‘ இந்திய நேரம் காலை சரியாய் எட்டு மணியளவில் ஐநூறு பயணிகளுடன் துபாயிலிருந்து இந்தியா நோக்கி வந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறி கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த அத்தனைப் பயணிகளும் பலி! ‘ – செய்தி எங்கெல்லாம் இடிகளை இறக்கியதோ தெரியாவில்லை. குணாளனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கியது.
” ஐயோ. …ஓஓஓ !! ” தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அரண்டு, அலறினார்கள்.
காரணம், அடுத்த வாரம் இந்த வீட்டில் திருமணம். குணாளன் மகள் மீனாவிற்கும் , அந்த விமானத்தில் பயணித்து வந்த பாலாவிற்கும் திருமணம்.
இது பெற்றோர்களாய்ப் பார்த்து முடித்தது. துபாயில் வேலையாய் இருக்கும் பாலா, தனக்குத் திருமணம் முடிக்க பெண் ஏற்பாடு செய்ய… பெற்றவர்களுக்குத் தகவல் அனுப்பினான்.
தாயும், தந்தையும் அவன் புகைப்படத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இடங்கள் தேடி… கடைசியில் மீனாவைப் பிடித்தார்கள்.
மாப்பிள்ளை.. பெண்ணையும், பெண்.. மாப்பிள்ளையும், பார்க்க வீடியோ பரிமாற்றம் மட்டுமில்லாமல் ‘வாட்சப்’ பேச்சும் நடந்தது.
ஒருவருக்கொருவர் பிடித்துப் போயிற்று.
உடனே நிச்சயம் முடிந்து திருமண ஏற்படும் தொடங்கி, அடுத்த வாரம் திருமணம்.
தாலி கட்ட வந்த மாப்பிள்ளை விமான விபத்தில் சாவு.!!
எவருக்குத் தாங்கும். .? ??….
குணாளன், மனைவி வைதேகி, ஒரே செல்லப் பெண் மீனா . .. அத்தனைப் பேர்களும் இடிந்து நொறுங்கி விட்டார்கள், உறைந்து , உடைந்து விட்டார்கள்.
” திருமணத்தை நிறுத்திட வேண்டியதுதான் !” துக்கத்தில் மெல்ல முணுமுணுத்தார்.
” என்னம்மா சொல்றே. .?! ” மகளை பார்த்தார்.
” அவளை என்ன கேட்கிறது. வேறு வழி. . ?! ” வைதேகி.
” மீனா வாழ்க்கை பாதிக்கும் ! ” மொட்டு வளையைப் பார்த்தார்.
‘ துக்கிரி ! ஒதுக்குவார்கள் ! ‘ நினைக்க….வைதேகிக்குச் சொரக்கின்றது.
” பேசாம நாமளே ஒரு மாப்பிள்ளைப் பார்த்து அதே தேதியில் முகூர்த்தத்தை முடிச்சிடலாம் !” சொன்னாள்.
” கஷ்டம் ! உறவு, முறைப்பையன்களே ஒதுங்கிப் போவாங்க. ” கலங்கிச் சொன்னார்.
” இப்போ என்னங்க செய்யிறது. .? ” அவளும் கணவனைக் கலக்கமாகப் பார்த்தாள்.
” சம்பந்தியைக் கலந்து ஆலோசிக்கலாம். !” குணாளன் தன் மனதில் பட்டதைச் சொன்னார்.
” நியாயம்தான். ஆனாலும் …இப்போ புள்ளையைப் பறி கொடுத்தவங்க பதில் சொல்வார்களா. .? இல்லே. .?….. இந்த நேரத்துல, என் பொண்ணுக்கு என்ன வழின்னு அவுங்களைக் கேட்கிறது எப்படி சரி. என்னங்க இம்சை. !!.” வைதேகி கலங்கித் தவித்தாள்.
” சரி. நடந்தது நடந்து போச்சு. இனி… பேசிப் பயனில்லே. மாற்று ஏற்பாடாய் மீனாவிற்கு த் திருமணம் முடிக்கணும். அதுவும் குறிப்பிட்ட தேதியிலேயே நடக்கணும். மொதல்ல… நம்ப கையில் மாப்பிள்ளை இருக்கான்னு யோசனை பண்ணுவோம் ! ”
வைதேகிக்கு அவர் பேச்சு சரியாகப் பட்டது.
குணாளன் உறவுகளையெல்லாம் ஒதுக்கினார். வெகு நேர யோசனைக்குப் பின் நண்பன் கோபால் நினைவிற்கு வந்தார்.
” வைதேகி என் நண்பன் கோபாலன் பையன். .? ” சொல்லி மனைவியைப் பார்த்தார்.
” வேணாம் ” அவளிடமிருந்து சட்டென்று பதில் வந்தது.
” ஏன். .? ”
” அவன் குடி கூத்தியாள்ன்னு மட்டம் ! ”
” அப்புறம் வேற ஆள். .? ” குழம்பிப் போனவராய் மனைவியைப் பார்த்தார்.
” என் ஒன்னுவிட்ட அண்ணன் பையன் ரவீந்திரன். ! ”
” போன் இருக்கா. .? ”
” இருக்கு ”
” சொல்லு ”
கைபேசியை எடுத்து அவள் சொன்ன எண்களை அழுத்தி தொடர்பு கொண்டார்.
” யாரு. .? ” எதிர் முனையில் வேங்கடசுப்ரமணியன்.
” நான் காரைக்காலிருந்து குணாளன்….. ”
” அடடே. .. மச்சான் ! என்ன விசயம். திடீர்ன்னு என் நினைப்பு. .? ”
” இப்போ தொலைக்காட்சி செய்தி பார்த்தீங்களா. .? ”
” பார்க்கல. என்ன விசயம். .? ”
சொன்னார்.
” அடடா. ..! ” வேங்கடசுப்ரமணியன் ரொம்ப வருத்தப்பட்டார்.
” அப்புறம். ..? ” அவரே கேட்டார்.
” குறித்த தேதியில் திருமணம் நடக்கலைன்னா மீனா வாழ்க்கை கண்டிப்பா கேள்வி குறி. உங்க பையன். …” குணாளன் இழுத்தார்.
” நல்ல யோசனைதான். .. ! ” வேங்கடசுப்பிரமணியத்திற்குப் புரிந்து விட்டது.
” ஆனா. . உதவ முடியாத நிலை. பையன் ஒருத்தியைக் காதலிக்கிறான். ! ” நழுவினார்.
குணாளன் துவண்டு போனவராய் கைபேசியை வைத்தார்.
உலகம் அவருக்குச் சூன்யமாகத் தெரிந்தது. வெளியே வந்தார்.
விசயம் தெரிந்தவர்கள் எவராவது துக்கம் விசாரித்தால். .?! சாலையில் நடக்க அவருக்குப் பயம். வராண்டாவில் சிறிது நேரம் உலாத்தி உள்ளே வந்தார்.
” சம்பந்தி பேசினார். .! ” வைதேகி.
” என்னவாம். .? ”
” என் பையன் இறப்பால் மீனா வாழ்க்கை நிக்கக்கூடாது. எப்படியாவது முடிங்கன்னு சொன்னார். ”
”அப்புறம். .? ”
” தொலைக்காட்சிப் பெட்டியில சேதி சொன்னதும் …பாலா செத்துப் போய்ட்டான் என்கிற இடி என்னையும், என் மனைவியையும் தாக்க….’ ஐயோ ! பாவி புள்ளையால ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணாய் போச்சே ! ‘ ன்னுதான் மனசு அலறிச்சு. மாற்று ஏற்பாடாய் அவளுக்கு எப்படியாவது திருமணம் நடத்தனுன்னு துடிச்சோம் .எங்களுக்கு இன்னொரு மகன் இல்லையேன்னு வருத்தப்பட்டோம். அப்புறம்….. அப்படி இப்படின்னு தேடி புடிச்சு.. ஒரு வரனையும் முடிச்சி வச்சிருக்கோம் ” நிறுத்தினாள்.
குணாளனுக்கு வியப்பாக இருந்தது.
” பையன் பேரு ராமு. பாலா கூட படிச்சவன். அரசாங்க உத்தியோகம். எங்க பையனை விட அழகு. குணம் மனத்துல தங்கம். ஒரே ஒரு குறை. பையனுக்குத் ரெண்டு வருசத்துக்கு முன்னால திருமணம் முடிஞ்சுது. ஒரு வருசத்துக்கு குழந்தை வேணாம் முடிவுல ஜாலியா இருந்தாங்க. விதி…! பேருந்து விபத்துல மனைவி செத்துப்போய்ட்டாள். மனைவி மேல அன்பாய், ஆசையாய் இருந்தான். மறுமணமே வேணாம் என்கிற முடிவுல இருந்தான். அவனைச் சந்திச்சு, நம்ப நிலமையைச் சொன்னேன். சம்மதம் சொல்லிட்டான். உங்க விருப்பம் என்னன்னு கேட்டான். நான் உங்களைக் கேட்டு சொல்றேன்னு வச்சுட்டேன்னு சொன்னார். ” சொல்லி முடித்தாள்.
குணாளன் சிறிது நேரம் யோசித்தார்.
” எனக்குப் புடிக்கலீங்க. ..” வைதேகி சொன்னாள்.
” எது. .”
” அவன்…. ரெண்டாம்தாரம். ….”
வாய்ப்பை விட இவருக்கு மனசில்லை.
” மீனா. . ”
அழைத்தார்.
” முடிச்சிடுங்கப்பா. .! ” சொல்லி அவள் அடுத்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.
‘விதி ! ‘ விரக்தியில் நொந்து சொல்கிறாளா. ? – கணவன் மனைவி இருவரும் அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தார்கள்.
” நான் மனசுல எதையும் வச்சு சொல்லலைப்பா. என் சம்மதத்துக்குக் காரணம். … தன் மகன் துக்கத்தைப் பத்தி கொஞ்சமும் கவலைப்படாம. ..ஒரு பெண்ணைப் பத்தி யோசிச்சு, துடிச்ச மனசு நல்ல மனசு. அவுங்க நல்ல வரனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பாங்க. அடுத்து. .. நம்ம கணிப்பு. .. மனைவியை இழந்தவன் மறுமணம் நினைப்பு தப்பு. ! ஒருத்தியைத் தொட்டு இன்னொருத்தியைத் தொடுபவனும் மறுமணம் செய்பவன்தான். பெரும்பாலான ஆண்கள் திருமணத்துக்கு முன்னாடியே சோரம் போய்தான் திருமணம் முடிக்கிறாங்க. அதனால…அவர் மணம் எனக்கு மறுமணமா தோணல. திருமணம். முடிச்சிடுங்கப்பா!. ” தெளிவாய், கொஞ்சம்கூட பிசிறுதட்டாமல் சொன்னாள்.
‘ எவ்வளவு திடம்! தெளிவு. !!.? ‘ குணாளனும் வைதேகியும் மகளை வியப்பு, திகைப்பாய்ப் பார்த்து மலர்ந்தார்கள்.