முள்முடி மன்னர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2025
பார்வையிட்டோர்: 249 
 
 

(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

“…சில ஆட்கள் உப்பிடித்தான் 
வடிவாய் சாப்பிடாட்டியும் 
றோஸ் பவுடர் பூசிக் கொண்டு
வெளிக்கிட்டால் காணும்
எண்டு நினைக்கினம்…” 

சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது காலை ஏழரையாகி விட்டது. சைக்கிளில் பிசாசு ஓட்டம் ஓடினால் தான் ரவுண் போய்ச் சேரலாம். எட்டு மணிக்கு முதலாளி பரமசிவத்தின் முகதரிசனம் செய்யலாம். 

வெள்ளை உடை அணிந்த சிறுமிகள் புன்சிரிப்பு பூத்த முகங்களுடன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தார் கள். பாடசாலை மாணவர்கள் நிறைந்த மினிவான் ஒன்று மெதுவாகச் சென்றது. 

ஞானரூபன் தங்கள் கேற்றைத் தாண்டி ஒழுங்கையி னுள் இறங்கியபோது எதேச்சையாக எதிர் வீட்டின் பக்கம் பார்வை சென்றது. 

ஞானரூபனுக்குக் கையைக் காட்டிக் கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தாள் பிரியா. ஞானரூபன் சைக்கிளை நிறுத்தினான். 

“வேலைக்கு வெளிக்கிட்டாச்சோ” எனக் கேட்டாள் அவள். 

அவள் முகம் பளிச்சென்று இருந்தது. தலையை முழு மையாக வாரி உயர்த்திக் கொண்டை போட்டிருந்தாள். கடுஞ் சிவப்பில் பெனியனும் கறுத்த மிடியும் அவளுக்கு ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு செக்கனில் ஓரா யிரம் முறை துடிக்கும் விழிச் சிறகுகளுடன் கன்னக் கறுப் புகளில் செழுமை மின்னியது. 

கையில் அகலமான பிளாஸ்டிக் வளையல்கள் போட்டி ருந்தாள். நீண்ட விரல்களின் நுனியில் றோஸ் கலரில் நெயில் பொலிஸ் பளபளத்தது. 

அப்போது தான் அவள் குளித்திருக்க வேண்டும். அவ ளது அண்மையும், சோப் வாசனையும், இயல்பான கவர்ச் சியும் சேர்ந்து ஞானரூபனை செயல் இழக்கச் செய்து விட்டன. 

அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான், என்ன யோசினை?” எனக் கேட்டாள் அவள். முகம் ரோ ஜாவாகப் பூத்திருந்தது. 

“ம்” என்றான் அவன். 

“வேலைக்குத் தானே போறியள்?” என்றாள் மீண்டும். 

“ம்” 

“உங்கடை கடையில நெயில் பொலிஸ் இருக்கும் தானே?” 

“மரூன் கலர் இருக்குமே?”

“இருக்க வேணும்” 

“இருந்தால் ஒண்டு வேண்டிக் கொண்டு வாங்கோ ப்ளீஸ். நான் இண்டைக்கு ரவுணுக்குப் போக இருந்தனான். ஆனால் இப்ப என்ரை பிரண்ட் வந்திருக்கிறா அவளோ டை காங்கேசன்துறைக்கு போக வேணும். அதுதான் உங் களைப் பார்த்துக் கொண்டு நிண்டனான்” என்றாள் அவள். 

‘”இந்தாங்கோ” என அவள் நீட்டிய காசை உணர் வில்லாமல் வாங்கிக் கொண்டான். 

“பின்னேரம் மறக்காமல் வாங்கிக் கொண்டு வாங்கோ,” என்ற அவள் குரலில் கெஞ்சல் வெளிப்பட்டது. 

”ஓம்” என்று முணுமுணுத்தான் ஞானரூபன். 

அவள் வந்த வேகத்திலேயே விரைந்து ஓடி விட்டாள். ஞானரூபன் மீண்டும் சைக்கிளில் பயணப்பட்டான். ஒழுங் கையில் இருந்து பிரதான வீதிக்கு வரும் வரை அவன் ஏதோ அந்தரத்தில் மிதப்பது போன்ற ஒருவகை உணர்வில் இருந்தான். 

சுயநினைவுக்கு வர சில நிமிடங்கள் எடுத்தன. அதன் பின்னர் தான் பிரியா கொடுத்த காசை எடுத்துப் பார்த் தான். நிச்சயமாக. மரூன்கலர் நெயில் பொலிஸ் வாங்க அவள் கொடுத்த காசு காணாது. ஐந்தோ பத்தோ, அவன் தலையில் பொறுக்கத்தான் போகின்றது. 

இது முதற்தடவை அல்ல. இப்படிப் பல தடவை நடந்துவிட்டது. வீட்டுக்குக் குடி புகுந்த முதல் நாளில் எப்படி ஞானரூபனிடம் பேச்சுக் கொடுத்தாளோ அதே போல அடுத்த நாள் உதவிக்கு வந்துவிட்டாள். 

சிலவேளை காசில்லாமல் கூடச் சில பொருட்களை வாங்கிக் கொடுத்த சம்பவங்கள் உண்டு. இதனைத் தவிர்த் துக் கொள்ள வேண்டும் என எத்தனையோ தடவை நினைத்துக் கொண்டாலும் அவள் மின்னலெனத் தோன்றி விழிகளால் வெட்டி இழுத்துப் பேசும் போது எல்லா நினைவு களும் உறுதிப்பாடுகளும் பொல பொல வென உதிர்ந்து விடும் பரவசம் அவனைத் தொற்றிக் கொள்ளும். இனம் தெரியாத ஒருவகை பூரிப்பு பொங்கும். 

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அவள் ஏதோ படிப்பதாகச் சொல்லிக் கொண்டு ரவுணுக்கு வருவாள். அப்படி வரும் நாட்களில் அனேகமாக சனிக்கிழமைகளில் ஞானரூபனின் கடைக்கு வருவதும் உண்டு. 

முதல் முறையாக அவள் பிரகாசமாக மின்னும் விழி களுடன் குளிர்மையான பார்வைகளை எறிந்து கொண்டு வந்த போது ஞானரூபன் மெய்மறந்து போனான். 

தவலிங்கம் அறிந்த போது ஒரு நாள் சொன்னான் “நீ என்னடா மடையனா? உனக்கு ஏன் தேவையில்லாத வேலை. இரண்டு மூண்டு நாளைக்குக் கூப்பிட்டாலும் தெரியாத மாதிரிப் போ. பிறகு அவள் உன்னை கூப்பிட மாட்டாள். நீ உழைக்கிறது உன்ரை செலவுக்கே காணாது. பிறகு எப்பிடி அவளுக்கு உபகாரம் செய்யிறது,” 

ஞானரூபன் அவன் சொன்னதை அப்போது அப்படியே கேட்டான். பிறகொரு நாளும் அவளைப் பற்றி அவள் குடும்பத்தைப் பற்றி தவலிங்கம் சொன்னான். 

”அந்தக் குடும்பம் அவ்வளவு நல்ல குடும்பம் இல்லை யடாப்பா. தேப்பனைப் பற்றி உனக்குத் தெரியும் தானே அந்த மனிசனுக்கு ஊரரெல்லாம் கடன். ஆள் மற்றவை யைத் தட்டிச்சுத்திறதில் நம்பவண் ஆள். தேப்பனுக்கேத்த மாதிரிப் பிள்ளையள் பெண்சாதி எல்லாம். தாயோ பிள்ளையளோ வெளிக்கிட்டு றோட்டில் போனால் பாரன் எவ்வளவு கொண்டிசனாய் போயினம் எண்டு. சில ஆட்கள் உப்பிடித்தான். வடிவாய் சாப்பிடாட்டியும் றோஸ் பவுடர் பூசிக் கொண்டு வெளிக்கிட்டால் காணும் எண்டு நினைக் கினம். மற்றவன்கள் பின்னால நிண்டு குற்றம் குறை சொன்னாலும் பரவாயில்லை. மற்றவையின்ரை கண்க ளைக் கவர்ந்திழுக்கிற மாதிரிப் போனால் நல்லது எண்ட தும் அவையின்ரை நினைப்பு” 

அதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்தது. நெயில் பொலிஸ் வாங்க காசு தந்ததும், தந்த காசை எண்ணிப் பார்த்து மிகுதியைகேட்காமல் விட்டது எதனால் என்ற எண்ணமும் அப்போது ஏற்பட்டது. நிச்சயமாக பின்னேரம் அதனைக் கொண்டு போய்க் கொடுக்கும் போதாவது கேட் பது என்பது இயலாத காரியம் கட்டாயம் நான் கேட்க மாட்டேன் எனவும் அப்போது நினைத்தான். 

முதல் நாள் கடையால் வீடு திரும்பும் போது எதிர் வீட்டு வாசலில் நின்றவரின் ஞாபகம் வந்தது 

இடுப்பிலே வேட்டி, தோளிலே துவாய், சேட்டு அணி யாத வெற்றுடம்பு சகிதம் அந்த மனிதர் காணப்பட்டார். சண்முகம் வீட்டாக்கள் முன்பு இருந்த இடத்திற்குக் கிட்ட அந்த மனிதர் ஒரு சிறிய கடை வைத்திருந்தாராம். 

சில்லறை சில்லறையாக சாமான்கள் வாங்கி ஒரு பெருந்தொகை அவருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று தருகின்றோம் நாளை தருகின்றோம். எனச் சொல் லிச்சொல்லி வீடு மாறி வந்துவிட்டார்கள். 

மிகவும் கஷ்ட நிலையில் இருந்த அந்த மனிதர் எப் படியோ விசாரித்து பொழுது மங்குகின்ற நேரத்தில் இங்கு வந்து சேர்ந்து தனக்கு வர வேண்டிய வருமதியைப் பற்றிக் கேட்டார். அவரின் தாழ்மையான விண்ணப்பத்திற்கு பலன் கிட்டவில்லை. 

சண்முகத்தின் மனைவியும் பிள்ளைகளும் அந்த மனித ரின் ஏழ்மையை, அவரது பணத் தேவையினைப் புரிந்து கொள்ளாமல் வீண்கதை கதைக்கத் தொடங்கியிருக்க வேண்டும். போதாக் குறைக்கு வெறியோடு வந்த சண்மு கமும் சேர காசு கேட்டு வந்த மனிதர் வார்த்தைகளால் தக்கப்பட்டார். 

காசின் தேவை, அது கிடைக்காததால் எழுந்த ஏமாற் றம், அவர்களின் கீழ்த்தரமான கதைகள் எல்லாம் சேர்ந்து அந்த மனிதரின் தன்மானத்தினை சுய உணர்வை மீறச் செய்திருக்க வேண்டும். 

வேதனை குழப்பம் எல்லாம் சேர்ந்து அவரைக் குழப்ப அவர் பேசிக்கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ள வர்களின் காதுகளில் விழவேண்டும் என்பதற்காக பெலத் துக் கத்தியிருக்கின்றார். பிறகுகளைத்துப் போய் விட்டார். 

ஞானரூபன் வீட்டுக்குப் போய் உடுப்புகளை மாற்றிக் கொண்டு கிணற்றடிக்கு வந்தான். 

இன்னமும் எதிர் வீட்டின் வாசலில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். ஞானரூபன் கிணற்றுக் கட்டில் ஏறி நின்று வேலிக்கு மேலால் வீட்டைப் பார்க்க முனைந் தான். பிரகாசமான வெளிச்சம் தெரிந்ததே தவிர ஆட்க ளைக் காணமுடியவில்லை. 

“உங்களை, உங்கடை கதையளை நம்பித்தான் நான் கடன் தந்தனான். என்னட்டை இருக்கிறதே கொஞ்ச முதல்தான். அதை வைச்சுக் கொண்டு கடை நடத்தேலா மல் கடன்பட்டுத்தான் கடை நடத்திறன். வட்டிக்க காசு போக வாறது ஒரு நேரக் கஞ்சிக்குத் தான் காணும். அதையும் மண் விழுத்திப் போட்டியள். என்ரை நெஞ்சு படுகிற வேதனை உங்களுக்கு விளங்காது தான்,” என்று அந்த மனிதர் சொன்னது இருள் சூழ்ந்த நிசப்தமான அந்த நேரத்தில் வெகு துல்லியமாகக் கேட்டது. 

ஒழுங்கையால் போன ரண்டொருவர் அந்த மனி தரிடம் என்ன நடந்தது என்று விசாரிப்பதும் அதற்கு பதில் சொல்வதும் கேட்டன. 

யாரும் உள்ளே போகவில்லை, சண்முகத்தின் உண் மை நிலை புரிந்தவர்களாக இருக்க வேண்டும். வந்தவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டார்கள். 

ஞானரூபன் கிணற்றடியில் யோசனையில் ஆழ்ந்து போனான். சண்முகத்தின் மீது, அவரின் குடும்பத்தின் மீது பிரியா மீது, பிரதீபா மீது, என்று எல்லாரின் மீதும் வெறுப்பு உண்டானது. 

அந்தக் கடைக்கார மனிதரைப் போல எத்தனை மனி தர்களை சண்முகமும், குடும்பத்தினரும் ஏமாற்றி இருப்பார் கள். ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இனிமேல் இவர்களுக்கு எந்த உதவியாவது செய்யக் கூடாது. அது யாராக இருந்தால் என்ன. பிரியாவாக இருந்தாற்கூட என்று தான் முடிவு செய்திருந்தான். 

ஆனால் அந்த உறுதிப்பாடு காலையில் கரைந்து உருத் தெரியாமல் போய்விட்டது. வீட்டை விட்டுப் புறப்படும் போது எதிர் வீட்டைப் பார்க்காமல் போக முடியாமற் போனது ஏன்? எனவும் அவன் அப்போது தனக்குள் கேள் வியை எழுப்பிக்கொண்டான். 

பிரியாவைக் கண்டதும் என்னமாதிரி உடலும் உள்ள மும் தீப்பிடித்துக் கொண்டது போல பரபரப்பு அடைகி றது. அவள் சிக்னலைக் கண்டு நின்றதும் கதைத்ததும், நெயில் பொலிஸ் வாங்க பணம் வாங்கிக் கொண்டதும் எதனால்? ஞானரூபன் தனக்குள் குமைந்து கொண்டான். 

கடைக்குப் போய்ச்சேர எட்டரை மணியாகிவிட்டது. என்னதான் ‘கண்டறியாத வேலை’ என மனம் சொல் லிக் கொண்டாலும் நேரம் போய் விட்டதால் மனம் பதட்டப்படத் தொடங்கியது. 

நல்ல காலம் முதலாளி பரமசிவம் கடையில் இருக்க வில்லை. இராமநாதர் தான் முழிப்பாகத் தெரியும் சந்தனப் பொட்டுடன் சாமியாராக அமர்ந்திருந்தார். 

ஞானரூபன் கடைப்படியேறகாயத்திரி கல்யாணி கணேசன் எல்லோரும் வந்திருந்தார்கள். எல்லோரும் நேரத் திற்கு வந்திருக்கும் போது தான் பிந்திப் போனது அவனுக்கு சங்கடமாக இருந்தது. 

”வாடாப்பா நல்லகாலம் மூனா இல்லை இருந்திருந்தால் உனக்கு நல்ல மங்களம் நடந்திருக்கும்” என்ற இராம நாதரைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். 

சேட்டின் முதுகுப் பக்கம் வியர்வையில் குளித்திருந்தது. ‘பானை’ வேகமாக்கி விட்டு அதன் அருகில் போய் நின்று கொண்டு காயத்திரியைப் பார்த்தான். 

அவள்முகம் எப்போதும் போல மலர்ச்சியாக இருக்க வில்லை. சோக இருள் கவிந்திருந்தது. விழியோரங்களில் ஈரம் பளபளத்தது. 

ஞானரூபன் விடாமல் அவளையே பார்த்தான். அதனை அவளும் உணர்ந்து மெல்லியதாக ஒரு புன்னகையைப் பரவ விட்டாள். வழக்கமான புன்னகை போல அது சோபிக்கவில்லை. 

இராமநாதர் பேப்பர் வாசிக்கத் தொடங்கினார். ஞான ரூபன் வியர்வையினை மறந்து காயத்திரி அருகில் வந்தான். “என்ன பிரச்சினை?” என்று கேட்ட அவனில் ஆர்வம் மிகுந்திருந்தது. 

காயத்திரி சில கணங்கள் அவனைப் பார்வையினால் ஊடுருவினாள் அவன் கேள்விக்குப் பதில் சொல்லுவதா? விடுவதா? என அவள் யோசித்திருக்க வேண்டும். 

அவன் வந்த நாள் தொடக்கம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் அவனுடன் கதைத்துக் கதைத்து தன் குடும்ப விடயங்களை யெல்லாம் சொல்லி மனம் ஆறி யிருக்கிறாள். 

குமுறி எழும் மன உணர்வுகளை யாரிடமாவது சொல்லிச் சுமையை இறக்க வேண்டும் போல இருக்கும் நேரங்களில் எல்லாம் அவளுக்கு வசதியாக யாரும் கிடைத்ததில்லை; வீட்டில் அவளது சோகக் கதைகளைவிட வலுவான துன்பமான விடயங்கள் அதிகம். 

பஸ்சில் போகும் போதும், வரும்போதும் கூட வரும் சினேகிதிகள் யாருடனாவது கதைக்கலாம் என்றால் கூட காலம் ஒத்துழைப்பதில்லை. வீட்டின் அயலில் உள்ள சிநே கிதிகள் கூட எப்போதும் சந்திக்கமாட்டார்கள். ஞாயிறு விடுமுறை நாட்களில் தான். அது கூட முடியும். எனவே தான் ஞானரூபன் அவளது மனச்சுமையைக் கேட்கும் பங் காளியாகி விட்டான். 

வீட்டில் ஆண் சகோதரங்கள் இல்லை. இருக்கும் சொந்தக்கார ஆண்கள் கூட எப்போதாவதுதான் தலை நீட்டுவார்கள் காயத்திரிக்கு வேறு வழி கிடைக்கவில்லை. “ஏன் ஒரு மாதிரி இருக்கிறியள்? என்ன பிரச்சனை?” என்றான் மீண்டும் ஞானரூபன். 

“என்னத்தைச் சொல்லுறது: குடும்பக் கஸ்டம் ஒரு பக்கம். குடி முத்திப்போன ஐயா மற்றப்பக்கம். எப்படி இருக்கும் எங்கடை நிலைமை. ஆர் என்னதான் பழ தினால் என்ன குடிக்க மாத்திரம் பழகக்கூடாது. வெறி கூடினால் பிள்ளை எண்ட மரியாதையோ, பெண்சாதி எண்ட பற்று தலோ என்ன மாதிரி இல்லாமற் போகுது!” என்றாள் காயத்திரி. 

ஞானரூபனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ‘தான் தண்ணியடிப்பது இவளுக்கு தெரியுமா?” என ஒரு தடவை யோசித்தான். 

“நேற்றைக்குப் பின்னேரம் வீட்டை போகேக்க வீட்டு வாசலில் முழுவியளம் ஐயா தான். அதுவும் நிறைவெறி. குடிச்சது காணாதெண்டு, போய் படலையைத் திறக்க, குடிக்கக் காசுகேட்டார். என்னட்ட எங்க காசு. சீசன் ரிக்கட்டோடை திரியிற நான் ஆரிட்டை காசுக்குப் போறது இல்லை எண்டன். வேலைக்குப் போற உன்னட்டை இல்லாட்டி ஆரிட்டை இருக்கப் போகுது எண்டார். ‘ம்’ என்று கதை கேட்டான் ஞானரூபன். 

“இன்னும் சம்பளம் எடுக்கேல்லை. மாதம் முடியத் தானே சம்பளம் வரும் எண்டு சொன்னது அவருக்குப் பிடிக்கேல்லை. பெரிசாய் சத்தம் போட்டுக் கத்தத் தொ டங்கி விட்டார். பெரிசாய் வேலை வேலை எண்டு காலமை வெளிக்கிட்டு போங்கோடி அஞ்சு சதத்துக்கு வழியில்லை எண்டார் 

ஐயா சத்தம்போடாதேங்கோ ஒழுங்கையில் ஆட்கள் எண்டு சொன்னன். ஆட்கள் நிண்டால் என்ன? உனக்கு மானம், ரோசம் இருந்தால் காசைத் தாவன். ஏதோ பெத்த தேப்பன் எனக்கு கனக்க தந்து முறிஞ்சு போனி யளே எண்டு பேந்தும் சத்தம் போட்டார். ஐயா சத்தம் போடாதேயுங்கோ ஒழுங்கையில் ஆட்கள் எண்டு சொன் னன். பேந்தும் சத்தம் போட்டார். ஐயா சத்தம் போடா தேயுங்கோ எண்டு திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்ல அவருக்குக் கோபம் வந்துட்டுது. நீங்கள் என்னடி வேலைக் குப் போறனீங்களோ மாப்பிள்ளை பிடிக்கப் போறனீங்களோ எண்டார்,” சொன்ன காயத்திரியின் கண்கள் கலங்கியிருந்தன. 

ஞானரூபன் கவலை உச்சமாகியது. என்ன சொல்வது எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான். 

விழிகளில் கருணை பொங்க அவளை மிகநுட்பமாகப் பார்த்தான் கலங்கிய கண்களுடன் காயத்திரி அவனைப் பார்த்துச் சிரித்தாள். 

“ஐயாவைக் குறைசொல்லிப் பிரயோசனமில்லை. அவ ரின்டை குடி அவருக்கு முக்கியம். எங்கடை சமுதாய அமைப் பும் அப்படித்தான். எவை எவைக்கு எது எது முக்கியமோ அவை அவை அதுகளைத்தான் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இருப்பினம். பொது நன்மையை ஆரும் பாக்கிறதில்லை,” 

ஞானரூபன் பதில் சொல்லாமல் நின்றான் 

“நான் ஐயாவின்ரை நிலையை நினைச்சோ எங்கடை கஷ்ட்டங் களைப்பற்றியோ. கவலைப்படுகிறதில்லை. சாடையான ஒரு வேதனை இருக்குத்தான் எண்டாலும் பரவாயில்லை இதுக். கெல்லாம் சமூகமாற்றம் வேண்டி இருக்கு. அது இப்ப எங் கடை இன விடுதலைப் போராட்டத்தாலை மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கு. நிச்சயமாய் விடுதலை கிடைக்கேக் கை எங்களைப் போல ஆட்களின்டை வாழ்க்கையிலும் மாற்றம் வரும்,” என்றாள் வெகு நிதானமாக. 

– தொடரும்…

– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *