கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 15,883 
 
 

தென்னங்கீற்றுக் கூரையும் மூன்று பக்கம் அதே வித மறைப்புமாய் இருந்தது அந்த ரெஸ்டாரெண்ட். பெரும்பாலான மேஜைகளில் நாற்காலிகள் உட்புறம் தள்ளப்பட்ட நிலையில் காலியாக இருந்தன. இரண்டு மேஜைகளில் சிலர் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்தனர். ஒரு மூலையில் இருந்த மேஜையின் நடைவழியை ஒட்டிய நாற்காலியில் ரெக்கார்டுகள், டிஃபன் பாக்ஸ் மற்றும் மணிபர்ஸ் முதலான தாராவின் சுமைகள் வைக்கப்பட்டிருந்தன. அவள் அடுத்ததில் அமர்ந்திருந்தாள். அவளுக்கெதிரான நாற்காலியில் மனோஜ்.

பராத்தலுடன் வந்த பரிசாரகன், ஒரு மேஜைக்கு காஃபி டபராக்களை விநியோகித்துவிட்டு இவர்களிடம் வந்தான். தட்டுகளில் ப்ளாஸ்டிக் உருண்டைகளாக ஐஸ்க்ரீமும், அதன் ஸ்பூன்களும் வைக்கப்பட்டன.

ஐஸ்க்ரீம் கோளத்தைத் திறக்க முயற்சித்தபடியே மனோஜ், “உன் பர்த்டே அன்னைக்கு வந்திருந்தா உன்னோட சினிமாவுக்கே போயிருக்கலாம். இல்லையா?” என்றான்.

“ம்,… என்னோட ஃபரன்ட்ஸ் எல்லாரும் உங்களப் பாக்கணும்னு சொல்லியிருக்காங்க, வந்திருந்தீங்கன்னா அவங்களும் பாத்திருப்பாங்க.”

“அது சரி; அவங்களோட சேந்தா நாம சினிமாவுக்குப் போறது? நாம மட்டும் போயிருக்கலாமேன்னு சொன்னேன்.”

“வந்திருந்தாப் போயிருக்கலாம்…”

“இன்னைக்குப் போலாமா?”

“அய்யோ… நான் வர்லப்பா.”

“ஏம்ப்பா?”

“ம்ஹும்…” தலையை ஆட்டி மறுத்தாள்.

அவளுக்கு இன்று ஏதோ டெஸ்ட் இருக்கிறதாம். ரொம்பத்தான் படிப்பில் அக்கறை! டுட்டோரியல்தானே! ஒரு டெஸ்ட் எழுதாவிட்டால் என்ன குறைந்து விடப்போகிறது? அவனால் மூடியைத் திறக்க முடியவில்லை. வலுவாக முயற்சித்ததில் விரல் நகக் கண்கள் வலித்தன. கையை உதறிக்கொண்டான்.

“குடுங்க, நான் ஓப்பன் பண்ணித் தர்றேன்.”

தாரா வாங்கி, அதை எளிதாகத் திறந்து கொடுத்தாள். இத்தனை நேரம் ரெஃப்ரிஜிரேட்டரில் இருந்த குளுமையில் ஐஸ்க்ரீம் மிகுதியான உறைவிலிருந்தது. ஸ்பூனில் கிளறிவிட்டு, கரையக் கரைய சாப்பிடத் தொடங்கினார்கள்.

தாரா அணிந்திருந்த க்ரீம் நிற சுடிதாரை உன்னித்தவாறே, “இது,… பர்த்டே ட்ரஸ்ஸா? புதுசா இருக்கே…!” என்றான்.

“இது வழக்கமா எடுத்ததுதான். பர்த்டேக்கு ஒரு வொய்ட் ஜீன்ஸும் டி – ஷர்ட்டும். எங்கண்ணா – சேலத்துல இருக்காரே – அவர் எடுத்துக் குடுத்தாரு. அதப் போட்டுட்டுத்தான் அன்னைக்கு சினிமாவுக்கெல்லாம் போனேன். உங்ககிட்டக் காமிக்கணும்னு நெனச்சிட்டே இருந்தேன். இன்னைக்குக் கூட க்ளாஸ் இல்லன்னா போட்டுட்டு வந்திருக்கலாம். ரெண்டு பேருமே ஜீன்ஸ்ல இருந்திருப்போம். “ தாரா புன்னகைத்தாள்.

“ஜீன்ஸா எடுத்த? அதுவும் வொய்ட்ல…? உனக்கு நல்லா இருக்காதே…!”

“நல்லாத்தான் இருந்துச்சு. நெறையப் பேரு சொன்னாங்க, தெரியுமா?”

“மத்தவங்க சொன்னா உடனே நம்பிடறதா?” என்றதும் அவள் முகம் மாறியது. சலிப்புடன், “நான் எது பண்ணினாலும் நீங்க குத்தம் சொல்லுவீங்க” என்றாள்.

“அப்படியில்லம்மா. ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான ட்ரஸ் நல்லாருக்கும். உனக்கு சுடிதார், ஓ.கே.! இல்லன்னா,… நேத்து நீ வீட்ல போட்டுட்டிருந்த மாதிரி பாவாடை – ஸ்லாக்” என்றவன் குரலைத் தணித்து முன்னால் உடம்பைக் குனிந்துகொண்டு, “எனக்கு உன்னைப் பாவாடை ஸ்லாக்ல பாக்கறதுதான் ரொம்பப் புடிக்குது, தாரா. ஏன்னா,…” என்பதற்குள் அவள் கையை அடிக்கிற பாவனையில் ஓங்கினாள். அவன் தடுத்துப் பின் வாங்குகிற பாவனை செய்தான்.

“தெரியும், தெரியும்… நீங்க என்ன சொல்லுவீங்கன்னு” என்றவள், யோசனைக்குப் பிறகு, “சரி,… நான் மிடியாவது எடுத்துக்கட்டுமா? சுடிதாரே போட்டுப் போட்டு போரடிக்குது. உங்களுக்கு மிடியாவது பிடிக்குமா?” என்றாள்.

மனோஜிற்கு மிடியில் இளம் பெண்களைப் பார்ப்பது விருப்பமானதுதான். சற்றே பூசினாற் போன்ற உடம்பு வாகுள்ளவர்களுக்கு, கெண்டைக்கால் வரை தெரிகிற அந்த உடை நன்றாகவே இருக்கும். தாராவும் அப்படி உடம்புவாகு கொண்டவள்தான். ஆனால் அதை அவள் அணிவது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“உனக்கு அது வேண்டாம் தாரா” என்றான்.

” ஏன், அதுவும் நல்லாருக்காதா எனக்கு?”

“ஆமா.”

“கௌஷிகா கூட போட்டிருக்காளே. அவளுக்குன்னா நல்லாருக்குதும்பீங்க” என்றபோது அவள் கோபித்துக்கொண்டது தெரிய, முகம் வாட்டமுற்றிருந்தது. தாரா இப்படித்தான், அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறாள். அதை அவளது முகம் உடனே வெளிக்காட்டியும் விடும். எனவே, அவள் புரிகிற விதமாகப் பேச வேண்டியது அவசியம். அது மனோஜிற்குத் தெரியுமாதலால் நிதானமாக அவளுக்கு விளக்கினான்.

“அப்படியில்ல தாரா. ஒரு சிலருக்கு பாவாடை – தாவணி நல்லாருக்கும். அவங்களே சுடிதார் போட்டா நல்லாருக்காது. ஒவ்வொருத்தருக்கு சுடிதார். ஒவ்வொருத்தருக்கு மிடி. ஒரு சிலருக்கு மட்டும்தான் எந்த ட்ரஸ்ஸானாலும் நல்லாருக்கும். கௌஷிகா அந்த மாதிரி. அதெல்லாம் அவங்களோட ஒயரத்தை யும் ஸ்ட்ரக்சரையும் பொறுத்தது.”

“நீங்க எப்பப் பார்த்தாலும் மத்தவங்களத்தான் பாராட்டிப் பேசறீங்க. என்னை மட்டும் குறை சொல்லிட்டே இருக்கறீங்க” என்றவளுக்குப் பேசப் பேசக் கண்கள் கலங்கின.

“ஏய்,… என்ன தாரா இது! இதுக்குப் போயி…”

தாரா எதுவும் பேசாமல், குழந்தைகள் கோபித்துக்கொண்டு ‘போ’ என்கிற மாதிரி தலையை அசைத்தாள். அதற்குள் கண்களில் கண்ணீர் நிறைந்து வழியலாயிற்று. மனோஜ் மேஜை மீது தாழ்ந்து அவளைத் தேற்ற முயன்றான். அவள் தன் நாற்காலியில் பின்னகர்ந்து கொண்டாள். அவனது கை எட்டாதபடி கண்ணைக் கசக்கியவாறு விசும்பவும் தொடங்கினாள்.

“தாரா,… ப்ளீஸ்… அழாதம்மா! யாராவது பாக்கப்போறாங்க” என்றவன், அங்கிருந்த மற்றவர்களை கவனித்தான். இடைவெளி சற்று அதிகம். தவிர அவர்களுக்கு தாரா முதுகு காட் டியபடியும் இருந்தாள். அதனால் அவர்களுக்கு தாராவின் விசும்பலோ, அவனது பேச்சோ கேட்கவில்லை போலும். அவர்கள் இங்கே கவனிக்காததில் அது தெரிந்தது.

இப்போது அவள் தலையைக் கவிழ்த்துக்கொண்டு முகம் பொத்தி அழலானாள். அங்கிருந்து எழுந்து வந்து அவளின் பக்கத்து நாற்காலியிலிருந்த ரெக்கார்டு நோட்டுகளை டிஃபன் பாக்ஸ் மற்றும் மணி பர்ஸுடன் எடுத்துவிட்டு, அங்கே அமர்ந்தான். அவற்றைத் தன் மடியிலேயே வைத்துக் கொண்டு, “நான் சொல்றதக் கொஞ்சம் கேளேன் தாரா. இல்ல, வேண்டாம். உனக்கு வேணும்னா… நீ தாராளமா மிடி போட்டுக்க. நான் சும்மா… ஒரு பேச்சுக்காக சொன்னேன். அத நீ சீரியஸா எடுத்துட்டு… ப்ளீஸ்மா. அழாத. கண்ணத் தொடச்சிக்க. கர்ச்சிப் தரட்டுமா?” என்று பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுக்கும்போது, அவளே தன் கைக்குள்ளிருந்த, மடித்த, பூப்போட்ட பெண்கள் கைக்குட்டையால் கண்களை ஒற்றிக்கொண்டாள். பிறகு அழுந்தத் துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். பின்னால் சற்றே திரும்பிப் பார்த்ததில் யாரும் இது வரை கவனிக்கவில்லை என்பது உறுதியானது அவனுக்கு.

*******

அதெப்படி இந்தப் பெண்களுக்கு நினைத்தால் உடனே அழுகை வந்து விடுகிறது? முன்பு பல தடவைகளும் தாரா கோபித்துக்கொண்டதுண்டு. என்றாலும் அவள் அழும்படியாக இவன் நடந்துகொண்டதில்லை. இப்போதும் இந்த அளவுக்கு ஆகுமென்று தெரியாதே. அவனுக்கு அதை நினைக்க, சங்கடமானது.

“உன்னோட ஃப்ரன்ட்ஸ மட்டும் சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போனயே,… எனக்கு பர்த்டே ட்ரீட் இல்லையா?” என்று நேற்றுக் கேட்கவும்தான் அவள், “காலைல வாங்க. கேக் வாங்கித் தர்றேன்” என்றிருந்தாள். அதன்படியே அவன் தாரா கிளம்புகிற நேரம் வரை காத்திருந்து, அவளுடன் இங்கே வந்திருந்தான். கேக்கை சாப்பிடும்போது ஒன்றுமில்லை. அவளுக்காக ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் இப்படி ஆகிவிட்டது.

தாராவிடம் மன்னிப்புக் கேட்கலாமா என்று மனோஜிற்கு யோசனை. திரும்பவும் அதையே பேசினால் அவள் மீண்டும் தனது வாதங்களையே தொடர்வாள். அதனால் வேறு எதையாவது பேசி இயல்புக்குக் கொண்டுவர வேண்டியதுதான்.

எதைப் பேச ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டே அவளைப் பார்த்தான். தாராவின் முகத்தில் இன்னும் ஒரு விதமான வெறுமை. ஐஸ்க்ரீமை சிரத்தையேயின்றி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததுமே முன்தீர்மானத்திற்கு மாறாக, “இன்னும் கோபம் தீரலியா?” என்று கேட்டுவிட்டான்.

அவள் அது காதில் விழாத மாதிரி இருந்தாள்.

“இன்னும் தீரல போல இருக்கு” என்றபோதும் சிறு மாற்றமாவது உண்டாகக் காணோம்.

“எம் மேல கோபம்னா திட்டிடு தாரா. இப்படி பேசாமயே இருந்தீன்னா என்ன அர்த்தம்?”

தாரா மசிகிறபாடில்லை. ஐஸ்க்ரீமைப் பிடுங்கினாலாவது பேசுவாளா என்று அதையும் செய்து பார்த்தான். மேலும் அவள் முகம் இறுகிக்கொண்டது. திரும்பவும் தட்டை அவளிடமே நகர்த்திவிட்டு ஐஸ்க்ரீமைச் சாப்பிடலானான். இனி அவளுக்கு எப்போது பேசத் தோன்றுகிறதோ அப்போது பேசட்டும். அது வரை எத்தனை முயற்சி எடுத்தாலும் அவளிடம் பலிக்காது. பில்லுக்குப் பணத்தைக் கொடுக்கும்போது, “நான் தர்றேன்” என்றாள் அவசரமாக. அவளை மறுத்துவிட்டு அவனே கொடுத்தான்.

*******

வெளியே வந்து நடக்கத் தொடங்கினர். அவள் தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். காலைப் பரபரப்பில் மனிதர்களும் வாகனங்களுமாக இருந்தது தெரு. தாராவின் டுட்டோரியலுக்குச் செல்கிற பாதை பிரியும் இடத்தை அடைந்தனர். அவன் அங்கே நின்று, “சரி,… தாரா. நான் போயிட்டு வர்றேன்” என்றான்.

“நானும் பஸ் ஸ்டான்ட் வரைக்கும் வர்றேன்.”

“உனக்கு க்ளாசுக்குப் போக நேரமாகலையா?”

“பத்து, பத்தே காலுக்குப் போனாக் கூடப் போதும்” என்றவள் அவனுடன் நடக்கலானாள். அதன் பிறகு அவள் பேசவில்லை. இதற்கு அவள் அங்கேயே

பிரிந்து சென்றிருக்கலாமே! ஆனால் இப்போது அவளுக்குக் கோபம் குறைந்துவிட்டது போலத்தான் இருந்தாள். அதுவே அவனுக்கு ஆறுதலானது.

நாற்சந்தியிலும் சிறிது நேரம் நிற்க வேண்டியதாயிற்று. தானியங்கி சமிக்ஞையை கவனித்தபடியே ஒரு புறம் வாகனங்கள் தேங்கியிருக்க, இவர்கள் கடக்க வேண்டிய சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் வந்துகொண்டே இருந்தன. கிடைத்த இடைவெளியில் மனோஜ் நகர்ந்தான். இடது கையில் மடக்கிப் பிடித்த ரெக்கார்டுகளுடன் இருந்த தாரா அப்போது அவனது கையை முழங்கைக்கு மேலாகப் பற்றிக்கொண்டாள். அந்தத் தொடுகையும் பற்றிப் பிடித்தலும் அவனுக்கு இதமளித்தது. மிகுந்த நெரிசலான ஒரு அகலப் பாதையில் அவள் இப்படியே தன்னைக் கை பிடித்து வர, தான் அவளைப் பத்திரமாக எதிர்ப்புறம் கொண்டு சேர்க்கிற மாதிரி வாய்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

சாலையைக் கடந்ததுமே தாரா கையை விட்டுவிட்டாள். அவனுக்கு அதில் ஒரு வித இழப்புணர்வு. இன்னும் சற்று தூரத்துக்காவது அவள் கையை விடாமல் இருந்திருக்கலாம். சாலையைக் கடக்கும்போதே அவளது கையைத் தன் கை விரல்களில் கோர்த்துக்கொண்டிருந்தாலாவது விடுவிக்காதபடி இறுக்கிக்கொண்டிருக்க முடிந்திருக்கும்.

பேருந்து நிறுத்தத்தில் வெளியூர் பேருந்துகள் நிறுத்துமிடத்திற்கு அவர்கள் வந்தனர். கோவை பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பியிருந்தன.

“கூட்டமில்லாத பஸ்ல போய்க்கறேன் தாரா. உனக்கு லேட்டாகுதா?”

அவள் தன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்து, “பரவால்ல” என்றாள்.

வால்பாறை பேருந்து ஒன்று தயங்கித் தயங்கி ஊர்ந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த தாரா, “போன மாசம் வால்பாறை போயிருந்தோம். எங்க பாட்டி வீட்டுக்கு” என்றாள்.

“அப்படியா? என்ன,… ஏதாவது விசேஷமா?”

“விசேஷம் ஒண்ணும் இல்ல. பூஜா ஹாலிடேஸ்ல ரெண்டு மூணு நாள் லீவ் இருந்ததுனால போனோம்.”

அதோடு நிறுத்திக்கொள்வாளோ என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அவள் பேச்சைத் தொடர்ந்தது மனோஜிறகு ஆசுவாசமாக இருந்தது. அவளது உறவினர்கள் பற்றியும், தேயிலைத் தோட்டத்துக்கு அவளின் மாமா அழைத்துச் சென்றது பற்றியும் சொல்லத் தொடங்கினாள். கல்லூரியில் படிக்கிற அவளது மாமா பையன் நன்றாகப் பாடுவான் என்றாள். பாலாஜி கோயிலுக்கு அவன்தான் அவர்களை அழைத்துச் சென்றானாம். பாலாஜி கோயிலின் ஏகாந்தம், அங்கே போக நடந்து செல்ல வேண்டிய – தேயிலைத் தோட்டத்துக்கு ஊடேயான, மரங்கள் அடாந்த பாதை, திரும்பி வரும்போது பெய்த பனித் தூறல், அதனூடே தூர வளைவில் மங்கலான ஒளிப் புள்ளிகளாகத் தெரிந்து வரும் வாகனங்கள்…

தாராவின் முகம் உற்சாகமாக இருந்தது. “வால்பாறைலயும் அப்படித்தான் வெயிலடிச்சுட்டே இருக்கும்; திடீர்னு தூறல் போடும்.

காலைலயும் ராத்திரிலயும் மிஸ்ட் விழுந்துட்டிருக்கும். ரொம்பக் குளிரு அங்க” எனும்போது இரு கைகளையும் சேர்த்து ரெக்கார்டு நோட்டுகளை இறுக்கிக்கொண்டாள். வால்பாறைக் குளிர் அதன் மலைகளிலிருந்து இறங்கி இங்கேயே வந்து விட்டது போல,

“அடிக்கடி உங்கள நெனச்சுக்குவேன்” என்று சிரித்தாள்.

“நான் அங்க இருந்திருந்தா உனக்குக் குளிரடிக்காமப் பாத்துட்டிருப்பேன்” என்றதும் முறைத்தாள். “ஆனாலும் உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி.” அந்த முறைப்பு அப்படியே மாறி உதடுகளில் முறுவலானது.

அவனுக்கு சிகரெட் புகைக்க வேண்டுமாய் உணர்வு. தாராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான். புத்தகக் கடையை ஒட்டி ஒரு அம்மாள் வெற்றிலை – பாக்கு மற்றும் பீடி – சிகரெட்டுகளுடன் தரைக் கடை விரித்திருந்தாள். சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டு வந்தான்.

“உங்ககிட்ட ரொம்ப நாளாவே ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன்.”

“கேளு…”

“உங்களுக்கு எங்கிட்ட என்ன புடிச்சிருக்கு?” பதிலுக்கான ஆவலுடன் அவனைப் பார்த்தாள்.

மனோஜிற்கு அவளைச் சீண்டிப் பார்க்க வேண்டும் போல இருந்தது. “உன்னை எனக்குப் புடிச்சிருக்குதுன்னு நான் சொன்னதில்லையே…!” என்றான்.

தாரா திகைப்புடன் அவனைப் பார்த்தாள். முகம் வாட்டமுறலானது. பார்வையையும் மாற்றிக்கொண்டு சுற்றுப் புறத்தை வெறித்தாள்.

மனோஜ் சுவாரஸ்யமாக சிகரெட்டைப் புகைத்தவாறே அவளது அந்த மாற்றத்தை ரசித்துக்கொண்டிருந்தான்.

“நான் போகட்டுமா?” என்றாள் தாரா, சன்னமான குரலில்.

“அதுக்குள்ள என்ன அவசரம்? நான் பஸ்ஸேறினதுக்கப்புறம் போனாப் பத்தாதா?”

“நான் எதுக்கு உங்களுக்கு எடைஞ்சலா இருக்கணும்?” என்று தலையைக் குனிந்துகொண்டாள்.

“யார் சொன்னாங்க அப்படீன்னு?”

“யாரும் சொல்லல. எனக்கே தெரியுது. எப்பப் பாத்தாலும் உங்களோட நான் சண்டை போட்டுட்டே இருக்கறேன். நேத்தும் உங்கள சங்கடப்படுத்தினேன். இன்னைக்கும் அதே மாதிரி ஆயிருச்சு. எந்த விதத்துல பாத்தாலும் நான் உங்களுக்குப் பொருத்தமில்லதானே?” நிமிர்ந்த அவளின் கண்களில் நிராசை படிந்திருந்தது. உதடுகள் மெலிதாகத் துடித்துக்கொண்டிருந்தன.

தான் பேசியது வினையாகிவிட்டதை மனோஜ் உணர்ந்தான்.

எப்படியேனும் தான் சொன்னது வெறும் விளையாட்டு என்பதை அவளுக்குப் புரிய வைத்துவிட வேண்டும். அவன் தீர்மானித்துக்கொண்டிருந்தான். தாரா மிகவும் களைப்புற்றவளாகக் காணப்பட்டாள். பக்கவாட்டில் திரும்பி அவனைத் தவிரவும் மற்ற மனிதர்கள், இடங்கள்,, பொருட்கள் மீது நிலையற்று அலைந்தது பார்வை. அவளின் சோகமும் அழகாகவே இருந்தது. இன்னும் கொஞ்ச நேரமாவது அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தாரா கடைக் கண்களில் அவனை கவனித்தாள். உடனே அவனுக்கு நேராகத் திரும்பி முறைத்தாள். “உங்களுக்கே என்னைப் புடிக்கலன்னு சொல்லிட்டீங்கில்ல? அப்புறம் எதுக்கு இப்படி உத்துப் பாத்துட்டிருக்கிங்க?” குரலில் வேகமும் எதிர்ப்பும் தொனித்தது.

அவன் ஆச்சரியமாகி , மேலும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னைப் புடிக்காதவங்க என்னைப் பாக்கக் கூடாது.” அதைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவளுக்குச் சிரிப்பும் வந்துவிட்டது. அதை வெளிக்காட்டக் கூடாது என்கிற முனைப்பில் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ளவும், கீழ் உதட்டைக் கடிக்கவும் செய்தாள். அவளால் முடியவில்லை.

ஆகவே அவன் புன்னகைத்தான். அதனால் அவளும் சிரித்தாள்.

– கல்கி, 15-2-98, காதலர் தின சிறப்புச் சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *