மாமியார் எனும் தாய்!





வடக்கல்லில் ஊற்றிய எண்ணை சூடானதும் முறுக்கு புடியில் மாவை வைத்து கை வலிக்க அழுத்திய போது எண்ணை பொங்கி வர, புளியை எடுத்து வடக்கல்லில் போட்டாள் மாரி. உடனே பொங்கிய எண்ணை சரியாக ஆச்சர்யப்பட்டாள் மருமகள் சாந்தி.

“எல்லாமே கலப்படந்தாந்தாயி. கல்லெண்ணக்குள்ள வெளக்கெண்ணைய ஊத்தி காசு பாக்கறாங்க. வெளக்கெண்ணை ஒடம்புக்கு நல்லதுன்னாலும் பொங்கிப்பொங்கி வரும். புளியப்போட்டு முறுக்குச்சுடுவேன்” மாமியார் பேசிய வார்த்தைகள் புதிதாக இருந்தது நகரத்திலிருந்து முதலாக கிராமத்துக்கு வந்திருந்த சாந்திக்கு.
“என்ன சாந்தி… என்னோட அம்மா பேசறது எதுவுமே புரியலையா…? பத்து நாளைக்கு இருந்தீன்னா பழகிக்குவே” கணவன் ரகுவின் பேச்சைக்கேட்டு “சரிங்க” எனக்கூறி தலையசைத்தாள்.
சாந்தி நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். தாய், தந்தை இரண்டு பேரும் வேலைக்கு செல்பவர்கள். பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் புத்தகப்பையில் இருக்கும் சாவியை வைத்து வீடு திறந்து காலையில் தாய் செய்து ஹாட் பாக்ஸில் போட்டு வைத்திருக்கும் உணவை எடுத்து தட்டில் போட்டு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் அலாரம் வைத்து ஓய்வெடுத்து விட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது பள்ளி ஆசிரியையிடம் டியூசன் சென்று விட்டு வரும்போது அம்மா அலுவலகத்திலிருந்து வந்து செய்து வைத்த உணவை சாப்பிட்டவுடன் படுக்கைக்கு செல்ல வேண்டியிருக்கும்.
விடுமுறை நாளான ஞாயிறன்று அதிகாலையிலேயே கிளம்பி சுற்றுலா செல்வதும், ஹோட்டல் உணவை மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்தும் சோர்வில் உறக்கம் கொள்வதும் தான் வாடிக்கையானது. வீட்டில் வயதான தாத்தா, பாட்டி யாரும் இல்லாததால் பள்ளியில் தவிர வீட்டில் பேசவே வாய்ப்பில்லாமல் போனதால் சமையல் வேலையை முறையாகக்கற்க இயலாமல் போனது.
கிராமப்புறங்களில் நிலையே வேறு. எப்போதும் வீட்டில் யாராவது இருக்கும் நிலையால் குழந்தைகள் சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் அனைத்தையும் கற்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.
திருமணமாகி ஆறுமாதம் வரை கணவனே சமையல் செய்ய உதவியதால் காலத்தை ஓட்ட முடிந்ததாக நினைத்தாள். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ எனும் பழமொழிக்கேற்ப தற்போது எவ்வளவு முயன்றாலும் முடியாமல் போவதை நினைத்து வருந்தினாள். உப்புக்கும், சர்க்கரைக்கும் வித்தியாசம் தெரியவே பல நாட்கள் ஆகின. இந்த நேரத்தில் கருவில் குழந்தையைச்சுமந்து கொண்டிருந்தாள்.
“புள்ளத்தாய்ச்சி பொண்ணு உனக்கு புடிக்கும்னு தான் முறுக்கு சுடறேன்னு வெச்சுக்குவே. நாங்கெல்லாம் சின்ன வயசா இருக்கற போது என்ற பாட்டி முறுக்கு சுட்டு மண்ணுல செஞ்ச பானைல போட்டு வெச்சுட்டா மாசக்கணக்குல கெடாது. அன்னாடும் ஆடு,மாடு ஓட்டீட்டு போற போது மடில கட்டி எடுத்துட்டு போயி ஒன்னா உக்காந்து திம்போம். கண்ணாலமாயி கொழந்த வகுத்துலீன்னு அடைச்சிட்டாலே கச்சாயம், ஒப்புட்டு, முறுக்கு, தட்ட வட, எள்ளுரண்ட, மைசூருப்பா, லட்டு, தேங்காயி முட்டாயின்னு ஊட்ல பண்ணி வெச்சிருவாங்க. உன்ற ஊட்டுக்காரன் என்ற வகுத்துல இருந்த போது என்ற மாமியாக்காரி எனக்கு பலகாரத்தச்செஞ்சு ஊட்டியே உடுவாங்க மகராசி….” எனக்கூறிய போது சாந்திக்கு நாக்கில் எச்சில் ஊறியது. இது போல் பலகாரங்களின் பெயரைக்கூட இதுவரை அவள் கேள்விப்பட்டதில்லை.
“அந்த மாதர மாமியா ஆருக்குங்குங்கெடைக்க மாட்டாங்க. போன வருந்தா நோயி வந்து பாயில படுக்காம பொசுக்குன்னு தூங்கற போதே போயி சேந்துட்டாங்க. நல்ல மனுசிக்கு நல்லசாவுதாம்போ. எனக்கு ஒரு கை ஒடைஞ்சமாதர என்ற மாமியா போனது. என்ன பண்ணறது இந்த பூமில பொறந்தா ஒரு நாளைக்கு எல்லாரும் போயித்தான ஆகோணும்” சொன்ன மாமியார் கண்களில் கண்ணீர் வர தானும் அழுதாள்.
படித்து வேலைக்கு சென்றதால் வீட்டிற்கு வந்து உடல் சோர்வால் வெறுப்போடு சமையல் செய்து தன்னை வளர்த்த தனது தாயோடு படிக்காமல் பொறுப்போடு அன்பு காட்டும் மாமியாரை சாந்திக்கு மிகவும் பிடித்துப்போனது.
“நீங்க இங்கிருந்தே வேலைக்குப்போங்க. நானும் அத்தையும் குழந்தை பிறக்கிற வரைக்கும் இங்க ஒன்னாவே இருந்துக்கறோம். கற்பமான பெண் சந்தோசமா இருந்தாத்தான் குழந்தை ஆரோக்யமா பொறக்கும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. இங்க தான் எனக்கு சந்தோசம் கிடைக்கும்” என கூறிய மனைவியின் வாயில் தன் தாய் செய்த பலகாரத்தை ரகு எடுத்து ஊட்டி விடும் போதே தன் விருப்பத்தை கணவன் ஆதரிப்பதாகப்புரிந்து மகிழ்ந்தாள் சாந்தி.