கருப்பசாமி தர்மத்தின் சலங்கை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 30 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

பாகம் 1 | இருளின் அதிகாரம்

அத்தியாயம் 1- 3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் 1: அதிகாரத்தின் நிழல்

மதுரை மாநகரின் இரைச்சல்கள் மெல்ல ஓய்ந்து, உசிலம்பட்டியை நோக்கிய நெடுஞ்சாலையில் பயணத்தால், சற்றே ஒரு கிராமப்புறமாக அமைந்திருந்தது அந்தக் கிராமம்.

சுற்றிலும் பசுமையான கண்மாய்களும், சீமைக் கருவேல மரங்களும் சூழ்ந்திருக்க, ஊரின் எல்லையில் கம்பீரமாக வீற்றிருந்தது ஊர்க் காவல் தெய்வம் கருப்பசாமி. பதினெட்டடி உயரத்தில், முறுக்கிய மீசையும், உருட்டிய விழிகளுடன்கூடிய கண்களும், கையில் ஓங்கிய பிரம்மாண்டமான அருவாளுமாக நிற்கும் சாமியைப் பார்த்தாலே, தவறு செய்தவனின் நடுநடுங்கும்.

ஆனால், ஊரையே தன் இரும்புப்பிடியில் வைத்திருக்கும் பண்ணையார் ரத்னவேலுக்கு இந்தப் பயம் கிடையாது.

“சர்ர்ர்ர்…” என்ற சத்தத்துடன், புழுதி பறக்க வந்து நின்றது ரத்னவேலின் வெள்ளை நிற சொகுசு கார். காரின் கதவை அடியாள் மாயாண்டி பதற்றத்துடன் திறந்துவிட, முறுக்காகக் கீழே இறங்கினான் ரத்னவேல்.

“ஏலே மாயாண்டி…” ரத்னவேலின் குரல் அந்த மதிய நேரத்து அமைதியைக் கிழித்தது.

“சொல்லுங்கண்ணே…” மாயாண்டி பவ்யமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.

“அந்தக் கண்மாயோரத்துக்காணி… அது யாரு பேருல இருக்கு?”

“அது… எது கண்ணே?”

“ஏண்டா காதுல பஞ்சு அடைச்சிருக்கா? கோவிலுக்குப் பின்னாடி இருக்குற அந்தச் செழிப்பான நிலம். பாக்க நல்லா இருக்கு, நம்ம புதுசா கட்டப்போற வீட்டுக்குச் சரியா வருமே.”

“கண்ணே… அது ஊர்ச்சொத்து. கருப்பசாமி கோவில் நிலம். ஊர் சனங்க திருவிழாக்களுக்குக் கொட்டகை போடுவாங்க, பொங்கல் வைப்பாங்க.”

“அப்போ?”

“அது சாமியோட இடம்ண்ணே. அதுல ஆட்டையப்போட்டா சாமி குத்தம் ஆயிடும்.”

ரத்னவேல் நக்கலாகச் சிரித்தான். “சாமி குத்தமா? எனக்கா? டேய், நான் நினைச்சா இந்த ஊரையே விலைக்கு வாங்குவேன். எவனோ ஒருத்தன் பிடிமண் கொண்டாந்து வச்சான், இன்னைக்கு அதுக்கு இடம் கேட்குதா? மதுரையில ஒரு மூலையில இருக்குற சாதாரணச் சாமியக் காட்டி என்னைய மிரட்டுறியாடா?”

“இல்லண்ணே… நான் அப்படி சொல்லல…”

“பேசாம கேளு, நாளைக்கு ராத்திரிக்குள்ள அந்த இடத்துல என் லாரி நிக்கணும். எந்தப் பயலாவது எதிர்த்துக் கேட்டான்னு, அவன அப்படியே வெட்டி அந்தக்கண்மாயிலேயே புதைச்சிருங்கடா! புரியுதா?”

“புரியுதுண்ணே…” மாயாண்டி தலைகுனிந்தான்.

பறந்த புழுதி கருப்பசாமியின் பிரம்மாண்டமான அருவாளின் மீது விழுந்தது. தர்மம் தன் முதல் கணக்கைத் தொடங்க அமைதியாகக் காத்திருந்தது.

அத்தியாயம் 2: ரத்னவேலின் ரத்த சரித்திரம்

ரத்னவேல் பிறப்பிலேயே பெரிய பண்ணையாரோ, பரம்பரை பணக்காரனோ கிடையாது. இருபது வருஷங்களுக்கு முன்னால், மதுரை சிம்மக்கல் ஏரியாவில் கட்டடப் பஞ்சாயத்து செய்துகொண்டிருந்த ஒரு சாதாரண அடியா்தான் இந்த ரத்னவேல். வைகை ஆற்றில் திருட்டு மணல் அள்ளுவதில் ஆரம்பித்த அவனது பயணம், கந்துவட்டித் தொழிலில் விஸ்வரூபம் எடுத்தது.

பத்து வருஷங்களுக்கு முன்னால், அதே ஊரைச் சேர்ந்த முத்துக் கருப்பன் என்ற விவசாயி, தன் மகளின் கல்யாணத்திற்காக ரத்னவேலிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தான். வட்டிக்கு மேல் வட்டி கூட்டிப் போட்டு, அது ஐந்து லட்சமாக நின்றது. பணம் கட்ட முடியாத முத்துக் கருப்பன், ரத்னவேலின் காலில் விழுந்து கதறினான்.

