மிருக மனிதம்




(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரொம்ப விட்டாத்தியாய்ப் படுத்துக்கொண்டு தாய்ப்பூனை குட்டிகளுக்குப் ‘பாடம்’ சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தது வாலால்.
தலையை நிமிர்த்திக்கொண்டுதான் படுத்திருந்தது என்றாலும் அது குட்டிகளைப் பார்க்காமல்ப் பிறாக்குப் பார்த்துக்கொண்டிருந்தது.
வாலை நீளமாகப் போட்டுக்கொண்டு, நுனியைமட்டும் கொஞ்சம் நிமிர்த்தி ஆட்டியது. குட்டிகள் ஓடிவந்து, வால் நுனியைப் பிடிப்பதற்கு பின்னத்தங்கால்களிரண்டில் மட்டும் நின்றுகொண்டு முன்னத்தங் கால்களால் – கைகளால்ப் பிடிப்பதுபோலப் – பிடிக்க முயன்றன.
பிடிப்பதற்குக் கொடுப்பதுபோலக் கொண்டுபோய், பிடிக்கும் போது அவைகளுக்குக் கிடைக்காமல்ச் செய்துகொண்டிருந்தது பூனை. குட்டிகளின் பக்கம் முகம் திருப்பாமல், சிலசமயம் கண்களை மூடிக்கொண்டும் இவ்வாறு செய்ய முடிந்தது பூனையால். இப்படியாக அவைகளுக்கு ஒரு விளையாட்டின்மூலம் வேட்டைப்பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தது.
மூன்று குட்டிகளில் ஒன்று, இந்த ஆட்டையில் வாலைப்பிடிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்து ‘ஆமா போ; நா ஆட்டைக்கு வரலை’ என்கிற மாதரி ஒதுங்கிப்போய் தனக்குத்தானே விளையாட ஆரம்பித்தது.
ஒன்று அம்மாவின்மேலேயே பாய்ந்து விழுந்து பிரியத்தின்பேரில் பொய்க்கடி கடித்து விளையாடியது. ஒருகுட்டி மட்டுமே விடாப் பிடியாய் ‘வாலைப்பிடித்து’ விளையாடிக்கொண்டிருந்தது.
இந்த ஈத்துக்குத்தான் பூனை நிம்மதியாக, குட்டிகளை இடம் மாற்றி வைக்காமல், அவைகள் கொஞ்சம் பெரிசானவுடன் சாப்பாட்டுக் கூடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தது, போன ஈத்தில் இப்படிச் செய்யவில்லை. காரணம் அப்போது “முடிவான்” இருந்தான்.
முடிவான் என்பது பெயரில்லை; அம்மா அவனுக்கு வைத்த வசவுப்பெயர். செல்லப்பெயர் மாதரி வசவுப்பெயர்களும் இருக்கிறது.
அந்த வீட்டில் முடிவான்தான் கடைக்குட்டிப்பிள்ளை. செல்லங் கொடுத்துக் குட்டிச்சுவராகிப் போனவன். அவன் எவ்வளவு துஷ்டத் தனங்கள் செய்தாலும் இல்லத்துப் பிராணிகள்பேரில் பிரியமாகத்தான் நடந்துகொண்டான் என்றுதான் சொல்லவேண்டும். அவன் செய்த தெல்லாம் சொன்ன பேச்சைக் கேட்காததும் பெற்றோர்களின் மனசை நோகடித்ததும்தான். குடும்பத்தில் அவன் ஒரு துஷ்டப்பிள்ளையாகத் தலையெடுத்திருந்தான்.
முதல்த்தடவையாக ஒரு செய்தி வந்தது; கம்மாய்க்கரையில் மாடுமேய்க்கும் பிள்ளைகளோடு சேர்ந்துகொண்டு ‘பீடி’ குடித்தான் என்று.
அடுத்து, தன் கூட்டாளிகளில் ஒருத்தனை மண்டையை உடைத்து விட்டான் என்பது.
அப்பாவுக்கு பயந்துகொண்டு ஒரு நாள் பூராவும் வீட்டுப்பக்கமே வராமல் சுற்றிக்கொண்டிருந்தான். சித்தப்பாதான் போய் அவனை சண்டைபிடித்து அவருடைய வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய் ராச்சாப்பாடு பண்ணிவைத்து மறுநாள் அவரே கூட்டிக்கொண்டு வந்து விட்டுட்டுப்போனார்.
ஒருநாள் வகுப்பு வாத்தியாரை கல்லால் எறிந்துவிட்டு இனிமேல் பள்ளிக்கூடமே போகமுடியாது என்று சாதித்துவிட்டான். அன்று அப்பா அவனை தூணில் கட்டிவைத்து புளியாக்கையால் விளாசி னார். இதைக் கேள்விப்பட்ட ஹெட்மாஸ்டரும் அந்த வாத்தியாரும் ஓடிவந்து அவனை விடுவித்து அப்பாவை சமாதானப்படுத்தி பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போனார்கள். சாய்ந்திரமே அவன் ஹெட்மாஸ்டரைப் பார்த்து “இரும், உம்மைக் குழியில் வைக்காமல் நா விடப்போறதில்லை” என்று வன்மம் கூறி இருக்கிறான்.
ஊரிலிருந்து பெரியமாமா வந்தது அந்த சமயத்தில்தான். “நீ வாடேய் நம்ம ஊருக்கு” என்று கூட்டிக்கொண்டு போனார். அவனுக்குச் சூழ்நிலையும் சேக்காளிகளும் இங்கே சரி இல்லை என்று அபிப்ராயப்பட்டார்.
அதோடு, அவர்கள் ஊரில் நல்ல சர்க்கஸ் வந்திருக்காம். அதில் ஒருநாய் வந்து என்னவெல்லாமோ விளையாட்டுக் காட்டி சொன்ன படியெல்லாம் கேட்கிறதாம்.
இவன் அவரோடு ஊருக்குப்போனான்.
ராத்திரிகளில் பூனை ‘கத்த’ ஆரம்பித்தது. தொழுவின் ஓட்டுச் சாப்பில் நின்றுகொண்டு காட்டைப் பார்த்து குரல் கொடுத்தது. வலி தாளமுடியாததுபோல ஒரு குரல்.
ஊற்றிய பால் கிண்ணத்தில் அப்படியே இருந்தது. வேட்டையை யும் ஆகாரத்தையும் மறந்து, துணை நாடி விரகத்தால் அது சோகமாகக் கூவி அழைத்துக்கொண்டேயிருந்தது.
காட்டிலிருந்து, ரெண்டு கொள்ளிக்கட்டைகள் கண்களில் மின்ன ஒரு துணை மெள்ளப் பதுங்கிப் பதுங்கி வந்தது. எரியும் கண்களைக் கண்டதும் பூனையின் சத்தத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது.
கொஞ்ச நேரம்தான்; வீட்டின் கூரைகள் அமளிதுமளிப்பட்டது. திடீரென்று கூரை ஓடுகள் நொறுங்குவதுபோல் யாரோ அதன்மேல் ஏறி ஓடுவதுபோல்க் கேட்கும். அதேநேரத்தில் பூனையின் கொடூரமான அலறல் சத்தமும் கேட்கும்.
வேலை செய்துவிட்டு வந்து அலுத்துத் தூங்குகிறவர்களுக்குத் தொந்தரவாகவும், தெரிந்துகொண்ட மனித முகங்களின் மின்னும் கண்கள் ஒன்றை மற்றொன்று பார்த்துப் புன்னகைக்கவும், தெரியாத குழந்தைகள் கேட்டுப் பயப்படவும் ஆயிற்று.
“அந்தப் பய வீட்லெ இல்லாததாலெ பூனை ரவ்வாளி போடுது” என்று சொல்லிக்கொண்டே அப்பா திரும்பி படுத்தார் தூக்கச் சடைவில்.
ஊரிலிருந்து முடிவான் திரும்பிவந்த அன்று காலையில் வீட்டில் அக்கா மட்டுந்தான் இருந்தாள் சமையல்ப் பொறையில்.
வந்தவன் நேராக தொழுவுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டு, சங்கிலியில் கிடந்த நாயை சாட்டைக் கம்பால் பே வாங்கு வாங்கினான்.
குய்யோ முறையோ என்று நாய் கூப்பாடு போட்டுக் கதறியது. கோழிகள் கலைந்துபோய் பயந்து கெக்கரித்தன. பூனை முதுகை ஒட்டகைபோல் கூனிஉயர்த்தி வாலை சிலிர்த்துக்கொண்டு மாடியில் ஏறி ஒளிந்து கொண்டு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க, அக்கா சமையல்ப்பொறை ஜன்னல்வழியாக அவனைப்பார்த்துக் கூப்பாடு போட்டாள்.
என்ன என்று கேட்டதற்கு முடிவான் சொன்ன பதில் நீட்டிய குச்சியை இந்த நாய் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறதாம்!
“அய்யா வந்தவுடனே சொல்லி, பாரு உன்னெயெ..” என்று பல்லைக் கடித்தாள் அக்கா.
ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக இந்த முடிவான் இப்படிச் செய்த களேபரத்தினால் குடும்பமே மனம் கலங்கியது; இவனை என்னசெய்ய என்று தீர்மானிக்க முடியாமல் தடுமாறியது. பெரிய மாமாவுக்கு ஆள் அனுப்பி வரவழைத்து ஆலோசித்தார்கள்.
கரிசல்க்காட்டின் கீழக்கடற்கரையிலிருந்த ஒரு ஊரில் முடிவானை ‘ஜெயில்மாதரி’ இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில்க் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தார்கள்.
அப்பொழுது கரிசல்க்காடு பூராவும் கடும்வறட்சி நிலவிய காலம். தொயந்து மழைப்பிறப்பே இல்லாதிருந்தது. முடிவானைப் போட்டு வைத்த பள்ளிக்கூடத்திலிருந்த கிணற்றில் குளிப்பதற்குத் தண்ணீர் இல்லாததால் அந்த உயர்ந்த மதில்ச்சுவருக்கு வெளியே ஒரு தனியார் பம்ப்செட் ஓடிய கிணற்றில், தூரத்தில் நடந்துபோய்க் குளித்துவிட்டு வரவேண்டிய சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு “டங்காமுறித்து” ஒரே ஓட்டமாகக் கெலித்துவிட்டான்.
நால்ப்புறமும் எங்கே பார்த்தாலும் அத்தாந்திரக்காடு. அதில் ஒரு முடிவில்லாத, ஒத்தையடிப் பாதைபோல ஒரு ஒத்தை வண்டிப்பாதை; அதில் சரளைக்கல் விரிப்புப் போட்டு ரோடாக்கி இருந்தது. எதிர்க்கெ இன்னொரு கார் வந்தால் விலகமுடியாது. அதுவழியாக ‘ஒரு லாரி சுமைக்கு’ இருக்கும்படியாக உடை விறகை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தக்கிமுக்கி வந்துகொண்டிருந்தது.
தன்னந்தனீய நடந்து வந்துகொண்டிருந்த முடிவான் அந்த லாரியை கைநீட்டி நிப்பாட்டினான்.
தூரத்திலெ வரும்போதே டிரைவருக்கு சந்தேகம்; இந்த அத்துவான காட்லெ யாரொ ஒரு பொடியன் தனீயாப் போறானே என்று.
“தம்பி, என்னவேணும்; எங்கே போறே இப்பிடி?”
“தாகமா இருக்கு குடிக்கத் தண்ணி வேணும்.” டிரைவருக்கு மனசு இரங்கிவிட்டது.
என்ன வேணும் என்று கேட்டிராவிட்டால், தண்ணி வேணும் என்று கேட்டிருப்பானோ என்னவோ!
பாட்டிலில் அடைத்து வைத்திருந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தார்.
அதை எப்படிக் குடிக்க என்று தெரியாமல்த் திகைத்தபோது, தன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த ஒருவர் சோடாக் கலர் குடித்த மாதரியை ஞாபகம் வைத்துக்கொண்டு அதுபோலக் குடித்தான்.
டிரைவர் அவனை வண்டியில் ஏற்றிக்கொண்டார். இவன் தன் கதையை அவிழ்த்துவிட்டான்.
அம்மா அப்பாவைப் பார்க்க ஆசை வந்துவிட்டதால் பள்ளிக் கூடத்திலிருந்து சொல்லாமல்க் கொள்ளாமல் புறப்பட்டு வந்து விட்டதாகச் சொன்னான்.
“நீ இப்படி வந்தது தப்பு. வீட்டுக்குப்போக ரஜா கேட்டால் கொடுத்திருப்பார்களே ?”
“கேட்டனே; பரீட்சை முடிஞ்சிதான் போகமுடியும்ண்ணு சொல்லீட்டாக”
இவன் இப்படி வந்தது டிரைவருக்கு சரியாகப்படலை, என்றாலும் அவனுடைய தாய் தகப்பனார்பேரிலுள்ள பாசத்தை நினைக்கும்போது தப்பிதமாகப் படலை. ஆனாலும் நிறைய்ய புத்திமதிகள் சொன்னார்.
“குளிக்கக்கூட அங்கே தண்ணீர் கிடையாது; பாருங்க மேலெல்லாம் ஒரே சொரி சிரங்கு” என்று காண்பித்து அவருடைய அனுதாபத்தை மேலும் பெற முயன்றான்.
முடிவான் வீட்டுக்குள் நுழைந்தபோது கட்டுத்தரையில் படுத்துக் கிடந்த பசுமாடுகள் ஒருவினாடி அசையை நிறுத்தி காதுகளை முன்பக்கம் குவித்து இவனைப் பார்த்துவிட்டு அசையைத் தொடர்ந்தன. தூரத்தில் இவன் வரும்போதே மோப்ப சக்தியால் அறிந்துகொண்ட நாய் அமைதி இழந்து கட்டுச்சங்கிலியிலிருந்து விடுபட முனைந்தது. நேரிலே இப்போது கண்டதும் வாலைக் கவுட்டைக்குள் நுழைத்து பின்வாங்கி ஒடுக்கமாக நின்றுகொண்டது.
ஏதோ யோசனையில் கம்பம்புல்லை சுளகில் இட்டு நாவிக் கொண்டிருந்த அம்மா இவனைப் பார்த்ததும் ஆனந்தத்தால் உணர்ச்சி வசப்பட்டு இவன் செல்லப்பெயரைச் சொல்லிக் கூவினாள்.
அவளைப் பார்த்துக்கொண்டே இவன் அங்கேயே அப்படியே நின்றுகொண்டிருந்தான்.
அம்மாதான் எழுந்துபோய் இவனுடைய நாடியைத் தொட்டு முகத்தை நிமிர்த்தி ஆதூரத்துடன் பார்த்தாள். “ராஜுலு நா செல்லா…” என்கிற பிரிய வார்த்தைகள் மனசுக்குள் எழுந்து வெளிவருவதற்குள் கண்ணீர் முந்திக்கொண்டது.
அடுப்பங்கூடத்தில் அப்பா சாப்பிட்டுக்கொண்டே பூனை, குட்டி களுக்குச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த வேட்டை படிக்கும் விளையாட்டை கவனித்துக்கொண்டிருந்தார்.
“புஸ்தகம் பெட்டி படுக்கையெல்லாம் அங்கேயேதான் இருககும்; இப்போ ஒரு சின்ன லீவு விட்டிருக்காக, அதான் அவசரமா ஓடி வந்தேன்” என்று இவன் சொல்லிக்கொண்டிருப்பது அப்பாவின் காதுகளில் விழுகிறது.
“இப்பொ என்ன லீவு. இருக்கும்” என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கும்போதே பூனை அவசரமாகக் குட்டிகளை ஒவ்வொன் றாகக் கவ்வி எடுத்துக்கொண்டு போக ஆரம்பித்தபோது குட்டிகள் தாயின் வாயில் பிடரியைக் கொடுக்க மறுத்து அலக்கழித்தன.
பூனையின் வாயில் ஒருகுட்டி தொங்கிக்கொண்டிருக்க மாடியில் ஏறி அடுத்த வீட்டுக்குப் போகும்போது முடிவான் கவனித்துவிட்டான்.
“அய்…!யம்மா பூனை குட்டி போட்டிருக்குபோல”
“ஆமா ராஜா, குட்டி போட்டிருக்கு; மூனு குட்டி போட்டிருக்கு.”
மூனு குட்டியா, ரெண்டைக் கிணத்துலெ கொண்டு போயி போட்டூட்டு ஒண்ணைமாத்தரம் வச்சுக்கிடலாமே” என்று பூனையைப் பார்த்துக்கொண்டே முடிவான் சொன்னபோது பூனையும் அவனைப் பார்த்தது; பார்த்துவிட்டு வாயில் தொங்கும் குட்டியோடு ஒரே தவ்வலில் தாண்டிப்போனபோது அதன் கண்களில்த்தான் எத்தனை ஜ்வாலை!
இவனுடைய திடீர் வருகை குடும்பத்தில் அனைவருக்கும் பரபரப்பான சந்தோஷத்தைக் கொடுத்தது.
அம்மா அவனுக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டினாள். “அரப்புதான் காந்தும் சீயக்காய் காந்தாது” என்று சொல்லி சிரங்குகளில் காந்தல் ஏற்படாமல் பதமாய்த் தேய்த்துக் குளிப்பாட்டினாள்.
சாப்பாடு பரிமாறும்போது அக்கா சிரித்துக்கொண்டே கேட்டாள். “கடல் நாகத்தைப் பாத்தியா அங்கெ;”
(இவன்அந்தக் கடற்கரை ஊரில் இருக்க ஒப்புக்கொண்டதே இதுக் குத்தான் !)
‘அது இப்பொ வராதாமெ; அது இப்பொ முட்டைக மேலெ மண்டலம் போட்டு அடைகாத்துக்கிட்டெயில்லெ இருக்கும்”. என்று ஒரு பொய்யை நிஜம்போலச் சொன்னான். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்!
எண்ணெய் தேய்த்துக் குளித்ததாலும் குடலுக்குப் பழக்கப்பட்ட இதமான ஆகாரம் வயிற்றுக்குள்ளே நிறைய போனதாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கட்டில் ஏறியதும் அசந்து தூங்கிவிட்டான்.
இவன் அவிழ்த்து எறிந்த கால்சட்டையிலும் சிலாக்கின் பையிலும் அப்பா ‘சோதனை’ போட்டுப் பார்த்ததில் ஒரு பஸ் டிக்கட்டோ அல்லது இவன் பிரியமாக வைத்துக்கொண்டிருந்த நீலநிற குட்டி மணிப்பர்ஸோ எதுவும் காணோம்.
அப்பாவும் அம்மாவும் தனித்து கவலையோடு இவனைப்பற்றி யோசனை செய்துகொண்டிருந்தபோது யாரொ ஒரு அந்நியன் தயங்கியபடியே இதுதான் இன்னாருடைய வீடா என்று விசாரித்துக் கொண்டே வந்தான்.
ஆமா; என்ன விஷயம் என்று கேட்டபோது, உங்கள் பையன் கே. துரைராஜு குளிக்கும் இடத்திலிருந்து ஓடி வந்துவிட்டான். தலைமை ஆசிரியரிடமிருந்து கடிதம் கொண்டுவந்திருக்கிறேன் என்று கொடுத்தான்.
வந்த ஆள் போனபிறகு அம்மாவிடம் அப்பா, “இவன் வரத்தே சரியில்லைங்கிறதையும் கொஞ்சங்கூட திருந்தலைங்கிறதும் அந்தப் பூனை இவன் வந்ததுமே குட்டிகளை எடுத்து பத்திரப்படுத்தின திலிருந்து தெரியலையா” என்று கேட்டார்.
அம்மா யோசித்தாள்.
– அலைஓசை, 10 அக்டோபர் 1980.