நன்றியைக் காட்டும் முறை




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வணிகன் பஞ்சகாலத்தில் தனக்கு அறி முகமான ஓர் ஏழை ஓவியக்காரனையும் அவன் குடும்பத்தாரையும் வைத்துப் பாதுகாத்தான்.
சிலகாலம் சென்றபின், ஓவியக்காரனுக்கு நற் காலம் திரும்பிற்று. நகரங்களிலும் அரசவைகளி லும் அவன் தீட்டிய படங்களுக்கு மதிப்பு ஏற்பட்டு அவனுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் மட்டற்ற அளவில் வந்து குவிந்தன. அப்போது அவன் தன்னைப் போற்றிய வணிகனிடம் சென்று அவ னுக்கு ஒரு பெருந்தொகை வழங்கப்போனான்.
வணிகன் புன்முறுவல் பூத்து, “நண்பரே, உமது நல்லெண்ணம் கண்டு மகிழ்ச்சிகொள்ளு கிறேன். ஆனால் நீர் நன்றியறிவிக்கும் வழி இன்ன தென்று அறியாததற்கு வருந்துகிறேன்,” என்றான்.
ஓவியக்காரன் வியப்புற்று, “ஒப்பற்ற வள்ளலே, நான் செய்த தவறு யாது?” என்றான்.
வணிகன், “நண்பரே, என்னை வள்ளல் என் கிறீரே; நான் உமக்குச் செய்தது உண்மையில் வண்மையானால் அதுபோன்ற வண்மைச் செயலை நீர் செய்தாலன்றோ நன்றியுடையவராவீர்,” என்றான்.
ஓவியக்காரன் பின்னும் மலைப்புடன் நிற்பது கண்டு, வணிகன் தன் கருத்தை இன்னும் விளக்கி, “நான் உமக்குச் செய்த நன்றி உம் ஒருவரை நினைத்துச் செய்ததன்று. மனித வகுப்பை எண்ணி, அதில் துன்புற்று நின்ற உமக்குச் செய்தது. நீர் நன்றியறிதல் காட்டுவதும் அம்மனித வகுப்புக்கு ஆதல் வேண்டும்; எனக்கன்று: நான் செய்த படியே துன்புற்றார்க்கு நீர் உதவினால் என் நன்றிக் கடன் தீரும்,” என்றான்.
ஓவியக்காரன் ‘நன்றி என்பது ஆளுக்கு ஆள் பரிமாறிக் கொள்ளும் வாணிபமன்று ; பண்புக்குப் பண்பு ஈடு செலுத்தும் அருளுடைமை;’ என்று உணர்ந்தான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.