“அய்யா… நா வளர்த்த நிலமைய்யா… ஒரு மாசம் தவணை குடுங்க. எப்படியாவது கட்டி அழுவுறேன். எம் பொண்ணு கழுத்துத் தாலியக் கூட வித்துக் குடுத்துடுறேன்!” என்று கண்ணீரோடு கெஞ்சினான்.

“தாலிய விக்கறியா? அது வேண்டாம். நிலத்தை மட்டும் கையெழுத்துப் போடு,” என்றான் ரத்னவேல் குளிர்ச்சியாக.

“அய்யா… அது என் கடைசி நிலம்…”

“கடைசியா, முதல்லயா… எனக்கு என் காசு வேணும். வட்டிக்கு வாங்குறப்ப உன் பொண்ணு கல்யாணம் என் காசுல சீர் செனத்தி செய்யும்போ இனிச்சதுல்ல? இப்போ கசக்குதா?” என்று சொல்லிவிட்டு, தன் காலில் விழுந்து கிடந்த முத்துக் கருப்பனை நெஞ்சிலேயே எட்டி உதைத்தான்.

அடுத்த நாளே முத்துக் கருப்பனின் இரண்டு ஏக்கர் விளைநிலம் ரத்னவேலின் பெயருக்கு மாறியது. அவமானமும் வலியும் தாளாத முத்துக் கருப்பன், அதே நிலத்திலிருந்த வேப்ப மரத்தில் தூக்குப் போட்டுத் தொங்கினான். அந்த மரணத்தைக் குறித்துக் கேட்ட போது, “செத்துத் தொங்குன பய… பொணத்த எடுக்கச் சொல்லுங்கடா,” என்று சாதாரணமாகக் கூறிவிட்டான் ரத்னவேல்.

இப்படி அடுத்தவன் வயிறு எரிந்து, ரத்தம் சிந்திச் சேர்த்த சொத்துக்கள்தான் இன்று அவனை ‘பண்ணையார் ரத்னவேல்’ ஆக உயர்த்தியிருந்தது. காசு கொடுத்தால் மனிதர்கள் மண்டையிடுவதைப் போல, சாமியும் தன்னிடம் மண்டையிடும் என்ற அவனது முட்டாள்தனமான அகங்காரம்தான், இப்போது கருப்பசாமியின் எல்லைக்குள் அவனை விளையாட வைத்திருந்தது.

அத்தியாயம் 3: கண்மாய்க்கரை கண்ணீர்

விடிந்தால் திருவிழா. ஆனால் அன்றைக்கு விடியற்காலையில், பறவைகளின் சத்தத்திற்குப் பதிலாக, இரண்டு பெரிய புல்டோசர்களின் உறுமல் சத்தம் கண்மாய்க்கரையை அதிர வைத்தது. மாயாண்டியும் இருபதுக்கும் மேற்பட்ட அடியாட்களும் வந்து இறங்கினார்கள்.

“ஏலே… எல்லாத்தையும் இடிச்சுத் தள்ளுங்கடா! பண்ணையார் அண்ணன் இடம்டா இது!” மாயாண்டியின் சத்தம் கேட்டு, கிராமத்து மக்கள் அலறிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள்.

அறுபது வயதான விவசாயி பழனி, நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடிவந்தார். “நிறுத்துங்கடா! இது என் பயிரு! நாற்பது வருஷமா இந்த நிலத்த நான் பாத்துக்கிட்டு வர்றேன்!”

“கிழவா, இது இனிமே பண்ணையார் இடம். வேற வழி இல்ல, ஒதுங்கு,” என்றான் மாயாண்டி.

“ஒதுங்க மாட்டேன்! இது சாமியோட இடம், என் குடும்பத்தோட உசுரு. இதுல புல்டோசர் வச்சா, அது சாமிக்கு எதிரா செய்யுற வேலை. உங்களுக்குச் சாமி குத்தம் வராதா?” என்று பழனி புல்டோசரின் முன் போய்விழுந்தார்.

மாயாண்டி இரக்கமில்லாமல் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தான். “ஏல கிழவா! பண்ணையாருக்கே சாபமா விடுறியா? நாளைக்கு உன் நிலத்துல என் டிராக்டர் உழும். மறுபடி வாய் திறந்தியா, உன்னைய மட்டும் இல்ல, உன் குடும்பத்தையே இந்த நிலத்துலயே போட்டுப் புதைச்சிருவேன்!” என்று விலா எலும்பில் ஓங்கி மிதித்தான்.

ரத்தம் வழிய, மண்ணில் விழுந்து கிடந்த பழனி, கருப்பசாமியைப் பார்த்துக்கை கூப்பிக் கதறினார். “ஐயா கருப்பசாமி… இப்படி ஒரு பாவி எங்க உசிர எடுக்குறானே, உன் கண்ணுக்குத் தெரியலையா? நீ வெறும் கல்லுதானா? தர்மம் செத்துப் போச்சா சாமி?”

அந்தக் கண்ணீர்க் குரல் கருப்பசாமியின் காதுகளை எட்டியது. சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த பித்தளைச் சலங்கையின் மீது ஒரு சொட்டு ரத்தம் தெளிக்கப்பட்டது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *