மான் விழி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2025
பார்வையிட்டோர்: 211 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலைமணி ஐந்து அடித்து இருபது மணித்துளிகள் ஓடியிருந்தன. நாட்டின் பிரபல எழுத்தாளரும் சமூக சேவையாளருமான ஷாந்தி தனது வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் பூச்செடிகளுக்கு நடுவே நடந்து கொண்டிருந் தார். ஐம்பது வயது முடிந்துவிட்டாலும் பார்வைக்கு முப்பத்தைந்து வயது தோற்றம்!

நல்ல கட்டுக்குலையாத உடல் வாகு, ஐந்தடி ஆறு அங்குல உயரம், அனாவசியமான ஊளைச் சதைகள் இல் லாத உடம்பு, கையில்லாத ரவிக்கையும், கார்ட்டன் புடை வையும் அன்னை இந்திராவைப் போல் “பாப்” செய்த முடி யழகும் நெற்றியில் அளவான வடிவில் செந்தூரப் பொட்டும்…

நடக்கும் தோரணையில்கூட அவரது மனத்தில் அழகு பளிச்சென்று தெரிகிறது. வெளியூர்களுக்குச் செல்லும் போதெல்லாம் கொண்டுவந்து சேர்த்த பல வண்ண ரோஜாச் செடிகளைப் பக்குவமாய் நட்டுப் பாதுகாத்து ஆள் உயரத்தில் வளர்த்து அவை கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் அழகில் தன்னை மறந்து, நேரம் போவதே தெரியாமல் மலர்களோடும் செடிகளோடும் பொழுதைக் கழிப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்று.

இப்போதும் அப்படித்தான் நேரம் ஓடிக் கொண் டிருந்தது. ஒரு மகளிர் கருத்தரங்கில் கலந்து சிறப்புரை யாற்றுவதற்காக “செந்தோசா” பூங்காவிற்குச் சென்று திரும்பியபோது நண்பர்கள் பரிசளித்த மூன்று வண்ண ரோஜாச் செடியைக் குழந்தைபோல் தொட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.

செடிகள் கொடிகள் மரங்கள்கூட மக்களின் அணுக் கத்தை விரும்புகின்றன என்பதை அனுபவத்தாலும் ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளாலும் உணர்ந்தவர். ஒரு நாளில் ஒரு முறையாவது அந்தச் செடிகளைத் தொட்டுவிட வேண்டும் என்ற துடிப்பில் அதற்காக அந்தத் தோட்டத்தில் சிறிது நேரத்தைக் கழிப்பவர். அவரது எழுத்துக்கான கற்பனைகள் பல சமயங்களில் அங்குதான் பிறந்துவரும்.

அரசு உத்தியோகத்தில் ஓய்வு பெற்றுத் தொழில் நடத்தும் கணவர். தனியார் நிறுவனத்தில் நான்கு இலக்க வருமானத்தில் இரண்டு மகன்கள். சிங்கப்பூர் “சியா” விமான நிறுவனத்தில் உலகம் முழுவதும் பறக்கும் பாவையாய் ஒரே மகள் நிவேதிதா!

இந்த நான்கு பேரின் அன்பிற்கும் உரியவளாய் அந்த வீட்டில் சுதந்திரப் பறவையாய் உலவி வரும் ஷாந்தியின் மற்றப் பணிகள். சமூக நலன் சமுதாய நலன்கருதி எழுதுவது. சமூகப் பணிகளில் ஈடுபடுவது, வீட்டை ஒரு கலைப் பொக்கிஷமாய் வைத்துக் கொள்வது, கணவரின், குழந்தை களின் நலனில் அக்கறையுடன் சமைப்பது, அவர்களின் ஆரோக்யம், எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவது.

வெளியில் அரசியல், சமூக, சமய அமைப்புகளில் மரியாதைக்குரிய பொறுப்புகளில் இருந்து சேவை செய்வது.

அவரது பொதுச் சேவைகளுக்கான அரசாங்க விருதுகள்கூட வீட்டின் வரவேற்பறையில் அலங் காரமாய்த் தொங்கிக் கொண்டிருக்கும்.

ஷாந்தி கையில் செடி வெட்டும் கத்தரிக்கோல் ஒன்றினால் ரோஜாச் செடியின் இலைகளைக் கத்தறித்துக் கொண்டிருந்தார். பளிச்சென்று அவர் கண்ணில் படுகின்றது ஓர் இலையில் வெள்ளை நிறமாய் ஒரு ஒட்டுண்ணி! மனம் பதறிப்போய் அந்த இலையைக் கிள்ளிக் கீழே போட்டு விட்டுச் செடியில் முழுப்பார்வையைச் செலுத்துகிறார். உடம்பு முழுவதும் திகில் பிடித்தது போன்ற உணர்வு பரவுகிறது.

“செவன் சிஸ்டர்” என்று அழைக்கப்படும் அந்த அழகிய ரோஜாச் செடியில் இலைகள் முழுவதிலும் அந்த ஒட்டுண்ணிகள் பரவிக் கொண்டிருந்தன. ஆசை ஆசையாய் வளர்த்த அருமைப் பிள்ளையின் உடம்பில் சொறிசிரங்கு வந்தது போன்ற பரிதவிப்புடன் எல்லா இலைகளையும் கத்தறித்துப் போட்டுவிட்டு உள்ளே போய்ப் பூச்சிக்கொல்லி மருந்தைக் கொண்டு வந்து தெளிக்கிறார். கொத்துக் கொத்தாய் இளஞ்சிவப்பில் சிரித்துக் கொண்டிருந்த செடியில் இப்போது ஏதோ ஒரு ஊனப்பட்ட தோற்றம். அதைப் பார்க்கும் போது “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் மனநிலை. செல்வமாய் அந்தச் செடியைத் தடவிக் கொடுத்து விட்டுக் கீழே கிடந்த இலைகளை அள்ளிப்போய் வெளியே ஒரு ஓரமாய்ப் போட்டு அக்கம் பக்கத்தில் கிடந்த சருகுகளை ஒன்று சேர்த்து அவற்றில் தீ வைக்கிறார். அது எரிய ஆரம்பிக்கிறது. திடீரென்று யாரோ ஓடிவரும் சத்தம். திரும்பிப் பார்க்கிறார்.

அவர் முன்னால் ஓர் இளைஞன். தாடியும் மீசையும் அழுக்கான ஆடையும் கையில் கத்தியுடன் கோபக்கனல் பறக்க நிற்கிறான். ஷாந்தியின் இருதயம் அடிபட்ட குருவி போல் அடித்துக் கொள்ள ஆரம்பிக்கிறது.

“போ… உள்ளே போ… எதையும் பேசாம சத்தம் போடாம உள்ளே போ.”

அவன் மிரட்ட ஷாந்தி பேசாமல் உள்ளே போகிறார். வாசல் கேட்டை இழுத்துச் சாத்தியவன் உள்ளே போகிறான்.

“எங்கே மான்விழி… கூப்பிடு மான்விழியை…” வன்மையாய் அதட்டுகிறான். நீண்ட தூரம் ஓடிவந்த களைப்பும், அடக்க முடியாத முரட்டுத்தனத்தால் இறுகிக் கிடந்த முகமும் கண்களின் கடுமையும் அவனை ஒரு முரடனாய்க் காட்டினாலும் சில மணித் துளிகளில் ஷாந்தியின் அச்சம் அகன்று

“நீ யாருப்பா…யாரைத் தேடி வந்திருக்கே? இதுதான் தேடற லட்சணமா… ஓர் அடக்கம் அமைதியே உனக்கு வராதா.?”

என்று அவனைத் தாய்மை உணர்வுடன் கேட்கிறார். பொங்கிய பாலில் ஒரு கை நீரைத் தெளித்தது போல் “கப்’பென்று அடங்கிப்போய் அந்தப் பெண்மணியை அமைதியாய்ப் பார்த்து

“எனக்குத் தேவை உன்னோட ஆலோசனை இல்லே.. என்னோட மான்விழி…! எனக்கு இப்ப மான்விழி தான் வேணும். கூப்பிடு அவளை!”

ஷாந்திக்குக் குழப்பம் கூடியதே தவிர குறையவில்லை. முன்பின் தெரியாத ஒருவன் தன்முன்னே தோன்றி “கொண்டு வா! மான்விழியைக் கொண்டு வா..” என்றால் எங்கே போய் மான் விழியைத் தேடுவது..! யார் அந்த மான்விழி..! தனக்குள் தடுமாறிக் கொண்டு இருந்தவர்.

“கோபப்படாதே தம்பி… நீ சொல்ற எதுவுமே எனக்கு விளங்கலியே… மான்விழினா யாரு… அந்தப் பொண்ணு உனக்கு யாரு..? நீ எதுக்காகத் தேடி வந்திருக்கே.”

நிதானமாக அவனிடம் கேட்கிறார். அவன் சட்டென்று தனது சட்டைப் பையில் கைவிட்டு ஒரு கடிதத்தின் நீலநிற உறையை எடுத்து அவரிடம் நீட்டுகிறான். வாங்கிப் பார்க்கின்றார். கடித உறையின் பின்புறம் காணப்பட்ட முகவரி அந்த வீட்டின் முகவரிதான். எழுதியனுப்பியவரின் பெயர் மான்விழி என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அவசரமாய் முன்பக்கம் பார்க்கிறார். வினோதன்!

வினோதன்! பளீரென்று நெற்றிப் பொட்டில் யாரோ அறைந்தது போன்ற அதிர்ச்சி… அவனை மேலும் கீழுமாய் ஒருமுறைப் பார்த்துவிட்டு

“நீங்க..நீங்க சிறைச் சாலையிலேர்ந்தா வர்றீங்க.”

அதிர்ச்சியும் வியப்புமாய்க் கேட்கிறார். அவன் முகத்தில் ஒரு மின்னல் பாய்ந்த ஒளிபடர்கிறது.

“ஆமாம்… நிச்சயமா உங்களுக்கு மானைத் தெரியுதே!” ஆர்வமாய் ஆவலாய்க் கேட்கிறான். கொஞ்சம் பணிவு கூடக் குரலில் சேர்ந்து வந்தது.

ஷாந்தி தலையை ஆட்டுகிறார். “தம்பி… தெரியும்.. மானை… உங்க மான்விழியை நல்லாவே எனக்குத் தெரியும்…”

“கூப்பிடுங்க… என்னோட உயிரை… என்னோட எதிர்காலத்தை.. தயவு செய்து கூப்பிடுங்க நான் அவளைப் பார்க்கிறதுக்காகவே தப்பிச்சு ஓடிவந்திருகேன்.”

தலைக்கு மேல் வெள்ளம் ஏறிவிட்ட நிலை. நெஞ்சில் படபடப்பு அதிகமானாலும் தன்னுடைய நிதானத்தில் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு –

“அவசரப்படாதீங்க தம்பி… மான்விழி வேலைக்குப் போயிருக்கு… இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்திடும் அதுவரைக்கும் நீங்க என்னோட அறையில மேல போய் ஓய்வெடுத்துக்குங்க…’

ஷாந்தியின் குரலில் காணப்பட்ட கனிவும் நேயமும் அவனை அடங்க வைத்தன. இருந்தாலும் சந்தேகத்துடன் கேட்கிறான்.

“நான் ஜெயில்லேர்ந்து தப்பி ஓடி வந்துருக்கேன். போலீஸ் என்னைத் தேடிக்கிட்டிருக்குது… இந்த வீட்டுக்கு யாராச்சும் வந்து நான் யாருன்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க…”

“என்னோட உறவு பையன்னு சொல்லிட்டுப் போறேன்.. நீ எதுக்கும் பயப்பட வேண்டாம். இங்கே யாரும் வரமாட்டாங்க… ஒரு மணி நேரத்தில நீ மான்விழியைப் பார்த்துடலாம்… அப்புறந்தான் போக வேண்டிய இடத் துக்குப் போய்டுவியே..”

“ரொம்ப நன்றிங்க… நான் எந்த இடத்தில ஓய்வெடுக்கணும்..!”

அவன் எழுந்து நின்றான். ஷாந்தி முன்னால் போக அவன் பின் தொடர்ந்தான். மேல்மாடியில் விசாலமான அறையில் ஒரு குட்டி நூல் நிலையமும் மேசையும் நாற்காலியும் சுவர் முழுவதும் பட்டங்களும் பதக்கங்களுமாய் இருந்தன. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். பிரம்பு நாற்காலி ஒன்றைக் காட்டி –

“இங்கேயே உட்கார்ந்திரு…அந்தப் பொண்ணு வந்துடும். வேணுமின்னா உனக்காக அதோட ஆபீஸுக்குப் போன் பண்ணிப் பார்க்கிறேன்…”

சொல்லிவிட்டுக் கீழே இறங்கிய ஷாந்தி அவனுக்குக் குடிக்க சூடான காப்பியைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். பின் ஏதோ ஒரு நம்பிக்கையில் கடகடவென்று அதைக் குடித்துவிட்டு உட்காருகிறான்.

ஷாந்தி சோபாவில் வந்து அமர்ந்ததும் மனப்பறவை தன் சிறகை விரிக்கத் தொடங்கியது.

ஓராண்டுக்கு முன் ஒருநாள் ஓய்வாக அமர்ந்து செய்தித்தாளைப் புரட்டியபோது அதில் “நட்புப்பாலம்’ என்ற தலைப்பை ஷாந்தி படிக்க நேரிட்டது. தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த ஓர் இருபத்தெட்டு வயது வாலிபன் தன்னுடைய மனநிலையை விவரித்து மரணத்தின் வாசலில் நிற்கின்ற தனக்கு வாழப் போகின்ற அந்தச் சில நாள்களுக்காவது நல்லதை நினைத்து வாழ விருப்பம் இருந்தால் தனக்கு நண்பர்களாக இருக்க யாராவது விரும்பினால் அது சாகப்போகும் தனக்கு, அந்தக் கொஞ்ச காலமாவது நிம்மதியைத் தரும்” என்ற வேண்டுகோள் விடுத்திருந்தான்.

இயல்பாகவே இரக்க குணம் மிகுந்த ஷாந்திக்கு அந்த வேண்டுகோள் மனத்தை உருக வைத்தது. அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பி அவன் மனத்திற்கு, இதம் தரும் வகையில் அவனது சிறைச்சாலை முகவரிக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால் அப்போது செய்த ஒரு தவறுதான் இப்போது இங்கே விஸ்வரூபம் எடுத்து வந்து விழி பிதுங்க வைக்கின்றது.

சிறையிலே இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்கும் அந்த இருபத்தெட்டு வயது வாலிபனுக்குத் தன்னுடைய வயதையோ, பெயரையோ சொல்லாமல் தன்னை ஒரு சாதாரண இளம்பெண்ணாகவும், ஒரு பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்ப்பதாகவும் தன்னுடைய பெயர் மான்விழி என்றும் அவனுக்குக் கடிதம் எழுதுகிறார்.

சிறைச்சாலையிலே வறண்டு போன நிலமாய்க் காய்ந்து கிடந்த விநோதனின் இதய பூமியில் மான்விழி என்ற மழைத்துளி வந்து விழுந்ததும் பசும்புற்களாய்ப் புதிய நினைவுகள் முளைவிட ஆரம்பிக்கின்றன. எப்போது பொழுது விடியும்… நாள்கள் ஓடிமறையும்… தன்னுடைய கழுத்தைத் தூக்குக் கயிறு முத்தமிடும் என்று காத்துக் கிடந்தவன், அந்தப் பொழுது விடியாமலே போய்விடாதா.. என்று ஏங்கத் தொடங்கிவிட்டான். சண்டமாருதத்தால் நிலைகுலைந்து கிடந்தவன் மனத்தில் மான்விழி மந்த மார்க்கமானாள்.

விளைவு!

புதிய கற்பனையில் அவன் உலா வந்தான். திருவிழாக் காலங்கள்… பண்டிகை நாள்கள் வரும்போதெல்லாம் அவளுக்குத் தனது முழு அன்பையும் கொட்டிக் கடிதங்களை எழுத ஆரம்பித்தான். மான்விழி என்ற ஷாந்திக்கு அவன் மாற்றம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. சிறைச்சாலை அதிகாரிகள்கூட அவனது மாற்றம் கண்டு வியந்தார்கள். மற்றக் கைதிகளுக்கும் அவன் போக்கு வியப்பைத் தந்தது.

போகாத பொழுதைப் போக்குவதற்காக எழுதத் தொடங்கி அதுவே சமூக நலன்… சமுதாய நலன்… கருதும் பணியாக மாறிப்போய்… மற்றவர்களின் மனத்தை… அதன் ஆசாபாசங்களை… மனக்கண்ணால் பார்க்கும் அளவிற்குத் தன்னை வளர்த்துக் கொண்டு விட்ட ஷாந்தி விநோதனின் மனத்தில் ஒரு சந்தோஷத்தைத் தந்துவிட்ட மகிழ்ச்சியில் சாகப்போகும் வரையிலாவது இந்தச் சந்தோஷம் நீடிக் கட்டுமே என்று தன் நாள்களைக் கடத்திக் கொண் டிருந்தாள்.

கணவரின் உண்மையான அன்பும், குழந்தைகளின் பண்பான வாழ்க்கை முறைகளும் மகிழ்ச்சியான குடும்பச் சூழ்நிலையும் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்நாளை ஓடவைத்துக் கொண்டிருந்தது. ஆனால் யாரோ ஒருவரின் மனத்திற்கு மருந்து போட எண்ணித் தனது உடம்பையே வேக வைத்துக் கொண்ட அவதி இன்று. ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தொலை பேசியில் எண்களைச் சுழற்றுகிறாள். பேச வேண்டியதைச் சுருக்கமாய்ப் பேசிவிட்டுப் படிகளில் ஏறிவருகிறாள்.

கூண்டில் அடைபட்ட புலியாய் அந்த அறையில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தவன் மான்விழி இன்னும் வராதது கண்டு பரபரப்பைத் தொடங்கினான். குவிந்து கிடந்த புத்தகங்களை வெறியுடன் தட்டி விடுகிறான். தரையில் விழுந்த அந்தப் புத்தகங்களைக் காலால் இடறிக் கொண்டு நடந்தவனின் கண்ணில் கட்டாகப் படுகிறது. கடிதங்கள் அடங்கிய ஒரு கட்டு. குனிந்து அதை எடுக்கிறான். அத்தனையும் அவனால் மான்விழிக்கு எழுதப்பட்ட கடிதங்கள்! ஆவலோடு அள்ளிக் கொள்கிறான். மான்விழியையே பார்த்துவிட்ட மகிழ்ச்சித் துள்ளல் மனத்தில். அறையின் கதவு தட்டப்பட்டதும் விநோதன் ஆர்வமாய் ஓடிவந்து கதவைத் திறக்கிறான். வாடிப்போய்க் காணப்படும் ஷாந்தியின் முகத்தைப் பார்க்கிறான்.

“எங்கே என் மான்விழி…! “ஆர்வமும் ஆவலுமாய் மேலிட அவன்” கேட்க

“மான்விழி கீழே இருக்கா… நீ இறங்கி வா” என்றவாறு ஷாந்தி நடக்கிறாள். ஷாந்தி நடந்து வந்து சோபாவில் அமர்ந்ததும் அதைத் தொடர்ந்து கீழே வந்த விநோதனை மாடிப்படியின் கீழே பதுங்கியிருந்த போலீஸார் பிடித்துக் கொள்கின்றனர்.

விநோதன் தவித்துப் போகிறான். காவல் துறை அதி காரிகள் ஷாந்திக்கு நன்றி சொல்லி அவனைக் காவல்துறை வண்டியில் ஏற்றுகின்றனர். விநோதன் ஷாந்தியைப் பரிதாபமாய்ப் பார்க்கிறான். கையிலே இறுகப் பிடித்திருந்த கடிதங்களோடு சேர்ந்து வந்த இன்னும் சில தாள்களோடு ஒரு புகைப்படமும் இருக்க அதை ஆழமாய்ப் பார்க்கிறான் விநோதன்

கண்கள்… அந்தக் கண்கள்… அது ஷாந்தியின் கண் களாய்த் தெரிய அவன் பாக்கிட்டிலிருந்து ஒரு படத்தை எடுத்து ஒப்பிடுகிறான்.

ஷாந்தி அவனுக்கு “மான்விழி” என்று கையெழுத்துப் போட்டு அனுப்பிய படம் அது…! இரண்டடையும் ஒப்பிடுகிறான். வாசலில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் ஷாந்தியின் கண்களைப் பார்க்கிறான்…

மான்விழி..!. அதோ அதுதான் என் மான்விழியா.. மனம் அலறுகிறது. எந்தக் கையினால் இனிய மொழிகளை எழுதி அந்தத் தூக்குத் தண்டனை கைதியை வாழவைத்தாரோ… அதே கைகளால் தொலைபேசியைச் சுழற்றிப் போலீஸையும் அழைத்து அவனைப் பிடித்தும் கொடுத்துவிட்டார்.

இன்னும் சில நாள்களில் அவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு அவன் நிம்மதியாய்த் தூங்கி விடுவான். ஆனால் அமைதிப் பூங்காவாய்த் தென்றல் வீசிக்கொண்டிருந்த அந்த அனுபவசாலியின் இதயத்தில் இனம்புரியாத புயலும், பூகம்பமும் இதோ ஆரம்பித்துவிட்டனவே… இதுவே ஆயுள் தண்டனையாய் அமைந்து அங்கிருந்த அமைதியை அழித்துவிடுமோ? ஷாந்தியை யார்தான் தேற்றுவது?

– சிங்கை வானொலி

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *