட்டுக்கொண்டிருந்தான் கந்தசாமி. அவன் அப்பிராணி என்று பூரணமாய் சொல்ல முடியாவிட்டாலும், எதையும் நம்பிவிடுபவன்.அவன் கண்டானா? அந்தப்பெண் பொய் சொல்கிறாள் என்று.

ரேசன் கடையில் அன்றுதான் கடைசி நாள் மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு, இவன் எப்படியோ அவன் அதிகாரியிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு மணி நேரம் அனுமதி வாங்கி வரிசையில் நின்று அடுத்து அவன்தான் எண்ணெய் வாங்கவேண்டும்.துரதிர்ஷ்ட வசமாக அவ்னோடு எண்ணெய் தீர்ந்த்தது என்று ரேசன் கடைக்காரர் அறிவித்து விட்டார். அடுத்து நின்று கொண்டிருந்த மாரியம்மாள் அவர்கள் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளியிருந்த வலசான் பொண்டாட்டி “அண்ணாத்தே எனக்கு விட்டுக்கொடு அண்ணாத்தே”சுத்தமா வீட்டுல எண்ணெய் இல்ல, பச்சைக்குழந்தை இருக்குது, போய்தான் அதுக்கு பால் காய்ச்சோணும். கெஞ்சிய கெஞ்சலில் இவன் பின்னாலிருந்த அவளை முன்னால் வழி விட்டு வாங்கிக்க சொன்னான்.

பிறகுதான் தெரிந்தது அவள் பச்சைக்குழந்தை என்று சொன்னது பதினெட்டு வயது பையனை. கந்தசாமியின் மனைவி தனபாக்கியம் இவன் வெறும் கை வீசி வந்ததை கூட சகித்துக்கொண்டாள். மாரியம்மாளின் பச்சைக்குழந்தைக்கு விட்டுகொடுத்தேன் என்று கந்தசாமி பெருமையாய் சொன்னதும் “காளி” ஆகிவிட்டாள். அப்பொழுது ஆரம்பித்தவள்தான்
கந்தசாமிக்கு இது வரை காப்பி வந்து சேரவில்லை. தாளித்துவிட்டாள்.

ஒரு வாய் காப்பிக்கு வழியில்லாமல் மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டான்.வேலை இரண்டு மூன்று தெரு தள்ளித்தான்.வாட்ச்மேன் உத்தியோகம்தான். அவன் வேலை செய்த இடம் வீட்டுக்கு பக்கம்தான். அதனால் காலையில் ஒன்பது மணிக்கு போனால் இரவு எட்டு அல்லது ஒன்பது ஆகிவிடும். அவ்வப்போது அதிகாரியை அனுசரித்து டீயோ, காபியோ சாப்பிட வந்திடுவான்.ரேசனில் பொருட்கள் போட்டால் அனுமதி கேட்டு வந்து வாங்கி கொடுத்து விட்டு திரும்பி விடுவான்.

இன்று வீட்டுக்கு வந்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது. ரேசனில் அந்த பெண் ஏமாற்றியது கூட இவனுக்கு வருத்தமில்லை, சம்சாரம் எப்பொழுது வீட்டுக்கு வந்தாலும் காப்பி கொடுத்து அனுப்புபவள், இன்று ஒரு பெண்ணிடம் ஏமாந்து வநததை ஜீரணிக்க முடியாமல் வெறும் வயிற்றுடன் அனுப்பி விட்டாள் புலம்பிக்கொண்டே வேலைக்கு சென்றான் கந்தசாமி. அவன் வேலை செய்த இடம் புராதன சிற்பங்களும், அழகிய சித்திரங்களும் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கலைக்கூடம். ஒவ்வொரு சிற்பமும், ஓவியமும் கண்ணைக்கவரும் வண்ணம் அற்புதமாய் இருக்கும். கந்தசாமிக்கு இதெல்லாம் ஒன்றும் தொ¢யாது. ஒரு சில நேரங்களில் பார்வையிட வ்ருபவர்கள் இந்த சிற்பங்களையும், ஓவியங்களையும், சிலாகித்து இவனிடம் விசாரிக்கும்போது இவனுக்கு ஒன்றும் புரியாது.இருந்தாலும் பெருந்தன்மையாக அதிகாரியின் பக்கம் கை காண்பித்து தப்பி விடுவான்.ஏறக்குறைய பத்து வருடங்களாக உத்தியோகம் பார்க்கிறான். எதைக்கண்டு இவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்? வாவ்..பியூட்டிபுல் இவ்வார்த்தைகளை வருபவர்கள் அடிக்கடி சொல்லி பரவசப்படுவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான். அவனை பொறுத்தவரை இவை யாவும் சாமி சிலைகள்,படங்கள், அவ்வளவுதான். இந்த கலை சிற்பங்களின் பெருமைகளை பற்றி அவனுக்கு என்றுமே வலைப்பட்டதில்லை. யாரையும் தொட விடக்கூடாது, அவ்வளவுதான் அவனது பணி.ஒன்பது மணி ஆனதும் இரவு வாட்ச்மேன் வந்தவுடன் சொல்லிவிட்டு கிளம்பி விடுவான்.

