கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 390 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

“சார் இது அந்த அக்யூஸ்ட் குணசீலனுடைய போன் சார்?இதை நம்ம துலாவுனா ஏதேனும் கிடைக்கலாம்!”

என்று சொல்லி இன்ஸ்பெக்டர் எட்வினிடம் கொடுத்தார் கான்ஸ்டபிள் பிரகாஷ்.

அவரும் அதனை வாங்கி ஆராய்ந்துப் பார்த்தார், அப்படி அவனது பிரௌஸிங் ஹிஸ்டரியை செக் செய்துப் பார்த்தபோது DARK ROLL DICE என்கிற வலைத்தளத்திற்கு சென்றுள்ளான் என்பதை அறிந்துக்கொண்டார்.

அதன் பெயரே வித்தியாசமாக இருக்கின்றதே என்று எண்ணி அந்த வலைத்தளத்திற்குள் சென்றார்.

அதனுள் சென்ற பிறகுதான் தெரிந்தது அது டைஸ் வைத்து விளையாடப்படும் ஒரு வலைத்தளம் என்று.

இதில் என்ன பெரிதாக இருக்கப்போகிறது?என்று நினைத்து அதிலிருந்த எக்ஸிட் பட்டனை அழுத்துவதற்கு செல்லும்போதுதான் அந்த வலைத்தளத்தின் ஓரத்தில் ‘டார்கெட்’ என்கிற பட்டனுக்கு கீழே சிலரது போட்டோக்கள் இருப்பதை கவனித்தார்.

உற்று நோக்கியபோதுதான் தெரிந்தது அது எல்லாம் இந்த போனுக்குரியவனால் கொல்லப்பட்டவர்கள் என்று.

அந்த டார்கெட்டில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர், அதில் மூன்று பேரினுடைய போட்டோவுக்கருகில் டிக் மார்க் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்தவுடனேயே அவரது போலீஸ் மூளை சொன்னது.

‘இந்த வெப்சைட்டில் டார்கெட் என்று குறிப்பிட்டவர்களைத்தான் இவன் கொலை செய்து வருகிறான்!இந்த டார்கெட்டில் மொத்தம் ஆறு பேர் உள்ளார்கள்,அதில் மூன்று பேருக்கு டிக் மார்க் செய்யப்பட்டுள்ளது,அந்த டிக் செய்யப்பட்ட நபர்களைத்தான் இவன் கொலையும் செய்துள்ளான்!அதாவது இவன் ஒவ்வொரு நபர்களை கொலை செய்யவும் அவர்களை ஒவ்வொன்றாக டிக் செய்து வந்துள்ளான்,ஆனால் இவன் கொலை செய்ய டார்கெட்டாக வைத்துள்ள ஆறு நபர்களும் பெரிய பண பலம் கொண்ட நபர்கள்!அவர்களை ஏன் கொல்கிறான்?இதற்கு பின் உள்ள மோட்டிவ் என்ன?இதற்கான விடை அவன் வாயிலிருந்து கொஞ்சமாவது வருதா?இனி இது சரிப்படாது!இவனுக்கு பலமான உபசரிப்புடன் விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது…

அந்த வெப்சைட்டில் “ப்ரெஸ் தி ரோல் பட்டன்” என்று தோன்ற,அவரும் “ரோல் பட்டனை” தொட்டார்.

அவர் தொட்ட அடுத்த நொடி சிறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது…

நாற்காலியினின்றும் ‘விறுக்’கென்று எழுந்து அலறல் சத்தம் கேட்ட சிறையை நோக்கி சென்றவருக்கு அதிர்ச்சி ஆட்கொண்டு ‘குப்’பென்று வியர்வையை வரவழைத்தது…

குற்றவாளி என்று கருதப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டிருந்த குணசீலனின் தொண்டைக் குழியில் குத்தியிருந்த அந்த சிறு கம்பியானது இரத்தத்தை பீய்ச்சிக்கொண்டு அடிக்க வைத்திருந்து…

எட்வினும்,ஸ்டேஷனில் உள்ள அனைவரும் சிறிதும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல…டேபிள் மேல் அந்த வெப்சைட் பேஜோடு வைக்கப்பட்டிருந்த போனில் ‘CHAPTER CLOSE’ என்கிற வாசகத்தோடு குணசீலனின் புகைப்படம் தோன்றிய சில நொடிகளிலேயே அது மறைந்து, இன்ஸ்பெக்டர் எட்வினின் புகைப்படம் தோன்றி ‘WELCOME TO THE DEADLY GAME OF DICE!’ என்று வரவேற்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *