வகுப்பறைக்கு வெளியே பாடம்
முத்தையா வாத்தியார் என்றால் பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கெல்லாம் நரசிம்ம சொப்பனம். ஆள் நெடுநெடுவென்ற உயரத்தோடு, வாட்ட சாட்டமாக இருப்பார். எப்போதும் வெள்ளை பாலியெஸ்டர் வேட்டி, முழங்கைக்கு மேல் மடித்துவிடப்பட்ட முழுக்கை வெள்ளை பாலியெஸ்டர் சட்டைதான். சோடாப்புட்டி சாளேஸ்வரக் கண்ணாடி. ஐம்பதைக் கடந்த வயதிலும் மிடுக்கான தோற்றம். புல்லட்டில் வரும்போது கம்பீரமாக இருக்கும்.

பள்ளிக்கூடம் ஆயுத எழுத்தைப் போல அமையப் பெற்ற மூன்று குக்கிராமங்களுக்கு மத்தியில், காட்டுப்பாங்கான இடத்தில் கட்டப்பட்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்காக மைதானத்துடன் சேர்த்துப் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தைப் பெருவிவசாயி ஒருவர் அரசாங்கத்துக்கு உபயமளித்திருந்தார். வடக்கே பாறையும், தெற்கே செரங்காடும், கிழக்கு மற்றும் மேற்கில் விளைநிலங்களும் பள்ளி வளாகத்திற்கு எல்லைகளாக இருக்கும். அருகில் வீடுகளோ, களங்களோ, கடைகளோ இராது. வேற்று ஜனப் புழக்கம் அறவே இல்லாத இடம். முதன்மைத் தார்ச்சலையும், அதிலிருந்து பள்ளி முகவரியாக உள்ள கிராமத்திற்குப் பிரிந்து செல்லும் மண்சாலையும் கூட, இங்கிருந்து மிகவும் தள்ளியே இருந்தன. அதனால் வாகனப் போக்குவரத்துச் சத்தங்கள் கூட கேட்காது.
காலையில் மாணவ – மாணவிகளும், ஆசிரிய – ஆசிரியைகளும் வந்த பிறகுதான் மனித இருப்பின் ஓசைகள் எழும். நூற்றின் மடங்குகளாலான குரல்கள் காலை வணக்கம் பரிமாறுவதும், முதல் பாடவேளைக்கான மனப்பாடங்களை உருத்தட்டுவதும், அரட்டைக் கச்சேரியில் ஈடுபடுவதுமாயிருக்கும். அந்தக் கலவையான குரல்களின் அலை ஒவ்வொரு வகுப்பறைகளிலும் வெளியிலும் இருந்து தவழ்ந்து பள்ளி வளாகம் முழுதுமே பரவும்.
வழிபாட்டு மணி அடிப்பதற்கு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் முன்னதாக, மண்சாலையிலிருந்து இறங்கிவருகிற புல்லட்டின் படபட பேரோசை கேட்கும். அவ்வளவுதான்! அக் கணமே பள்ளி வளாகம் அந்த அத்துவானத்தின் ஆதி இயல்புக்கு மீண்டது போல நிசப்தமாகிவிடும். வெளியில் உலாத்திக்கொண்டிருப்பவர்கள் ஓட்டமாக வகுப்பறைக்குள் புகுவார்கள் அல்லது புத்தகமும் கையுமாக மரத்தடிகளில் அமர்ந்துகொள்வார்கள். மனப்பாட முணுமுணுப்புகள் மட்டும் மெலிதாக ரீங்கரிக்கும்.
முத்தையா வாத்தியார் எட்டு, ஒன்பது, பத்து வகுப்புகளுக்கான ஆசிரியர். அதோடு உதவித் தலைமையாசிரியரும் கூட. அதனால் பள்ளி நிர்வகிப்பில் அவருக்கும் பங்கு உண்டு. மாணவன் என்றால் கல்வி பயில்கிறவன் என்று அல்ல, மாண்பு மிக்கவன் – அதாவது, ஒழுக்கம் நிறைந்தவன் – என்று பொருள்;
எனவே, ஒழுக்கம் முதலில், பிறகு கல்வி என்கிற விளக்கத்தைக் கடுமையாகக் கடைபிடிக்க வைப்பவர் அவர். மாணவர்கள் அமைதியைக் கலைக்கும் விதமான சத்தங்களை எழுப்புவது அவருக்குப் பிடிக்காது. அனாவசியமாக வகுப்பறைக்கு வெளியே உலாத்திக்கொண்டிருப்பதும் பிடிக்காது. அவ்வாறு தென்பட்டால் அடி பின்னி எடுத்துவிடுவார்.
அடிப்பதில் பேர் பெற்றவர் அவர். மாணாக்கர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும், சுற்றுவட்டாரத்துப் பொதுமக்களுக்கும் அவரது அடியைப் பற்றித் தெரியும். அவரிடம் அவருக்குச் சமதையான கீர்த்தி பெற்ற கொண்டைப் பிரம்பு இருந்தது. விளக்கெண்ணெய் தடவி வலுவேற்றப்பட்டது. (அடி பலமாக விழுவதற்காக அதில் பாம்புசட்டையைத் தேய்ப்பார் என்கிற வதந்தியும் நிலவியது). அது பணியாளர் அறையில் இருக்கும். வகுப்புகளுக்குப் போகும்போது எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு வகுப்பறைகளிலும் எல்லா ஆசிரியர்களுக்கும் பொதுவானதாக வைக்கப்படுகிற பிரம்புகளை அவர் உபயோகிப்பதில்லை. அவருக்கு மட்டுமேயான கொண்டைப் பிரம்பைத்தான். அதிலிருந்து விளக்கெண்ணெய் வலுவோடும், அவரது பலத்தோடும் வீழ்கிற அடிகள் ஆளைச் சுருட்டிவிடும்.
ஒழுக்கத்தில் மட்டுமல்ல; படிப்பிலும் மிகுந்த கண்டிப்பனவர். படிக்காத மாணவர்கள் அவரிடம் படும் பாடு சொல்லி மாளாது. எத்தனையோ பேர் அவரது அடியைத் தாங்க இயலாமல் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, மாடு மேய்கவோ, பண்ணையைப் பார்க்கவோ, வேறு வேலைகளுக்கோ போய்விட்டார்கள்.
ஆறாவது, ஏழாவது வகுப்புகளில் படித்தபோது அவரைப் பற்றிக் கேள்விப்பட்டும், அவரது அடிகளைப் பார்த்தும் மனதுக்குள் உண்டான பிம்பம் வேறு. அவரை ஆசிரியராகக் கொண்டு மேல் வகுப்புகளில் பயின்றபோது பெற்ற அனுபவம் முற்றிலும் வேறு.
எங்கள் பள்ளியில் எட்டு, பத்து வகுப்புகள் ஒரோரு பிரிவு மட்டுமே. மற்ற வகுப்புகள் ஈரீரு பிரிவுகள் கொண்டவை.
எட்டாம் வகுப்புக்கு அவர் வரலாறு – புவியியல் ஆசிரியர். பள்ளி மறுதிறப்பு நாளில் தனது கொண்டைப் பிரம்போடும், இந்தப் புத்தகங்களோடும் வந்தவர் அவற்றை மேஜைமீது வைத்துவிட்டு, மற்ற ஆசிரியர்கள் போலவே எங்களை வரிசைப்படி ஒவ்வொருவராக எழுந்து பெயர் சொல்லுமாறு பணித்தார். அறிமுகம் முடிந்ததும் அவர் எழுந்து நின்றுகொண்டு, பாடத்தைத் தொடங்காமல் பாடம் நடத்துவது பற்றி ஓர் உரை நிகழ்த்தினார்.
“வரலாறு – புவியியல்’ல பாடம் நடத்தறதுக்கு ஒண்ணுமே இல்ல! தமிழ்லன்னா செய்யுளுக்குப் பொருள் சொல்லணும்; இலக்கணத்தக் கத்துக் குடுக்கணும். இங்கிலீஷ்ல உங்களுக்கு மொழியே தெரியாது. ஒவ்வொரு வார்த்தைக்கும், வாக்கியத்துக்கும் அர்த்தம் சொல்லித்தான் பாடம் நடத்த வேண்டியிருக்கும். கணக்குலயும் அப்படித்தான். ஒவ்வொரு வகையையும் எப்படிச் சமன்படுத்தறது, தீர்வு காண்றதுன்னு சொல்லிக் குடுக்கணும்; சூத்திரங்களை விளக்கணும். அறிவியல்லயும் உங்களுக்குத் தெரியாத, புரியாத விஷயங்களா இருக்குமே! அதையெல்லாம் என்ன, ஏது, எப்படின்னு
விளக்கணும். இந்த வரலாறு – புவியியல்ல அப்படி ஒண்ணும் சிக்கலே கெடையாது! நீங்களே படிச்சுத் தெரிங்சுக்கறதுக்குத்தான் உண்டு.
“வரலாறுங்கறது என்ன? கதை! நம்ம நாட்டுலயும், உலக அளவுலயும் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தாங்க, எப்படி நாட்ட ஆண்டாங்க, அப்ப எந்தெந்த மன்னர்கள் இருந்தாங்க, அவங்க நாட்டோட எல்லைகள் எந்த அளவுக்கு இருந்துச்சு, மன்னர்களுக்குள்ள என்னென்ன போர் நடந்துச்சுங்கற மாதிரி விஷயங்கள்தான் வரலாறு. இதுல பாடம் நடத்தி விளக்கம் சொல்றதுக்கு என்ன இருக்குது? நீயே படிச்சுத் தெரிங்சுக்கலாமல்ல?
“புவியியலும் அப்படித்தான்! நம்ம நாட்டுலயும், உலக நாடுகள்ளயும் நில அமைப்புகள் எந்த மாதிரி இருக்குது, அங்க சீதோஷ்ணநிலை எப்படி, எந்தெந்த எடத்துல என்னென்ன பயிர் விளையும், என்னென்ன கனிமங்கள் கெடைக்கும்ங்கற விவரங்களைச் சொல்றது. இப்ப நீங்க எல்லொருமே கிராமவாசிகதான! கொஞ்சம் பேரு என்னை மாதிரி விவசாயக் குடும்பத்தைச் சேந்தவங்களாகக் கூட இருப்பீங்க. அப்படி இல்லாத மத்தவங்களுக்குமே, நம்ம எரியாவுல மழ எப்புடி, வெயிலெப்புடி, பனி எப்புடி, நஞ்சை புஞ்சைகள்ல என்னென்ன பயிர் வெளையுதுங்கற விபரம் தெரியுமல்ல? அதே மாதிரி தமிழ்நாட்டு அளவுல, இந்திய அளவுல, உலக அளவுல தெரிஞ்சுக்கறதுதான் புவியியல். இதையெல்லம் நீயே படிச்சுக்கலாம்.”
அவரது பேச்சு எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுவரை அப்படியொரு கண்ணோட்டத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அதுவும் ஓர் ஆசிரியர், தான் பாடம் நடத்தவேண்டிய அவசியமே இல்லை என்றும், மாணவர்களையே படித்துக்கொள்ளுமாறும் சொல்வது நம்ப இயலாத அதிசயமல்லவா?
“இருந்தாலும் இதுக்கு வாத்தியாருன்னு என்னைப் போட்டிருக்கறாங்க. பாடம் நடத்தித்தான ஆகணும்?” என்றுவிட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
முன்னைக்கு முரணாகச் சொல்கிறாரே என்கிற எண்ணத்துடன் நாங்கள் வரலாறு, புவியியல் புத்தகங்களை எடுதுத் தயாராக வைத்துக்கொண்டோம்.
“புஸ்தகங்களையெல்லம் பைக்கட்டுக்குள்ளயே வெச்சுரு” என்றார் அவர்.
குழம்பியவாறு புத்தகப் பைகளிலோ, சாய்வு மேஜையிலோ அவற்றைத் திரும்ப வைத்தோம்.
வாத்தியார் தன்னிடமுள்ள வரலாறு புத்தகத்தை எடுத்து, ஆரம்பப் பக்கங்களைப் புரட்டி, மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மூடி வைத்தார். முதல் பாடம் இன்னது என்று தலைப்பைக் கூறிவிட்டு, கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் விரிவுரையாற்றுவதுபோல அந்தப் பாடத்தை நடத்தலானார்.
வரலாறானாலும் சரி, புவியியலானாலும் சரி, அவர் பாடம் நடத்துகிற பாணி அதுதான். புத்தகத்தை சற்றே புரட்டிப் பார்த்து ஞாபகப்படுத்திக்கொண்டு, பிறகு தம்போக்கில் விஷயங்களைச்
சொல்லிக்கொண்டே போவது. பேச்சுப் போக்கில் விஷயங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்துப் பரவி, எங்கெங்கோ போகும். மேலதிகமும் பாடத்துக்கு நேரடிச் சம்மந்தமோ, தேவையோ இல்லாதவை. உதாரணத்துக்கு, இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய எழுச்சிமிக்க வரலாற்றில் அவர் ஆரம்பிப்பது தற்கால அரசியல் சீர்கேடுகளைப் பற்றிய விமர்சனத்தில் வந்து நிற்கும். தட்பவெப்பம் குறித்த புவியியல் நிலவரங்கள் – இயற்கைச் சமன்குலைவு பற்றியும், வானம் பொய்த்து விவசாயிகள் நலிவடைகிற அவலத்தைப் பற்றியும் கூறுவதில் முடியும். வேறு எதற்கோ பாடங்களில் சொல்லபடுகிற மனிதர்கள், இடங்கள், காலம் பற்றிய மற்ற விவரங்களையும் சொல்வார்.
உதாரணத்துக்கு, காந்தியை சுட்டுக் கொன்றவன் நாத்ராம் கோட்சே என்பதை மட்டுமே பாடங்கள் கற்பித்தன. மகா ஆத்மாவான காந்தியைக் கொன்றதினால் அவன் கொடூரமான கொலைகாரன், படுபாதகன் என்று மட்டுமே நாங்கள் எண்ணியிருந்தோம். அவரும் ஒரு சுதந்திரப் போராளி என்பதும், கருத்து முரண்பாடுகள் காரணமாகவே அவர் காந்தியைக் கொலை செய்தார் என்பதும் முத்தையா வாத்தியார் சொல்லித்தான் தெரிந்தது. பெரியார் நாங்கள் அறிந்ததுபோல வெறும் நாத்திகவாதியல்ல, பரந்துபட்ட சிந்தனாவாதி என்பதும்; அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்னென்ன பாடுகளைப் பட்டார் என்பதும் அவர் சொல்லித் தெரிந்ததுதான்.
பெல்ஜியம் என்ற இடம் கண்ணாடிகளுக்குப் புகழ் பெற்றது, சுவிட்சர்லாந்து வங்கி ரகசியக் காப்புக்குப் புகழ்பெற்றது போன்ற தகவல்களும் அவர் மூலம் அறியப்பட்டவையே. பழங்காலத்தில் மோதிர துவாரத்தின் வழியே இந்தப் பக்கம் செலுத்தி அந்தப் பக்கம் இழுத்து எடுக்கக்கூடிய, ஆனால் சல்லாத்துணிபோல உடம்பை வெளிக்காட்டாத சேலைகளை நம்மவர்கள் செய்தார்கள் என்பதைச் சொன்னவரும் அவரே. இது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்வதினிடையே நாமறியாமல் பாடத்திலுள்ள விஷயங்களும் வந்திருக்கும்.
பாடத்திற்குச் சிறிதும் தொடர்பே இல்லாமல் அவரது உரை வேறு எங்காவது திசைமாறிச் சென்றுவிடுவதும் அடிக்கடி நேரக்கூடியதுதான். அப்போதுகளில் அப் பாடம் இரண்டு மூன்று நாட்களுக்குக் கூடுதலாக நடத்தப் பெறும். இறுதியில், “புஸ்தகத்துல இருக்கறத நீயே படிச்சுக்க” என்று சொல்லிவிடுவார்.
உப்புச் சப்பில்லாததும், மற்ற பாடப் பொருள்களோடு ஒப்பிடுகையில் மதிப்புக் குறைவானதுமான வரலாறு – புவியியல், முத்தையா வாத்தியாரால் சுவை மிகுந்ததாக ஆகிவிட்டது. அவரது பாடவேளைகளை ஆவலுடன் எதிர்பார்தோம். அதில் மகிழ்ச்சியுடன் இன்புற்றோம். முக்கால் மணிநேரம் போவதே தெரியாது. பாடவேளை முடிந்ததற்கான மணியடித்ததும், அதற்குள் முடிந்துவிட்டதே என்று வருத்தமாக இருக்கும்.
இது தவிர, “பாடப் புத்தகங்களைப் படிச்சா மட்டும் பத்தாது. இதெல்லாம் ஒண்ணும் வாழ்க்கைக்கு உதவாது. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது’ன்னு பழமொழி இருக்கில்ல, அப்படித்தான். பொது அறிவ வளத்திக்கணும், நாட்டு நடப்பத் தெரிஞ்சுக்கணும். அதுதான் வாழ்க்கைக்கு
உதவக் கூடியது. அதுக்கு தெனமும் நியூஸ் பேப்பர் படிக்கணும்; ரேடியோ நியூஸ் கேக்கணும்; பத்திரிகை, கதை புஸ்தகம் இதெல்லாம் படிக்கணும்” என்றும் சொல்லுவார்.
கதைப் புத்தகங்கள் வாசிப்பதைக் கண்டிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு மத்தியில் இவர் இப்படிச் சொல்வது ஆச்சரியமாக இருந்தது.
“வாத்தியாருதான் கதைப் புஸ்தகம் படிக்கச் சொல்லிட்டாரேன்னுபோட்டு, எந்நேரமும் அதையே படிச்சுட்டிருந்ந்துட்டு, பாடத்தப் படிக்காம உட்றாதீங்கடா…! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதுன்னு வேற சொல்லியிருக்கறன். அதையே நெனச்சு, பாடத்தப் படிக்காம, எழுதாம வந்தா அப்பறம் அடிதான், ஒதைதான்…! தெரியுமல்ல?” என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
ஒரு முறை மேல் வகுப்பு மாணவர்கள் வகுப்பைத் துண்டித்துவிட்டு திரைப்படங்கள் பார்க்கச் செல்வது பற்றிய பேச்சு வந்தது. “எப்பவாவது ஒருக்கா அப்படிப் போறது தப்பில்ல. ஆனா, போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ! காசில்லன்னாலும் கேளு, தர்றேன்” என்று சொன்னார்.
சொன்னதோடு நில்லாமல், அவரிடம் தைரியமாக அனுமதியும் காசும் கேட்ட ஓரிரு மாணவர்களுக்குத் தரவும் செய்தார். வகுப்பைத் துண்டித்துவிட்டு திரைப்படங்களுக்குச் சென்றால் கடுமையாகத் தண்டிக்கிற ஆசிரியர்களுக்கு முற்றிலும் மாறான அவரின் இந்தச் செய்கை, சக ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. வேறென்ன செய்தாலும் படிப்பில் சரியாக இருந்தால் போதும் என்பது அவரது தரப்பு.
மற்ற ஆசிரியர்களைப் போல அவர் முதல் நாள் பாடம் நடத்திவிட்டு அடுத்த நாளே கேள்வி கேட்பதோ, அறிவித்துவிட்டு குறித்த நாளில் வகுப்புச் சோதனை எழுதச் செய்வதோ கிடையாது. அன்றன்று நடத்திய பாடங்களை அன்றன்றே படித்திருக்கவும், கேள்வி பதில் எழுதியிருக்கவும் வேண்டும். இருந்தாற்போல என்றைக்கவது முன்னம் நடத்தப்பட்ட எந்தப் பாடங்களில்லிருந்தும் கேள்வி கேட்பார்; குறிப்பேட்டில் எழுதியிருக்கிறோமா என்று சோதனையிடுவார். வகுப்புச் சோதனை எழுதச் செய்வார். இதில் தவறினால் அவ்வளவுதான், அவரது கொண்டைப்பிரம்பு உடம்பெங்கும் விளாறுகளை எற்படுத்திவிடும்.
மாணவிகளை அதிகமாக அடிப்பதில்லை. “அவளுக படிச்சா என்ன, படிக்கலீன்னா என்ன? எப்படியிருந்தாலும் நாளைக்கு இன்னொருத்தன் வீட்டுக்கு சட்டி கழுவப் போறவுளுகதான! நீங்க அப்படியில்ல, ஒழுங்காப் படிச்சு, பாஸாகி, வேலைக்குப் போயி, குடும்பத்தப் பாத்துக்க வேண்டிய பொறுப்பு உங்குளுக்கு இருக்குது” என்பார் மாணவர்களிடம்.
மற்ற விஷயங்களில் முற்போக்காக இருந்தவர், மாணவிகள் விஷயத்தில் பிற்போக்காக இருந்துவிட்டாரே என்று சிலருக்குத் தோன்றலாம். முத்தையா வாத்தியார் ஓர் ஆசிரியர் என்ற முறையில் தனது செயல்களைத்தான் நெறிப்படுத்திக்கொண்டாரே தவிர, சமூக சீர்திருத்தம்
அவரது நோக்கமல்ல. மாணாக்கர்களையும் முன்னேற்ற வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என்றெல்லாம் அவர் லட்சியம் கொண்டிருக்கவில்லை. தனது அறிவையும் கருத்துகளையும் அவர்களோடு பகிர்ந்துகொண்டார்; கற்பித்தலில் மற்ற ஆசிரியர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறைகளையும், செயல்பாடுகளையும் கொண்டிருந்தார். அவ்வளவுதான்! மற்றபடி, அந்தக் காலகட்டத்தில், அந்த கிராமப்புறத்தில் இருந்த சமூகச் சீர்கேடுகள் எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. மாணாக்கர் குடும்ப விவகாரங்களுக்குள்ளும் தலையிட முடியாதல்லவா! எனவேதான், பள்ளிப் படிப்புக்குப் பிறகு அந்த மாணவிகள் அடுப்பூதத்தான் போகிறார்கள் என்கிற எதார்த்தத்தை ஒட்டி, அவர்கள் குறித்த தனது நிலைபாட்டைக் கொண்டிருந்தார்.
சோதனைகளிலாயினும் தேர்வுகளிலாயினும் பதில்களைப் புத்தகத்தில் உள்ளது உள்ளபடியாக எழுதுவதை அவர் விரும்புவதில்லை. கரைத்துக் குடித்து வாந்தியெடுப்பது என்று அதைப் பரிகசிப்பார். விஷயங்களைத் தெரிந்து, புரிந்துகொண்டு, அதைத் தமது சொந்த நடையில் எழுதுவதுதான் அவருக்குப் பிடிக்கும். வெறும் நினைவாற்றல் அல்ல; அறிவும் சுயதிறனுமே கல்வியின் அவசியம் என்பதை உணர்த்தியவர் அவர். தன்னிச்சையான அத்தகைய பதில்களுக்குத்தான் முழு மதிப்பெண்களை அளிப்பார். எழுத்து பிசகாமல் புத்தகத்தில் உள்ளபடியான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
கல்வித் திட்டம் நிர்ணயித்து வைத்துள்ளதும், மற்ற ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தி வைத்துள்ளதுமான இறுக்கங்களை அவர் இவ்விதம் தளர்த்தவும் தகர்க்கவும் செய்தார். அந்தச் சுதந்திரத்தில் திளைக்கவும், அதன் பின்னால் உள்ள கெடுபிடிகளுக்கு அஞ்சவும், அனேக உலக விஷயங்களைத் தெரிந்து கொண்டதுமாய் அவ் வருடப் படிப்பு முடிந்தது.
ஒன்பதாம் வகுப்பில் வேறு மாதிரியான அனுபவங்கள். அப்போது அவர் எங்களின் ‘அ’ பிரிவுக்கு வகுப்பாசிரியராக இருந்தார்.
முதல் நாளில் அவர் வகுப்புக்குள் நுழைந்தபோது வழக்கம் போல நாங்கள் எழுந்து நின்று குழுக் குரல்களில் காலை வணக்கத்தை அதற்குரிய பள்ளி ராகத்தில் இசைத்தோம். எங்களை சைகையால் அமர்த்திவிட்டு, “இனிமே இந்த மாதிரி குட்மார்னிங் பாடறது, தேங்க்யூ பாடறது, இதெல்லாம் வேண்டாம். அதெல்லாம் சின்னப் புள்ளைங்களுக்கு, நீங்க பெரிய வகுப்புக்கு வந்தாச்சு, பெரியவங்களாகவும் ஆயிட்டீங்க. அதனால, நான் வரும்போதும் போகும்போதும் எந்திரிச்சு நின்னீங்கன்னாப் போதும்” என்றார்.
கல்லூரிப் பழக்கமான இதை அவர் எங்களை ஊக்கப்படுத்துவதற்காகவே செய்திருக்கவேண்டும். அதுவரை கேள்விப்பட்டிராத இந்த அதிசயத்தை எண்ணி நாங்கள் வியந்து பூரிதோம். உண்மையிலேயே பெரியவர்கள் ஆகிவிட்டது போன்ற பெருமிதமும் அடைந்தோம். ஆனால், மற்ற ஆசிரிய ஆசிரியைகளுக்கு வழக்கப்படியான வணக்கம், நன்றிகளைச் சொல்லியே முழு மரியாதையையும் செலுத்த வேண்டியிருந்தது.
ஆங்கிலத்தில் எங்களுக்குப் படிப்பறிவு மிகக் குறைவு. சொற்களுக்கு அர்த்தம் தெரியாத நிலையில், மீண்டும் மீண்டும் வாசித்து உருவேற்றி மனனம் செய்துகொள்கிற முறையில்தான் அதுவரை நாங்கள் கஷ்டப்பட்டுப் படித்து வந்தோம்.
“அர்த்தம் தெரியாமப் படிக்கறதுல பிரயோஜனமில்ல. அர்த்தம் தெரிஞ்சு படி! அப்பத்தான் விஷயம் என்ன, ஏதுங்கறது தெரியும். ஞாபகத்துல வெச்சுக்கறதுக்கும் சுலபமா இருக்கும். அது மட்டுமல்ல, அப்பத்தான் உங்களோட இங்கிலீஷ் நாளேஜும் வளரும்” என்றவர், அதற்காக அனைவரையும் ஆங்கில – தமிழ் அகராதியை வாங்கப் பணித்தார். வாங்குவதற்குப் பணமில்லத ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவரே வாங்கிக் கொடுக்கவும் செய்தார்.
மறுநாள் நடத்தப் போகிற பாடங்களிலிருந்து முக்கியமான சொற்களை அவர் குறித்துத் தர, நாங்கள் அகராதியைப் பார்த்துப் பொருள் தெரிந்துகொண்டு போகவேண்டும். அதற்குப் பிறகே பாடம் நதத்துவார். முந்தைய வருடம் போல புத்தகத்தையே பார்க்காமல் விரிவுரையாற்றல் பாணியில் பாடம் நதத்துவது இப்போது சாத்தியப்படவில்லை, புத்தகத்தைப் பார்த்து வாக்கியம் வாக்கியமாக வாசித்து, வார்த்தைக்கு வார்த்தை பொருள் கூறியபடி நடத்தினார். ஏற்கெனவே குறித்துக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துகொண்டு வந்திருக்கிறோமா என்பதையும் இடைக்கிடையே சோதிப்பார். இதே போல பழைய பாடங்களில் உள்ள வார்த்தைகளை நினைவு வைத்திருக்கிறோமா என்றும் திடீர் சோதனை செய்வார்.
இவை தவிர தினசரி பத்து புதிய ஆங்கில வார்த்தைகளை அகராதியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொள்வதற்கான இப் பயிற்சியிலும் சோதனைகள் நடத்தப்படும்.
போதாக்குறைக்கு இவ் வகுப்பிலிருந்துதானே மொழிப் பாடங்களுக்கு இலக்கணம் தனிப் பாடமாக ஆவது! இரண்டாம் தாள் என அதற்குத் தேர்வும் வைக்கப்படக்கூடியதான அந்தக் கூடுதல் பளுவினால் பலரும் திணறினார்கள்.
ஆங்கிலத்தில் இவ்வளவும் படிக்க வேண்டிய கட்டாயம், மிகுந்த சிரமத்தையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதிகப்படியான திணிப்புகள் விரைவில் மறந்தும் போயின. இதனால் வகுப்பினர் பலரும் முத்தையா வாத்தியாரிடம் தினந்தோறும் அடிவாங்குவது வழக்கமாயிற்று. மெலிந்து நீண்ட அந்த மூங்கில் பிரம்பு, வீச்சுக்கேற்ப வளைந்து கொடுக்கும்; சாட்டையைப் போல சுழலும்; காற்றைச் சீறியபடி, மாணாக்கர்களின் உள்ளங்கைகளில் தீயாய்ச் சுடுகிற கோடுகளை ஏற்படுத்தும். அதற்கு பயந்து கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டால் ஆத்திரம் கொள்வார். பிறகு உடலில் பல பாகங்களிலும் பிரம்பு விளையாடத் துவங்கிவிடும். வீட்டுக்குப் போனதும் ஒற்றடம் கொடுக்க நேரிடும். சமயங்களில் புறங்கையை நீட்டச் செய்து விரல் எலும்பு மற்றும் மூட்டுகள் மீது அடிப்பார். ஓரிரு நாட்களுக்கு விரல்களை மடக்கவோ நிமிர்த்தவோ இயலாது. சில தடவை பிரம்பு உடைந்து
போய்விடும். உயிர்த்தெழுந்தது போல மறுநாளே அதே மாதிரியான பிரம்புகள் அவருடன் வரும்.
படிப்பு வராத மாணவர்களின் நிலைமை துயரம்தான். சுமாராகப் படிக்கிறவர்களுக்கும் அவ்வப்போது துன்பம்தான். வகுப்புக்கு முத்தையா வாத்தியாரும் கொண்டைப் பிரம்பும் வரும்போதே அவர்களுக்குக் கிலி ஏற்பட்டுவிடும். நாளின் முதல் பாடவேளையான அதை நினைத்தாலே மனம் நடுக்குறும். முதல் பாடவேளையில் அடி வாங்கினால் அன்றைய நாள் முழுக்க மற்ற ஆசிரியர்களிடமும் அடி வாங்கவேண்டியிருக்கும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. சிலருக்கு இது பலிக்கவும் செய்தது. அதனால் அவர்கள் இன்று முத்தையா வாத்தியார் பள்ளிக்கூடத்துக்கு வராமல் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், வருகிற வழியில் விபத்து ஏற்பட்டு அவருக்குக் கை, கால் உடைய வேண்டும் என்றும் கடவுள்களை வேண்டிக்கொள்வார்கள். இரக்கமற்ற கடவுள்கள் ஒருபோதும் இந்த வேண்டுதல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தம்மையே நம்பியிருக்கிற மாணவர்களைப் பரிதாபத்துக்குரிய வகையில் கைவிட்டுக்கொண்டே இருந்தனர்.
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த பின்னர், யாரும் எதிர்பார்த்திராதபடியான அற்புதம் நிகழ்ந்தது. பள்ளிக்கூட வரலாற்றில் அதுவரை சம்பவித்திராததும், யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராதபடியுமான ஒரு கிளர்ச்சி.
முத்தையா வாத்தியாரின் அடியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஒரு நாள் வகுப்பை விட்டு வெளிநடப்பு செய்தனர். (பயந்த சுபாவிகளான மாணவிகள் இந்தப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. அவர்கள் வகுப்பறையில் கமுக்கமாக இருந்து கொண்டனர்). முதல் பாட வேளையில் இருந்தே இது துவங்கியது. வழிபாடு முடிந்து மாணாக்கர்களின் வரிசை வகுப்பறைகளுக்குத் திரும்பியபோது, பத்தாம் வகுப்பு வரிசை மட்டும் கலைந்து விளையாட்டு மைதானத்துக்குச் சென்றது. ஆசிரியர்கள் அதட்டலோடு விசாரிக்கையில் பள்ளி மாணவர் தலைவனுமான பத்தாம் வகுப்புத் தலைவன் காரணத்தைத் தெரிவித்தான். ஆசிரியர்கள் செய்வதறியாது திகைத்துவிட்டனர். முத்தையா வாத்தியாரும் இதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அவர் எதுவும் சொல்லவில்லை. ஆசிரியர்கள் பதற்றத்தோடு, முன்னதாகவே தன் அறைக்குச் சென்றுவிட்ட தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க விரைந்தனர். தலைமையாசிரியருடன் அவர்கள் திரும்பியபோது அம் மாணவர்கள் மரத்தடியில் மறியல் செய்வது போல் அமர்ந்துகொண்டிருந்தனர். தலைமையாசிரியரின் கேள்விக்கு தனியாகவும் கூட்டுக் குரல்களாகவும் பதிலளித்தனர். அவரது சமாதானங்களை அவர்கள் ஏற்கவில்லை. தீர்வு காணும் பொறுப்பை முத்தையா வாத்தியாரிடம் விட்டுவிட்டார்.
அவரோ, மாணவர்களிடம் போகவுமில்லை; அவர்களைத் தம்மிடம் அழைத்துப் பேசவுமில்லை. இறுகிய முகத்துடன் தனது புல்லட்டைக் கிளப்பிச் சென்றுவிட்டார். எங்கு சென்றார், எதற்காகச் சென்றார் என்கிற விவரம் ஏதும் இல்லை.
அன்றைய நாள் முழுக்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்புக்கு வரவேயில்லை. மாணவிகளுக்காக யாரும் பாடம் நடத்தவுமில்லை. போன வாத்தியார் திரும்பி வரவுமில்லை.
மறுநாள் மாணவர்கள் வகுப்புக்கு வந்தனர். முத்தையா வாத்தியார் வந்திருக்கவில்லை. அவரது விடுப்புக் கடிதம் மட்டும், அவரது ஊரைச் சேர்ந்த மாணவன் ஒருவன் மூலம் வந்து சேர்ந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் பள்ளிக்குத் திரும்பினார். முந்தைய கம்பீரத்தின் சாயல் கூட இப்போது காணோம். கிருமிக் காய்ச்சலால் ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டவரைப் போலத் தளர்வுற்றிருந்தார். முதல் பாடவேளையில் எங்களின் வகுப்புக்கு வந்தபோது இன்னொன்றையும் கவனித்தோம். வல்லமை மிக்க கொண்டைப் பிரம்பு அவரிடம் இல்லை.
நாற்காலியில் அமர்ந்துகொண்டதும் மேஜை மீதிருந்த பொதுப் பிரம்பை உற்றுப் பார்த்தார். வகுப்புத் தலைவனை அழைத்து, “இந்தப் பெரம்ப அந்தப் பக்கம் எடுத்து வைச்சுரு” என்று பணித்தார். பிறகு வகுப்பினர் அனைவரையும் நோக்கி, “நான் எதுக்குப்பா உங்களை அடிக்கணும்? அப்புறம் நீங்க க்ளாஸ விட்டு வெளிய போவீங்க! ஸ்ட்ரைக் பண்ணுவீங்க! எதுக்கு வம்பு? நீ படிச்சாப் படி, படிக்கலன்னா போ! எனக்கு என்ன ஆகவேண்டிக் கெடக்குது? நீ நல்லபடியாப் படிச்சு பாஸானாத்தான் எனக்கு கவுர்மென்ட்டு சம்பளம் குடுக்கும்னு இருக்குதா? இல்ல,… நாளைக்கு நீ ஏதாவது உத்தியோகத்துக்குப் போனா, சம்பாரிக்கறதுல எனக்குப் பங்கு கெடைக்குமா? அப்புறம் நான் எதுக்கு உங்கள அடிக்கணும், கெட்ட பேரு வாங்கிக்கணும்?” என்றார்.
வகுப்பறை மௌனத்தில் ஆழ்ந்தது. முத்தையா வாத்தியார் புத்தகத்தை எடுத்துக்கொண்டார்.
அதற்குப் பிறகு அவர் பிரம்பைத் தொடக் கூட இல்லை. அது மட்டுமல்ல; பாடம் நடத்தும்போது புத்தகத்தில் இல்லாத பொது விஷயங்களைப் பற்றிச் சொல்வதையும் அறவே நிறுத்திக்கொண்டார்.
– புதிய பார்வை, அக்டோபர் 15, 2004.