மாலை ஆறு மணி இருக்கும், ஒரு காப்பிக்கு வழியில்லாமல் யாராவது வாங்கி தருவார்களா என எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான் கந்தசாமி.

ஒரு கார் வந்து நினறது.அதிலிருந்து ஒரு இளம் ஜோடி இறங்கியது. இருவருக்கும் இருபத்தி ஐந்திலிருந்து இருபத்தெட்டுக்குள் இருக்கலாம்.உள்ளே வரும்போதே கும்மென்ற வாசம் அவர்கள் போட்டிருந்த விலையுயர்ந்த செண்டின் பெருமையை சொல்லாமல் சொன்னது. ஒவ்வொரு சிற்பமாய் நின்று கூர்ந்து கவனித்து இவள் அதைப்பார்த்து ஏதோ சொல்ல அவன் “க்ளுக்”என மெல்லிய பெண்¨யுடன் சிரிக்க, அவள் செல்லமாய் அவன் தலையில் தட்டினாள்.

அசுவாரசியமாய் இதை பார்த்துக்கொண்டிருந்த கந்தச்சாமி அந்த பெண் ஒவ்வொரு சிற்பங்களையும் பார்த்து வியந்து அவன் தோளில் சாய்வதையும், அவன் அவளுக்கு அதைப்பார்த்து ஏதோ சொல்வதையும், அதற்கு அந்த பெண் வெட்கப்பட்டு சிரிப்பதையும் பார்த்து இவனுக்கு மெல்ல சுவாரசியம் ஏற்பட்டது. இருந்தால் இப்படி இருக்கனும், புருசனும், பொண்டாட்டியும். எனக்குன்னு வந்திருக்கிறா பாரு, இராட்சசி கொஞ்சம் சத்தமாய் சொல்லிவிட்டான் போலிருக்கிறது. எங்கே தன் பொண்டாட்டிக்கு கேட்டிருக்குமோ என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

இப்பொழுது சுவாரசியமாய் அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.ஒரு ஓவியத்தை பார்த்து விட்டு இவர்கள் திரும்பினர். இவன் அவர்களை பார்த்துக்கொண்டிருப்பதை எங்கே கண்டு பிடித்துவிடுவார்களோ என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.அவர்கள் ஸ்..ஸ் என்று அழைப்பது கேட்டது, தன்னையா கூப்பிடுகிறார்கள் என்று திரும்பி பார்க்க அவனை கை காட்டி அழைப்பதை கண்டவுடன் பயந்து நடுங்கி விட்டான். தான் அவர்களை பார்ப்பதை கண்டு பிடித்து விட்டார்களோ, போச்சு, நம் வேலை இன்றோடு காலி என்று மனதுக்குள் நினைத்தவாறு பட படக்கும் இதயத்துடன் அவ்ர்களை நெருங்கினான்.

இந்த படங்களை வாங்கனும்னா யாரை பாக்கனும்? இவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்த்து. வாங்க என்று அவனது அதிகாரியின் அறைக்குள் கூட்டி சென்று உள்ளே அனுப்பி வைத்து விட்டு அப்பாடி என்று தன்னுடைய இடத்துக்கு வந்து அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தான்.

மீண்டும் அவர்களை பற்றியும்,தன் மனைவியை பற்றியும்,எண்ணங்களில் மூழ்கினான். நம்ம பொண்டாட்டி மட்டும் ஏன் இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபிச்சுக்கறா?கல்யாணம் ஆகி ஒரு வர்சம் மட்டும் நான் சொல்றத கேட்டுட்டு நடந்த மாதிரி இருந்த்து.அதுக்கப்புறம் அவ ராஜ்ஜியம்தான். இரண்டு பசங்க பிறந்தாலும் பிறந்தாங்க, அவ குணமே மாறி போச்சு. இவங்க பாரு, எவ்வளவு அந்நியோன்யமா இருக்காங்க.ம்…பெருமூச்சு விட்டான்.

அதிகாரியுடன் இவர்கள் வெளியே வர, ஏதேனும் கேட்பார்களோ என்று இவன் அவர்கள் இருக்குமிடத்துக்கு எழுந்து சென்றான். ஒரு ஓவியத்தை காண்பித்து இதை நன்றாக காகிதத்தால் சுற்றி பாதுகாத்து இவர்களிடம் கொடுக்கும்படி சொன்னார். தலையாட்டிவிட்டு வந்தவன் அவர் சொன்னது போல் செய்து அவர்கள் கையில் ஒப்படைத்தான். அவர்கள் ஒரு நூறு ரூபாயை இவன் கையில் கொடுக்க இவன் மறுத்தான். சும்மா வச்சுக்க , என்று கையில் திணிக்கவும் இவனுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.

கையில் பணம் வந்தவுடன் அவன் தோரணை நிமிர்ந்து விட்டது.அவ கிடக்கறா ! “கஸ்மாலம்” ஒரு காப்பி கொடுக்க மனசில்ல,சார் கிட்ட சொல்லி வெளியே போய் நல்ல காப்பி குடிச்சு ஏதாவது சாப்பிட்டுட்டு வரணும். மனதுக்குள் நினைத்தவன் அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

சற்று தள்ளி இருந்த பேக்கரிக்குள் நுழைந்தான்.அங்கு வாணலியில் சுடச்சுட வடையும், பக்கோடாவும் தயாராகிக்கொண்டிருந்தன.மனசுக்குள் பசங்களுக்கு பக்கோடான்னா புடிக்குமே என்ற நினைவு தலை தூக்கியது. “அப்பா இரண்டு பக்கோடா பார்சல்” என்று சொன்னவன், தனக்கு ஏதாவது ஆர்டர் பண்ணலாமா என்று நினைத்தான். வேண்டாம் அவளுக்கு வடையும் பக்கோடாவும் பிடிக்கும், இன்னும் இரண்டு பார்சல் வாங்கிட்டா நாமளும் குழந்தைகளோட சாப்பிடலாம் என்று முடிவு செய்து “பக்கோடா நாலா கட்டிடுப்பா” அப்படியே “வடையும் நாலு கட்டிடு”.அவனுக்கு அப்பொழுது தேவையிருந்த காப்பியை தள்ளி வைத்துவிட்டு, காபி செலவு மிச்சம் பண்ணிய சந்தோசத்தில் எல்லாவற்றையும் பார்சலாக ஒரு பையில் போட்டுக்கொண்டு கிளம்பினான்.

ஒன்பது மணிக்கு வீட்டிற்கு சென்றவனை வாசலிலேயே அவன் மனைவி ஏய்யா, காப்பிக்கு வருவே வருவேன்னு பாத்தா ஆளையே காணோம் !.என்றவள் ஒரு டம்ளர் காப்பியை கையில் வைத்துக்கொண்டு வாசலில் நின்றாள்.

இந்தா புள்ளை பசங்களுக்கு இந்த தீனியை கொடு, அப்படியே உனக்கும் வாங்கிட்டு வந்திருக்கேன், சொல்லியவாறு அவள் கொடுத்த காப்பியை வாங்கி ருசித்து குடித்தவன், ஆனந்தமாய் வாசலில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *