மரம் நடுவோம்! – ஒரு பக்க கதை





அந்த ஊர் மக்கள் அன்று மாலை பெரிய திடலில் அமர்ந்து விவாதித்துக்கொண்டு இருந்தனர். ஊர்த்தலைவர் எழுந்து “மழை பெய்றதுக்காக பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிசேகம், மாத ஆலயத்த புதுப்பிக்கனும், தர்காவுல கிடா கந்திரி போடனும். செஞ்சா மழை வரும்னு தோனுது. ஆனா செலவு தான் கூட வரும்” என்றார்.
“எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல” மக்களும் சம்மதித்தனர். ஆனால் அருள்ராஜ், முத்தையா, நசீர் இந்த வயதானவர்கள் மட்டும் ஏதோ முனுமுனுக்க “பெருசுக என்ன பேசுறாங்க” தலைவர் கேட்டார்.
“ஒன்னுமில்லங்க’
“சும்மா சொல்லுங்க”
“கார்மேகம் கண்ணீர் சிந்தாதற்கு கடவுள் என்ன செய்வாரு.கோயிலுக்கு செலவு செய்றதுக்கு அந்த பணத்த மரம் நட்டு வளர்க்க செலவிட்டா மரங்கள் பெருகி மழையும் வரும்; மகிழ்ச்சியும் கிடைக்கும். இருக்குற பணத்த எதுக்கு வீணடிக்கனும். மழை பேஞ்சு மண்ணு வெளஞ்சதுக்கு அப்புறம் தெய்வங்களுக்கு பூஜையெல்லாம் செஞ்சுக்கலாம். இப்ப எப்போதும் போல கும்புட்டுக்கலாம்” என்று மெதுவாக பேசிமுடித்தார் அருள்ராஜ்.
“இது நல்ல யோசனையாத்தான் இருக்கு”
அனைவரும் மரம் நட ஆரம்பித்தனர். பெரியவர்களும் ஆளுக்கொரு மரக்கன்று நட்டு நீர்ஊற்றி மகிழ்ந்தனர்.
– மே 2004 தாழம்பூ மாத இதழில் வெளியானது.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.