எருமை மாட்டுக்காரி
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 3,228
அந்த ஊரில் அவளை அடையாளம் சொல்லப் பயன்படுத்தும் பெயரே ‘எருமை மாட்டுக்காரி’ என்பதுதான்.
அவளக்கு அது காரணப் பெயராக அமைந்துவிட்டதுதான் துரதிஷ்டம்.
அவள் வீட்டில்தான் எருமை மாடுகள் இருந்தன. பால் கறந்து விற்பதுதான் அவளது முதல் தொழில்.
அப்படியானால் அவளுக்கு ‘சைடு பிஸினஸ் உண்டா?’ என்று மனசுக்குள் நீங்கள் நினைப்பது புரிகிறது.

அவளும் சில சைடு பிசினஸ்களும் செய்தாள்.
அதில் வட்டிக்குக் கடன் கொடுப்பதும் ஒன்று!.
அவள் வீட்டுக் காரனோ சினிமாவில் வரும் மிக்சர் தின்பவன் போல் நடக்கும் எதைப்பற்றியும் கவலைப் படாமலிருந்தான்.
எருமை மாட்டுக்காரி ‘ஆம்பிளைக்கு ஆம்பிளை பொம்பிளைக்கு பொம்பிளை’ என்று சண்டையின் போது அவள் கத்திய பிறகு அவளிடம் யாரும் வம்புக்குப் போகவில்லை.
வட்டி ஒண்ணாந் தேதியானா கரெக்டா வந்தரணும். இல்லைனா, அவ வாயிலிருந்து முன்னமே சொன்னா மாதிரி வார்த்தைகள் சரளமாய் வரும்.
கடன் வாங்கிய எல்லாருமே பணத்தைத் திருப்பித்தர எவ்வளவு முயன்றாலும் அது முடியாமலே போகும் காரணம். எருமைமாட்டுப் பாலின் சோம்பேறித்தனமும், சாவுகாசமும் சுணக்கமும் வாழ்க்கையோடு சேர்ந்து வாங்கிய கடனைத் தினுப்பித் தருவதிலும் அவள் வாடிக்கையாளர் வாழ்விலும் எதிரொலித்தது.
இத்தனை இருந்தாலும் அவள் ஒரு பழம்பாடலின் இலக்கணமாய் இருந்தாள்.
‘பச்சைப் பசேலென்றிருக்கும்
பாகற்காயுமல்ல;
பக்கமெல்ஸாம் முள்ளிருக்கும்
பலாக்காயுமல்ல;
உருக்கினால் நெய் வடியும் வெண்ணெயுமல்ல…;
என்று ‘ஆமணக்கை’ அடையாளம் காட்டிய பாடலாய் இருந்ததுதான் எல்லார்க்கும் அவளை மிகவும் பிடித்திருக்கக் காரணம். அதற்கு உதாரணமாய் ஒருகதை..உண்டு…..
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் மாட்சைப் பார்த்துவிட்டு இரவில் மேட்ச் முடிந்ததும் இலவச ரயிலில் பயணிக்கும் ஆசையில் சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்து அவசர கதியில் ரயிலேறினான் ரங்கநாதன்.
“சடக்”கென சப்தத்தோடு கால் சுளுக்கிக் கொள்ள அடுத்த நாள் காலை எரும மாட்டுக்காரி வீட்டுக்குப் பால் வாங்க விந்திவிந்தி நடந்து போனான்.
பாலை அளந்து ஊற்றியவள் அவன்தடுமாறித் தடுமாறி நடப்பதைப் பார்த்து அவள் வீட்டின் கேட்டருகேயிருந்த தென்னமர அடியிலிருந்த களி மண்ணில் கட்டியாயிலிருந்த முன்றை எடுத்துவரச் சொன்னாள். அவன் எடுத்து வந்தான்.
அவள் அவனைப்பார்த்து, ‘பாலை எடுத்துக் கொண்டு பின்பக்கம் திரும்பிப் பார்க்காமல் போ!’ என்று சொல்லி அவன் நடந்து போகையில் அவன் எடுத்துக் கொடுத்த மண்ணாங்கட்டிகளை அவன்மேல் படாமல் பின்பக்கமாய் அவன் நடக்கையில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்றையும் விட்டெறிந்தாள்.
என்ன ஆச்சரியம் நடக்க முடியாமல் சிரமப்பட்டவன் அடுத்தநாள் சுளுக்கு நீங்கி நன்றாக நடக்க ஆரம்பித்தான்.
வட்டி வாங்குபவள்தானே அவள்? சுளுக்குஎடுத்து விட்ட மருத்துவ சிகிச்சைக்கு கூலி தர நினைத்து ‘எவ்வளவு அம்மா? ” என்று ரங்கநாதன் கேட்க
‘அம்மா’ன்னு சொன்னயே அதுவே போதும் போ!’ என்றாள்
அவள் வாரீசில்லாதவள்தான். என்றாலும் பேச்சில் பச்சை கலந்திருந்தாலும் பாகற்காய் போல் அவள் பார்ப்பவருக்குத் தென்பட்டாலும் வட்டி வராத போது பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயாய் குத்தினாலும் உருக்கினால் நெய்வடியும் நெய் இல்லை என்றாலும் சூளுக்கு போக்குவதில் ஆமணக்கு எண்ணையாயிருந்தாள். என்பதுதான் அவளை மனித இயல்பின் ஈரத்தன்மைக்கு கிரீடமாக உயர்த்தியது!!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
புதியவன்
பானுமதி வெங்கடேஸ்வரன்
April 25, 2026
அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்!
கடல்புத்திரன்
April 25, 2026
கமலா மாமி தேங்காய் பர்பி செய்கிறாள்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
April 25, 2026
