மனக்கண்
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/tags.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/newspaper.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30
25-ம் அத்தியாயம்: சுரேஷின் திகைப்பு!
ஸ்ரீதர் தன் மகன் பிறந்து ஆறு மாதங்களின் பின் ஒரு நாள் காலை 10 மணியளவில் ‘அமராவதி’ மாளிகைக்கு முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் குளிர்ந்த நிழலில் ஒரு வசதியான நாற்காலியில் உட்கார்ந்து தன் குண்டு மகனோடு விளையாடிக் கொண்டிருந்தான். செக்கச் செவேலென்று உருண்டு திரண்டு சீனத்துப் பொம்மை போல் விளங்கிய முரளிதரன் – அது தான் சின்னச் ஸ்ரீதரின் பெயர்- ஸ்ரீதரின் மடியில் ஒரு நிலையில் நில்லாது புரள்வதும், பல விதமான ஒலிகளைச் செய்து சிரித்துக் கூத்தடிப்பதுமாக இருந்தான். நல்ல தேகாரோக்கியத்துடனும் உயிர்த் துடிப்போடும் விளங்கிய முரளி என்னதான் சின்னவனாக இருந்தாலும், அவனை அங்குமிங்கும் விழுந்து விடாமல் பிடித்து வைத்து வேடிக்கை காண்பிப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆகவே “முரளி, புரளி பண்ணாதே” என்ற இன்பப் பல்லவியை அடிக்கடி பாடிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். அவனுக்கு அந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் தனி ஆனந்தம்.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/09/மனக்கண்.png)
ஸ்ரீதருக்கு முன்பு இசை என்றால், உயிரல்லவா? அப்போதெல்லாம் பிரபல இசைக் கவிஞர்களின் இசைத்தட்டுகளை ரேடியோகிராமில் போட்டு, அவற்றைக் கேட்டு மகிழ்வது அவனது வழக்கம். ‘பத்மா’வையும் “பாடு, பாடு” என்று அடிக்கடி தொல்லைப்படுத்துவான். ஆனால் இப்பொழுதோ அவை முற்றாக நின்றுவிட்டன. முரளியின் “கீயா மாயா” மழலையும் அவன் கைதட்டிச் சிரிக்கும் ஒலியுமே அவனுக்குப் பேரிசையாக அமைந்துவிட்டன. ஏன்? முரளியின் அழுகை கூட, “ஐயோ, அவன் ஏன் அழுகிறான்?” என்ற வேதனையை மனதில் ஏற்படுத்திய போதிலும் ஓர் இன்னிசையாகவே அவன் காதுகளுக்குப் பட்டது.
“பார் இராசாத்தி! திருவள்ளுவர் சொன்னது எவ்வளவு உண்மை! “யாழினிது குழலினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்?” என்பதை முரளி பிறந்த பிறகு தான் நான் நன்கு உணர்கிறேன். ஆனால் திருவள்ளுவரைப் பொறுத்த வரையில் அவர் அறிஞரானதால், அவர் மனைவி வாசுகி அவருக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுக்காமலே, மழலையின் இனிமை அவருக்குத் தெரிந்துவிட்டது, பார்த்தாயா? ‘பத்மா’ என்னைப் பொறுத்தவரையில் நான் வள்ளுவரை விட அதிர்ஷ்டசாலி. நீ வாசுகியைப் போலில்லாமல் எனக்குப் புரளிக்கார முரளியைப் பெற்றுத் தந்துவிட்டாயல்லவா? இந்த வகையில் பார்த்தால் வள்ளுவருக்கு வாய்த்த வாசுகியை விட எனக்கு வாய்ந்த நீ மேலானவள்” என்று அடிக்கடி சொல்லுவான்.
மடியில் குழந்தையை வைத்திருப்பதில் ஸ்ரீதருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. தவறுதலாகத் தனது கைவிரல்கள் முரளியின் கண்களைக் குத்திவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அது. இப்படிப்பட்ட விபத்து ஏற்படாது தடுப்பதில் அவன் கண்ணும் கருத்துமாயிருந்தாலும், தவறுதலாக அவ்வித நிகழ்ச்சி எதுவும் ஏற்பட்டுவிட்டால், அதனால் முரளிக்கு அதிக துன்பம் விளைந்து விடக் கூடது என்பதற்காகத் தன் கையின் நகங்களைச் சுசீலாவைக் கொண்டு மிக மிக மொட்டையாக வெட்டி வைத்திருந்தான ஸ்ரீதர். அதன் பயனாக முரளியின் மொட்டைக் கோலப் பிஞ்சு விரல்களும் ஒன்று போலவே காட்சியளித்தன. சுசீலா ஒரு நாள் அவர்கள் இருவரது மொட்டை விரல்களையும் ஒட்ட வைத்துக் கொண்டு,
தந்தை விரலும் மொட்டை
தம்பி விரலும் மொட்டை
அப்பா விரலும் மொட்டை
அம்பி விரலும் மொட்டை
இரண்டு பேராலும்
அம்மாவைக் கிள்ள முடியாது
என்று பாட்டுப் பாடிக் கும்மாளமிட்டாள். ஸ்ரீதருக்கு ஒரே ஆனந்தம். “டார்லிங், இந்தப் பாட்டை நீ எங்கே கற்றாய்?” என்று கேட்டான் ஸ்ரீதர். “நானாகப் பாடினேன். நான் தான் தான்தோன்றிக் கவிராயி” என்று கூறிச் சுசீலா மேலும் கும்மாளமடித்தாள். முரளிக்குக் கிச்சுக் கிச்சுக் காட்டினாள்.
“நீ நல்லாய்ப் பாட்டுக் கட்டுகிறாயே. இன்னொரு பாட்டுப் பாடு” என்றான் ஸ்ரீதர்.
சுசீலா பாடினாள். ஆனால் அதற்கு முகவுரையாக “இது அப்பாவைப் பற்றியல்ல, அம்பியைப் பற்றி.” என்று கூற அவள் மறக்கவில்லை.
“பாலைக் கொடுத்தபோது
பாலைக் குடிக்க மறுத்து
புரளிக் கார முரளி
புல்லுத் தின்னப் போனான்
புல்லும் கைய்த்த தென்று
காறித் துப்பி வந்தான்
அம்மா முன்னே வந்து
அண்ணாந்து நின்றான்.
அம்மா அவனைத் தூக்கி
அருந்து பாலை என்றாள்.
அதற்குப் பிறகு முரளி
அச்சாப் பிள்ளை இப்போ.
புரளி செய்வதில்லை.
புல்லுத் தின்பதில்லை.”
சுசீலாவின் பாட்டைக் கேட்டு ஸ்ரீதர் கலகலவென்று சிரித்துவிட்டான். அவன் கண்கள் குருடாயிருந்த போதிலும் இக்கவிதை அவனது மனத்திரையில் தன் மகன் குண்டு முரளி, வெறும் மேலுடன் தன் பூக்கரங்களைப் பின்னால் கட்டிக் கொண்டு அம்மாவை அண்ணாந்து பார்ப்பது போன்ற சித்திரமொன்றைத் தோற்றுவித்து விட்டது. சிறிது நேரம் அதில் சொக்கியிருந்த அவன், “இதுவும் ‘தான்தோன்றிக் கவிராயி’யின் பாட்டுத்தானா?” என்று கேட்டான்.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/10/மனக்கண்25.jpg)
“ஆம்” என்றாள் சுசீலா, சிரித்துக் கொண்டு.
வாழ்க்கை இவ்வாறு இன்பச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த போது அதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துவது போல லண்டன் சென்றிருந்த டாக்டர் சுரேஷ் தனது மேற்படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை மீண்டான். இலங்கை வந்ததும் அவன் செய்ய நினைத்திருந்த முதலாவது வேலைகளில் ஒன்று ‘அமராவதி’க்கு வந்து தனது நண்பன் ஸ்ரீதரைச் சந்தித்து அவன் கண் நோய்ப் பற்றி அவனுடன் பேசி, அவனது கண்களுக்கு மீண்டும் ஒளி கொடுக்கத் தன்னாலான முயற்சியைச் செய்வதாகும்.
சுரேஷைப் பொறுத்தவரையில் அவன் கண் டாக்டரல்லாவிட்டாலும் சிறந்த கண் டாக்டர்களுடன் கண் வைத்தியத்தின் இன்றைய நிலைமை பற்றி அவன் பல தடவை பேசியிருக்கிறான். அதன்படி முன்னர் தீர்க்கப்படாத பல கண்ணோய்கள் இப்பொழுது தீர்க்கப்படக் கூடிய நிலையை அடைந்துவிட்டதையும் ஒரு சில மிகச் சிறந்த அறிவும், துணிவும் கொண்ட கண் டாக்டர்கள் சாதித்ததற்கரிய சில சாதனைகளை இத்துறையில் செய்திருப்பதைப் பற்றியும் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். இப்படிப்பட்ட கண் டாக்டர்களில் ஒருவர் தான் பிரிட்டிஷ் பேராசிரியர் டாக்டர் நிக்கலஸ் நோர்த்லி. அகில உலகிலும் மிகச் சிறந்த கண் டாக்டர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர் என்றும் அவர்களில் டாக்டர் நிக்கலஸ் நோர்த்லி ஒருவர் என்றும் பத்திரிகைகள் அவரைப் போற்றிப் புகழ்ந்தெழுதியமையை அவன் பல தடவை வாசித்திருக்கிறான். உண்மையில் அவர் பெயர் இரண்டு தடவை சர்வதேச வைத்தியப் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டதையும் ஒரு சில அரசியல் காரணங்களினால் அது சாத்தியமாகாது போனதையும் கூட அவன் அறிவான். சூடான செய்திகளைப் பிரசுரிப்பதில் புகழ் பெற்ற ஒரு பிரிட்டிஷ் பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு, பிரிட்டன் பூராவும் பெரிய பரபரப்பை ஊட்டியதும் அவனுக்குத் தெரியும். பிரிட்டிஷ் பொதுமக்களைப் பொறுத்த வரையில் என்ன தான் எதிர்ப்பிருந்தாலும், என்றைக்கோ ஒரு நாள் டாக்டர் நோர்த்லி சர்வதேச வைத்தியப் பரிசைப் பெற்றே தீர்வார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கவே செய்தது. சுரேஷ் தன்னுடன் படித்த ஆங்கில மாணவர்களுடன் பேசுவதன் மூலம் இதை அறிந்து கொண்டான்.
மேலும் இது பற்றி ஒரு பத்திரிகையின் நேயர் கடிதப் பகுதியில் எழுதப்பட்ட கடிதங்கள் ஒன்றும் சுரேஷிற்கு இன்னும் நன்கு நினைவிருந்தது. “சர்வதேசப் பரிசு. பேராசிரியர் நோர்த்லியின் சாதனைகளுக்கு அப் பரிசு மிகச் சிறிய பரிசே. அது கிடைக்காததால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை. முழு உலகாலும் கபோதி எனக் கை விடப்பட்ட நான் இருபது வருடங்களின் பின் என் கண்ணை அவரால் மீண்டும் பெற்றேன். என் போன்றவர்களின் நன்றியே அவருக்கு உலகின் மிகப் பெரிய பரிசாம். எந்த நோயாளியும் அரசியல் காரணங்களுக்காக இந்தப் பரிசை இம்மேதைக்களிக்க மறுக்கமாட்டானல்லவா? சர்வதேசப் பரிசு மிகச் சிறியதென்பதற்காகவே அது அவருக்கு அளிக்கப்பட வில்லை என்று நான் நினைக்கிறேன். இந்த அற்பப் பரிசு இனி மேல் அவருக்கு அளிக்கப்பட்டால் நிச்சயம் அவர் அதை வாங்கிக் கொள்ளக் கூடாது” என்ற ரீதியில் அது எழுதப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டவசமாக சுரேஷ் படித்த வைத்தியக் கல்லூரியிலே பேராசிரியர் நோர்த்லியும் கல்வி கற்பித்தார். இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்றென்றால், அதுவும் நழுவி வாயில் விழுந்தது போன்ற நிலைமையும் இவ்விஷயத்தில் சீக்கிரமே உண்டாயிற்று. பேராசிரியர் நோர்த்லி தமது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியை உலக சமாதான இயக்கத்துக்காகவும் காலனிகளின் விடுதலைக்காகவும் எப்பொழுதும் செலவிட்டு வந்தார். இது சம்பந்தமாக நடைபெற்ற ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சுரேஷ் படித்த வைத்தியக் கல்லூரி மாணவர் மாணவிகள் அடிக்கடி கலந்து கொள்வது வழக்கம். “காலனி முறை ஒழிக! பேராசிரியர் நோர்த்லி வாழ்க!” என்று அவர்கள் பேராசிரியரின் பின்னல் அட்டைகளைத் தாங்கிச் சுலோகங்களை முழங்கிக் கொண்டு செல்வார்கள். இந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டதால் பேராசிரியருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு சுரேஷிற்கும் ஓரளவு ஏற்பட்டது. வகுப்பில் மிகக் கண்டிப்பாக இருக்கும் பேராசிரியர் இந்த ஊர்வலங்களின் போது ஒரு புது மனிதராகிவிடுவார். சுலோகங்களைத் தானும் சேர்ந்தும் முழங்குவார். மாணவர்களுடன் சேர்ந்து பாட்டுக்கள் கூடப் பாடுவார்.
இவற்றாலேற்பட்ட பழக்கத்தை வைத்து ஒரு நாள் சுரேஷ் அவரிடம் ஸ்ரீதரின் கண் பிரச்சினையைப் பற்றி விவரித்தான். “இதை உங்களால் சுகமாக்க முடியுமா?” என்று கேட்டான்.
அதற்குப் பேராசிரியர் நிக்கலஸ் “உனது கேள்விக்கு நான் எப்படிப் பதிலளிக்க முடியும். கண் நோய்களில் எத்தனையோ வகையுண்டு. இதில் உனது நண்பனின் கண் நோய் எந்தவிதமானதென்பது யாருக்குத் தெரியும்? நன்கு பரீசிலித்துப் பார்த்த பிறகுதான் பதில் சொல்ல முடியும்.” என்ரு கூறிவிட்டுத் திடீரென “ நீ எந்தத் தேசத்தைச் சேர்ந்தவன்? இந்தியாவா?” என்று கேட்டார்.
“இல்லை. இந்தியாவுக்கு அடியில் ஒரு தாமரை பொட்டுப் போல் இருக்கிறதே இலங்கை – அதுவே என் நாடு.” என்றான் சுரேஷ்.
“ஓ! அப்படியா? நான் இலங்கையைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அழகான நாடென்று சொல்லுகிறார்கள். நான் அங்கே வந்து உன் நண்பனைப் பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை” என்றார் டாக்டர் நிக்கலஸ்.
சுரேஷ் திகைத்துவிட்டான். ஸ்ரீதர் அதிர்ஷ்டசாலிதான் என்றெண்ணிய அவன், “நிச்சயம் நீங்கள் வர வேண்டும். அங்கே நீங்கள் வேண்டிய காலம் தங்கியிருந்து சுற்றுப்பிரயாணம் செய்வதோடு ஸ்ரீதரையும் குணமாக்க வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டான்.
“ஆம்.” என்று தலையை ஆட்டிய பேராசிரியர் பின் அதனைத் தொடர்ந்து “ஆனால் என்னைத் தான் உனக்குத் தெரியுமே? கல்லூரி வேலையைத் தவிர்த்து, நூல்கள் எழுதும் வேலை, சிகிச்சை வேலை, சமாதான இயக்க வேலைகள் என்று ஓய்வேயில்லை. ஆகவே திகதி சொல்ல முடியாது. திடுதிப்பென்று அறிவிப்பேன். உடனே பிரயாண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தெரிகிறதா?”
“மெத்தச் சரி” என்றான் சுரேஷ் மகிழ்ச்சியுடன்.
இந்த ஏற்பாட்டைப் பற்றி ஸ்ரீதருக்குச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் தான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் ‘அமராவதி’க்குத் தனது மாமனார் வாங்கிக் கொடுத்த புதிய காரில் ஸ்ரீதரைப் பார்க்க வந்தான் சுரேஷ்.
சுரேஷ் ‘கிஷ்கிந்தா’வில் இரண்டு வருட காலம் ஸ்ரீதருடன் ஒன்றாக வாழ்ந்திருந்த போதிலும், ‘அமராவதி’க்கு வந்தது, இதுவே முதல் தடவை. ஆகவே அவனுக்கு ‘அமராவதி’ மாளிகையின் வாசற்காவல் முறை மிகவும் விசித்திரம் நிறைந்ததாகவும் கர்வம் நிறைந்ததாகவும் தோன்றியது. லண்டனிலுள்ள பங்கிங்ஹாம் மாளிகையிலும் கொழும்பிலுள்ள கவர்னர் இல்லத்திலும் தான் அவன் இத்தகைய ஏற்பாடுகளைக் கண்டிருக்கிறான். ஆனால் அவ்விடங்களோ உத்தியோக வாசஸ்தலங்களாயிருப்பதால் அத்தகைய ஏற்பாடுகள் அவற்றுக்கு வேண்டியதுதான். ஆனால் சிவநேசரோ தாம் பணக்காரரென்பதாலும், தமது பிரபுத்துவ அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்குமாகவே இவ்வித கெடுபிடி ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். சிவநேசரின் இந்தப் போக்கு அவனுக்குப் பிடிக்கவே இல்லை.
“அமராவதி” வாசலுக்குச் சுரேஷ் வந்தபோது பிரதான வாயிலின் இரும்பு ‘கேட்’டுகள் இரண்டும் இறுகச் சாத்திக் கிடந்தன. பக்கத்திலிருந்த சிறிய ‘கேட்’டுக்குச் சமீபமாக காக்கிக் கோட்டு அணிந்த காவற்காரன் நின்று கொண்டிருந்தான். சுரேஷிடம் “யாரைப் பார்க்க வேணும்” என்று கேட்டான் அவன்.
“ஸ்ரீதரைப் பார்க்க வேண்டும். டாக்டர் சுரேஷ் வந்திருப்பதாகச் சொல்லு” என்றான் சுரேஷ். அதைக் கேட்டதும் காவற்காரன் வேப்பமர நிழலில் முரளியோடு விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீதரிடம் விரைந்தான்.
“ஐயா, டாக்டர் சுரேஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்றான்.
“டாக்டர் சுரேஷா! உடனே வரச் சொல்லு” என்றான் ஸ்ரீதர்.
சிறிது நேரத்தில் “அமராவதி’யின் பெரிய ‘கேட்’டுகள் திறக்க, சுரேஷின் கார். வேப்பமரத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள புல் தரையில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சுரேஷ் ஸ்ரீதரைப் பார்த்து “ஸ்ரீதர் செளக்கியமா? நேற்றுத்தான் யாழ்ப்பாணம் வந்தேன். உடனே உன்னைப் பார்க்க வந்துவிட்டேன். அதிருக்க, உனக்கொரு நல்ல செய்தி. உலகத்திலேயே மிகப் பெரிய கண் டாக்டர் உனக்கு வைத்தியம் செய்ய நான் ஏற்பாடு செய்திருக்கிறேன்.” என்றான் உற்சாகமாக.
ஸ்ரீதருக்கு ஒரே மகிழ்ச்சி. மலர்ந்த முகத்தோடு “உண்மையாகவா? யாரது? டாக்டரின் பெயரென்ன?” என்றான்.
சுரேஷ் விவரங்களைக் கூறினான். அதன்பின் “ஸ்ரீதர்! நீ உன் கண் பார்வையை இழந்து விட்டாய் என்றறிந்ததும் நான் எவ்வளவு மனம் வருந்தினேன் தெரியுமா? கண் பார்வை இழந்த உனது நிலை எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்வதற்காக நான் லண்டனில் என் அறையிலே கண்களை மூடிக் கொண்டு பல தடவைகள் அங்குமிங்கும் நடந்து பார்த்தேன். உண்மையில் கண் பார்வையை இழப்பது என்பது மிகவும் பயங்கரமான ஒரு விஷயமே. ஆனால் நீயே அதை மிகவும் தைரியமாக எதிர்கொண்டு சமாளித்துவிட்டாய். உன் நிலையில் வேறு எவரும் உன்னைப் போல் இவ்வளவு சந்தோசமாயிருக்க மாட்டார்கள். அதற்காக உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று சொல்லிக் கொண்டே ஸ்ரீதரின் மடியிலிருந்த முரளியின் கன்னத்தைக் கிள்ளி வேடிக்கை காட்டினான். அதன்பின் அவனைத் தன் கரங்களால் தூக்கி “உன் மகன் சரியாக உன்னைப் போலவே இருக்கிறான். இவன் போன்ற அழகான குழந்தையைப் பெற நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலியாய் இருக்க வேண்டும். அவனோடு உன்னைப் பார்க்கும் போது உனக்குக் கண் பார்வை குறைந்ததையிட்டு எனக்கு அனுதாபம் ஏற்படவில்லை. பொறாமைதான் ஏற்படுகிறது. ஆனால் இவ்வளவு அழகான பிள்ளையைப் பார்க்க முடியவில்லையே என்று உனக்குக் கவலை இருக்கலாமல்லவா? பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி நிச்சயம் அதைப் போக்கி வைப்பார்” என்றான்.
ஸ்ரீதர் சிரித்துக் கொண்டு “உண்மையாகவே முரளி அவ்வளவு அழகாயிருக்கிறானா? அவன் முகத்தையும் உடலையும் என் விரல்களால் ‘பிரெயில்’ புத்தகங்களைத் தடவிப் பார்ப்பது போல் நான் அடிக்கடி தடவிப் பார்ப்பதுண்டு. தளுக்கு மொளுக்கென்று இருக்கிறான். நிறத்தில் என் அம்மாவைப் போல் இருக்கிறானாமே? அப்படி என்றால் அவன் அழகாய்த்தானிருப்பான். ஆனால் அவன் கண்கள் எப்படியிருக்கின்றன சுரேஷ்?” எனான்.
“கண்களா? சரியாக உன் கொட்டைப்பாக்கு விழிகள் போல் மிகப் பெரிய விழிகள். மிகவும் கவர்ச்சியாயிருக்கின்றன” என்று சொல்லிக் கொண்டே சுரேஷ் முரளியை மீண்டும் ஸ்ரீதர் மடியில் வைத்தான். அவன் தன் பிஞ்சு விரல்களால் ஸ்ரீதர் அணிந்திருந்த கறுப்புக் கன்ணாடியைப் பிடுங்கப் பிடிவாதமாக முயன்றான். அவனைச் சமாளிப்பது ஸ்ரீதர்க்கு மிகவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. கடைசியில் பக்கத்திலிருந்த ஒரு ‘கிலு கிலுப்பையை’ அவன் கையில் திணித்து தனது கண்ணாடியைக் குழந்தையிடமிருந்து காப்பாற்றிக் கொண்டான்.
இதற்கிடையில் சுசீலா அங்கு வந்து விட்டாள். “என்ன தகப்பனும் மகனும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கொண்டே முரளியைத் தன் கரங்களால் தூக்கிய சுசீலா டாக்டர் சுரேஷை ஏற இறங்கப் பார்த்துப் புன்னகை செய்தாள். நல்ல வேளை. “இது யார்?” என்ற கேள்வி அவன் வாயில் வந்ததாயினும் ஏனோ அவன் அக் கேள்வியைக் கேட்டு விடவில்லை.
சுசீலாவின் குரலைக் கேட்டதும் ஸ்ரீதர் “ஆ! பத்மா வந்து விட்டாயா? சுரேஷ்! பத்மாவைப் பார்த்தாயல்லவா? முன்னை விட அவள் இப்போது மிகவும் கொழுத்துப் போயிருக்கிறாள் இல்லையா?” என்றான்.
இதைக் கேட்டதும் சுரேஷ் திகைத்தான். சுசீலாவும் திகைத்துவிட்டாள்.
“என்ன இது? இவள் பத்மாவா? இதென்ன ஆள் மாறாட்டம்?” என்ற சிந்தனையில் ஸ்தம்பித்துக் கல்லாகி நின்றான் சுரேஷ்.
சுசீலாவைப் பொறுத்த வரையில் ஸ்ரீதரைப் பார்க்க ‘அமராவதி’ வளவுள்ளே வர எவரும் அனுமதிக்கப் படாமலிருக்கும் போது “யார் இவன், எப்படி வந்தான்?” என்ற நினைவில் குறுகுறுத்துக் கொண்டிருந்த அவள் நெஞ்சம் சுரேஷ் என்ற பெயரைக் கேட்டதும் திடுக்கிட்டு விட்டது. “சுரேஷா? அவரின் பிரிய நண்பரல்லவா சுரேஷ்? பத்மாவைக் கூட நன்கு அறிந்தவர். ஐயோ அவருக்கு ஆள் மாறாட்டம் தெரிந்துவிடுமே. இதனால் என்ன விபரீதம் நேரிடுமோ?” என்று கவலையடைந்தாள் அவள்.
சுரேஷ் திகைத்துப் போய் நின்ற நிலையிலிருந்து அவனுக்குத் தனது ஆள் மாறாட்டம் நன்கு புரிந்துவிட்டது என்பதை அவள் நன்கு அறிந்துகொண்டாள். தனது திருமண நாளிலிருந்து ஒன்றரை வருட கலத்துக்கு அதிகமாக அவள் நடத்தி அந்த ஆள் மாறாட்ட நாடகம் இன்று தான் முதன் முதலாக வெளியார் ஒருவருக்குத் தெரிய வந்திருக்கிறது. “ஆனால் இதற்குக் காரணம் யார்? நான் தானே?” என்று தன்னைத் தானே குறை கூறிக் கொண்டாள் அவள். “நான் எப்பொழுதும் அவர் பக்கத்திலிருக்க வேண்டுமென்ற நியதியை மீறியதால் அல்லவா இது நடந்திருக்கிறது. நான் பக்கத்திலிருந்தால் காவற்காரன் சுரேஷ் வரவை எனக்குக் கூறியிருப்பானல்லவா? ஆனால் நான் அக்கடமையிலிருந்து தவறி விட்டேன். இதனால் என்ன நிகழப் போகிறதோ?” என்று பயந்தாள் அவள்.
சுரேஷ் “நான் பத்மா அல்ல” என்ற விஷயத்தை ஸ்ரீதருக்குக் கூறிவிட்டால் என்ன செய்வது?” – இந்தப் பிரச்சினை பயங்கரமான ஒரு கேள்விக்குறியாக அவள் உள்ளத்தில் எழுந்தது. இருந்தாலும் அவள் கலங்கி விடவில்லை. என்றுமே சுறுசுறுப்பாகச் சிந்தித்துத் துடுக்காக வேலை செய்யும் பண்புள்ள சுசீலா, நிலைமையைச் சமாளிக்க ஒரு திடீர் முடிவுக்கு வந்துவிட்டாள்.
சுரேஷின் முகத்தை அவள் நிமிர்ந்து நோக்கினாள். அவள் கண்கள் சுரேஷின் கண்களுடன் பேசின. “ஒன்றும் பேச வேண்டாம்.” என்று கண்களால் அவனை எச்சரித்து தலையையும் அதற்குத் தக்கபடி அசைத்து, வாயில் மோதிர விரலை வைத்து மெளனக் குறிப்புக் காட்டினாள். சுரேஷிற்கும் விஷயம் புரிந்துவிட்டது. சிந்தனையின் இரேகைகள் படர்ந்த முகத்தோடு “சரி” என்று தலையை அசைத்தான் அவன்.
இவ்வளவும் அங்கே ஒரு கணத்தில் நடந்து முடிந்து விட்டது. சுரேஷும் சுசீலாவும் தம் பார்வையாலேயே ஓர் ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டார்கள்.
“நான் பத்மாவல்ல. ஆனால் ஸ்ரீதர் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார். நீர் அவருக்கு உண்மையைச் சொல்லி விட வேண்டாம்” என்றது அவளது பார்வை.
“ஆகட்டும்” என்றது சுரேஷின் கண்கள் பதிலுக்கு.
ஆனால் இந்த விஷயம் நடந்து கொண்டிருப்பதைச் சற்றுமறியாத ஸ்ரீதர் சுரேஷிடம், “என்ன சுரேஷ். பேசாமலிருக்கிறாய். எனக்குக் கண் தெரியாவிட்டாலும் கையால் பிடித்துப் பார்க்கும் போது அளவுகள் தெரியத் தானே தெரிகின்றன? நான் சொன்னது சரிதானே? பத்மா முன்னை விட இப்பொழுது பருத்துத்தானே இருக்கிறாள்?” விஷயத்தைத் தொடர்ந்து பேசினான்.
சுரேஷ் “ஆம் பத்மா முன்னை விட பருமன் தான். ஆனால் நான் அதைச் சொல்வது சரியா என்று யோசித்தேன். சிலருக்கு தாம் பருத்திருப்பதை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவது பிடிப்பதில்லையல்லவா?” என்றான்.
“ஓ! அதுதான் பதில் சொல்ல இவ்வளவு தயங்கினாய் போலும். ஆனால் நீ இவ்வாறு பேசுவதற்குக் காரணம் உனக்குப் பத்மாவைப் பற்றித் தெரியாததுதான். பத்மா அதிசயமான பெண். இல்லாவிட்டால் என் போன்ற குருடனை அவள் கட்டுவாளா? நிச்சயம் நீ எது சொன்னாலும் கோபிக்க மாட்டாள்.” என்றான்.
பின்னர் ஸ்ரீதர் பத்மாவிடம் சுரேஷ் தனக்கு கண் பார்வை தர ஏற்பாடு செய்திருப்பதைப் பற்றியும், உலகப்புகழ் பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி இலங்கை வர இருப்பதையும் பற்றியும் கூறினான். “பார்த்தாயா பத்மா. சுரேஷிற்கு என் மீது எவ்வளவு அன்பு” என்று அவன் கூறி முடிப்பதற்கும் வெளியே அலுவலாகச் சென்றிருந்த சிவநேசரும் பாக்கியம் தமது காரில் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. பாக்கியம் வந்ததை அறிந்ததும் “அம்மா!” எனக் கூவி சீக்கிரமே எனக்குக் கண் பார்வை தரப் போகிறான். அதற்காக உலகிலேயே மிகச் சிறந்த கண் டாக்டரை இலங்கைக்கு அழைத்து வர இருக்கிறான்.” என்றான்.
பாக்கியம் சுசீலாவின் கையிலிருந்த முரளியைத் தன் கரத்தில் வாங்கிக் கொண்டு ஸ்ரீதர் பக்கத்திலுட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். முரளியோ தன் பாட்டியின் நெஞ்சில் ஊசலாடிய பதக்கத்தோடு விளையாடத் தொடங்கினாள்.
சிவநேசர் சுரேஷையும் சுசீலாவையும் தன்னுடன் வரும்படி சைகை காட்டித் தோட்டத்தின் பிற்பகுதிக்கு அழைத்துச் சென்றார். வேலைகாரன் ஒருவனைக் கூப்பிட்டு, சுரேஷிற்கும் தனக்கும் குளிர்பானங்கள் கொண்டு வரும்படியும் உத்தரவிட்டார் அவர்.
குளிர்பானம் வந்ததும் அதை அருந்திக் கொண்டே சிவநேசர் ஆழ்ந்த சிந்தனையோடு “சுரேஷ், ஸ்ரீதருக்கு மீளவும் கண் பார்வை கிடைப்பதை நான் விரும்பவில்லை. அதனால் எவருக்கும் நன்மை ஏற்படாது.” என்றார்.
சுரேஷ் திடுக்கிட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றான்.
“ஏனா? அவனுக்கு இப்பொழுது ஒரு குறையுமில்லை. பணம், செல்வாக்கு, அழகான குழந்தை, அன்பு மனைவி… இவை எல்லாம் அவனுக்கு இன்று இருக்கின்றன. உண்மையில் அவன் இணையற்ற ஓர் இன்ப உலகிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தன் கண் பார்வையை மீண்டும் பெற்றால், அவனது இவ்வின்ப வாழ்வு சுக்கு நூறாகிவிடும். அவன் தன் காதலை பத்மா என்று எண்ணியிருக்கும் பெண் உண்மையில் வேறு யாரோ என்றறிந்ததும் அவன் அவளை நிச்சயம் நிராகரிப்பான். நாங்கள் செய்த ஆள் மாறாட்டத்துக்காக அவன் எங்கள் எல்லோர் மீதும் கொதிப்படைவான். பத்மா இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா என்றெண்ணித் தன் உயிருக்கே அவன் ஆபத்து விளைவித்துக் கொள்ளவும் கூடும். இந்த நிலையில் அவன் இழந்து போன தன் கண் பார்வையை மீண்டும் பெறுவது தீமையே ஒழிய நன்மையில்லை.”
சிவநேசர் இவ்வாறு சொல்லிவிட்டு, சுசீலாவின் முகத்தைப் பார்த்தார். இவ்விஷயத்தில் தனது அபிப்பிராயத்தை அவர் அறிய விரும்புகிறார் எனத் தெரிந்து கொண்ட சுசீலா சுரேஷை நோக்கி “டாக்டர் சுரேஷ். நாங்கள் இங்கு ஒரு பெரிய நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் நண்பர் பத்மாவைக் காதலித்தார். ஆனால் சந்தர்ப்ப சூழல்கள் அக்காதலை முறியடித்துவிட்டன. விதியின் விளையாட்டால் இன்று நான் அவர் மனைவி. ஆனால் கண் பார்வையை இழந்த அவர் என்னைப் பத்மா என்றே எண்ணுகிறார். என் குரல் அதற்கு உதவியாயிருக்கிறது. இன்று அவர் வழ்வது ஒரு கனவுலகம். ஆனால் அக்கனவைக் கலைக்க வேண்டாம். அவருக்கு இன்பம் அளிப்பதற்காக நாம் நடிக்கும் இந்நாடகத்தில் நீங்களும் ஒரு நடிகராக வேண்டும். இது அவரது இன்பத்துக்காக அவரது நண்பரிடம் அவர் மனைவி செய்யும் கோரிக்கை.” என்றாள்.
சுரேஷிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. திக்பிரமை பிடித்து மெளனமாக நின்றான்.
சிவநேசர் மீண்டும் பேசினார்:
“சுரேஷ்! நீ பேராசிரியர் நோர்த்லி இலங்கை வருவதாகச் சொன்னாயல்லவா? அவர் இங்கு வர வேண்டாம். அவர் வருவதும் கண் பார்வை தருவதும் ஸ்ரீதரின் நிம்மதிக்கும் பங்கம் விளைவிக்கும். ஆகவே அடுத்த தடவை நீ ஸ்ரீதரைச் சந்திக்கும் போது டாக்டர் நோர்த்லி வேலை நெருக்கடியால் இப்போதைக்கு வர முடியாதிருக்கிறதென்று கூறிவிடு. உண்மையில் நாம் இன்று ஸ்ரீதரை ஒரு கனவுலகில் சிறை வைத்திருக்கிறோம். அவன் அக்கனவுலகில் இன்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதை யாரும் கெடுக்கக் கூடாது. இன்னும், வாழ்க்கையே ஒரு கனவென்கிறார்கள் ஒரு சிலர். அப்படியானால் ஸ்ரீதர் மட்டுமல்ல நாம் அனுபவிப்பதும் கனவின்பங்கள் தானே? ஸ்ரீதரின் வாழ்வு அக்கனவுள் இன்னொரு கனவு. அவனும் இன்பங்களை அன்பவிக்கத் தான் செய்கிறான். பார்க்கப் போனால் அவன் நம்மை விட ஒன்றும் அதிகமாக இழந்து விடவில்லை. ஆனால் அவனது கனவு நீங்கினால் அவன் துன்பக் கேணியில் வீழ்ந்து விடுவான். அவன் இன்று அனுபவித்து வரும் மன நிறைவுக்கு முடிவேற்பட்டுவிடும். இதை நாம் தெரிந்து கொண்டு அனுமதிக்க முடியாது.”
சுரேஷின் நிலைமை தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஒருவனுக்குக் கண்பார்வை அளிப்பது பெரிய காரியந்தான். ஆனால் அதன் விளைவு அவனுக்கே தீமை விளைக்கும் என்று சுசீலாவும் சிவநேசரும் சுட்டிக்காட்டிய பின்னர் ஸ்ரீதருக்குக் கண் பார்வை அளிப்பது சரிதானா என்ற சந்தேகம் அவனுக்கே ஏற்பட்டுவிட்டது.
சிவநேசர் “சுரேஷ்! இந்த ஆள் மாறாட்ட நாடகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காகப் பத்மாவையோ பத்மாவாக நடிக்கும் இப்பெண்ணையோ தெரிந்த எவரையும் ‘அமராவதி’க்கு வர நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று அந்த ஏற்பாடுகளில் ஏதோ சிறு குழறுபடி ஏற்பட்டுவிட்டதால் எமது ஆள் மாறாட்ட நாடகத்தை நீ தெரிந்து கொண்டாய். இதன் இரகசியத்தை ஸ்ரீதரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் காப்பாற்றுவதாக நீ வாக்களிக்க வேண்டும்.” என்றார்.
சுரேஷ் “ஆகட்டும்” என்று தலையை அசைத்தான்.
அதன் பின் சுரேஷ், ஸ்ரீதர், சுசீலா, பாக்கியம், சிவநேசர் ஆகிய யாவரும் ஒன்றாக உட்கார்ந்து மத்தியான உணவருந்தினார்கள். முரளியோ ‘ஆயா’வின் மடியில் தூங்கச் சென்றுவிட்டான்.
உணவருந்தி முடிந்த பின்னர், இரண்டு மூன்று தினங் கழித்து மீண்டும் ஸ்ரீதரைச் சந்திக்க வருவதாகக் கூறி சுரேஷ் விடை பெற்றுச் சென்றான்.
வழி நெடுக, தனது வாழ்க்கையிலேயே முதல் முதலாகத் தான் கண்ட அதிசயமான ‘அமராவதி’ வளவு ஆள் மாறாட்ட நாடகத்தைப் பற்றியே அவன் மனம் மீண்டும் மீண்டும் சிந்தனை செய்து கொண்டிருந்தது.
26-ம் அத்தியாயம்: குருடன் கண்ட கனவு!
இருட்பொந்தொன்றிலே நீண்ட காலமாக அடைக்கப்பட்டிருந்த ஒருவன், திடீரென அப்பொந்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஒளிப் பிரவாகத்தால் குளிப்பாட்டப்பட்டால் அவன் நிலை எப்படியிருக்கும்? சுரேஷ் ‘அமராவதி’க்கு வந்து போனதிலிருந்து தனக்கு இந்த நிலை அதி சீக்கிரத்திலேயே வரப் போகிறதென்று மனப்பால் குடிக்க ஆரம்பித்துவிட்டான் ஸ்ரீதர், இனி வானத்துச் சந்திரனையும், முற்றத்து முல்லையையும் தன்னிரு கண்களாலும் கண்டு மகிழலாம் என்ற நம்பிக்கை வந்ததும் அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்சமல்ல. ஆனால் இவற்றைப் பார்ப்பதல்ல, அவனுக்கு முக்கியம். இவற்றை அவன் தன் கண்கள் குருடாவதற்கு முன்னர் போதிய அளவு பார்த்திருக்கிறான் தானே. ஆனால் அவன் தன் வாழ்க்கையிலேயே முன்னர் ஒரு போதும் பார்த்திராத பொருளொன்று இப்பொழுது இவ்வுலகில் இருந்தது. அதைப் பார்ப்பதுதான் அவனுக்கு முக்கியம். ‘அமராவதி’ மாளிகையின் சலவைக்கல் தளத்திலே தவழ்ந்து விளையாடிய அவனது அன்பு மகன் முரளியே அது. எங்கே அவனை ஒரு போதும் தன் வாழ்க்கையில் தன் கண்களால் பார்க்க முடியாதோ என்று அஞ்சியிருந்த அவனுக்குச் சுரேஷின் வருகை புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/10/மனக்கண்26.jpg)
“சுரேஷ்! என்ன அற்புதமான நண்பன். கர்ணனுக்கு வாய்ந்த கெளரவ புத்திரன் போல. இல்லை இல்லை. அர்சுனனுக்கு வாய்ந்த கிருஷ்ணனைப் போல – எனக்கு வாய்ந்த அற்புதமான் நண்பன் அவன்” என்று சுரேஷை மெச்சினான் அவன்.
ஸ்ரீதர் குருடான செய்தி அறிந்ததும் லண்டனிலுள்ள தன்னறையில் தானும் கண்ணை மூடிக் கொண்டு குருடன் போல் நடந்து பார்த்ததாக சுரேஷ் கூறினானல்லவா? அது அவனை மிகவும் உருக்கிவிட்டது. பாரதத்தில் பாண்டுவின் அண்ணான திருதராஷ்டிரனின் கண்கள் குருடென்ற காரணத்தினால் அவன் மனைவி காந்தாரி தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு தானும் ஓர் அந்தகியாய்க் காலம் கழித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? தனது பார்வை இழப்பில் பங்கு கொள்ள முயன்ற சுரேஷின் செய்கை காந்தாரியின் இந்தச் செயற்கரும் செய்கையைத் தான் அவனுக்கு ஞாபகமூட்டியது.
சுரேஷ் வந்து போனதிலிருந்து எந்த நேரமும் தன் கண் பார்வையைப் பற்றியே பேச ஆரம்பித்தான் ஸ்ரீதர். சுசீலாவைத் தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு அவள் பட்டுக் கன்னங்களைத் தன் கரங்களால் தடவிய வண்ணம் “பத்மா, பார், பார், இன்னும் சில நாட்களில் உன்னை முன் போல் என்னால் பார்க்க முடியும். மேலும் கல்கிசையில் நான் உன்னை நீச்சலுடையில் எழுதிய படம் பாதியில் நிறுத்தப்பட்டதல்லவா? கண் பார்வை கிடைத்ததும் அதை முடிப்பதுதான் என் முதல் வேலை. இன்னும் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் அதில் இலங்கை ஓவியக் கண் காட்சிக்கும் அதை அனுப்பி வைப்பேன். கட்டாயம் முதற் பரிசு கிடைக்கும்” என்று ஆர்ப்பரித்தான். தாய் பாக்கியத்தை அழைத்து “அம்மா, இன்னும் சில வாரங்களில் சுரேஷ் என் கண் பார்வையை எனக்குத் தந்து விடுவான். கண் பார்வை கிடைத்ததும் பழையபடி கொழும்புக்குப் போய் என் படிப்பை முடித்துவிட்டு வருவேன். இந்த முறை நீயும் அப்பாவும் கூட “கிஷ்கிந்தா”வில் வந்து என்னுடன் இருக்க வேண்டும்.” என்று என்னென்னவோ பேசினான் அவன். முரளியைத் தன் கரங்களில் தூக்கி வைத்துக் கொண்டு “அடே முரளி, அப்பா உன்னைக் காண முடியாத படி நீ இருளிலே ஒளிந்திருக்கிறாய் அல்லவா? இனி அது முடியாது. இன்னும் சில வாரங்களில் உன்னை நான் கண்டு கொள்வேன். உன்னையும் அழகான படமாகத் தீட்டப் போகிறேன் நான்.” என்று கொஞ்சினான். இதற்கிடையில் கூண்டுக் கிளி மோகனா “முரளி, முரளி” என்று கூப்பிட, “மோகனா, உன்னையும் தான். உன்னை நான் மறக்கவில்லை. உன்னுடைய படத்தையும் பாதியில் நிறுத்தினேனல்லவா? அதையும் சீக்கிரம் முடித்து வைப்பேன்.” என்றான்.
மோகனா இப்பொழுது முன் போல் “பத்மா, பத்மா” என்று கூப்பிடுவதில்லை. அதற்குப் பதிலாகச் சுசீலா அதனை “முரளி, முரளி” என்று கூப்பிடப் பழக்கி வைத்திருந்தாள். இவ்வாறு மோகனா முரளியைக் கூப்பிடும் போதெல்லாம் முரளி அதற்குப் பலத்த குரலில் எதிரொலி கொடுத்துக் கும்மாளமடிப்பது வழக்கம்.
கண் பார்வைக்குப் பற்றி ஸ்ரீதர் அடிக்கடி பேச ஆரம்பித்தது சுசீலாவுக்கு அதிக மன வேதனையை உண்டு பண்ணலாயிற்று. “ஐயோ, பாவம் தன் கண் பார்வையைப் பெற்றுக் கொள்ள அவர் எவ்வளவு தூரம் ஆசைப்படுகிறார். ஆனால் அதற்குக் குறுக்கே நிற்கிறோமே நாம், இது சரியா?” என்று கவலைப்படலானாள் அவள்.
இந்தக் கவலை அன்றிரவு நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மேலும் அதிகமாயிற்று.
ஸ்ரீதர் ஆழ்ந்த துயிலில் தன்னை மறந்திருந்த சுசீலாவை நடுச்சாமத்தில் தன் கைகளால் தட்டி எழுப்பினான். “நீண்ட நாட்களின் பின்னர் நான் ஓர் கனவு கண்டேன் பத்மா. குருடனாலும் கனவு காண முடியும். நீயும் நானும் முரளியும் நதியருகிலும், சோலையிலும், மலை முகட்டிலும் மலைச்சாரலிலும் இயற்கை அழகுகளை இரசித்துக் கொண்டு ஆடிப் பாடிக் கை கோத்துச் செல்வதாகக் கனவு கண்டேன். ஆனால் முரளியின் முகம் மட்டும் எனக்குத் தெரியவில்லை. அவன் ஒரு முகமூடி அணிந்திருந்தான். இவ்வாறு நாம் போய் கொண்டிருந்த போது வழியிலே சுரேஷ் வந்தான். அவன் முரளியின் முகமூடியைக் கழற்றி வீசினான். அதற்குப் பிறகுதான் முரளியின் முகத்தை நான் முதன் முதலாகப் பார்த்தேன். மிகவும் அழகான பையன் அவன்.” என்று பேசிக் கொண்டே போனான் அவன். “இன்னும் கனவிலே நான் வேறு எதையெல்லாம் கண்டேனென்று சொல்லவா?” என்று கேட்டுவிட்டுக் கவிஞன் போல் பேச ஆரம்பித்தான் அவன், “ஆம், பத்மா, அழகான மலர்களைக் கண்டேன். வண்ண மயிலைக் கண்டேன். வாண வேடிக்கை கண்டேன். தீ கண்டேன். திசை கண்டேன். நிலாவைப் பார்த்தேன். உன் நீண்ட விழிகளையும் கண்டேன். சித்திரங் கண்டேன். சிற்பம் கண்டேன். நாட்டியம் கண்டேன். நற்கனிகளையும் இரத்தினங்களையும் கண்டேன். ஆமாம். அழகான எல்லாவற்றையும் கண்டு களித்தேன் நான்.”
சுசீலா திக் பிரமை பிடித்தவள் போல் அவன் பேசுவதெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள் என்றாலும், உள்ளே அவள் இதயத்தில் ஆழத்திலே வேதனை ஒன்று வெடித்தெழுந்தது. பெரியதொரு குற்றஞ் செய்துவிட்டது போன்ற உணர்வு அவளை அவனது பேச்சுக்குப் பதிலளிக்கவொண்ணாது தடுத்தது. “ஐயோ, அவர் தம் கண் பார்வையைப் பெறுவதற்கு எவ்வளவு ஆசைப்படுகிறார். ஆனால் அதை நானும் மாமாவுமாகச் சேர்ந்து தடுத்துவிட்டோமே. இது நியாயமா? அக்கிரமமல்லவா?” என்ற எண்ணம் அவள் உள்ளத்தை அரித்தது.
ஸ்ரீதரோ தன் பேச்சை நிறுத்துவதாயில்லை. “பத்மா, என் ஆசைப் பத்மா. சுரேஷ் எவ்வளவு நல்லவன். பார்த்தாயா? அவன் சீக்கிரமே என்னைப் பார்க்க மீண்டும் வருவான். அப்பொழுது அவனிடம் சொல்லி லண்டன் டாக்டரை உடனே வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறிதும் தாமதிக்கக் கூடாது. பத்மா, எனக்கு மிகவும் அவசரம். உன்னையும் முரளியையும் சீக்கிரமே என் கண்களால் பார்க்க வேண்டும். இந்த இருளில் சிறையிலிருப்பதை இனி என்னால் பொறுக்கவே முடியாது. ஆம், பத்மா குருடாயிருப்பது இலேசான விஷயமல்ல. மிக மிக வேதனை, மிக மிகக் கஷ்டம். வேண்டுமானால் உன் கண்களை ஒரு நாள் முழுவதும் கறுப்புத் துணியால் இறுகக் கட்டி வைத்துவிட்டுப் பார். அப்பொழுது தெரியும் கண் பார்வையின் பெருமை. ஆம், இராசாத்தி. ஒரு மனிதனுக்குக் கண் பார்வைதானே மிக மிக முக்கியம். அதைச் சுரேஷ் எனக்குத் தரப் போகிறான். நான் அதிர்ஷ்டசாலி” என்று விடிய விடிய கண்களைப் பற்றிப் பேசிய விதம் சுசீலாவின் உள்ளத்தை வாள் கொண்டறுப்பது போலிருந்தது.
‘அமராவதி’யில் ஸ்ரீதர் இவ்வாறு கனவு கண்டு கொண்டிருக்க, சுரேஷ் வல்வெட்டித் துறையில் தன் வீட்டுக்கு முன்னாலிருந்த மாமரத்தின் கிளைகளூடே சந்திரன் விரித்திருந்த நிலவுப் பின்னணியில் ஒரு சாய்வு நாற்காலியில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவன் நித்திரக் கொள்ளவில்லை. ஸ்ரீதர் விஷயத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சினையை விடுவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
“பார்க்கப் போனால் ஸ்ரீதர் மனைவியும் சிவநேசரும் சொல்வது உண்மைதானே? அவன் இன்று ஏமாற்றப்பட்டிருந்தாலும் இன்பத்தில் திளைத்திருக்கிறான். கண் பார்வை கிடைத்தால் அந்த இன்பத்துக்கு முடிவு வந்துவிடுமல்லவா? அதற்கு நான் காரணமாயிருக்கலாமா? கூடாது?” என்று முடிவு செய்வதும், பின்னர், “ஒரு மனிதனுக்குக் கண் பார்வைதானே முக்கியம்? அதனை நாம் ஒருவனுக்குக் கொடுக்க முடிந்தும் கொடுக்காமலிருந்தால் பெரிய கொடூரமல்லவா?” என்று எதிர்மறையாகச் சிந்திப்பதுமாக இருந்தான்.
இரண்டு தினங்கள் கழித்து அவன் மீண்டும் ‘அமராவதி’க்குப் புறப்பட்டபோது இப்பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். ஸ்ரீதருக்குக் கண் பார்வை தருவது அவனது நலனுக்கே நல்லதல்ல என்பதே அது. ஆகவே, பேராசிரியர் நிக்கலஸ் நோர்த்லி அதிக வேலையின் காரணமாக இலங்கைக்கு வருவதைச் சில காலத்துக்கு ஒத்தி போட்டுவிட்டார் என்று ஸ்ரீதரிடம் கூறிவிட வேண்டுமென்று முடிவு கட்டி விட்டான் அவன். பின்னர் விஷயத்தை வாழ்க்கை பூராவுமே ஒத்தி போட்டு விடலாம். அவசியமானால் சில காலம் கழித்து, பேராசிரியர் நோர்த்லி இறந்து விட்டார் என்று கூடக் கூறி விடலாம். ஆனால் விவேகியான ஸ்ரீதர் “நோர்த்லி போலவே சிறந்த வேறு கண் வைத்தியர்களும் இருக்கிறார்களல்லவா? நீ கூடச் சொன்னாயே. அவர்களில் ஒருவரை அழைக்கலாமே” என்று கேட்பதென்னவோ நிச்சயம். ஆனால் அதற்கென்ன செய்வது? அவற்றுக்கெல்லாம் அவ்வப்போது மனதில் தோன்றும் சாக்குப் போக்குகளைச் சொல்ல வெண்டியதுதான். ஒரு பொய் சொல்லிவிட்டால் அதைத் தாங்க ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் பொய்களைச் சொல்ல வேண்டியதுதான்.
ஆனால் இந்தச் செய்தியைக் கேட்டதும் ஸ்ரீதர் முகமென்னவோ மாலை நேரத் தாமரை போல் வாடி விடப் போவது நிச்சயம். அதைக் கண் கொண்டு பார்ப்பது கஷ்டம்தான். இருந்தாலும் அவனது நன்மைக்காகப் பல்லைக் கடித்துக் கொண்டேனும் அதைச் செய்ய வேண்டியதுதான்.
இத்தகைய யோசனைகள் தன் சிந்தனையில் ஊசலாட, ‘அமராவதி’யின் பெரிய ‘கேட்டு’களுக்கு ஊடாக சுரேஷ் தன் காரில் உள்ளே சென்ற போது சுசீலா அவனை வழிமறித்தாள். “நில்லுங்கள். சுரேஷ் நீங்கள் ஸ்ரீதரைக் காணு முன் உங்களுடன் சில வார்த்தைகள் நான் பேச வேண்டும்” என்றாள் அவள்.
மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் நின்ற மகிழ மரத்தின் நிழலில் சுரேசும் சுசீலாவும் பேசிக் கொண்டார்கள். நல்ல வேளை. ஸ்ரீதர் மத்தியான உணவுக்குப் பின் தூங்கச் சென்றவன் இன்னும் துயில் கலைந்து எழவில்லை.
சுசீலா சுரேஷிடம் “சுரேஷ், நீங்கள் அமராவதிக்கு வந்திருக்கக் கூடாது. சலனமற்றுப் படிகம் போல் விளங்கிய ஸ்ரீதரின் வாழ்க்கை என்னும் தடாகம் உங்கள் வரவால் முற்றிலும் கலங்கிப் போய்விட்டது. ஐயோ, இன்று அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. என்னால் இதைத் தாங்க முடியாது” என்றாள்.
சுரேஷ் ஒரு பதிலும் பேசாது அவள் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு நின்றான். அவள் என்ன சொல்வதற்கு இப்படிப் பீடிகை போடுகிறாள் என்பது அவனுக்கு முதலில் விளங்க வில்லை.
“நீங்கள் அமராவதிக்கு வரும் வரை ஸ்ரீதர் மிகவும் சந்தோஷமாகவே இருந்து வந்தார். ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்பது போல் அவர் தம் கண் பார்வையை முற்றாக மறந்து முரளியோடு விளையாடுவதிலும் வாழ்க்கையைத் தம் நிலைக்கேற்றவாறு அனுபவிப்பதிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் நீங்கள் வந்து அவரது ஆசைத் தீயை மூட்டி விட்டீர்கள். கண் பார்வை கிடைக்கும் என்ற கனவைத் தூண்டிவிட்டீர்கள். அதன் பயனாக அவர் தமது அமைதியை முற்றாக இழந்து விட்டார். மீண்டும் உலகின் வண்ணங்களையும் வளைவுகளையும் காணத் துடிக்கிறார் அவர். ‘எப்போது என் கண் பார்வை கிடைக்கும்?’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டார் அவர். ஆம். சுரேஷ். இராப் பகலாக வெறி பிடித்தவர் போலக் கண் பார்வை, கண் பார்வை என்று கதறுகிறார் அவர். அவர் இவ்வாறு ஓலமிடுவதைக் கேட்க என்னால் சகிக்க முடியவில்லை. இவ்வளவு ஆசையுடன் ஒரு மனிதன் தன் மனதால் விரும்புவதை நாம் தடுக்கலாமா? சுரேஷ், எனது முன்னைய வேண்டுகோளை மறந்து விடுங்கள். நீங்கள் சொன்ன பேராசிரியர் நோர்த்லியை உடனே இங்கிலாந்திலிருந்து ஜெட் விமானம் மூலம் இங்கே வர ஏற்பாடு செய்யுங்கள். உண்மையில் ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவர் என்னை- அதாவது நன்னித்தம்பி மகள் சுசீலாவை நேசிக்கவே இல்லை. ஒரு நாள் என் மனத்தின் சபலத்தை அடக்க முடியாது நான் அவரை நன்னித்தம்பி மகள் சுசீலாவை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் ஞாபகமிருக்கிறது. அதற்கு இப்போதென்ன என்று என்னைக் கேட்டார் அவர். பத்மாவைத்தான் நேசிக்கிறார். ஆனால் அவர் பத்மாவை விட நேசிப்பது தன்னிரு கண்களையும் தான். கண்ணிழந்தவருக்குக் கண் மேல் தானே ஆசையிருக்கும்? ஆகவே நாம் அவர் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால், நாம் அவருக்கு அளிக்க வேண்டியது அவர் கண் பார்வையைத்தான். அதனையும் நாம் அவருக்குக் கொடுக்க முடிந்தும் கொடுக்காமல் இருந்தால் அதை விடப் பெரிய பாவமென்ன?” என்றாள் சுசீலா.
சுரேஷ் சுசீலாவின் வேண்டுகோளைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டான். அவன் சற்றும் எதிர்பாராத வேண்டுகோள் இது. எத்தனையோ தரம் மூளையைக் குழப்பி ஸ்ரீதரின் வாழ்க்கைக்கு நல்ல முடிவு அவன் நிரந்தரமாகக் குருடாயிருப்பதே என்ற தீர்மானத்துக்கு வந்து அதை அமுல் நடத்துவதற்கு வழி வகைகளையும் வகுத்துக் கொண்டு வந்திருந்த அவனுக்கு இது புதிய சிக்கலை உண்டாக்கிவிட்டது.
சுசீலா சொன்னது போல் குற்றம் முழுவதும் தன்னுடையைதுதான் என்பது அவனுக்குத் தெரியத்தான் செய்தது. சும்மா இருந்த அவனுக்குக் கண் பார்வையை மீண்டும் பெறுவதில் ஆசை மூட்டிவிட்டு இப்பொழுது அது முடியாதென்று கூறினால் அவனுக்கு எப்படி இருக்கும்? மனித இதயத்தின் வேதனை எல்லாம் நிறைவேறாத ஆசைகளால் உண்டானதுதானே? ஆசைத் தீயை மூட்டிவிட்டுப் பின்னால் அதனை நீருற்றிக் கரிக்கும்பமாக்குவதா? அதனால் ஏற்படும் ஏக்கத்தைப் பொறுப்பது இலேசான காரியமா என்ன?
ஆனால் ஸ்ரீதர் மீண்டும் தன் கண் பார்வையைப் பெற்றால் அதனால் அவனுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள்? – அவற்றை எண்ணிப் பார்க்கவே பயமாய் இருந்தது. அதில் முதலாவது பலியாக அவஸ்தைப் பட வேண்டியவள் சுசீலாவல்லவா? பாவம் சுசீலா, அவளுக்கு நான் எவ்வளவு தீங்கிழைத்துவிட்டேன்?
பார்க்கப் போனால் இந்தச் சுசீலா எப்படிப்பட்ட அதிரடியான பெண். ஒரு குருடனை மணக்க இசைந்து அவனை மணந்திருக்கிறாள். அதனால் ஏற்படும் வாழ்க்கை வசதியீனங்களெல்லாவற்றையும் அனுபவித்து வருகிறாள். ஆனால் அத்துடன் அவள் பிரச்சினை தீர்ந்து விட வில்லையே. தன்னைத்தான் அழித்துவிட்டு வேறொரு பெண்ணாகவும் வாழ்ந்து வருகிறாள். இப்பொழுது கண் பார்வை பெற்றதும் சுசீலா பத்மாவல்ல என்பதைத் தெரிந்து கொண்ட ஸ்ரீதரின் உள்ளத்தில் வெறியோடு வீசப் போகிற பெரும் புயலிலே தான் ஒரு சிறு மலராகச் சிதைந்து சீரழியவும் துணிந்துவிட்டாள் அவள். தியாகத்தின் எல்லையாக, அன்பின் கோபுரமாக விளங்கும் அவளது இத்துணிவை நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறதே!….
இவ்வாறு சிந்தித்த சுரேஷ் சுசீலாவிடம், “கண் பார்வை இழந்தவனுக்கு உலகில் கண் பார்வையே முக்கியமென்பது உண்மைதான். ஆனால் ஸ்ரீதருக்குக் கண் பார்வை அளித்தப் பின் அதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை எண்ணிப் பார். நீ தன் பள்ளிக் காதலி பத்மா அல்ல, போலி என்று தெரிந்ததும் அவனுக்கு உன் மீது தாங்க முடியாத வெறுப்பேற்படும். எனவே அவன் உன்னை வெறுத்தொதுக்குவது நிச்சயம். அவன் அப்படிச் செய்தால் அது நியாயமே. உலகிலேயே இதுவரை கண்டும் கேட்டுமிராத பெரும் மோசடியை, ஆள் மாறாட்டத்தை நீங்கள் அவனது வாழ்க்கையில் செய்திருக்கிறீர்கள். இது வரை நான் வாசித்த எந்த நாவலிலும் கூட இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான கட்டத்தை நான் கண்டதில்லை. இந்த மோசடியில் நீயே பிரதான பங்கு வகித்திருக்கிறாய். இப்படிப்பட்ட பயங்கர நாடகத்தை எவரும் பாதியில் விட்டுவிட முடியாது. அதன் முடிவு வரை அதை ஆடியே தீர வேண்டும். அப்பொழுதுதான் அதன் பலா பலன்களிலிருந்து நீ தப்ப முடியும். இந்த நாடகத்துக்கு முடிவு ஒன்றே ஒன்று தான் ஸ்ரீதரின் மரணம், அல்லது உனது மரணம். ஸ்ரீதர் இறப்பதற்கு முன் நீ இறந்தால் பத்மாவே தன்னுடன் அல்லது வாழ்வு முடியும் வரை வாழந்திருந்தாள் என்று அவன் நினைத்துக் கொள்வான். அதே போல உனக்கு முன் ஸ்ரீதர் இறந்தால் அப்பொழுதும் அவனுக்கு விஷயம் தெரிய வராது. ஆகவே புயலடிக்காமலே அவனது வாழ்க்கை முடிந்து விடும். சுசீலா, நீ இப்போது பிடித்திருப்பது புலியின் வால். அதைக் கடைசி வரை நீ கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும். சிறிது விட்டுக் கொடுத்தாலும் புலி உன் மேல் பாய்ந்து உன்னைத் தின்று விடும். ஆகவே நாடகத்தைப் பாதியில் நிறுத்துவதை ஒரு போதும் முடியாத காரியம். ஆகவே ஸ்ரீதர் கடைசி வரை கண் பார்வையற்றவனாக இருப்பதே மேல்” என்றான்.
சுசீலா, “ நீங்கள் சொல்வது உண்மைதான். இதன் பயனாகப் பயங்கரமான விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பதும் எனக்குத் தெரியத்தான் செய்கிறது. ஆனால் அந்த விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நான் விவரமாகக் கற்பனை செய்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவ்வித கற்பனை மனத்தின் தைரியத்துக்கு அடியோடு குழி பறித்துவிடும். ஆகவே அது எப்படியும் போகட்டும். என்னைப் பொறுத்தவரையில் எனது ஆள் மாறாட்ட மோசடியின் பலா பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ள நான் முயலவில்லை. எவ்வித பலா பலன்களையும் அது வரும்போது ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் ஸ்ரீதர் கண் பெற வேண்டும். அவர் உள்ளம் அதற்காக அழுகிறது. அதை அவருக்குக் கொடுத்து அதனால் என்ன பலன் ஏற்பட்டாலும் நான் அதனை ஆனந்தமாகப் பெற்றுக் கொள்ளுவேன். சுரேஷ், நீங்கள் இதனை எனக்காகச் செய்துதான் ஆகவேண்டும்.” என்றாள்.
சுரேஷிற்கு அதற்கு மேலும் சுசீலாவை எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்னும் தன் உயிருக்குயிரான நண்பன் ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதை அவனை விட வேறு யார் தான் அதிகமாக விரும்ப முடியும்? ஆனால் ஒன்று, அதனால் ஸ்ரீதருக்குக் கஷ்டம்தான் விளையப் போகிறது. ஆனால் கண் பாவை இல்லாதிருத்தலும் கஷ்டம் தானே. இன்னும் இதோ கிடைக்கப் போகிறது என்று ஆசையோடு எதிர்பார்க்கப் பட்ட ஒன்று அவ்வாறு கிட்டாமல் போனால், அதுவும் பெரிய துன்பந்தானே. இப்படி இப்பிரச்சினையில் எப்பக்கம் திரும்பினாலும் துயரும் துன்பமுமே முகத்துக்கு முன்னால் சுற்றி நிற்கின்றன. இந்நிலையில் எதைச் செய்வது சரி, எதைச் செய்வது பிழை என்றே அவனுக்குத் தெரியவில்லை. எதையாவது செய்யத்தானே வேண்டும்? அப்படியானால் ஸ்ரீதர் ஆசைப்படுவதை, சுசீலா விரும்புவதைச் செய்துவிட வேண்டியதுதான்.
ஆனால் இதில் ஒரு சிக்கல். இதைப் பற்றிச் சிவநேசர் என்ன நினைப்பார்? அவருடன் இது பற்றிப் பேச வேண்டாமா? சுரேஷ் இந்த விஷயத்தைச் சுசீலா முன்னால் தூக்கிப் போட்டதும், “அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் அவரைச் சமாளித்துவிடுகிறேன். தன் மகன் கண் பார்வை பெறுவதை எந்தத் தகப்பன் தான் விரும்பாதிருக்க முடியும்? அவர் விரும்பாவிட்டாலும் நான் அவரை விரும்ப வைத்து விடுவேன்.” என்றாள்.
“அப்படியானால் அது உன் விஷயம். இன்றைக்கே பேராசிரியர் நோர்த்லியுடன் நான் கேபிளில் பேசுவேன். மிக விரைவிலேயே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவேன்.” என்றான் சுரேஷ்.
சிறிது நேரம் கழித்து ஸ்ரீதர் பிற்பகல் துயில் நீங்கி எழுந்ததும் சுரேஷ் தன் திட்டத்தை ஸ்ரீதரிடம் கூறினான். ஸ்ரீதர் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினான். “சீக்கிரமே விஷயத்தை முடி. முதலில் உன் முகத்தைப் பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையாயிருக்கிறது தெரியுமா சுரேஷ்?” என்றான் அவன், குழந்தைப் பிள்ளையைப் போல.
இச்சம்பவம் நடந்த இரவு சுசீலா மாமியார் பாக்கியத்திடம் தானும் சுரேசும் செய்து கொண்ட ஏற்பாடுகளைக் கூறினாள். முதலில் பாக்கியம் அதை முழு மூச்சோடு ஆட்சேபிக்கவே செய்தாள். இருந்தாலும் முடிவில் என்னவோ நடப்பது நடக்கட்டும் என்ற தோரணையில் தனது மனத்தை மாற்றிக் கொண்டுவிட்டாள். அவளால் வேறு என்ன தான் செய்ய முடியும்? இரண்டு மூன்று தினங்களில் சிவநேசரையும் கூட இதே நிலைக்குக் கொண்டு வந்துவிட்டாள் சுசீலா. இவை நடந்து ஓரிரு தினங்கள் கழித்து சுரேஷ் லண்டனுக்குப் பேராசிரியர் நோர்த்லியுடன் கேபிளில் பேசினான்.
“பேராசிரியரே, தங்களுக்கு எப்பொழுது இலங்கை வர வசதியாயிருக்கும்” என்று கேட்டான் சுரேஷ்.
“இந்த மாதம் கல்லூரி விடுமுறை. அத்துடன் கையில் அதிக வேலைகளுமில்லை. மேலும் கீழைத்தேய கண் நோய்களைப் பற்றி நான் ஒரு நூலும் எழுதி வருகிறேனல்லவா? இலங்கையில் அதற்கு வேண்டிய சில குறிப்புகளையும் நான் பெற முடியும். ஆகவே எப்பொழுதும் நான் இலங்கை புறப்படத் தயார். ஏற்பாடுகளைச் செய்.” என்றார் பேராசிரியர்.
சுரேஷிற்கு ஒரே ஆனந்தம். “அப்படியே ஆகட்டும்.” என்று ஏற்பாடுகளைச் செய்தான் அவன்.
இரண்டு வாரங்கள் கழித்து பேராசிரியர் நோர்த்லி ‘அமராவதி’யில் ஸ்ரீதரின் கண்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்தார். அவர் பக்கத்தில் இலங்கையின் சிறந்த கண் வைத்திய நிபுணர்களில் ஒருவரும் சிவநேசரின் குடும்ப நண்பருமான டாக்டர் நெல்சன் நின்று கொண்டிருந்தார்.
பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் கண்களைத் தம்மிடமிருந்த பூதக் கண்ணாடி இணைந்த கருவிகளால் உற்று நோக்கி ஆராய்ந்த வன்ணமே, டாக்டர் நெல்சனுக்குச் சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார். பாக்கியம், சுசீலா, சிவநேசர், சுரேஷ், நன்னித்தம்பியர் ஆகியோரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
முரளி தனது ஆயாவின் கைகளில் வீற்றிருந்தவன்ணம் கைகொட்டி மழலை மிழற்றினான். “அப்பா அப்பா” என்று சப்தமிட்டான்.
பேராசிரியர் நோர்த்லி அவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு, “யாரிந்த சின்னப்பயல். பெரிய கலாட்டா பண்ணுகிறானே” என்றார் சிரித்துக் கொண்டு. முரளி அவரது வெள்ளை மீசையைத் தன் கால்களால் பற்றிக் கொண்டு விட மாட்டேன் என்று அடம்பிடித்தான். பேராசிரியரை அவனிடமிருந்து விடுப்பது சுசீலாவுக்குப் பெரிய கஷ்டமாய்ப் போய்விட்டது.
ஸ்ரீதர் பேராசிரியரிடம் “அது என் மகன் முரளி அவனை நான் இன்னும் பார்த்ததேயில்லை. அவனைப் பார்க்கத் தான் எனக்குக் கண் வேண்டும் டாக்டர்” என்றான்.
அதைக் கேட்ட பேராசிரியர் மனம் உருகிவிட்டதே. “சரி, என்னாலானதைச் செய்கிறேன்” என்று தம் ஆராய்ச்சியை நீண்ட நேரம் நடத்தினார் அவர். முடிவிலவர் சுரேஷை நோக்கி “சுரேஷ், ஸ்ரீதரின் கண் நோய் மிகவும் சிக்கலான ஒன்று தான். என்றாலும், இந்த நோயைப் பற்றிய முக்கிய விஷயங்கள் பல, சமீப காலத்தில் தெரிய வந்துவிட்டன. பிரெஞ்சு டாக்டர் பீயரே ரோலண்ட் என்பவர் இது பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் நாலு மாதங்களின் முன்னர் இத்தாலியில் நான் ஓர் ஆபரேஷனை நடத்தினேன். மிக வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் நடத்தப்பட்ட பெண் உலகப் பிரசித்தி பெற்ற நடிகை. அன்னா பெட்ரோனி என்பது அவள் பெயர். இப்பொழுது பழையபடி நடிக்கத் தொடங்கி விட்டாள் அவள்.” என்றார்.
இதைக் கேட்ட ஸ்ரீதருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அன்றலர்ந்த தாமரை போல் பூரித்த முகத்துடன் புன்னகை மழை பொழிந்தான் அவன். “அம்மா, பத்மா, கேட்டீர்களா பேராசிரியர் பேச்சை? நான் அதிர்ஷ்டசாலி. சுரேசுக்கு நான் நன்றி பாராட்ட வேண்டும்.” என்றான்.
ஆனால் சந்திர சிகிச்சை தாங்கொணாத வேதனை தருமென்ற எண்ணமும் அவனுக்கு ஏற்படாமலில்லை. ஆகவே “சந்திர சிகிச்சை அதிகம் நோகுமோ?” என்று பேராசிரியர் நோர்த்லியை நோக்கி வினவினான்.
பேராசிரியர் நோர்த்லி சிரித்துவிட்டு, “என்ன ஸ்ரீதர், இவ்வளவு பயப்படுகிறாய்? இந்தக் காலத்தில் பெண்கள் கூட சந்திர சிகிச்சைக்கு இவ்வளவு பயப்பட மாட்டார்களே. உனக்கு நோகாமலே கண் பார்வை வேண்டுமா. சரி, அப்படியே செய்கிறேன்.” என்றார்.
ஸ்ரீதரின் சந்திர சிகிச்சைக்கு யாழ்ப்பாண நகரில் டாக்டர் நெல்சனின் கண் வைத்திய சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அது நவீன வசதிகள் பொருந்திய சிறந்த வைத்தியசாலையாக இருந்த போதிலும் பல குறைபாடுகளும் அங்கு இருக்கவே செய்தன. அவற்றை நிவிர்த்திக்க, பேராசிரியர் நோர்த்லி சொன்னபடி பல திருத்தங்கள் அங்கு செய்யப்பட்டன. அத்துடன் அங்கிலாதிருந்த சில நவீன கருவிகளும் ஸ்ரீதரின் சந்திர சிகிச்சைக்கெனக் கொழும்பிலிருந்து விசேஷமாக வரவழைக்கப்பட்டன. இவற்றிற்குரிய செலவுகள் யாவும் சிவநேசரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு பேராசிரியர் நோர்த்லிக்கு வேண்டிய சகல வசதிகளும் அவரால் பெரும் பணச் செலவில் செய்து கொடுக்கப்பட்டன. அவர் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கென ‘அமராவதி’யின் இரண்டு கார்களிலொன்றும் அவரிடம் கொடுக்கப்பட்டது. ஒரு காரோட்டியும் பேராசிரியருக்கென விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டான்.
பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை முடிந்து, அவனது கண்ணின் கட்டை அவிழ்ந்து நோய் குணமாகிவிட்டதா என்று ஊர்ஜிதமாக்கிக் கொண்டதும் யாழ்ப்பாணத்திலிருந்து நேரே பம்பாய்க்கு விமானம் மூலம் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பம்பாயில் உலக சமாதான இயக்கத்தின் இந்தியத் தலைவர் சிலரை அவர் நேரில் பார்த்துப் பேச விரும்பியதே அதற்குக் காரணம்.
இவ்வாறு டாக்டர் நெல்சனின் ஆஸ்பத்திரியில் சந்திர சிகிச்சை ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்க, அதனை எவ்வித கிலேசமுமின்றி வரவேற்றுக் கொண்டிருந்தது ஸ்ரீதரின் உள்ளம் மட்டும்தான். மற்றவர்களோ ஸ்ரீதரின் கண் பார்வையுடன் பெரிய இடி முழக்கத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பாக்கியம், சுசீலா, சுரேஷ், எல்லோருக்கும் இது பொருந்தும். ஏன் சிவநேசருக்கும் கூடத்தான். தமது மனைவி பாக்கியத்திடம் “சுசீலா அற்புதமான பெண். குருடனைக் கட்டுவதற்குத் தானாக முன் வந்தாள். ஆனால் அவள் இப்பொழுது செய்வதோ அதிலும் பார்க்கப் பல மடங்கு துணிவு நிறைந்த செயலாகும். தன் ஆள் மாறாட்ட நாடகம் பிடிபடப் போகிறது என்பதைக் கூடச் சட்டை செய்யாமல், ஸ்ரீதருக்குப் பார்வை தர முன் வருகிறாள் அவள். ஆனால் இதனால் என்ன விபரீதம் நேரிடப் போகிறதோ?” என்று கவலையுடன் கூறினார் அவர்.
அதற்குப் பாக்கியம், “ஆனால் இந்த ஆள் மாறாட்ட நாடகத்துக்குச் சுசீலா மட்டுமா பொறுப்பு? நாமும் கூடத் தானே? ஸ்ரீதர் எங்கள் மீதும் கோபமடையத் தான் போகிறான். இதை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? வருவது வரட்டும், மாவிட்டபுரம் கந்தன்தான் துணை.” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள்.
27-ம் அத்தியாயம்: ஈடிப்பஸ் நாடகம்
ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாளை நிர்ணயிப்பதில் பேராசிரியர் நோர்த்லிக்குப் பலத்த சிரமம் ஏற்பட்டது. முதலாவதாக அவருக்கிருந்த பிரச்சினை காலப் பிரச்சினை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரால் இலங்கையில் தங்கியிருக்க முடியாதிருந்தது. அவரது தாய்நாட்டில் அவருக்காக எப்பொழுதும் குவிந்திருக்கும் வேலைகள் பல. ஆகவே எவ்வளவு விரைவில் ஸ்ரீதரின் சந்திர சிகிச்சையை முடித்துக் கொண்டு இங்கிலாந்து புறப்பட முடியுமோ அவ்வளவு விரைவில் புறப்பட வேண்டும். அத்துடன், இந்தியாவிலும் ஓரிரு தினங்கள் தங்க வேண்டும். அதுவும் அவருடைய கால அட்டவணையில் இடம் பெற்றிருந்தது. இவை தவிர, ஸ்ரீதரை இன்னொரு தடவை நன்கு பரிசீலித்து, சந்திர சிகிச்சைக்கு அவனைத் தயார் செய்ய வேண்டும். அதற்கும் இரண்டு மூன்று நாள் பிடிக்கும். மேலும் சந்திர சிகிச்சைக்குப் பின்னர் கூட சில குறிப்பிட்ட தினங்கள் கண்ணில் ஏற்பட்ட புண் ஆறும் வரை ஸ்ரீதர் கண் கட்டோடு விளங்க வேண்டும். அக்காலவெல்லையின் முடிவில் கண்களைக் கட்டவிழ்த்துப் பார்த்துத் தமக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னர் தான் அவரால் இலங்கையை விட்டுப் புறப்பட முடியும். ஆனால் இவற்றுடன் பிரச்சினை தீரவில்லை. ‘அமராவதி’ வளவில் எப்பொழுதும் சோதிடத்துக்கு மிகவும் மதிப்புண்டு. சிவநேசருக்கு, அவற்றில் நம்பிக்கை இல்லையென்றாலும், பாக்கியம் நாளும் கோளும் பார்க்காமல் ஒன்றுமே செய்வதில்லை. அதிலும் சோதிடத்தில் மிக வல்லவரான சின்னைய பாரதி எப்பொழுதும் பக்கத்திலிருக்கும் போது அவரைக் கலக்காமல் எதையும் செய்ய யாருக்குத்தான் மனம் வரும்? ஆகவே, சந்திர சிகிச்சை ஸ்ரீதருக்கேற்ற நல்ல நாளிலும் நடைபெற வேண்டும். எனவே, இவற்றை எல்லாம் பார்த்து இரண்டு மூன்று நாட்களை வீணாக்கியே ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாள் நியமிக்கப்பட்டது.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2024/10/மனக்கண்27.jpg)
பேராசிரியர் நோர்த்லியைப் பொறுத்த வரையில் நல்ல நாள் பெரிய நாள் என்ற சோதிடப் பேச்செழுந்ததும், அதை அவர் எதிர்த்துப் பரிகசிக்கவே செய்தார். இவற்றை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று கருதுபவர் அவர். உண்மையில் இங்கிலாந்திலிருந்து பகுத்தறிவு அச்சகச் சங்கத்தில் அவர் ஒரு முக்கிய உறுப்பினர். இருந்தாலும் பண்பே உருவான அவர், ஒரு தாய் தன் மகனின் மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கை நிகழ்ச்சி சம்பந்தமாக நாள் பார்க்கும் போது, அதை எதிர்த்து வேறு நாளை நியமித்தல் மனோதத்துவ ரீதியில் அவ்வளவு நல்லதல்ல என்பதால் வெறும் பரிகாசத்துடன் நிறுத்திக் கொண்டு சந்திர சிகிச்சையை சின்னைய பாரதி கூறிய நல்ல நாளன்றே நியமித்துவிட்டார்.
“சந்திர சிகிச்சைக்காகச் சிவநேசர் குடும்பமே டாக்டர் நெல்சனின் ஆஸ்பத்திரியில் நான்கு நாட்களுக்கு முன்னரே குடியேறிவிட்டது. ஸ்ரீதருக்கு ஒரு தனியறையும் அதற்குப் பக்கத்தில் அவனுக்குத் துணையாக இருப்பவர்களுக்கென வேறு ஓர் அறையும் ஒதுக்கிவிடப் பட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது, ஸ்ரீதர் பொழுது போகாமல் இடர்ப்படக் கூடாது என்பதற்காக ‘ரேடியோ கிராம்’ இசைத்தட்டுகள், ‘பிரெயில்’ எழுத்தில் தயாரிக்கப்பட்ட சில புதிய கதைப் புத்தகங்கள் என்பனவும் ஸ்ரீதர் கட்டிலுக்கருகே வைக்கப்பட்டன.
ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் உள்ளத்தில் விநோதமான எண்ணங்கள் பல இடையிடையே எழும். அவன் வண்ணங்களைப் பார்த்து ஏறக்குறைய இரண்டு வருடங்களாகி இருந்தன. இருந்தாலும் வண்ண வித்தியாசங்களை இன்னும் அவனது மனத்திரையிலே அவனால் ஞாபகம் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றின் பெயர்கள் தன் மனதில் குழம்பிப் போய்விட்டது போன்ற ஓர் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. உதாரணமாக, நீலமென்றால் எது, பச்சை என்றால் எது என்று யாராவது கேட்டால் ஒன்றின் பெயரை மற்றதற்குத்தான் மாற்றிக் கூறிவிடக் கூடும் என்றா அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் அதற்கென்ன செய்வது? மீண்டும் வண்ணங்களையும் அவற்றின் பெயரையும் ஒன்றோடொன்று தொடர்புறுத்திக் கற்றுக் கொண்டால் போகிறது என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.
ஸ்ரீதர் கண் பார்வை பெற்றால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டிய யாராவது இவ்வுலகில் இருந்தால் அது சுசீலாவாகத்தானே இருக்க முடியும்? ஆனால் உண்மை அவ்வாறிருக்கவில்லை. சுசீலா இப்பொழுது சிந்திப்பதையே நிறுத்திவிட்டாள். அவள் மூளை சிறிதும் வேலை செய்யாது ஓய்ந்து விட்டது போல் தோன்றியது. எந்த விஷயத்தையும் அந்த விஷயம் எழும்பும் அந்நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து, கையிலிருக்கும் வேலையைச் செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாயிருந்தாள் அவள். இருந்த போதிலும் அவள் கல கலப்பான பேச்சும், நகைச்சுவையும், பிள்ளைப் பாட்டுகளும் ஓரளவு அடங்கி விடத் தான் செய்தன. இடையிடையே அவள் முரளியை மடியில் தூக்கி வைத்திருந்தாலும், முக்கால் வாசி நேரம் பாட்டி பாக்கியத்தின் மடியிலேயே அவனை போட்டு விட்டாள் அவள். ஆனால் அவன் பாட்டியின் மடியில் இருந்தால் தானே? சிவநேசர், பேராசிரியர் நோர்த்லி உட்பட எல்லோரிடமும் தவழ்ந்து சென்று விளையாடினான் முரளி. முரளி அந்த ஆஸ்பத்திரிக்கே ஓர் அலங்காரப் பொருளாகிவிட்டான். டாக்டர் நெல்சன், டாக்டர் சுரேஷ், தாதியார் – யாவருமே அவனால் கவரப் பட்டுவிட்டவர்கள். ஒரு நாள் பேராசிரியர் நோர்த்லி அவனைத் தூக்கி விளையாட்டுக் காட்ட அவன் அவரது சட்டையில் சல மோசனம் செய்து அசுத்தப்படுத்திவிட்டான். “அடே பயலே, என் சட்டையை அசுத்தம் செய்ததற்கு உனக்கு எதிராகப் பொலீசில் வழக்குத் தொடர்கிறேன். பார்” என்றார் பேராசிரியர். முரளி அதற்கு “சரி போடுங்கள் வழக்கை. யார் வெல்கிறார் பார்ப்போம்.” என்று கூறுவது போல மழலைக் கூச்சலிட்டுக் கை தட்டினான்.
ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிச் சுரேஷ், சிவநேசர், பாக்கியம் ஆகியோரும் கவலைப் படவே செய்தனர். உண்மையில் இது பற்றி அவர்கள் தம்மிடையே பேசிக் கொள்ளவும் செய்தனர். இவ்வுரையாடலின் பயனாகப் பாக்கியம் சுசீலாவிடம், “ஸ்ரீதர் கண் பார்வை வந்ததும் நீ பத்மா அல்ல என்று கண்டு கொள்வானே, அதை நீ எப்படிச் சமாளிக்கப் போகிறாய்” என்று கேட்டாள். அதற்குச் சுசீலா “அது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.” என்று மட்டும் சொன்னாள். பாக்கியமும் தீர்க்க முடியாத பிரச்சினையை, புண்ணைக் கிளறுவது போல் கிளறிக் கொண்டிருக்க விரும்பாததால் அப்படியே விட்டுவிட்டாள்.
ஸ்ரீதர் சந்திர சிகிச்சைக்குத் தயார் செய்யப்பட்டு வந்த மூன்று நாட்களும் சுசீலா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள். அத்துடன் அவனுக்கு வேண்டிய தினசரிப் பணிகளையும் புரிந்து கொண்டிருந்தாள் அவள்.
சில சமயங்களில் தான் கண் பார்வையை இழந்தது பற்றிச் சிந்தித்தபோது, பல்கலைக்கழகத்தில் தான் நடித்த ஈடிப்பஸ் நாடகம் ஸ்ரீதருக்கு ஞாபகம் வந்தது. அதில் அவள் மிகவும் நல்ல பெயர் எடுத்திருந்ததால், மன்னன் ஈடிப்பஸ் அவன் மனதில் அடிக்கடி தோன்றுவது வழக்கமாயிருந்தது. இப்பொழுது ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்த போது தேபேஸ் மன்னனின் இந்நினைவு முன்னிலும் பார்க்க மிகவும் அதிகமாயிருந்தது. புகழ்பெற்ற கிரேக்க நாடகாசிரியரின் சொபாக்கிளினின் உணர்ச்சிகரமான அந்நாடகம் இப்பொழுது அவன் மனத்திரையைப் பீறிப் பீறி வந்து கொண்டிருந்தது.
அவனைப் பொறுத்த வரையில் அவன் அறிந்த நாடகங்களில் அதுவே ஆகச் சிறந்தது. அதனால்தான் அதனை மொழி பெயர்த்து அரங்கேற்றியதோடு அதில் தானே கதாநாயகனாகவும் நடித்தான் அவன். அது தவிர, ஈடிப்பஸ் நாடகம் அவன் வாழ்க்கையில் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நாடகத்தின் பயனாகத் தானே அவனது காதலி பத்மா அவனுக்குக் கிடைத்தாள்? பரமானந்தர் அறிமுகமானதும் இந்நாடகத்தின் பின்னர் தானே? ஆகவே “இன்று என்னுடன் என் பத்மா இங்கு வாழ்வதற்கே ஈடிப்பஸ் நாடகந்தானே அடிகோலியது?” என்று கூட யோசித்தான் அவன். ஈடிப்பஸ் நாடகம் நினைவுக்கு வந்ததும் அவன் மனதில் பளிச்சிட்ட முக்கியக் காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைத் தானே குத்திக் கொள்ளும் காட்சியாகும். “இந்நாடகத்தில் ஈடிப்பஸ் தன் கண்களை இழுக்கிறான். ஆனால் நான் அவனை விட அதிர்ஷ்டசாலி. நான் இழந்த பார்வையை மீண்டும் பெறக் கூடியதாயிருக்கிறதல்லவா?…” என்று பலவாறாகத் தன்னையும் ஈடிப்பஸையும் சமப்படுத்தி யோசித்தான் அவன்.
கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் அவன் இந்நாடகத்தில் நடித்த போது பார்த்தவரெல்லாம் நடுங்கிய காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைக் குத்திக் கொள்ளும் அந்தக் காட்சிதான். சில தினசரிப் பத்திரிகைகளின் கலா விமர்சகர்கள் இக்காட்சியை அளவு மீறிப் புகழ்ந்திருந்தார்கள். அது ஞாபகம் வந்ததும் கண்கள் சுகமாகிப் பழையபடி மற்றவர்கள் போல் நடமாடத் தொடங்கியதும் மீண்டும் ஈடிப்பஸ் நாடகத்தை ஒரு தரமேனும் அரங்கேற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு. இது பற்றிச் சிந்தித்து போது தனது இலக்கியப் பேராசிரியர் ஈடிப்பஸ் நாடகத்தின் இக் காட்சியைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. உலக நாடக வரலாற்றிலே இக் காட்சி ஆகச் சிறந்த காட்சி என்று அவர் கூறியதும், அதன் பின்னர் மாணவர்கள் வகுப்பு முடிந்து இது பற்றிய நடத்திய வாதப் பிரதிவாதங்களும் அவனுக்கு நினைவு வந்தன. சிலர் “இரத்த வெறி பிடித்த இந்தச் சுய நோவுக் காட்சியைப் பேராசிரியர் இவ்வாறு மெச்சுகிறாரே” என்று குறைப்பட்டதும், தன்னைப் பொறுத்த வரையில் கூற்றே முற்றிலும் சரி என்று தான் தீர்ப்புக் கூறியதும் அவனுக்கு நினைவு வந்தன.
அப்பொழுது விகடப் பேச்சில் நிபுணனான ஒரு மாணவன் “ஈடிப்பஸின் சுய நோவை மெச்சும் பேராசிரியர் தாமும் சுய நோவில் ஆசை கொண்ட ஒருவராகவே இருக்க வேண்டும். நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து அவரை ஒரு நாள் மொத்துவோமா? அவர் அதற்காக மகிழ்ச்சிதானே அடைவார்?” என்று கூறியதும், மற்ற மாணவர்கள் எல்லோரும் அதைக் கேட்டுக் கொல்லென்று சிரித்தமையும் கூட அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன.
“உண்மையில் ஈடிப்பஸ் நிலையில் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? தன்னையறியாமல் தாயைப் பெண்டாக்கிப் பிள்ளைகளையும் பெற்றுவிட்டேன் என்ற செய்தி வாளைப் பிழந்து ஒரு மின்னல் போல் ஒருவன் முன் வந்து நிற்குமானால், அவன் என்ன செய்திருப்பான்? அநேகமாக நான் கூட தேபேஸ் மன்னனைப் போலவே என்னிரு கண்களையும் குத்திக் கொண்டிருக்கக் கூடும்.” என்றும் சிந்தித்தான் அவன்.
நான்கு தினங்கள் கழித்து டாக்டர் நோர்த்லி சந்திர சிகிச்சையைச் செய்து முடித்தார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. டாக்டர் நெல்சனும் டாக்டர் சுரேசும் டாக்டர் நோர்த்லிக்குப் பக்கபலமாக இருந்து உதவினார்கள்.
சந்திர சிகிச்சை முடிந்து ஒரு நாள் மட்டும் ஸ்ரீதர் தனது கட்டிலில் ஓய்ந்து போய்க் கிடந்தான். அதன் பின் மிகவும் கல கலப்பாகப் பேச ஆரம்பித்துவிட்டான் அவன். சுசீலாவையும் முரளியையும் அருகே உட்கார வைத்து எதை எதையோ கூறினான் அவன். “பத்மா, இன்னும் சில நாட்களில் பேராசிரியர் நோர்த்லி என் கண்ணை அவிழ்த்துவிடுவார். என் கண்ணை அவிழ்த்ததும் நீ முரளியைத் தூக்கிக் கொண்டு என் முன்னே வர வேண்டும்” அது தான் நான் விழி பெற்றதும் முதலில் காண விரும்பும் காட்சி. தெரிகிறதா?” என்று ஒன்றுக்குப் பல தடவை கூறிவிட்டான் அவன்.
இவை எல்லாம் சுசீலாவின் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கிக் கொண்டிருந்தன. சுசீலா மட்டுமல்ல, பாக்கியம், சிவநேசர், நன்னித்தம்பியர் எல்லோருமே உள்ளூர நடுங்க ஆரம்பித்தார்கள். வானமிடிந்து தலையில் விழுவதை எதிர்பார்ப்பதுபோல பயங்கரமான விளைவுகளை எதிர்பார்த்து இருந்தார்கள் அவர்கள். கண்ணுக்குத் தெரியும் தொலைவில் ஒரு பூகம்பம் வந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது அவர்களுக்கு.
கடைசியில் பூகம்பமும் வரத் தான் செய்தது.
பேராசிரியர் நோர்த்லி தாம் நியமித்த நாளில் ஸ்ரீதர் கன்களின் கட்டுகளை அவிழ்த்தார். அவ்வாறு அவர் கட்டுகளை அவிழ்த்த போது ஸ்ரீதரின் அறையில் டாக்டர்களையும் ஒரு தாதியையும் தவிர வேறு யாரையும் அவர் அனுமதிக்கவில்லை.
கட்டுகளை அவிழ்த்துத் தமது விரல்களினால் பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் விழிகளை மலர்வித்தார்.
ஸ்ரீதர் கண் விழித்தான். உலகமே ஒளிக் கடலில் நீந்திக் கொண்டிருப்பது போல் இருந்தது அவனுக்கு. அப்பொழுது தான் இவ்வுலகில் பிறந்தது போன்ற ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தன் முன்னே நின்ற பேராசிரியரையும் மற்ற டாக்டர்களையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பின்னர் “கண் தெரிகிறது. கண் தெரிகிறது.” என்று பலமாகச் சப்தமிட்டாள் அவன்.
பேராசிரியர் நோர்த்லி சிரித்தார். டாக்டர் சுரேஷ் அவர் கால்களைப் பற்றிக் கொண்டு “தாங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள். நீங்கள் ஸ்ரீதருக்குச் செய்த இந்த உதவியை எவ்வாறு பாராட்டுவேன்” என்றான். டாக்டர் நெல்சன், “பேராசிரியரே, நீங்கள் மிகவும் பெரிய சாதனையைச் செய்துவிட்டீர்கள். என்னைப் பொறுத்த வரையில் ஸ்ரீதர் இவ்வளவு இலகுவில் கண் பார்வையை மீண்டும் பெறுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
பேராசிரியர் இப் பாராட்டுரைகளுக்குப் பதிலாக அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டு ஸ்ரீதருடன் பேச ஆரம்பித்தார். “ஸ்ரீதர், இது என்ன வர்ணம்?” என்று ஒரு பச்சை வர்ணப் புத்தகத்தை அவனிடம் காட்டிக் கேட்டார் “நீலம்” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். பின்னர் ஒரு நீல வர்ணக் கடற்காட்சியை அவனிடம் காட்டி “இதன் வர்ணம் என்ன?” என்று அவர் கேட்டார். “பச்சை” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். அதைக் கேட்ட பேராசிரியர் சுரேஷைப் பார்த்து “உன் நண்பன் மறந்துவிட்டது வர்ணங்களை அல்ல. அவற்றின் பெயர்களை. நீ அவற்றை அவனுக்குத் திருப்பிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.” என்றார்.
ஸ்ரீதர் கட்டிலில் எழுந்துட்கார்ந்து பேராசிரியரின் கைகளைத் தன் கைகளால் பற்றி, “பேராசிரியரே தாங்கள் எனக்கு விழிகளைத் தந்துவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்” என்றான். பேராசிரியர் அவன் கன்னங்களைத் தன் கரங்களால் தட்டிவிட்டு, “ஸ்ரீதர் இன்னும் இரண்டு மணி நேரத்தில் என் விமானம் இந்தியா புறப்படுகிறது. நான் போகிறேன். இனி உனக்கு ஒரு குறைவுமில்லை. ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் டாக்டர் நெல்சன் அவற்றைப் பார்த்துக் கொள்வார்,” என்று கூறி விடை பெற்றார்.
இதற்கிடையில் சுரேஷை உற்றுப்பார்த்த ஸ்ரீதர், “அடே நீ சுரேஷல்லவா?… நீதானே எனக்கும் கண் தர ஏற்பாடு செய்தாய். உன் உதவியை நான் ஒரு போதும் மறவேன்.” என்றான்.
அதற்குச் சுரேஷ், “இந்தச் சம்பிரதாயமான நன்றியுரைகளை எல்லாம் அப்புறம் பேசிக் கொள்வோம். இப்பொழுது பேராசிரியரை விமான நிலையைத்துக்குப் போய் வழியனுப்பி விட்டு வருகிறேன்.” என்று புறப்பட்டான்.
ஸ்ரீதரிடம் விடை பெற்று வந்த பேராசிரியர் நோர்த்லி வெளியிலே சிவநேசர் முதலியவர்களுடன் சில வார்த்தைகளைப் பரிமாறிவிட்டு சுரேசுடன் காரிலேறிப் புறப்பட்டுவிட்டார். புறப்படுமுன் முரளியில் அப்பின கன்னங்களைக் கிள்ளிவிட்டு “முரளி, அப்பா உனக்காகக் காத்திருக்கிறார். போய் பார்” என்று கூறத் தவறவில்லை.
அதன் பின் பாக்கியம், சிவநேசர், நன்னித்தம்பியர், செல்லாச்சி ஆகியோர் குழந்தை முரளியுடன் ஸ்ரீதரின் அறையுள் நுழைந்தார்கள். அவர்களைக் கண்டதும் ஸ்ரீதர் ஆனந்தத்தால் கூத்தாடினான். முரளியைக் கண்டதும் கட்டிலில் எழுந்துட்கார்ந்து அவனைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டு “இவன் தானே முரளி. புரளிக்காரப் பயல். நல்ல அழகாயிருக்கிறானே.” என்று கூறிவிட்டு “பத்மா எங்கே?” என்று கேட்டான்.
பாக்கியம் அதற்கு உடனே பதிலளிக்க வில்லையென்றாலும் இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பிக் கேட்கவே ஏதாவது பதிலளிக்கும் நிர்ப்பந்தம் அவளுக்கேற்பட்டது. “பத்மாவுக்கு சிறிது சுகமில்லை. வீட்டுக்குப் போய்விட்டாள்” என்றாள்.
ஸ்ரீதர் அதைக் கேட்டதும் பதைபதைத்துவிட்டாள். “அப்படியா? அபடியானால் உடனே வீடு போவோம். பத்மாவைக் காண வேண்டும்.” என்றான். தான் முன் கூட்டித் திட்டமிட்டது போல் கண் விழித்ததும் முரளியையும் பத்மாவையும் ஒன்றாகப் பார்க்கவேண்டுமென்ற தன் ஆசைக் கனவு நிறைவேறாது போனதில் ஸ்ரீதருக்குப் பெரிய ஏமாற்றம்.
இவை நடந்து ஒரு மணி நேரம் கழித்து ‘அமராவதி’ மாளிகையில் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்ற அழைப்பு, பேரொலியாகக் கேட்டது. அந்தப் பெரிய மாளிகையின் பெரிய விறாந்தையிலும் மண்டபங்களிலும் பத்மா, பத்மா என்ற சொல் ஒளியும் எதிரொலியுமாகச் சப்தித்தது.
ஸ்ரீதர் தனது காரில் மிக வேகமாக ‘அமராவதி’ வந்து பத்மாவை அழைத்துக் கொண்டிருந்தாள். காரை ஓட்டி வந்த காரோட்டி காரைப் ‘போர்ட்டிக்கோ’வில் நிறுத்திவிட்டு இறங்கிப் போய்விட்டான். அவள் வாசலில் வாயிற்காவலாளியோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
ஸ்ரீதர் “பத்மா, பத்மா” என்று கூறியவாறு தனது அறைக்குள்ளே போனான். ஆனால் அங்கே ஓர் ஆளரவத்தையும் காணோம். இருந்தாலும் அங்கு ஒரு புறத்தில் இருந்த சிறிய ‘ஸ்கிரீனு’க்குப் பின்னால் ஏதோ சலனம் ஏற்பட்டது போலிருந்தது. விரைந்து சென்று அது என்ன சலனம் என்று பார்த்தான் ஸ்ரீதர்.
அங்கே ஸ்கிரீனுக்குப் பின்னால் ஒரு பெண் நடுங்கிக் கொண்டு நிற்பதைக் கண்டான் அவன். அவள் முன்னே ஒரு சிறிய மேசை. அதில் ஒரு கண்ணாடி கிளாசில் எதையோ கலக்கிக் கொண்டிருந்த அவளை ஸ்ரீதர் அடையாளம் கண்டு கொண்டாள். ஆம், நன்னித்தம்பி மகள் சுசீலா அல்லவா இவள் – இவள் ஏன் இங்கு வந்தாள் என்று அதிசயித்தான் அவன்.
ஆம். சுசீலா தான் அங்கு நின்று கொண்டிருந்தாள். இன்று ஸ்ரீதர் கண் பார்வை பெறுவான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்திருந்தால் காலையிலிருந்தே ஒரு நிலையில் நில்லாது தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். “ஸ்ரீதர் முன்னர் நான் தான் பத்மா என்று பேசுவது எப்படி?” என்ற கலக்கம் அவளைப் பீடித்தது. “ஸ்ரீதருக்குக் கண் பார்வை கிடைத்துவிட்டது. இனி நான் இருந்தென்ன, இறந்தென்ன?” என்று எண்னிய அவள் இவ்வுலகில் நச்சுக் கோப்பையே தனக்குத் தஞ்சமென முடிவு கட்டி விட்டாள். அதன் பயனாகவே ஆஸ்பத்திரியிலிருந்து அதிகாலையிலேயே வந்து, தேநீருடன் அசெட்டிக் திராவகத்தைக் கலந்து அதனை அருந்துவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் அவள்.
ஆனால் இறப்பதென்னவோ அவ்வளவு இலேசான காரியமாகத் தெரியவில்லை. தன் ஆள் மாறாட்டக் குழறுபடியின் காரணமாக ஸ்ரீதரிடமிருந்து பிரிவதென்னவோ சுசீலாவுக்கு அவசியமானதாகிவிட்டது. தன் முன்னுள்ள பிரச்சினைக்கு அது ஒன்றுதான் திருப்திகரமான முடிவாகத் தோன்றியது. ஆனால் முரளியிடமிருந்து பிரிவதெப்படி? என் உயிரின் உயிரான, இரத்தத்தின் இரத்தமான அவனை விட்டுவிட்டு நான் போவதா – என்று தயங்கினாள் அவள். அவ்வாறு அவள் தயங்கிக் கொண்டிருந்த போது தான் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்று அழைப்பு அவள் காதுகளில் எதிரொலிக்க ஆரம்பித்தது. அதைக் கேட்டதும் சுசீலாவின் உள்ளத்தில் புதிய ஆசை ஒன்று தோன்றியது. “இதோ ஸ்ரீதர் கண் பார்வை பெற்று வந்துவிட்டார். சாவதன் முன்னர் ஒரு தரமாவது அவரது விழி பெற்ற நிலையில் அவரைப் பார்த்துவிட வேண்டும்.” என்பதே அது. அந்த ஆசையினால்தான் ‘ஸ்கிரீனி’ன் பின்னல் பூனை போல் பதுங்கி நின்றாள் அவள். அவனறியாமல் அவனை ஒரு தரம் நன்கு பார்த்துவிட வேண்டுமென்பது அவளது ஆசை.
ஆனால் அதற்கிடையில் ஸ்ரீதரிடம் அகப்பட்டுக் கொண்டாள் அவள்.
சுசீலாவைக் கண்டதும் ஸ்ரீதர், “யாரது? நீ ஏன் இங்கு நிற்கிறாய்? நீ நன்னித்தம்பியரின் மகளல்லவா? நான் பத்மாவைக் காண வேண்டும். பத்மாவைக் கூப்பிடு” என்றான்.
சுசீலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பத்மாவா? நான் தான் பத்மா. ஏன் என் குரல் உங்களுக்குத் தெரியவில்லையா? இது பத்மாவின் குரலில்லையா?” என்று கேட்டாள்.
ஸ்ரீதர் திடுக்கிட்டான்: “ஆம், பத்மாவின் குரல்தான். ஆனால் நீ பத்மா அல்லவே?” என்றான்.
சுசீலா, “உண்மைதான். நான் பத்மா அல்ல – சுசீலா. ஆனால் உங்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம். பத்மாவுக்குப் பதிலாக உங்கள் அப்பாவும் அம்மாவும் என்னை பத்மா என்று சொல்லி உங்களுக்கு மணம் செய்து வைத்தார்கள். நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள்.” என்றாள். அவ்வாறு சொல்லிக் கொண்டே நச்சுத் திராவகத்தை மடக்கென்று வாயில் ஊற்றுவதற்குக் கிளாசைக் கையிலே எடுத்தாள் சுசீலா.
அதைக் கண்ட ஸ்ரீதர், “என்ன இது? நீ என்ன குடிக்கப் போகிறாய்?” என்றான்.
“நஞ்சு – அசெட்டிக் அசிட்” என்றாள் சுசீலா. அதைக் கேட்ட ஸ்ரீதர் அப்படியே பாய்ந்து கிளாசைத் தன் கைகளால் பற்றினான். இதனால் ஏற்பட்ட சந்தடியில் கிளாஸ் நிலத்தில் குப்புற விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.
சுசீலா ஒன்றும் தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள். அவன் கண்கள் ஸ்ரீதரின் பார்வை பெற்ற கண்களால் அள்ளி விழுங்குவது போல் நோக்கின.
ஸ்ரீதர், “ நீ சொன்னது உண்மைதானா? நீதானா என்னுடன் பத்மாவாக வாழ்ந்தவள்? என் முரளிக்குத் தாய் நீதானா?” என்று ஒன்றின் பின் ஒன்றாகப் பல கேள்விகளைக் கேட்டான்.
ஒவ்வொன்றையும் “ஆம், ஆம்” என்று உறுதிப்படுத்தினாள் சுசீலா.
ஸ்ரீதர் ‘அமராவதி’யை நோக்கிக் காரில் புறப்பட்டதும் அவன் பின்னாலேயே சிவநேசரும் பார்வதியும் குழந்தை முரளியுடன் புறப்பட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தது தான் தாமதம். சுசீலாவும் ஸ்ரீதரும் தங்கள் அறையுள் பலமாகப் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் காதில் வீழ்ந்தது. அதைக் கேட்ட பாக்கியம் அவர்கள் அறையுள் நுழையப் போனாள். ஆனால் சிவநேசர் அதைத் தடுத்தார். “வேண்டாம் அவர்கள் எதையும் பேசிக் கொள்ளட்டும். பேசி முடிந்து வெளியில் வந்த பின் விஷயத்தை நாம் சுசீலாவிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.” என்றார். பாக்கியமும் ஒப்புக்கொண்டு கீழே விறாந்தையில் முரளியை ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சிவநேசருடன் உட்கார்ந்து கொண்டான். முரளி சிறிது நேரத்தில் ஆயாவின் அரவணைப்பில் தூங்கிவிட்டான்.
சிவநேசரும் பாக்கியமும் ஸ்ரீதர் தன் கண் பார்வையைப் பெறுவது சுசீலாவுக்குப் பெரிய பிரச்சினையையே உண்டு பண்ணும் என்று உணர்ந்த போதிலும், அது தற்கொலை பன்ணும் அளவுக்கு அவளைத் தூண்டும் என்று ஒரு போதும் எண்ண வில்லை. எனவே அவர்கள் இது விஷயமாக ஓரளவு பரபரப்பு அடைந்திருந்த போதிலும், அளவுமீறிய பதை பதைப்படைந்தார்கள் என்பதற்கில்லை. ஆகவே ‘அமராவதி’யின் விறாந்தையில் அவர்கள் மிக அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள்.
ஸ்ரீதர் சுசீலாவை நோக்கிக் குமுறிக் கொண்டிருந்தான். “நான் குருடன். அதை உபயோகித்து என் பெற்றோர்களே என்னை ஏமாற்றிவிட்டர்கள். உன்னைப் பத்மா என்று கூறி என்னை மோசம் செய்துவிட்டார்கள். சிச்சீ! எத்தகைய மடையன் நான்? எப்படிப்பட ஏமாளி நான். நினைக்கவே வெட்கமாயிருக்கிறது” என்றாள்.
சுசீலாவுக்கு என்ன பதிலும் கூறத் தோன்றவில்லை. கற்சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.
ஸ்ரீதர் பேசிக் கொண்டே போனான். உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவன் பேசியது ஒரு நாடக நடிகன் நாடகத்தின் உச்சக் கட்டத்தில் பேசுவது போலிருந்தது. ஈடிப்பஸ் அரசன் தனது இழிதகைமையை அறிந்து, கொதிப்படைந்து தன் கண்களைத் தன் கைகளாலேயே சிதைத்தெறியுமுன் எவ்வித உணர்ச்சியுடன் பேசினானோ அத்தகைய உணர்ச்சியுடன் பேசிக் கொண்டு போனான் ஸ்ரீதர்.
அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலே அவன் சுசீலாவை நோக்கி, “ நீ பத்மாவல்ல. நான் உன்னை வெறுக்கிறேன். நீ என்னை ஏமாற்றியவள். மோசக்காரி. நான் உன்னை என் முழு மனதாலும் வெறுக்கிறேன்.” என்றான்.
இவ்வார்த்தைகள் சுசீலாவை அப்படியே இடிந்து போகச் செய்துவிட்டன. “என் காதால் இந்த வார்த்தைகளைக் கேட்கத்தானா நான் கண்ணற்ற அவரைத் திருமணம் செய்தேன்? அவர் வாழ்க்கை அழிந்து விடுமென்பதற்காக அவர் மீது நான் கொண்ட இரக்கமல்லவா அவரைத் திருமணம் செய் என்ற திடீர் முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது? அது மட்டுமல்ல, நான் மட்டும் அவருக்குக் கண் பார்வை அளிக்கக் கூடாது என்று நினைத்திருந்தால் இன்று அவர் என்னை நோக்கி இந்த வார்த்தைகளைக் கூறும் படி ஏற்பட்டிருக்குமா?… இருந்தாலும் பாவம், பிழை அவர் மீதில்லை. அவர் மோசடி செய்யப்பட்டதென்னவோ உண்மை. இந்த நிலையில் யாரும் அவர் போல தானே பேசியிருப்பார்கள்? பிழை என் மீது தான், என் மீதேதான். நான் அவர் இங்கு வருவதற்கு முன்னரே நஞ்சை அருந்தியிருக்க வேண்டும். அவ்வாறு அருந்தியிருந்தால் இந்த வார்த்தைகளை நான் கேட்காதிருக்கலாமல்லவா?” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள்.
சுசீலாவைப் பொறுத்தவரையில், அவள் வாழ்க்கையின் தோல்வி நாள் இன்று. ஒரு பெண்ணினுடைய இதயத்தின் பெரிய வெற்றி காதலின் வெற்றியே. அது போல் காதலின் தோல்விதான் வாழ்க்கையின் தோல்வியும், தான் விரும்பி அன்பு செலுத்திய ஓர் ஆண் மகன் தன் முகத்தைப் பார்த்துச் சிறிதும் கூசாது “ நான் உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறுவதை எந்தப் பெண்ணால் தான் சகிக்க முடியும்? இவ்வுலகில் எந்த ஓர் ஆணின் மீது தன் முழு அன்பையும் செலுத்தி வந்தாளோ, எவனது சிரிப்பிலே பூரிப்பையும், எவனது துக்கத்திலே உள்ளக் குமுறலையும் கண்டு வந்தாளோ, எவனைத் தன்னுயிரினும் மேலான பொருளாக எண்ணி வந்தாளோ அவன், “நான் உன்னைக் காதலிக்கவில்லை. உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறிவிட்டான். இனி இந்த வாழ்க்கையில் எனக்கென்ன இருக்கிறது. முரளி… ஆனால் அவன் கூட தந்தையுடன் சேர்ந்து கொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம். அவரால் வெறுக்கப்பட்ட நான் இனி ‘அமராவதி’யில் இருக்க முடியாது. நான் அப்பா வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அப்படி நான் அப்பா வீட்டுக்குப் போகும்போது முரளியை என்னிடம் தருவார்களா? நிச்சயம் தர மாட்டார்கள். என்னை வெறுத்தாலும் முரளி அவர் பிள்ளை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இன்னும் முரளி ‘அமராவதி’யின் ஒரே வாரிசு. அவனை என்னிடம் ஒருபோதும் தர மாட்டார்கள். என் மகன் கோடீஸ்வரன். தங்கத்திலும் வைரத்திலும் புரண்டு வளர்வான் அவன். ஆனால் நான் அவன் தாய் என்பது கூட மறக்கப்பட்டு எங்கோ ஒரு மூலையில் கிடப்பேன். விஷயம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் அதைப் பற்றி அனுதாபமாகப் பேசுவார்கள். இதை விடக் கேடு கெட்ட வாழ்க்கை என்ன இருக்கிறது? சாவு அதை விட எவ்வளவோ மேலல்லவா? ஆனால் சாவதற்கு நான் எடுத்த முதல் முயற்சி இன்று தோற்றுவிட்டது. இரண்டாம் முறை எப்படியும் வெற்றி பெற்றே தீருவேன். ‘அமராவதி’யில் இல்லாவிட்டாலும் அப்பா வீடு சென்ற பிறகாவது நிச்சயம் நான் நஞ்சு குடித்துச் சாவேன். இது சத்தியம்” என்று தனக்குள் தானே உறுதி கூறிக் கொண்டாள் அவள்.
இவ்வாறு அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போது அவளை அறியாமலே கண்ணீர் பிரவகித்து கொண்டிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அவள் தன் அழுகையை அடக்க முயன்ற காட்சி மிகப் பரிதாபமாக இருந்தது.
ஸ்ரீதர் அதைப் பார்த்ததும் கலங்கி விட்டான். இதற்கு முன் அவன் தன் வாழ்க்கையில் எவருமே இவ்வாறு கண்ணீர் சிந்திக் கலங்கி நின்றதைத் தன் கண்களால் கண்டதில்லை. “இழந்த கண்கள் மீண்டும் கிடைத்ததும் நான் காணும் முதற் காட்சி இப்படியா அமைய வேண்டும்.” என்று எண்ணினான் அவன்.
“நான் ஏமாற்றப்பட்டேன். பத்மா எங்கள் அந்தஸ்துக்குக் குறைந்தவளென்பதற்காக என் அப்பா செய்த மோசடி இது. ஆனால் உண்மையில் நான் ஏமாறியவன்தானா…”
“ஏறக்குறையக் கடந்த இரண்டு வருட காலமாக சுசீலா என்னுடன் வாழ்ந்து வருகிறாள். உண்மையைச் சொல்லப் போனால் என் வாழ்க்கையின் மிகவும் இன்பகரமான நாட்கள் இந்த இரண்டு வருடங்களும்தானே. சாதாரணமாகக் குருடனின் வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாயிருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இவைதான் என் வாழ்வின் மிகவும் இன்பமான நாட்கள். என் குருட்டு வாழ்க்கைக்கு இன்பச் சுவையை ஊட்டியது யார்? சுசீலா அல்லவா? அவள் பேச்சு எனக்கு இனித்தது. அவள் காட்டிய அன்பு என்னுள்ளத்தின் அடித்தளத்தைத் தொட்டு என்னை மெய்மறக்கச் செய்திருக்கிறது. இன்னும் அவள் என் முன் காட்டிய பணிவை என்னென்பேன். அவளது ஒவ்வொரு செயலும் என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. அவள் பாட்டு என்னைப் பரவசப்படுத்தியது. அவளது விளையாட்டுப் பேச்சு என்னை எப்பொழுதும் சிரிக்க வைத்திருக்கிறது. உண்மையில் நான் தனித்திருக்கும் வேளைகளில், “இப்படிப்பட்ட பெண் வேறு யாருக்கும் இவ்வுலகில் கிடைக்க மாட்டாள். உலகிலேயே மிகச் சிறந்த பெண் எனக்குக் கிடைத்துவிட்டாள்” என்று எனக்குள்ளே நான் எத்தனை தடவை கூறி மகிழ்ந்திருக்கிறேன்? உண்மையில் நான் விரும்பியது போல் பத்மாவைத் திருமணம் செய்திருந்தால் அவள் கூட என்னுடைய உள்ளத்தை இவ்வாறு ஒரு சேரக் கொள்ளை கொண்டிருப்பாளோ என்னவோ? சுசீலா பக்கத்தில் இருந்தால் இன்பம், விலகினால் துன்பம். கடந்த இரண்டு வருட காலத்தில் ஒவ்வொரு நிமிஷத்தையும் இன்ப நினைவாக்கியவள் அவள். உண்மையில் அவள் என் காதற்கன்னி. உயிர்த் துணை, மனதின் அரசி, இதய ராணி. ஆனால் அது இருளில்தான். என் கண்களில் பார்வை இல்லாத போதுதான் பத்மா என்று அவளை நினைக்கும்போது தானே…
ஆனால் பார்வை பெற்றதும் கண்ணால் பார்த்ததும் காதல் மறைந்தது. அழகைப் பொறுத்தவரையில் இவளும் பத்மாவுக்குக் குறைந்தவளல்லதான். உண்மையில் இவள் கண்கள் பத்மாவின் கண்களை விட அழகு. இருந்துமென்ன? என் மனம் விரும்புவது பத்மாவை. அவளே இதுவரை என்னுடன் வாழ்ந்து வந்திருக்கிறாள். ஆனால் கண்கள் வந்ததும் இவள் யாரென்று தெரிந்து விடுகிறது. இவள் பத்மாவல்ல என்று தெரிந்ததும் இவள் மீது வெறுப்புதான் ஏற்படுகிறது. நான் இவளை வெறுக்கிறேன். பத்மாவைத் தவிர வேறு எல்லாப் பெண்களையுமே நான் வெறுக்கிறேன். இந்த நிமிஷம் வரை நான் பத்மாவுடனல்லவா என் மனதில் வாழ்ந்து வருகிறேன்? இன்று திடீரென என் காதலைச் சுசீலாவிடம் மாற்றி அவளுடன் வாழ முடியுமா? அது ஓர் இரண்டாம் திருமணம் போலல்லவா தோன்றுகிறது. நான் என்ன செய்வேன்? சுசீலா? மனதாரப் பார்த்தால் மகராசியாகத் தெரியும் அவள் ஊனக் கண்ணுக்கு வெறுப்பூட்டுபவளாகக் காட்சியளிக்கிறாள். ஆனால் ஐயோ சுசீலாவை நான் வெறுப்பதா? குருடனென்றும் பாராமல் என்னைக் கல்யாணம் செய்தாளே. இரவு பகலாக எனக்குப் பணிவிடை புரிந்தாளே, எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குக் கண் பார்வை கிடந்தால் அதனால் தன் மோசடி வெளியாகித் தான் இன்னங்களுக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும் நான் கண் பார்வை பெற வேண்டுமென்று ஊக்கமாக உழைத்தாளே, அந்த உத்தமியையா நான் வெறுப்பது? இல்லை, நான் அவளை வெறுக்கவில்லை. நேசிக்கிறென். காதலிக்கிறேன். அவள் என் காதல் தெய்வம். ஆனால், இருளில்தான் அவள் என் காதலி. உண்மையில் அவளைச் சுசீலா என்று நான் இனங்காணாத வரையில் தான் அவள் என் காதலி. ஒளியில் அவள் ஓர் ஏமாற்றுக்காரி. அவளை நான் விரும்ப முடியாது.
ஆனால் இதுதானா? அவள் காட்டிய அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு? அவளது தியாகங்களுக்கு நான் செய்யும் பதில்? வெறுப்பு? கூடாது. அவள் நான் வெறுக்கக் கூடாது. நேசிக்க வேண்டும். என்றும் எப்பொழுதும் இரவும் பகலும் அவளைக் காதலிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தடை? என் கண் பார்வை? ஐயோ, நான் என் கண் பார்வையை ஏன் பெற்றேன்? அது கிடைக்கும் வரை நான் அவளை நேசிக்கத் தானே செய்தேன்? என்னுயிருக்குயிராக அல்லவா அவளை நான் நேசித்தேன்? ஐயோ என் கண் பார்வையால் நான் பெற்ற பயன் இதுதானா?”
ஸ்ரீதரின் மனதில் இடியும் மின்னலும் பூகம்பமும் ஏக காலத்தில் நிகழ்ந்தது போன்ற நிலை. தன்னையிழந்து தவிக்கும் அந்நிலையிலே அவன் கண்கள் அங்குமிங்கும் சுழல்கின்றன. அவ்வாறு சுழன்ற அவனது கண்கள் திடீரென ஓரிடத்தில் நிலைத்தன. ஆம், சுசீலாவுக்குச் சமீபமாக இருந்த மேசையிலே காணப்பட்ட பவுண்டன் பேனாவிலே அவன் கண்கள் அப்படியே நிலைத்துவிட்டன. நஞ்சருந்தி மாள்வதற்கு முன்னர் ஏதாவது எழுதி வைப்போமா என்ற சபலத்தில் சுசீலா கொண்டு வந்திருந்த பேனா அது. அதற்குப் பக்கத்தில் காகிதம் எழுதும் ‘லெட்டர் பாட்’ ஒன்றும் கிடந்தது.
“என் கண்களே என் எதிரிகள். அவை எனக்கு இன்பத்தைக் கொண்டு வரவில்லை. துன்பத்தையே கொண்டு வந்தன. அவை இருக்கும் வரை என்னால் சுசீலாவை நேசிக்க முடியாது…” என்று எண்ணிய அவன் மறுகணம் வெறி பிடித்தவன் போலானான். பவுண்டன் பேனாவைக் கையில் எடுத்தான். மின்னி மறையும் நேரத்துள் அவற்றால் தன்னிரு கண்களையும் குத்திக் கொண்டு “ஐயோ” எனக் கதறினான். உலக் நாடக பாத்திரங்களில் தன்னை முற்றாகக் கவர்ந்து அடிமை கொண்ட ஈடிப்பஸ் போலத் தன் கண்களைத் தானே குத்திக் கொண்டு கதறினான் ஸ்ரீதர்.
இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னைய கிரேக்க நாடகம் ஸ்ரீதரின் வாழ்க்கை நாடகமாகிவிட்டது.
ஒரு முறை கண்ணை மூடி மீண்டும் திறப்பதற்குச் செல்லும் அற்ப நேரத்துள் திடுதிடுப்பென்று நடந்து விட்ட இந்நிகழ்ச்சி சுசீலாவைத் திகிலடைய செய்துவிட்டது. அவள் ஒரே தாவலாகச் ஸ்ரீதரிடம் ஓடினாள். ஆனால் அதற்கு முன்னர் விஷயம் முடிந்து விட்டது. கண்களிலிருந்து இரத்தம் பிரவகித்தது. கண்கள் இரண்டும் இரண்டு புண்களாகிவிட்டன. அதைக் கண்டு ஆற்றாத சுசீலா “ஐயோ நான் என்ன செய்வேன்” என்று உச்சக் குரலில் கூச்சலிட்டாள்.
கீழே விறாந்தையிலிருந்த சிவநேசரும் பாக்கியமும் சுசீலாவின் அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டார்கள். ஒரே ஓட்டமாக ஸ்ரீதரின் அறைக்கு ஓடினார்கள். “என்ன நடந்தது?” என்று கேட்டார் சிவநேசர்.
“தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டு விட்டார். உடனே டாக்டர் நெல்சனை அழையுங்கள்.” என்றாள் சுசீலா விம்மியவண்ணம்.
சிவநேசர் உடனே டெலிபோனுக்குச் சென்று டாக்டர் நெல்சனுடன் பேசினார்.
“இங்கு பயங்கரமான நிகழ்ச்சி ஒன்று நடந்துவிட்டது. ஸ்ரீதர் தனது கண்களைத் தானே குத்திக் கொண்டு விட்டான். உடனே வாருங்கள்.”
டாக்டர் நெல்சன் பதைபதைத்துப் போய்விட்டார். சில நிமிஷங்களில் வந்து விடுவதாகக் கூறி டெலிபோனை வைத்தார் அவர்.
– தொடரும்…
– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது.
– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.