மாயையின் பிடிக்குள், மறையும் நிலவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 3,987 
 
 

கல்யாண சுப முகூர்த்தத்தில் கழுத்தில், தாலி ஏறுகிற மகளிர் அனைவர்க்கும், சொர்க்கமே, தம் காலடிக்கு வந்து விட்டதாகவே ஓர் உணர்வு மயக்கம். சாரதா நாயகியைப் பார்த்து பழகிய அனுபவம் அது உரும்பிராயிலிருந்து, கழுத்தில் தாலி ஏறிய களையோடு, புது மாப்பிள்ளை அருகே அமர்ந்தபடி, காரின் யன்னல் கதவினூடாக தலை நீட்டி அவள் பார்த்த அழகு அப்படி இருந்தது. முகம் செவ்வானமாய் சிவந்து இருக்க, சொர்க்கமே கண்டு விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.

சாரதாவுக்கும் அவளுக்கும் சம வயது தான் எனினும் சாரதா எந்த மயக்கச் சுழலுனுள்ளும் சிக்காத, கடவுள் நிலை போன்ற, மகோன்னத இருப்பு அவளுக்கு. அவள் புடமிட்ட தங்கமென்றால் இந்த பேருண்மை புரியாதவர்க்கு இது கேள்விக்குறிதான்.

அப்போது அத்தருணத்தில், நாயகியின் அந்த உல்லாச நிலை, உணர்வு மயக்கம் கூட அவள் கண்களில் ஒட்டவில்லை. இதில் இன்னொரு விவகாரம் அப்போது நாயகியைப் பார்க்கையில், அவளின் அம்மா உதட்டில் கேலிச் சிரிப்பு வழிய, சாரதாவின் கண் முன்னே தோன்றினாள், வெறும் நினைவு தான்.

இந்த வாழ்க்கைப் போட்டியில், நாயகி வெற்றிக் கொடி பறக்க வருகிறாளே. இதைப் பார்த்து சாரதா எரிந்து சாம்பலேயாகி விட்டது போல அவள் உள்ளுரக் கனாக் கண்டு, களிப்புற்று நிற்கிற மாதிரி ஒரு, மாயத் தோற்றம் தெரிந்தது.

அவளுடைய சந்தோஷம் அப்படியானது, ஆனால் நிலைமை வேறு. சாரதாவின் அம்மாவை இந்தக் கோணத்தில் பார்ப்பதற்கே, மனம் சங்கடப்பட்டது. இருவரும் துருவங்கள் அதாவது சாரதாவின் அம்மாவும் நாயகியின் அம்மாவும், வெவ்வேறு ரகம். நாயகியின் அம்மா ஒரு குடிகாரி, தாய் தகப்பனோடு, சிங்கப்பூரில் இருந்த போது பழகிய பழக்கம் அவளின் அப்பாவை பெத்தப்பா என்று தான் அம்மா கூறுவா. அம்மாவுக்கு அவர் மாமன் முறை.

என்ன வழியிலென்றால், சாரதாவின் அம்மாவுக்கு பெத்தாச்சி. மாமி முறை அது மட்டுமல்ல சாரதாவின் அப்பாவுக்கும் அவர் சொந்தம் இருவர் அம்மாக்களும் கூடப் பிறந்த சகோதரிகள். அந்தக் காலத்தில் இப்படியான உறவு முறை வாழ்க்கைதான். நெருங்கிய உறவாக இருந்தாலும், வாழ்க்கை மாற்றங்களைக் காணும் போது, விலகி நின்று வேடிக்கை பார்க்கிற சுபாவம் தான் பெரும்பாலானோர்க்கு. சாரதா குடும்பம் இதற்கு விதி விலக்கு. அவளின் அப்பா ஆனந்தர் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் , சுமூக சேவை செய்யும் இறை தொண்டன்.

அம்மா ஒரு பரமசாது. தீவிர முருக பக்தை. விரதங்களெல்லாம், அனுஷ்டித்து கோவிலுக்கு தவறாமல் போய் வருகிறவள். ஆனால் நாயகியின் அம்மா கள்ளுக் குடிக்கிற குடிகாரி. அவள் குடிக்கிற விடயம் வெளிப்படையானதல்ல. அப்படியானால், சாரதாவின் பார்வைக்கு அது எப்படி எட்டிற்று.

அவர்கள் வீட்டிற்குப் பின் புறமாக, முழுவதுமாக, பள்ளர் குடியிருப்புகள் தாம். சாரதா வீட்டிற்கு வந்து மா இடித்துத் தருகிற பாறியும் அங்கு தான் இருக்கிறாள், அவள் கணவன் இளையவி மரம் ஏறிப் பிழைப்பவன் வேலியும் அடைப்பான்.

யாழ்ப்பாணத்து கிடுகு வேலிக்கு அந்தக் காலத்தில், அப்படியொரு மவுசு. இப்போது வெளிநாட்டுப் பணம் வந்து விட்டதால், கிடுகு வேலி போய், எல்லா வீடுகளிலும் மதில்கள் தாம் விசுவரூப எடுத்து நிற்கின்றன. அது மட்டுமல்ல, கூலிப் பிழைப்பும் போய், கனவான் கணக்கில் அனைவரும் இருக்கையில் சிரஞ்சீவியாக வாழ்ந்த காலம் போய், எல்லாமே தடம் புரண்டு போன கலியுகத்தின் தலைமுறை மாறுதலைக் கண்டு விதியும் சிரிக்கிறது, அது வேறு கதை.

நாயகியின் அம்மா குடிக்கிறதுக்காக, அவள் பாவாடைக்குள் போத்தலை, மறைத்தபடி, சாரதாவின் வீட்டின் பின்புறமாக, பாறி வீட்டிற்குக் கள் வாங்க போய் வருவதை, கண் கூடாக, சாராதாவே பார்த்திருக்கிறாள். அவர்கள் வீட்டின் கோடியில் நின்று பார்த்தால், இளையவி வீட்டு முற்றத்தில் இந்தக் கள்ளுக் கச்சேரி அமோகமாக நடைபெறுவதை, பார்க்கலாம். சாரதாவுக்கு அதை அந்தக் கண்றாவிக் காட்சியை பல தடவைகள் பார்த்த ஞாபகம். இளையவின் மகள் மலரின் கணவனுக்கு கள்ளு இறக்கிற வேலை தான்.
எதுவாகவாவது இருந்து விட்டுப் போகட்டும். சொந்த இருப்புத் தான் முக்கியம். அது மாசுபடாமல் இருந்தாலே போதும். சாரதாவுக்கு இதுவே மனப் பாடம். அவள் கண் முன்னாலேயே ஒரு காட்சி நாடகம்.

நாயகி வாழ்கிறாள் அடுக்கடுக்காய் பிள்ளைகள் பெற்றுப் போட்டு, சாரதா இன்னும் தனி மரம், தான் கொடி ஏறாமலே கொடிய வினை சுமகிறாள். இதிலே எந்த மனவருத்தமுமில்லை சாரதாவுக்கு. ஆனல் அம்மாவுக்குத் தான் இந்த நாயகியினுடைய சொந்த வாழ்க்கை சுகமாய் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொஞ்சம் வயிற்றெரிச்சல்.

ஆம் சாரதா இப்போது கன்னியல்ல முதிர் கன்னி. வயதும் முப்பதுக்கு மேலாகி விட்டது. ஊரே அவளைப் பார்த்து சிரிக்கிறது. இதை அறிந்த அம்மா சாரதா வீட்டை விட்டு வாசலுக்கு வந்து விட்டாலே போதும் ஒரே ரணகளாமாகி விடும்.

இப்படித் தான், ஒருநாள் அவள் கோவிலுக்கு தனியாக போகக் கிளம்பிய போது, அம்மா ஓடி வந்து வழி மறிக்க, ஆக்ரோஷத்தோடு அவள் கேட்டாள்.

அம்மா! இப்ப என்ன நடந்திட்டுதென்று துள்ளிக் குதிக்கிறியள்? நான் சரியாய் தானே இருக்கிறன்.

அதற்கு அம்மா ஆவேசமாக சொன்னாள், நீ ஒரு தற்குறி. விளங்காதவள். நீ வெளியிலை போனால், எல்லோரும் தீட்டுக் குளிச்ச மாதிரி முகம் சுழிப்பினம். காறி துப்பவும் கூடும். ஏன் வீண் வம்பு. அது தான் சொல்லுறன் நீ எங்கையும் போக வேண்டாம்.

அம்மா! போதும் நிருத்துங்கோ. உலகத்துக்குப் பயந்து நான் ஏன் முக்காடு போட வேண்டுமென்று கேக்கிறன். எனக்கு அது தேவையில்லை. ஆன்மாவை அறிஞ்சு கொண்ட ஒரு சுதந்திரப் பறவை நான். அதீத கற்பனைகள் எனக்கு வாறேலை. உங்களுக்கு என்ன வயித்தெரிச்சல் என்று எனக்கு விளங்குது, நாயகி தானே உங்களை தீயிலே போடுறாள். இது மாறும் என்று எனக்குத் தோன்றுது. இருந்து பாருங்கோ1 என்றாள் அவள் மனம் பொறுக்க மாட்டாமல்.

அவள் அன்று கூறிய வார்த்தை பிரகடனம், வேதம் போலவேயானது. நெருப்பில் விழுந்த அம்மாவே பார்த்துக் கொண்டிருக்க, கொஞ்சமும் எதிர்பாராமல் நாயகி வாழ்வில் அது அரங்கேறிய கொடுமையை வாய் விட்டுத் தான் சொல்ல முடியுமோ?

அப்படி என்னதான் நடந்து விட்டது அவள் வாழ்வில்? அன்று தேரேறி வந்த அவளுக்கா இந்தக் கதி? அவள் ஏறி வந்த அந்த தேர் இடையில் ஓட முடியாமல் தடம் புரண்டு, போனதற்கு யாரைக் குற்றம் சொல்வது?

உலகமே பார்த்துக் கொண்டிருக்க திடீரென்று நாயகியின், வீட்டிற்குள் நாலைந்து பேரின் நடமாட்டம் தெரிந்தது. ஏன் இவ்வளவு கூட்டமென்று அறியும் ஆவல், சாரதாவுக்கு இல்லாது போனாலும், அம்மாவுக்கு அது வரவே, வேலிக்கு வெளியே தலையை நீட்டி அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் நிலை சரிந்து போன சாரதாவின் நிழல் கோலம் அவள் கண்களில் இடறிற்று. ஆம் அப்போது அவள் சந்தோஷத் தேரேறி வந்த அந்த நாயகி நிஜம் விட்டுப் போன வெறும் நிழலாய், கண்களிருந்து கண்ணீர் மழை கொட்ட, அவள் வெறும் காட்சிப் பொம்மையாகி விட்டிருந்தாள், இந்த அவலக் காட்சியை காணப் பொறுக்காமல், அம்மாவே திரும்பி வந்து விட்டாள்.

அப்படி என்னதான் நடந்து விட்டது நாயகிக்கு? ஊர் அறிய அவளுக்கு நேர்ந்த பெருஞ் சோகம் விழுக்காடு, தெரிய வந்த, போது தான், சாரதவுக்கு புரிந்தது, தான் வென்று விட்டதாய். வேதம் சொன்ன தன் நாவிற்கு சக்கரை அள்ளிப் போட்டாலும் தகும். பிறர் வீழ்ச்சி கண்டு பொங்குகிற ஆள் நானல்ல, பொங்கிச் சரிய இது பானையுமில்லை. உயிருள்ள ஒரு மனித தேவதை, ஆம் ஒரு காலத்தில் அவளைத் தேவதையாக, ஊர் மட்டுமல்ல. அம்மாவுக்கும் அது தெரிய வந்த, போது, அவள் சிரித்தாளா அழுதாளா என்று தெரியவில்லை. ஆனால் நாயகியின் அப்பெரும் விழுக்காட்டை பார்த்து மனம் நொந்து போன வெறுமை, சாரதாவை தகித்தது. நாயகியின் அழுகையில் மகிழ்ச்சி கொண்டாடுகிற அற்ப புத்தி எனக்கில்லை, அதை வேடிக்கை பார்த்து சிரிக்கிற ஆள் நானில்லை. அப்ப என்ன நடந்தது நாயகிக்கு? அவளை அன்று தேரேறி, ஊர் கோலம் போக வைத்தவன், அவள் அன்பாக நேசித்த ஆசைக் கணவன்,கோபி என்ற மகா துரோகி அவளை நடுத்தெருவில் தூக்கியெறிந்து விட்டு, எவளுக்கோ கணவனாகி அங்கு திருகோணமலையில் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பதாக, அங்கிருந்து வந்தவர்கள் சொன்ன போது, அவள் என்னவாகி விட்டிருப்பாள்? மேலும் கோபி ஒரு துறைமுகப் பணியாளன் யாரோ ஓர் அழகான சிங்களப் பெண்ணோடு தொடர்பாகி இப்போது இரு பிள்ளைகளும் கூட உண்டாம் அவனுக்கு. இது ஒரு படிப்பினை தான் எல்லோருக்கும் . அம்மா புரிந்து கொள்வாளா தெரியவில்லை. ஆனால், சாரதவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. வெளிப் பார்வைக்கு அழகாய் தோன்றுகிற அனைத்தும், நிஜமல்ல, நிழலும் கூடவே வரும் என்பதை மனம் கொள்ள எண்ணினால், மட்டுமே, வாழ்க்கை யோகமாகும். போலியான நிஜத்தைக் கண்டு மயங்குகின்ற, புத்தியின்றி, அப்பழுக்கற்ற மனதுக்கே பழக்கப்பட நிர்மலமான சுபாவத்தோடு, நிலவு தன் காலடிக்கே வந்து நேர்ந்தாற் போல், திடீரென்று அவள் நினைவு கூர்ந்தாள். நிஜமும் நிழலுமற்று அல்லது அது தீர்ந்து போன பரவச நிலை ஒன்று மட்டுமே எனக்கானது.

இதை அறிவு பூரவமான இந்த, மெய்ஞ்ஞானத் தகவலை அம்மா அறியும் படியாக சகஜமாக, குரலை உயர்த்தி மென்மையாக அவள் சொன்னாள்.

நான் இதுக்காக ஒன்றும் சந்தோஷப்படேலை அழுகையும் வரவில்லை அம்மா! என்றாள் அவள் சுதந்திரமாக சிரித்துக் கொண்டே. அந்த சிரிப்பின் அர்த்தம் பிடிபடாமல், சிந்தனை வெறித்து ஆழப் புதைந்து போயிருந்தாள் வெகு நேரம் வரை அம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *